நம் இதயத்தின் கடினத்தன்மையை அகற்றி, அதை அன்பினால் நிரப்பும் ஒரு வசந்த காலம் தவக்காலம். “மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள்” என்ற அழைப்பிற்கு ஏற்ப, நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகி, கடவுளை நோக்கித் திரும்புகின்ற ஒரு காலம். இது வெறுமனே சோகமான காலம் அல்ல; இது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியில் நுழைவதற்கான ஓர் அருளின் காலம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டது போல, “தவக்காலம் என்பது ஒரு தனிமையான பயணம் அல்ல; இது கடவுளோடும் பிறரோடும் நாம் மேற்கொள்ளும் ஒரு புனிதப் பயணம்.”
ஒவ்வோர்
ஆண்டும் முதல் ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள மையச்சிந்தனை ‘சோதனை.’ நம் வாழ்வில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால், அந்தச் சோதனைகளில் நாம் வீழ்ந்து போகிறோமா? அல்லது அவற்றை ஏணிகளாக மாற்றி இறைவனை நோக்கி உயர்கிறோமா? என்பதே இன்றைய நாள் நம்முன் வைக்கும் கேள்வி. ஆதாமைப்போல அலகையின் பேச்சைக் கேட்டு வீழ்ந்தவர்களாய் வாழாமல், சோதனைகளை வெற்றிகொண்ட இயேசுவிடம் கற்றுக்கொள்ளவும், மிகுதியான அருளைப் பெற்று மகிழவும் இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
சோதனை
என்பது கடவுள் நமக்கு வைக்கும் ‘தேர்வு’அல்ல; மாறாக, அது நம் சுதந்திரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதற்கான ஒரு களம். சோதனை என்பது விழுவதற்காக வைக்கப்பட்ட பொறி அல்ல; அது எழுவதற்காகக் கொடுக்கப்பட்ட ஏணி. சோதனை நம் மனக்கதவைத் தட்டுவது பாவம் அல்ல; அதற்கு நாம் இடங் கொடுத்துக் கதவைத் திறப்பதே பாவம். “சோதனை உன்னை வீழ்த்தினால் அது பாவம்; நீ சோதனையை வீழ்த்தினால்
அது பேறுபெற்ற நிலை” என்பார் புனித ஜான் மரிய வியான்னி.
சோதனை
என்பது பாவம் அல்ல; மாறாக, கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவின் ஆழத்தை அளவிடும் ஒரு கருவி (யோபு 23:10). திருவிவிலியத்தில் சோதனையை இரண்டு வேறுபட்ட பார்வைகளில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று, சோதனை கடவுளால் அனுமதிக்கப்படுவது; மற்றொன்று, அலகையால் விளைவிக்கப்படுவது. ஒருபுறம், சோதனை என்பது ஒருவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், அவரை ஆன்மிக ரீதியில் முதிர்ச்சியடையவும் செய்யும்; மறுபுறம், இது மனிதனைப் பாவத்தில் விழச் செய்யவும் கடவுளிடமிருந்து பிரிக்கவும் தூண்டும். திருவிவிலிய வரலாற்றில் சோதனைகளைச் சந்தித்தவர்கள் பலர். அவர்களில் சிலர் தோற்றனர், சிலர் வென்றனர். ஆதாம் மற்றும் ஏவாள் (தொநூ 3:6), சிம்சோன் (நீத 16:16), தாவீது அரசர் (2சாமு 11:27). இவர்கள் அனைவரும் சோதனையால் வீழ்ந்தவர்கள். யோசேப்பு (தொநூ 39:9), யோபு (யோபு 1:21), ஆபிரகாம் (தொநூ 22:12) இவர்கள் சோதனையை வென்றவர்கள்.
மனிதர்கள்
அடிப்படையில் கடவுளின் அன்பினாலும் சிந்தனையாலும் மற்றும் அவரின் சொந்தத் திட்டத்தினாலும் உருவானவர்கள். இயற்கையாக அவர்கள் நல்லவர்கள். இருப்பினும், அவர்கள் அலகையினால் சோதிக்கப்பட்டு, பின்னர் தங்கள் தெய்வீக நிலையை இழந்தார்கள் என்பதே படைப்பின் தொடக்கம் உணர்த்தும் பாடம்.
தொடக்க
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், படைப்பின் சிகரமான மனிதரின் தோற்றத்தையும் நம்பிக்கையின்மையால் வீழ்ந்த வீழ்ச்சியையும் பற்றிய மிக முக்கியமான சில உண்மைகளை நமக்குக் கற்பிக்கின்றன. ஆதாம் ஏன் சோதிக்கப்பட்டான்? ஏன் பாவத்தில் விழுந்தான்? அலகை நேரடியாக ஆதாமைப் பாவத்தைச் செய்யத் தூண்டவில்லை. “தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் நீங்கள் உண்ணக்கூடாது என்று கடவுள் கூறியது உண்மையா?” (தொநூ 3:1) என்ற சந்தேகத்தை முதலில் மனிதனுக்குள் விதைக்கிறது. முதல் பெற்றோரிடம், “தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது. அதைத் தொடவும் கூடாது.” (தொநூ 3:3) என்ற கடவுளின் கட்டளையை ஒரு சுமையாக உணர வைத்தது. “நீங்கள் சாகமாட்டீர்கள்... கடவுளைப் போல அறிவைப் பெறுவீர்கள்” (3:4,5) என்று
கூறி, மனிதனின் உள்ளத்தில் ‘பேராசையை’
தூண்டியது. கடவுளைப் போல மாற நினைப்பது தவறல்ல; ஆனால், கடவுளைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக மாற நினைப்பது பாவமாகிறது. முதல் பெற்றோர் கனியை உண்டவுடன், “அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன” (3:7). இது
அவர்களுக்குக் கிடைத்த ஞானம் அல்ல; மாறாக, வெட்கமும் குற்ற உணர்வும்தான். அங்கே கடவுளுடனான உறவு துண்டிக்கப்படுகிறது.
இறைவார்த்தையின்
மீது சந்தேகம் கொள்வதே பாவத்தின் தொடக்கமாகிறது. கடவுள் நமக்குச் சுதந்திரத்தைத் தந்துள்ளார். ஆனால், அந்தச் சுதந்திரத்தைக் கடவுளின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தும்போது நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். பாவம் செய்த பிறகு ஆதாமை நோக்கிக் கடவுள், “எங்கே இருக்கிறாய்?” என்று கேட்கும் போது, ஆதாம் தன் தவற்றை ஏற்காமல், ஏவாள் மீது பழி போட்ட அந்த ‘பொறுப்புத் துறப்பு’ இன்றுவரை மனிதகுலத்தைவிட்டு நீங்கவில்லை. புனித அகுஸ்தினார் இவ்வாறு குறிப்பிடுவார்: “தவறு செய்வது மனித இயல்பு; ஆனால், செய்த தவறிலேயே நிலைத்திருப்பது அலகையின் இயல்பு.”
ஆதாம்
எனும் ‘ஒரு மனிதனின்’
கீழ்ப்படியாமையால்
பாவம் உலகிற்குள் நுழைந்தது. பாவத்தின் விளைவாகச் சாவு வந்தது (உரோ 5:12). ஆதாம், ஏதேன் தோட்டத்தில் சோதிக்கப்பட்டுத் தோற்றுப் போனான். ஆனால், ஆதாம் தோற்ற இடத்தில் அதாவது, ‘ஒரு மனிதனின்’
கீழ்ப்படிதலால்
அருள் உலகிற்குள் பெருகியது. அருளின் விளைவாக வாழ்வு வந்தது. பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம், நாமும் சோதனைகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவர் நமக்குத் தந்துள்ளார்.
இயேசு
எவ்வாறு அலகையை வென்றார்? அவர் அலகை எதிர்கொண்டது, உடல் உறுதியினால் அல்ல; மாறாக, இறைவார்த்தையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையினால். முதல் சோதனையில் தமது பசியைப் போக்க இறைமகன் என்ற தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு புதுமை செய்ய இயேசு இசையவில்லை. தாம் யூத மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வெறுமனே ஒரு புதுமை செய்யும் மெசியா அல்லர் என்றும், மக்கள் வாழ்விற்கு மிகவும் தேவையான இறைவார்த்தையை அளிக்க வந்தவர் என்றும் இயேசு உறுதியுடன் கூறி முதல் சோதனையை வெல்கிறார்.
தாம்
கடவுள் மகன் என்பதை இயேசு ஒரு வீரதீரச் செயலின் மூலம் காட்டவேண்டும் என்பது இரண்டாவது சோதனை. அதாவது, இயேசு மக்கள் சார்ந்த கடினமான மீட்புப் பணியை ஒதுக்கிவிட்டு, ஒரு குறுக்குப் பாதை வழியாகத் தமது பணியை முடித்துக் கொள்ளவேண்டுமாம்! இறைவார்த்தையின் வழி இச்சோதனையையும் இயேசு வெல்கிறார்.
மூன்றாவது
சோதனையில், இயேசு தமது இறையாட்சிப் பணிக்குரிய அன்பு, நீதி, சமத்துவம், இரக்கம் போன்ற மதிப்பீடுகளை விட்டுவிட்டு, உலக ஆட்சிக்குரிய பகட்டும் பொருளும் பதவியும் நாட வேண்டும் என்று சாத்தான் முயற்சி செய்கிறது. இச்சோதனைக்கு உட்படுதல் என்பது கடவுளுக்கு ஊழியம் செய்யாமல் உலக சக்திகளுக்கு ஊழியம் செய்வதாகும் என்ற இறைவார்த்தையை மேற்கோள்காட்டிச் சாத்தானை விரட்டுகிறார் இயேசு. உலக மாயைகளுக்கு அடிபணியும் சோதனைகளை வென்ற இயேசுவுக்கு வானதூதர்களே பணிவிடை புரியும் உயர்நிலை ஏற்படுகிறது (மத் 4:11). சோதனைகளை வென்ற இயேசு உறுதியான உள்ளத்துடன் தமது பணி வாழ்வைத் தொடங்குகிறார்.
இயேசு
எதிர்கொண்ட மூன்று சோதனைகளும் சாமானிய மனிதரின் வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் சோதனைகளே. ஆனால், அவற்றை எப்படி முறியடிப்பது என்பதற்கான “வெற்றிப் பாதையை” இயேசு நமக்குத் தம் பாலைநிலப் பயணத்தின் வழியாகக் காட்டியுள்ளார். முதலில், இறைவார்த்தையை நம் வாழ்வின் ஆயுதமாக்கவேண்டும் (எபி 4:12). இரண்டாவது, நாம் அலகையின் அடிமைகள் அல்ல; மாறாக, கடவுளின் பிள்ளைகள் எனும் அடையாளத்தில் உறுதியாக நிற்கவேண்டும் (கலா 4:7). மூன்றாவது, “சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டும்”
(மத் 26:41).
எனவே,
நம் வாழ்வின் பாலைநிலங்களில் சோதனைகள் வரும்போது, நாம் தனிமையில் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். ஆதாமைப் போலத் தோற்றுப்போக நாம் அழைக்கப்படவில்லை. மாறாக, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் வழியாக வெற்றியைச் சுவைக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, இந்தத் தவக்காலத்தில் இறைவார்த்தை என்ற வாளை ஏந்துவோம்; செபம் என்ற கேடயத்தைப் பிடிப்போம்; அருள்வாழ்வு என்ற பாதையில் உறுதியுடன் நடப்போம். ஆதாமோடு வீழ்ந்தது போதும், ஆண்டவரோடு எழுவோம்! சோதனைகளை வெல்வோம்!