இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க முண்டாசுக் கவிஞன் பாரதி விடுத்த அழைப்பு உன்னதமானது. சாதி, இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒரே குலம், ஒரே இனம் என்று முழங்கிய அக்கவிஞன்,
‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும்
இந்திய மக்கள்;
எல்லாரும்
ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை,
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - வாழ்க!’
என்று
பாடினான். பாரதியின்
இக்கனவை நனவாக்கும் பெரும் பொறுப்பு நம் கல்வி நிறுவனங்களுக்கே பெரிதும் உண்டு. சாதி, மதம், இனம் கடந்த ஒரு சமத்துவக் கல்விச் சூழலே ஒரு தேசத்தின் உண்மையான வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இருப்பினும், நவீன இந்தியாவின் உயர் கல்வி வளாகங்கள் அவ்வப்போது சாதியப் பாகுபாடுகளின் நிழலில் சிக்குவது ஒரு கசப்பான எதார்த்தமாகவே நீடிக்கிறது.
இந்தப்
பாகுபாடுகளைக் களையும் நோக்கில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த ‘2026-ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள்’ தற்போது
ஒரு மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு, இந்தியக் கல்வித்துறையில் நிலவும் ஆழமான சமூக முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த
விதிமுறைகளை மேலோட்டமாகப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இவை ‘தெளிவற்றவை’ என்றும்,
‘தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியவை’ என்றும்
தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்துப்படி, இத்தகைய விதிகள் ஒரு நுணுக்கமான சட்ட வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, இவை சமூகத்தில் தேவையற்ற கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், ஒரு தகுதிவாய்ந்த நிபுணர் குழுவின் மூலம் இந்த விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த
சனவரி 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய விதிமுறைகள், உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யப் பல கட்டமைப்பு மாற்றங்களை
முன்மொழிந்தன. அதன்படி, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் புகார்களைத் தீர்க்கச் ‘சம வாய்ப்பு மையங்களை’ நிறுவவேண்டும்
என அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,
தடையின்றி (24 x 7) செயல்படும் உதவி எண்கள், சமத்துவக் குழுக்கள் மற்றும் உயர்மட்டக் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலம் ‘பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற வளாகங்களை’
உருவாக்குவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறே, புகார்களைப் பெற்றவுடன் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் நடவடிக்கை எடுத்து, அது குறித்த ஆண்டறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், இந்திய அரசமைப்பின் சமத்துவக் கோட்பாடுகளுக்கும், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் நோக்கங்களுக்கும் ஒத்திருப்பதாக ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும்,
இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டவுடனே, அதன் மொழி மற்றும் வடிவமைப்பு குறிப்பாக, பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பாதுகாப்புகள் எனும் சொல்லாடல்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுவதாக எதிர்ப்புகள் எழுந்தன. நாடு முழுவதும் போராட்டங்களும், அரசியல் கொந்தளிப்புகளும் வெடித்தன. குறிப்பாக, ஆளும் ஒன்றிய பாரதிய சனதா கட்சியின் சில பொறுப்பாளர்கள் இந்த விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தங்கள் பதவிகளை விட்டு விலகியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்ப்பாளர்களின்
முதன்மையான வாதம், யு.ஜி.சி.யின் இறுதி வரைவு அறிக்கையிலிருந்து ‘பொய்ப் புகார்கள்’
(False complaints) குறித்த பிரிவு நீக்கப்பட்டதுதான். தொடக்க வரைவில், பாகுபாடு குறித்து யாராவது பொய்ப் புகார் அளித்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இறுதி விதிகளில் இப்பிரிவு நீக்கப்பட்டது, உயர் சாதி அமைப்புகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்’ எனும்
மூத்தோர் சொல்தான் நினைவுக்கு வருகின்றது. இந்த விதிகள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர்.
சென்னை
I.I.T. மற்றும் பல உயர்கல்வி நிறுவனங்களில்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் நிர்வாகத்திலும், பேராசிரியர் பணியிடங்களிலும் மேலோங்கி
இருப்பதும், அங்கு மற்ற சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் ஏன்... பேராசிரியர்களும் சாதியப் பாகுபாடுகளைச் சந்திப்பதும் அன்றாடச் செய்தியாவதை நாம் அறிவோம்.
இத்தகைய
சூழலில், கல்வி வளாகங்களில் சமத்துவத்தை நிலைநாட்ட முனையும் ஒரு சட்டமியற்றல், ஏன் இத்தனை போராட்டங்களுக்கு உள்ளாகிறது? என்பது பெரும் ஆய்வுக்குரியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வளாகங்களில் சந்திக்கும் நுட்பமான பாகுபாடுகளைத் தடுப்பது அரசின் கடமை. அதே வேளையில், எந்தவொரு சட்டமும் ஒரு சார்புடையதாகவோ அல்லது பழிவாங்கும் கருவியாகவோ மாறிவிடக்கூடாது என்பதில் நீதித்துறை உறுதியாக உள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஆயினும்,
உச்ச நீதிமன்றத்தின் தடை என்பது இச்சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது அல்ல; மாறாக, இச்சட்டத்தின் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்துவதில் இருக்க வேண்டிய தெளிவின்மைக்கான எச்சரிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
ஆகவே,
இனிவரும் காலங்களில், உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிபுணர் குழு இச்சட்டத்தை எவ்வாறு மறுசீரமைக்கப் போகிறது என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. சமத்துவத்தை உறுதி செய்யும் அதே வேளையில், தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், பொய்ப் புகார்கள் தவிர்க்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும் என்றே சட்ட வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக,
விதிமுறைகளில் உள்ள ‘பாகுபாடு’
எனும் சொல்லிற்கான தெளிவான சட்ட வரையறை கொடுக்கப்படவேண்டும் என்றும், புகார்களை விசாரிக்கும் குழுக்களில் அனைத்துத் தரப்புப் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்ய வேண்டுமென்றும், பொய்ப் புகார்களைத் தடுக்கவும், அதேசமயம் உண்மையான புகார்களைப் பதிவு செய்ய அஞ்சுவோருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் சமநிலையான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுள்ளன.
இறுதியாக,
மண்ணின் மாண்பு என்பது நிலத்தில் இல்லை; அந்த நிலத்தில் பயிலும் மாணவர்களின் மனங்களில் இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் சாதியத்தின் வேர்களிலிருந்து விடுபட்டு, அறிவின் ஒளியால் ஒளிரவேண்டும். ‘2026 யு.ஜி.சி.’
விதிகள் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் சில அடிகள்! இந்த விதிகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தலையீடு, ஒரு நீதியான மற்றும் முறையான சட்டக் கட்டமைப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் என்று நம்புவோம். சட்டம் என்பது தண்டனைக்கான கருவி மட்டுமல்ல, அது சமூக மாற்றத்திற்கான ஒரு மென்மையான ஊன்றுகோலாகவும் இருக்க வேண்டும்.
‘சமூக நீதி’ என்பது ஒரு தரப்பினரின் வெற்றியும் மற்றொரு தரப்பினரின் தோல்வியும் அல்ல; மாறாக, அது ஒட்டுமொத்த தேசமும் இணைந்து முன்னேறும் ஒரு கூட்டுப் பயணமே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்