தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தை ‘தி.மு.க. எதிர் த.வெ.க.’ எனக் கட்டமைக்க நடிகர் விஜய் முயல்கிறார். த.வெ.க. கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, மூன்றாவது அணியான அ.தி.மு.க.வை ‘பா.ச.க. தலைமையில் மற்றும் பலர்’ என மட்டம் தட்டுகிறார். கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் நடிகர் விஜய்க்காக சட்டமன்றத்தில் நரம்பு புடைக்க வாதிட்ட எடப்பாடியை, அவரது அ.தி.மு.க. கட்சியை ‘ஊழல்வாதிகள்’ என்கிறார் நடிகர் விஜய்.
அ.தி.மு.க.வினரோ கட்டபொம்மன் பாணியில் ‘வயலுக்கு வந்தாயோ? நாற்று நட்டாயோ? மஞ்சள் அரைத்தாயோ?’ எனப் பதில்
தருவதில் வியப்பில்லை. அவர்கள் ‘கட்சி ஆரம்பித்த பின் மக்களை நடிகர் விஜய் எத்தனை முறை சந்தித்தார்?’ எனக் கேட்கும் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. நாம் அறிந்தவரை இரண்டு ஆண்டுகளில் பத்து முறை பொதுவெளிக்கு வந்திருக்கிறார். நடிகர் விஜய் ஒருமுறை கூறுகிறார்: ‘நான் அண்ணா கூறியபடி மக்களைச் சந்திப்பேன்.’
மெரினா
கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே இந்த வாசகம் சுவரில் பொறிக்கப்பட்டு இருக்கும்: ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்காகச் சேவை செய்; மக்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு.’
நடிகர்
விஜய், எழுதித் தந்ததை ஏற்றத்தாழ்வுகளுடன் படிப்பவர். தன் கொள்கைத் தலைவர்களுக்குப் பனையூர் கட்சி அலுவலகத்தில் தனியே சென்று மாலை மரியாதை செய்பவர். பொதுவெளிக்கு வராதவர். அவர் ஓர் உள்முகச் சிந்தனையாளர். ஆதாயம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் நகர்கிறவர். தான் பெற்ற பயிற்சியின்படி கையைக் காலை ஆட்டிப் பேசுபவர். சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாதவர். கூட்டமான இடங்களுக்குச் செல்வது இவருக்குப் பிடிக்காது. பிறருடன் பேச விரும்பாதவர். தனிமை விரும்பி. இவை அனைத்தும் த.வெ.க.
தலைவர் விஜய் அவர்களுக்குப் பொருந்திப் போகிறது.
நடிகர்
விஜய் ‘தான் முதல்வர், தன் கட்சி ஆட்சி’ என வெடித்துப் பேசுகிறார்.
விஜய் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்க பா.ச.க.
தயாரித்த அரசியல் வெடி என்கிறார்கள். பற்றி எரிந்த திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து இவர் பேசவில்லை. கடந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நாளில் வட இந்தியாவில் தாக்கப்பட்ட
கிறித்தவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிராம விவசாயத் தொழிலாளர்களின் நூறு நாள் வேலைத் திட்டம் பற்றிக் கொதிக்கவில்லை. அதில் தேசப்பிதா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது குறித்து குரல் தரவில்லை. மாநில அரசின் நிதி, விழுக்காடு பங்கீட்டை அதிகரித்தது குறித்து வாய் திறக்கவில்லை. நெல்லை கவின் ஆணவப் படுகொலை குறித்துக் கருத்து கூறவில்லை. ஏனென்றால், குறிப்பிட்ட மேல்சாதி வாக்கில்
பாதிப்பு ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கையாம்! ஏன்
கோடி கோடியாக ரூபாய் கொட்டப்பட்டு, தனக்காக எடுக்கப்பட்ட ‘ஜனநாயகன்’
பட வெளீயிடு குறித்தும் கள்ள மௌனம் சாதிக்கிறார்; வாய் திறக்க மறுக்கிறார்.
தொலைக்காட்சி
பிரபலமும், திரையிசை அமைப்பாளருமான ஜேம்ஸ்
வசந்தன் நடிகர் விஜய் குறித்து விமர்சிக்கும்போது, “எல்லாரையும் பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறது என்ன குரூரமான மனம்? படம் வரலைன்னு இரசிகர்கள் கொந்தளிச்சுட்டு இருக்கான்; ஆனா, வாய் திறக்காம இருக்கிறாரு. அவர்களுக்கு அறிவுரை சொல்லவாவது வாய் திறக்கணும். இல்லை! விஜய் மேல ஆத்திரம் வருது. தமிழ்நாட்டு இளைஞர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கார்.
தன் சொந்தப் பிரச்சினைக்கே போராடாதவர், எப்படி மக்கள் பிரச்சினைக்காகப்
போராடுவார்? நடிகர்
விஜய் அவர்களின் இரசிகர்கள் அவரது கதாநாயகப் பிம்பத்தில் மதிமயங்கிக் கிடக்கிறார்கள்” என்கிறார்.
ஒளி
தருகிறது என மின்மினிப் பூச்சி
பின் போய் தொலைந்து போகிறார்கள் மக்கள். தனிநபர் வழிபாடு ஓங்கி இருக்கிறது; துதிபாடி மகிழ்கிறார்கள். அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டமாக இருக்கிறார்கள். கதாநாயகப் பிம்பம், நீர்க்குமிழியாய் பறக்க, அது
உடைபடும்போது உண்மையை உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை. சமூக ஊடகங்களில் செயல்பாட்டாளர்களாகத் திகழும் விஜய் இரசிகர்கள், கற்பனைச் செய்திகளில் வாழ்கிறார்கள். அவதூறு பரப்புவதில் வல்லவர்களாக உள்ளார்கள். கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் நடிகர் விஜய் டெல்லி விசாரணைக்குச்
சென்றபோது, இரண்டு விஜய் ஆதரவு தொலைக்காட்சிகளே ‘அவர் கைது செய்யப்படுவார்’ எனப்
பொய்ச்செய்தி போட்டுப் பரபரப்புக் கூட்டியது. அதற்குத் த.வெ.க.
கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார்,
“அது சன் தொலைக்காட்சி அவிழ்த்து விட்ட பொய்” எனத் தன் இரசிகர்களை மடை மாற்றுகிறார். இவர்களது இரசிகர்கள் ‘ஜனநாயகன்’
திரைப்படம் வெளி வராதது குறித்து தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். விஜய் இரசிகர்கள் ‘இன்பநிதி படம் வருகிறது, எங்கள் தலைவர் படம் ஏன் வரவில்லை?’ என எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
விஜய்
இரசிகர்கள், தமிழ்நாட்டு மொழிப்போர் வரலாற்றைக் கூறும் ‘பராசக்தி’
படத்தை வறுத்து எடுத்தார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் குறித்து வலைதளங்களில் அட்டைக்கத்தி ஆட்டத்தை இவர்கள் அழகாகச் செய்வார்கள். ஒன்றிய அரசை நோக்கி விஜய் இரசிகர்கள் கேள்வி கேட்க வேண்டும்; ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த எவருமே
பா.ச.க.-வை
நோக்கிக் கேள்விகள் எழுப்புவதில்லை என்பது பெரும் ஐயப்பாடாகும்.
நடிகர் விஜய் அவர்களும் தன் கொள்கை எதிரியான பா.ச.க. குறித்து
வாய் திறக்க மறுக்கிறார்.
சமூக
வலைதளங்களில் ஆர்வமுள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் வீரர் டி.டி.எஃப்,
வாசன் அவர்களைப் பற்றி அறிவார்கள். வாசன் ‘நாளை ஓர் ஊருக்கு வருகிறேன்’
என்று அறிவித்தால், அன்று அவரைக் காண ஆயிரமாயிரம் இளைஞர்கள்
கூடுவார்கள். அவர் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களில் சட்ட விதிகளை மீறினார். பரபரப்புக் காட்டினார். நீதிமன்றம் அவரது ஓட்டுநர் உரிமத்தை இரத்து செய்து அதிரடி காட்டியது. விஜய் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட ரெட் கார்ட் முறை உள்ளது. எந்த மரபுகளுக்கும் நியாயங்களுக்கும் உட்படாத, நெறியற்ற இரசிகர்கள் எதில் சேர்த்தி? இந்தியத் தேர்தல் ஆணைய விதிகளின்படி பொய்ப்பிரச்சாரம் செய்கிற கட்சியைத் தடை செய்யச் சட்டத்தில் இடமில்லை என்பதே உண்மை.
மக்கள்
ஆட்சியைப் பொறுத்தவரை பலவீனமான அம்சம் ‘குழு மனப்பான்மை’ என்கிறார்
சாக்ரடீஸ். அரசியல் தெளிவற்ற, அரசியல்வயப்படாத ஒரு குழு ‘விஜய் இரசிகர்கள்.’ சிறுபான்மை மக்கள் வாக்கு எங்களுக்கு மட்டும்தான் என்பதும், அவர்களின் ஒரு பொய்ப்பிரச்சாரம். சிறுபான்மை மக்களாகிய நாம் விழித்தெழுந்து இவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்போம்.