1750-க்குப் பின்பான தொழில் வளர்ச்சி, கடந்த ஆண்டுகளில் வேகமெடுத்து இந்நூற்றாண்டில் நாளுக்கு நாள் பல புதிய தொழில்நுட்பக் கருவிகள் என்று மனித வாழ்க்கை முறையை மாற்றியமைத்து வரும் நிலையில், அரசியலும் அதற்கு விதிவிலக்கல்ல என்றே சொல்லலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் குடியாட்சிக் குடைக்குள் வந்த பிறகு, மக்கள் பெருக்கமும் அபாரத் தொழில் வளர்ச்சியும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து வருகிறது. மக்கள் ஊடகங்கள், நிறுவனங்களென்று அரசியலில் பங்குபெறுவோரின் நிலையும் உருவாகியுள்ளது.
தனிமனிதனாவது
தடுமாற்றமடையலாம்; ஆனால், இன்று எந்த ஒரு நிறுவனமும் நடுநிலை வகிப்பதாகப் பாசாங்கு செய்யத் தயாராக இல்லை என்பது, அவர்கள் அனைத்துக் கட்சியினருக்கும் தேர்தல் நிதி பகிர்ந்தளிப்பு சான்றாக உள்ளது. ‘வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு’ என்ற வழியில், பெரும் நிறுவனங்களும் தங்கள் நிலையைத் தகுந்தாற்போல் மாற்றியமைத்துக்கொள்வது survival
of the fittest என்ற கோட்பாட்டிற்கு உகந்ததாகவும் உள்ளது. ‘You make me bad and I make you bad’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்றாற் போல், இவை அரசியல் ஓட்டத்திற்கும், தேர்தல் பணிகளுக்கும் தேவையான இரத்த நாளங்களாக விளங்குகின்றன.
தேர்தல்களில்
ஊடகங்களின் பங்கும் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், ஏ.ஐ.-யின்
வருகை இதற்கு மேலும்
வேகத்தைச் சேர்த்திருக்கிறது. ஏ.ஐ. பற்றி
பல வரையறைகள் இருந்தாலும் அதில்
ஒன்று: ‘ஓர் இயந்திரத்தை அறிவாற்றலுள்ளதாக உருவாக்குவது.’ அந்த அறிவாற்றலைச் சூழலுக்குத் தகுந்த, முற்போக்குடன் சரியான தரத்தோடு இயங்கச்செய்வது. இத்திறனை இன்று அரசியல் கட்சிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப வளைத்துக்கொள்வதென்பது கைவந்த கலையாகிவிட்டது.
பிரச்சாரத்தில்
ஏ.ஐ.
ஏ.ஐ.-யின் தொழில்நுட்பம்
இப்போது தேர்தலின் முடிவை மாற்றியமைக்கும் சக்தியாகவும் உருவெடுத்து வருகிறது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வீடியோவாகவும் உண்மையைப்போல் ஜோடித்தும், பரப்புவதன் மூலம், அச்செய்திகள் தேர்தலின் போக்கைக் கைமாற்றிவிடும் கருவியாகவும் அமைந்துவிடுகிறது. இந்த உத்தியைக் கையாள்பவர்களின் நோக்கம் என்னவென்றால், ‘ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாகிவிடும்’ என்ற
கோயபல்ஸ் கோட்பாடு, இன்றைய அரசியல் பிரச்சாரத்திற்கு ஒத்திருப்பதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ‘ஏ.ஐ. அரசியல்’ என்ற
தலைப்பு பேசுபொருளாக இருந்தாலும், குடியாட்சித் தேர்தல் முறையில் ஏ.ஐ.-யின்
புதிய உருவாக்கங்கள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது என்று கூறுவதைவிட வேடிக்கை பார்க்கும்படியாக அமைந்துள்ளது.
காலப்போக்கில்
இது தவறான மற்றும் பொய்யான தகவல்களுக்கு ஏற்ற கருவியாக அமைந்து விடவும், குடியாட்சி முறைக்குப் பேராபத்தை உருவாக்கும் என்ற அச்சமும் பலர் மனத்தில் எழுந்துள்ளது. மற்றொன்று, ஏ.ஐ. தவறான
செய்திகளை உருவாக்கவும் பரப்புவதற்கும், பொதுமக்களின் கருத்தாக இல்லாத ஒன்றைத் தங்கள் சுய இலாபத்திற்குப் பயன்படுத்துவதற்கும் ஏற்ற கருவியாகவும் அமைந்திருக்கிறது.
போலியின் கைவரிசை
ஏ.ஐ.-யின் அல்காரிதம்
உதவியினால் உண்மையைப் போன்று, ஆனால் ஜோடிக்கப்பட்ட வீடியோக்களைத் தயாரிக்கக்கூடியவைகளாக இன்று உலகளவில் ஏ.ஐ. வழி
முறைகள், படங்களைச் செய்தித் தொகுப்பாக உருவாக்கும் திறன் படைத்த கருவிகள் பல உள்ளன. இவை
உருவாக்கும் செய்திகள், நிழற்படங்களை வைத்து தங்களுக்குச் சாதகமாக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட வழி வகுக்கிறது. ஏ.ஐ.-யின்
திறனைப் பயன்படுத்தி
நையாண்டிச் செய்திகளை உருவாக்கலாம். முகநூல், டுவிட்டர், யூடியூப் போன்ற பெரிய வலையமைப்புகள் ஏற்றுக்கொள்ளத்தகாத செய்திகளைத் தவிர்க்க முற்பட்டாலும் எந்த அளவிற்கு அது பயனளிக்கின்றது என்பது தெரியவில்லை.
இந்த நூற்றாண்டில்
போலியான உத்திகள் தேர்தலில் பயன்படுத்தப்படுவதைப் பார்த்தோம்; 2024-இல் உலகளவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேர்தல்கள் நடந்தேறின. சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுவது, வன்முறையைத் தூண்டும் கருத்துகள் பரவும் நிலை, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதால் தனியுரிமை மீறலுக்கு வழிவகுப்பது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
தேர்தல்
முன்கணிப்புகளைப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே
காலத்திற்கேற்ப வளைத்து, உள் நோக்கத்தோடு வெளியிடுவதும், இத்தகைய புள்ளி விவரங்களுக்கு மறைமுகமாக அரசமைப்புகள் பிடியிலிருக்கும் சமூக ஊடகங்கள் துணைபோவதும், இது 40-50 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலுக்கு நேர்மாறாக இருப்பதைக் கடந்தகாலத் தலைமுறையினரைவிட இக்காலக் கணினித் தலைமுறையினர் நன்கு புரிந்துகொள்கின்றனர்.
ஏ.ஐ.-யின்
அரசியல்
நன்மைகள்
ஏராளமான
தரவுகளை அலசும் திறன் மற்றும் துரித மதிப்பீடு செய்யும் சக்தி என்பவை ஏ.ஐ.-யின்
தனிச்சிறப்பு. இப்படியிருக்க, ஏ.ஐ.-யின்
பதில்பேசி போன்ற பேசும் இயந்திரங்களின் வருகை பொதுமக்கள் அரசியலைப் பற்றித் தீரத் தெரிந்துகொள்வதற்கும், அவ்வாறே அரசியல் தலைவர்களும் பொதுமக்களின் நலன்களை அறிந்து செயல்படுவதற்கும் உதவியாய் அமைந்திருப்பது சமுதாயத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். அரசியலில் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு என்பது முன்கூட்டியே தேர்தல் முடிவினைத் தெரிந்துகொள்வது.
இதற்குத் தீர்வாகத் தரவுகளையும் நடைமுறைச் செய்திகளையும் வைத்துத் துல்லியமாக ஏ.ஐ. அல்காரிதம்
முடிவுகளைக் கணக்கிடுகிறது.
மக்களின்
உணர்வு மற்றும் சமூகப் பொருளாதாரப் பின்னணிகளை விவரமாக ஆய்ந்து, அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவைக்கேற்ப தரவுகள் கிடைப்பது இன்று மிக எளிதாகிவிட்டது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அதற்கேற்ப தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும்
உதவுகிறது. போலி பரப்புரைகளைக் கண்டறியவும், சமூக வலை தளங்களையும், மற்ற பொதுச் செய்தித்தளங்களையும் கண்காணித்து, அதற்கான தீர்வு காணவும், திட்ட வல்லுநர்களுக்கு அடிப்படைத் தரவுகளை உடனுக்குடன் கொடுப்பதில் ஏ.ஐ. உதவுகிறது.
அரசியலில்,
மக்களின் மனநிலையைத் தெரிந்துகொண்டு திட்டங்கள் வகுத்திட, அதற்கேற்ப தேர்தல்
உத்திகளை அமைத்திட பழைய மற்றும் நடப்பு நிகழ்வுத் தரவுகளை வழங்குவதிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்குப்
பெரும் பங்கு இருப்பதைப் பார்க்கிறோம்.
ஏ.ஐ. இன்று உலகளவில் ஒரு புதுமைப் படைப்பாக அல்லது நம் அன்றாடத் தேவைக்கு என்றில்லாமல், அரசியல் களத்தை மாற்றியமைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. ஏ.ஐ.-யின் மின்னல் வேக தகவல் பரிமாற்றம், துரித அரசியல் கருத்துகள் கட்டமைப்பிற்கு உதவும் கருவியாகவும் அமைந்துள்ளது.
(தொடரும்)