news-details
ஆன்மிகம்
8-10 நிமிட மறையுரை: திருத்தந்தையின் அறிவுரை

1. பின்புலம்

அண்மையில் ஓர் ஆயர் திருநிலைப்பாடு அருளடையாளத் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெற்றது. திருப்பலிக்கு முன்னரே புதிய ஆயருக்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. திருப்பலி தொடங்கியவுடன் பத்து நிமிடங்களுக்கு முன்னுரை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறைவார்த்தை வாசகங்களுக்குப் பின்னர் 20 நிமிடங்களுக்கு மேல் மறையுரை ஆற்றப்பட்டது. ஏறக்குறைய நான்கரை மணி நேரம் நீடித்த இந்நிகழ்வின்போது, கூட்டுத்திருப்பலியில் பங்கேற்றிருந்த பல அருள்பணியாளர்கள் இடையிடையே எழுந்து சென்றுவிட்டனர். மற்ற இறைமக்களில் பலர் களைப்புற்று நற்கருணை பெற்றவுடன் கலைந்து சென்றுவிட்டனர்.

மற்றொரு நிகழ்வில் அருள்பணியாளர் ஒருவரின் முதல் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அவரை வரவேற்று அழைத்து வந்தபொழுது அவரைப் பற்றிய நீண்டதொரு முன்னுரை வாசிக்கப்பட்டது. எனினும், திருப்பலி தொடங்கியவுடன் பத்து நிமிடங்களுக்கு மேல் மீண்டும் ஒரு முன்னுரை மற்றொரு அருள்பணியாளரால் கொடுக்கப்பட்டது. நற்செய்தி வாசகத்திற்குப்பின் 30 நிமிடங்களுக்கு மேல் வேறு ஓர் அருள்பணியாளர் மறையுரை ஆற்றினார். ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் நீடித்த இக்கொண்டாட்டத்தின் இறுதியில், புதிய அருள்பணியாளருக்கு நடத்தப்பட்ட வாழ்த்துக் கூட்டத்தில் வெகுசிலரே பங்கேற்றனர்.

சிறப்புக் கொண்டாட்டங்கள் என்றில்லாமல், வழக்கமாக நடைபெறும் ஞாயிறு மற்றும் விழாத் திருப்பலிகளிலும் 20, 30, 40 நிமிடங்களுக்குக் குறையாமல் மறையுரை ஆற்றப்படுகிறது. மொத்தமாக ஒரு மணி நேரம் தேவைப்படும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் மறையுரையின் கால வரம்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.

2. மறையுரையின் சிறப்பியல்புகள்

மறையுரை (homily) என்பது திருப்பலிக் கொண்டாட்டத்தில் இறைவார்த்தை வாசகங்களுக்குப்பின் நடைபெறும் முதன்மையான, ஒரு தனித்தன்மையான இலக்கிய நடைகொண்ட போதிக்கும் பணியாகும். திருப்பலிக்குப் புறம்பே நடைபெறும் அருளுரை (Sermon), போதனை (Preaching), சமய / ஆன்மிகக் கருத்துரை (religious/ spiritual discourse), மறைக்கல்வி (Catechesis), திருவிவிலிய / இறையியல் பேருரை (Biblical/theological / lecture) போன்றவற்றிலிருந்து மறையுரை வேறுபட்டது. திரு அவை ஆசிரியப் படிப்பினைகளில் மறையுரையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள சில சிறப்பியல்புகளாவன:

1) மறையுரை என்பது வழிபாட்டுச் செயலின் ஒரு பகுதியும் இறைவார்த்தையின் உயிருள்ள விளக்கவுரையும் ஆகும். இந்த விளக்கவுரை வாசிக்கப்பட்ட திருவிவிலியப் பகுதிகள் கூறுவதையே மீண்டும் விளக்கிச் சொல்வதோ அல்லது அப்பகுதிகளுடன் தொடர்புடைய வேறு திருவிவிலிய வசனங்களை அடுக்கிக் கூறுவதோ அல்ல; மாறாக, அன்றைய இறைவார்த்தை எவ்வாறு இங்கு இப்பொழுது மனித வாழ்க்கைச் சூழமைவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிக்கையிடுவது ஆகும்.

2) நல்ல மறையுரை ஒரு கருத்து, ஓர் உணர்ச்சி, செயல்பாட்டிற்கு வழிகாட்டும் குறிப்பு என்ற முக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கவேண்டும். மேலும், கொண்டாடப்பெறும் மறையுண்மையையும், கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ளவேண்டும்.

3) ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடமைத் திரு நாள்களிலும் கனமான ஒரு காரணம் இருந்தாலன்றி, மறையுரை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். பிற நாள்களில் குறிப்பாக, திருவருகைக் காலம், தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வார நாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

4) திருப்பலி நிறைவேற்றும் ஆயர் அல்லது அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார். அவர் தம்மோடு சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் ஒருவரிடமோ அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்பத் திருத்தொண்டரிடம் கூட இப்பணியை ஒப்படைக்கலாம். சிறப்பான நிகழ்வுகளில், தக்க காரணத்திற்காகக் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது அருள்பணியாளர் மறையுரை ஆற்றலாம்.

5) திருநிலை அருளடையாளங்களைப் பெறாத மற்றவர் (அருள்பணி மாணவர்கள், அர்ப்பண வாழ்வுச் சமூகத்தினர், பொதுநிலையினர்) இப்பணியைச் செய்ய இயலாது (காண்: 2-ஆம் வத்திக்கான் சங்கம், திருவழிபாடு, எண் 52; திரு அவைச் சட்டம், எண் 767; திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியின் மகிழ்ச்சி, 2013, எண் 135, 137-138; 145-158; திருவழிபாட்டுப் பேராயம், மீட்பின் அருளடையாளம் (Redemtionis Sacramentum), 2004, எண் 66; மற்றும் மறையுரை வழிகாட்டி (Homiletic Directory) 2014, எண் 6; உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினைகள், மூன்றாம் மாதிரிப் படிவம், 2017, எண் 29 - 66).

3. மறையுரையின் கால வரம்பு

ஞாயிறு மற்றும் விழாக்காலத் திருப்பலிகளில் 8-10 நிமிடங்களுக்கு மிகாமல் மறையுரை இருத்தல் வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். சுருக்கமான மறையுரைக்கு அவர் கூறும் காரணம் மிகுந்த கவனத்திற்குரியது: ‘மறையுரை மிக நீள்வது திருவழிபாட்டின் இரு பண்புக் கூறுகளாகிய சீரியக்கம், ஒத்திசைவு என்பதைப் பாதிக்கும் (காண்: புதன் கிழமை பார்வையாளர் அறிவுரை, 7 பிப்ரவரி 2018 - 12 ஜூன் 2014; நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 138). அதாவது 20, 30, 40 நிமிடங்கள் என நீளும் மறையுரைகள் வழிபாட்டு நேரத்தின் மிக அதிகப் பகுதியை எடுத்துக்கொள்வதால் ஏனைய வழிபாட்டுப் பகுதிகள் உரிய முக்கியத்துவம் பெறாமல் போகின்றன. மக்களும் நீண்ட மறையுரையைக் கேட்பதிலேயே களைப்புற்று, எஞ்சிய வழிபாட்டுப் பகுதிகளில் முழுக் கவனமுடன் ஈடுபட இயலாதவர்கள் ஆகின்றனர். இதனால் மக்களை ஈடுபாடுமிகு நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்லவேண்டிய மறையுரை அதற்குத் தடையாகக் கூட சில வேளைகளில் மாறிவிடுகிறது (காண்: தே. அல்போன்சு, நல்லதொரு மறையுரை செய்வோம், பக். 60 - 61).

மறையுரை நீள்வதற்கான சில காரணிகளாக பணித்தள அனுபவத்தில் நான் அறிந்தவை:

1) மறையுரையின் தொடக்கத்தில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்களின் அன்றைய வாழ்க்கைச் சூழமைவில் நடந்த பொருத்தமான நிகழ்வு, செய்தி அல்லது கதை ஒன்றைச் சுருக்கமாகச் சொல்வதற்குப் பதிலாக, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பாவில் நடந்த கதைகளையோ பேரரசன் அலெக்சாண்டர், மாவீரன் நெப்போலியன், ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் போன்றவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையோ நீட்டிக்கூறுவது.

2) ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலிகளில் இடம்பெறும் மூன்று திருவிவிலிய வாசகங்களிலிருந்து மக்களின் இன்றைய வாழ்க்கைச் சூழலுடன் தொடர்புடைய மையக்கருத்து ஒன்றைத் தேர்வு செய்து மறையுரையைக் கட்டமைப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொரு வாசகத்தைப் பற்றியும், அதன் வரலாறு, சூழமைவு, அரசியல்-சமூக-பொருளாதாரப் பின்னணியைக் கூறி பொருள் விளக்கம் தருவது.

3) அருங்கொடை செபக்கூட்டங்களில் நடப்பது போல் மறையுரையை இடையிடையே குறுக்கீடு செய்து, ‘இயேசுவுக்கே புகழ், ‘இயேசுவுக்கே நன்றி, ‘மரியே வாழ்க, ‘அல்லேலூயா, ‘ஆமென்போன்ற முழக்கங்களை மக்களால் சொல்ல வைப்பது; மக்கள்விழிப்பாய்இருப்பதற்காகக் கைகளைத் தட்டச் சொல்வது; பாடல்களைப் பாடுவது; சிரிப்புத் துணுக்குகளைக் கோர்வையாகச் சொல்லி ஊடகங்கள் வழங்கும் ஒரு பொழுதுபோக்கு வகைபோல மறையுரையை ஆக்குவது.

4) திருப்பலியில் திரளான மக்கள் கூடியிருந்தால் மறையுரையாளர் பரவசமடைந்து தனக்குத் தெரிந்ததை எல்லாம் பேசிக்கொண்டே போவது.

5) மறையுரையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது அல்லது முடிப்பதுபோல் வந்து மீண்டும் மற்றொரு கருத்திற்குத் தாவுவது.

4. இறுதியாக...

மறையுரை மிக முக்கியமான ஒரு பொறுப்பு என்பதால் நீண்ட நேரம் வாசிப்பு, செபம், சிந்தனை அருள்பணி அனுபவங்களின் பிரதிபலிப்பை உள்ளடக்கிய முன்தயாரிப்பு அவசியம்.

மறையுரை பொருள் செறிவும் புதிய செய்திகளும் பார்வைகளும் கொண்டதாக அமைய வேண்டுமெனில், அதனை வழங்கும் மறையுரையாளருக்குப் பரந்துபட்ட அறிவும், நலமான புதிய கண்ணோக்குகளும் அவசியம் தேவை. அவை சமயம் சார்ந்தவை மட்டும் அல்ல; இன்றைய சமூகம் பற்றியதாகவும் இருத்தல்வேண்டும்.

சமூகம் பற்றிய அறிவைப் பெருக்கத் தரமான தினசரி செய்தித்தாள்களையும், சமூக-பொருளாதார-அரசியல்-பண்பாட்டுச் செய்திகளையும் விமர்சனங்களையும் தரும் வார, மாத இதழ்களையும் மற்றும் நூல்களையும் படிப்பதும், நவீன ஊடகங்கள் வழியாகச் சிறந்த அறிஞர்களின் உரைகள் மற்றும் நேர்காணல்களைக் கேட்பதும் அவசியம் (காண்: தே. அல்போன்சு, நல்லதொரு மறையுரை செய்வோம், பக். 70-71).

தரத்திற்கு மட்டுமல்லாமல், 8-10 நிமிடங்களுக்கு மிகாமல் மறையுரையைக் கட்டமைக்க வேண்டுமெனில், அதற்கும் முன்தயாரிப்பு மிக மிக அவசியம்.

முன்தயாரிப்பு செய்யாத மறையுரையாளர் அருள்வாழ்வு அற்றவர் தாம் பெற்ற கொடைகளுக்கு அவர் பொய்மையாகவும் பொறுப்பற்றவராகவும் நடந்து கொள்பவர்என்றும், “நீண்ட மறையுரைகள் திரு அவைக்கு ஒரு பேரிடர்என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (காண்: நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 145; மறைமாவட்ட திருவழிபாட்டு இயக்குநர்களுக்கு ஆற்றிய உரை, 20 சனவரி 2023).