இயந்திரப் பொருளாதாரம்
21-ஆம்
நூற்றாண்டின் சூழலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் சக்தியாக ஏ.ஐ. உருவெடுத்து,
உலகளாவியப் பொருளாதாரத்தில் முத்திரை பதிக்கும் இடத்தைப் பெற்றிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளோம். இன்று நாம் வாழ்வது ஏ.ஐ. ஆதிக்கம்
செலுத்தும் நான்காம் தொழிற்புரட்சியின் காலம். முன்பிருந்த உழைப்பின் பொருளாதாரம் முடிந்து, இயந்திர ஆதிக்கப் பொருளாதாரத்தில் வாழ்கிறோம். மனிதன் இயந்திரத்துடனான போட்டியில் தோல்வியடைந்துவிட்டதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகவே உழைப்பின் பங்கு (wage share) இழப்பும், முதலீட்டு
(capital share) பங்கின் வளர்ச்சி
விகிதமே சான்றாகப் பார்க்கலாம்.
உலக
அளவில் பின்தங்கிய அல்லது முன்னேறிய எந்த நாடாகயிருந்தாலும், ஏ.ஐ. இல்லாத
பொருளாதாரத்தை இன்று கற்பனை செய்ய முடியாது. இது ஏ.ஐ.யினால்
ஈர்க்கப்பட்ட ஒருவகை ஏற்றத்தாழ்வு (inequality) அல்லது அநீதி (injustice) என்று சொல்லும் உலகமாகக் கூட இருக்கலாம். புதிய கண்டுபிடிப்புகள், வேலைப்பளுவைக் குறைத்தல் என்ற குறிகோள்களோடு செயல்படும் இத்தொழிலில் ஒருசில உலக நிறுவனங்களான கூகுள்,
மைக்ரோ சாஃப்ட், ஓபன் ஏ.ஐ. மற்றும்
ஏ.ஐ. டூல்ஸ் என்பவைகளே
ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், டிஜிட்டல் கட்டமைப்பு உள்ள நாடுகளுக்கும், இல்லாத நாடுகளுக்குமான இடைவெளி பெருகிக்கொண்டே போவது ஏ.ஐ.யின்
நன்மைகளை உலகம் சமநிலையில் பகிர்ந்துகொள்ள இயலாமை கவலையளிப்பதாக உலகளாவிய நாணய நிதியம் (IMF) கூறுகிறது.
பொருளாதாரத்தில்
உழைக்கும்
வர்க்கத்தினரின்
இறங்கு
முகம்
ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்பிருந்து மிகவும் குறைந்த விலை கணினியின் நாள்கள் முதல், உழைப்பின் வர்க்கம் ஆட்டம் கண்டுவிட்டதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட்ஃபோன், இப்போது ஏ.ஐ., அடுத்து
ரோபோடிக்ஸ் என்பவை இன்னும் வரும் சில பத்து ஆண்டுகளில் எஞ்சியுள்ள வேலைச் சந்தையைப் பெரும்பாலும் அழிவின் எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்று அஞ்சப்படுகிறது.
பொருளாதாரத்தில்
செல்வந்தரின்
ஏறுமுகம்
பலர்
நினைப்பது இலஞ்சம், ஏமாற்று, அரசாங்கத்திடம் பணம், வேண்டியவர்களுக்குப் பதவியும் பணமும் (cronyism) என்பவையே பணக்காரரின் எழுச்சிக்கு மூலகாரணம் என்று. ஆனால், தொழில்நுட்பம்தான் உழைப்பு-முதலீடு (labour and capital balance) சமன்பாட்டு
விகிதத்தை நகர்த்தும் மூலகர்த்தா என்பது வெளியில் தெரிவதில்லை.
மூலதன
மூட்டை (POT - பெரும்
பணக்காரரின் எண்ணிக்கை) நாளுக்குநாள் அதிகரித்து வருவதும் பொருளாதார வளர்ச்சியின் ஓட்டத்தைவிட உழைக்கும் வர்க்கத்தினரின் பங்கு (POT) வேகமாகச்
சுருங்கி வருவதும், இவ்விடைவெளி அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
பொருளாதாரத்தில்
ஏ.ஐ.-யின்
பங்கு
ஏ.ஐ. என்பது கோட்பாடுகளை
ஆய்ந்து, மேம்படுத்தி, வழிமுறைகள் மூலம் தொழில்நுட்பங்களை உருவாக்கி நடைமுறைபடுத்தும் ஒரு புதிய தொழில்நுட்ப விஞ்ஞானம். ஏ.ஐ. உதவியினால்
உருவாக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் (products and services) இதுவரை மனிதரால் செய்ததை மாற்றும் நிலையில், உழைக்கும் பிரிவினரில் சிலர் தேவையற்றவர்களாகலாம். இயந்திரங்கள், ரோபோக்கள் மற்றும் ஏ.ஐ.யின்
மறு உருவங்கள் மனிதரின் வேலைகளைப் பல நிலைகளில் செய்யும்
எதிர்பார்ப்பும் இதில் அடங்கும்.
ஏ.ஐ.யின் பயன்பாட்டினால்
புதிய வேலைகள் உருவானாலும், ‘எவ்விதத்தில் இழந்த வேலைகள் சரிகட்டப்படும்?’ என்ற கேள்வியும் உள்ளது.
குறைந்த
கைத்திறன் (low skilled) கொண்ட வேலைகளைத்
தொழில்நுட்ப ஊடுருவலால் இப்பிரிவினர் வேலை இழப்பதும், மறுபுறம் பொறியியல், மருத்துவம், நீதித்துறை சார்ந்தோர் தொழில்நுட்பப் பயன்பாட்டினால் அதிக ஊதியம் பெறுவதும் தவிர்க்க முடியாமலிருப்பது ஏ.ஐ.யினால்
உருவாகும் இடைவெளியாகப் பார்க்கப்படுகிறது. முன்பு கண்ட தொழிற்புரட்சி ஒரு வேலைக்கு மற்றொரு வேலையைக் கொடுத்தது. இன்று பணித்தளங்களில் நாம் காணும் ஏ.ஐ. தொழில்புரட்சியின்
வளர்ச்சி வேலையைப் பறித்துவிடுமோ என்ற நிலையில், நிறுவனங்களுக்கு அதிக இலாபம் ஈட்டும் கருவியாகவும், செல்வம் சேர்க்கும் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது.
சமுதாயமும் ஏ.ஐ.யும்
ஏ.ஐ.-யினால் தனிமனிதனுக்கும்
நிறுவனத்திற்கும் சமுதாயத்திற்கும் நன்மைகள் கிடைப்பது என்றிருக்க, பணக்காரர்-ஏழை இரு வர்க்கத்தினரிடையே உள்ள இடைவெளி அதிகமாகிறதென்ற பார்வையும் உள்ளது. சிலர் வேலைப்பறிப்பு குறிப்பாக, குறைந்த கைத்திறன் உடையோர் வேலையிழப்பு, இதனால் உருவாகும் வறுமையை எதிர்கொள்வது ஒருபுறம்; அதே நேரத்தில், ஏ.ஐ. புதிய
உயர்தர வேலைகளை உருவாக்குவது, திறன் படைத்தோருக்குத் திணறடிக்கும் சம்பளம், பெரிய நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்
மூலம் உயர்தர, குறைந்த விலையில் சேவைகளைப் பயனர்களுக்கு அளித்தல் மற்றொரு புறம்.
இத்தொழில்நுட்பத்தை
எட்டிப்பிடிக்க இயலாத சிறு நிறுவனங்கள் பாரம்பரிய தயாரிப்பின் மூலம் தரத்திலும் விலையிலும் நடைமுறை போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் சிறிது சிறிதாகத் தொழிலில் தோற்கும் நிலை என்பவைகளெல்லாம் ஏ.ஐ. நேரடியாகவோ
மறைமுகமாகவோ இன்றைய பொருளாதாரத்தில், ஏழை-பணக்காரர் இடைவெளியில் முக்கியப் பங்கு வகிப்பதைக் காட்டுகிறது.