இந்தியா இன்று உலகப் பொருளாதார அரங்கில் ஒரு மாபெரும் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ‘அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவின் பத்தாண்டுகள்’ என்று உலகளாவிய நிதிநிறுவனங்கள் முழங்கி வருகின்றன. ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வருவது, புவிசார் அரசியலில் நமக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், இந்தக் கவர்ச்சிமிகு எண்களுக்குப் பின்னால், ஒரு சாதாரண இந்தியனின் சட்டைப் பையில் இருக்கும் வருமானம் என்ன? என்பதும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எகிறும்போது, தனிநபர் வருமானம் ஏன் இன்னும் தரைமட்டத்திலேயே இருக்கிறது? என்பதும் அதிர்ச்சி தரும் கேள்விகளே! பெருமை பாராட்டும் இந்தியாவின் வளர்ச்சி குறித்த பிம்பத்தில் இந்தக் கேள்விகள் கரும் புள்ளிகளாகவே தொடர்கின்றன.
உலகளாவிய
நாணய நிதியத்தின் (IMF) 2025-ஆம்
ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் பெயரளவு GDP நான்கு டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. மேலும், வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் நாம் ஏற்கெனவே மூன்றாவது இடத்தில் வலுவாகவே இருக்கிறோம். ஆனால், அதே IMF தரவுகள்,
இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் 2,818 டாலர்கள் மட்டுமே என்ற மற்றொரு கசப்பான உண்மையையும் பதிவுசெய்கின்றன.
ஒப்பிட்டுப்
பார்த்தால், சீனா 13,300 டாலர்களுடனும், வளர்ந்த நாடுகள் 40,000 டாலர்களுக்கும் அதிகமான தனிநபர் வருமானத்துடனும் முன்னிலையில் உள்ளன. ஒரு நாட்டின் மொத்த வருமானம் உயரும்போது, அது மக்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதே ஒரு சிறந்த பொருளாதாரத்தின் அடையாளம். இந்தியாவில் அந்தப் பகிர்வு சமமாக இல்லை என்பதே உண்மை.
இந்தியப்
பொருளாதாரத்தின் போக்கை அதல பாதாளத்திற்குத் தள்ளிய மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று, 2016-இல் பா.ச.க.
அரசால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும். ‘கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில்’
கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கை, முறைசாராத் துறையைக் (Informal Sector) கடுமையாகச்
சிதைத்துள்ளது.
இந்தியாவின் 90% வேலைவாய்ப்புகள்
முறைசாராத் துறையில்தான் உள்ளன. ரொக்கப் பணத்தைச் சார்ந்து இயங்கிய சிறு, குறு தொழில்கள் முடங்கியதால், இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். அந்த இழப்பு இன்னும் மீட்டெடுக்க முடியாத நிலையிலேயே உள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சேமிப்பு கரைந்தது. இதன் தொடர்ச்சியாக வந்த ஜி.எஸ்.டி.
(GST) அமலாக்கம், பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், சிறு வணிகர்களுக்குச் சுமையாகவும் அமைந்தது கொடுமையிலும் கொடுமை! பொருளாதார வளர்ச்சி ‘மேல் மட்டத்தில்’ தெரிந்தாலும்,
‘கீழ் மட்டத்தில்’ மக்களின்
வாங்கும் திறன் குறைய இதுவே தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்பதே எதார்த்தம்.
இந்தியாவின்
தற்போதைய மிகப் பெரிய சவால் வேலையின்மை. CMIE (Centre for Monitoring Indian Economy) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8% முதல் 9% வரை
ஊசலாடுகிறது. குறிப்பாக, படித்த இளைஞர்களிடையே இது 20%-க்கும்
அதிகமாக நீடிப்பது வேதனையிலும் வேதனை.
‘ஆக்ஸ்பாம்’
(Oxfam) அண்மை
அறிக்கையில், இந்தியாவின் 1% மிக
உயர்ந்த பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள்
குவிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள 50% மக்களிடம்
நாட்டின் மொத்தச் சொத்தில் வெறும் 3% மட்டுமே
உள்ளது. ‘கே-வடிவ வளர்ச்சி’ (K-shaped recovery) என்று
பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடும் இந்த நிலை, வசதி படைத்தவர்கள் மேலும் வசதி அடைவதையும், ஏழைகள் மேலும் ஏழ்மை அடைவதையும் காட்டுகிறது.
தொடரும் ஒன்றிய
பா.ச.க. அரசின்
தீவிரமான தனியார்மயமாக்கல் கொள்கை இந்தியாவின் பொருளாதாரத்தைச் சிலருடைய கைகளிலே அடகுவைத்தது போலாகிறது. பொதுத்துறை நிறுவனங்களைச் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் செயல்கள் தொடர்கின்றன. இன்று, விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை நாட்டின் முக்கியச் சொத்துகள் ஒருசில பெரும் பணக்காரர்களின் கைகளில் குவிந்து வருகின்றன.
பொருளாதார
வல்லுநர்கள் இதை ‘குரோனி கேபிடலிசம்’ (Crony Capitalism) என்கின்றனர். அதாவது, அரசின் கொள்கைகள் ஒட்டுமொத்தப் பொதுமக்களுக்கானதாக இல்லாமல், ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் சாதகமாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் மொத்தச் செல்வம் உயர்கிறது; ஆனால், அது ஒருசிலரின் வங்கிக்கணக்குகளில் மட்டுமே முடங்கிக் கொள்கிறது.
மேலும், இந்திய
மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். பா.ச.க.
அரசு கொண்டு வந்த புதிய விவசாயச் சட்டங்கள் (மீளப் பெறப்பட்டாலும்), விவசாயத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
விவசாயிகளுக்குக்
குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கிடைப்பதில்
நிலவும் சிக்கல்கள் மற்றும் உரங்கள், டீசல் போன்ற இடுபொருள்களின் விலை உயர்வு ஆகியவை கிராமப்புற வருமானத்தை முடக்கியுள்ளன. நகர்ப்புறங்களில் உயர்தொழில்நுட்பச் சேவைத்துறை வளர்ந்தாலும், கிராமப்புறப் பொருளாதாரம் இன்னும் தேக்கநிலையிலேயே உள்ளது கவலையளிக்கிறது. ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாழும் கிராமப்புறங்களில் வருமானம் உயராதவரை, தேசிய அளவில் தனிநபர் வருமானம் உயர்வது சாத்தியமில்லை.
ஆகவே, இந்தியா, இன்று ஓர் ‘இரட்டை எதார்த்தத்தில்’ பயணிக்கிறது.
ஒருபுறம் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நாடு பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டிருக்கிறது; மறுபுறம், ஒரு சராசரி இந்தியன் பணவீக்கத்தாலும், குறைந்த வருமானத்தாலும் அன்றாட வாழ்க்கையை நடத்தப் போராடிக்கொண்டிருக்கிறான்.
GDP உயர்வு
என்பது தேசத்தின் கௌரவம்; ஆனால், தனிநபர் வருமான உயர்வு என்பது மக்களின் வாழ்வு. இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே இந்தியாவின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும். அப்போதுதான் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவு உண்மையான அர்த்தத்தைப் பெறும். இத்தகைய அரசுக்குத்தான் அன்றே ஐயன் வள்ளுவர்,
‘இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு’
(385) என்றார்.
அதாவது,
பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், வந்த பொருளைச் சேர்த்தல், சேர்த்ததைக் காத்தல் மற்றும் காத்த பொருளைச் சரியாகத் திட்டமிட்டுச் செலவிடுதல் ஆகிய நான்கையும் சிறப்பாகச் செய்ய வல்லவனே சிறந்த அரசன் என்றார். இன்றைய ஒன்றிய அரசு தன்னைச் சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பொருள் வரும் வழிகளும் முறையாக உருவாக்கப்படவில்லை; வந்த பொருளைச் சேர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை; சேர்க்கவே இயலாதபோது எப்படிக் காக்கமுடியும்? காத்த பொருளை எப்படிச் சரியாகத் திட்டமிட்ட முடியும்?
இத்தகைய
சூழலில், இந்திய நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளிவர உள்ளது. இது வெறும் எண்கள் மற்றும் வரைபடங்களின் தொகுப்பு அல்ல; மாறாக, 140 கோடி இந்தியர்களின் உழைப்பையும், நாட்டின் முன்னேற்றப் பாதையையும் பிரதிபலிக்கும் கண்ணாடி அது. ஒவ்வொரு பட்ஜெட்டில் ‘யாருக்கு என்ன கிடைக்கும்?’ என்று பார்ப்பதற்குப் பதிலாக, ‘நாம் தற்போது எங்கே இருக்கிறோம்?’ என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு
குடிமகனுக்கும் அவசியம்.
நடப்புப் பொருளாதார
ஆய்வறிக்கையில் ‘வளர்ந்த இந்தியா - 2047’ (Viksit Bharat)) திட்டத்திற்கான
ஒரு வரைபடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகளை எட்டும்போது, உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாறுவதற்கான சீர்திருத்தங்கள் என்னென்ன தேவை என்பதை இந்த ஆய்வறிக்கை விரிவாக விவாதிக்க உள்ளது.
டிஜிட்டல்
பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு போன்ற நவீனகாலத் தேவைகள் இந்த வரைபடத்தில் முக்கிய இடம்பிடித்தாலும், குடியானவனின், தனிமனிதரின் வருமானமும் வாழ்வியலும் மேம்படும்போதே, இந்தியா வளர்ந்த நாடாக அறியப்பட்டுப் போற்றப்படும்!
ஏழையோரின்
வாழ்வு உயரட்டும்!
இந்தியப்
பொருளாதாரம் சிறக்கட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்