1. இறைவனின் மீட்புத் திட்டத்தில், அவரின் ஒரே மகன் கன்னியிடமிருந்து பிறக்க வேண்டுமெனக் கடவுள் விரும்பினார். இந்தத் தெய்வீகத் திட்டமானது, மரியாவின் கன்னிமைக்கும் வார்த்தை மனுவானதற்குமான ஆழமானதோர் உறவிற்கு அழைக்கின்றது. “கடவுள் அவரின் மீட்புத் திட்டத்தில், ஏன் அவருடைய மகன் ஒரு கன்னியிடமிருந்து பிறக்க வேண்டுமென விரும்பினார் என்பதற்கான மறையுண்மையை நம்பிக்கையின் கண்ணோட்டத்தில் திருவெளிப்பாட்டின் முழுமையானதொரு சூழலில் உணரமுடியும். இந்தக் காரணங்கள் கிறிஸ்துவின் மனித நிலை, அவரின் பணி ஆகிய இரண்டிலும் எல்லா மனிதர்கள் சார்பாகவும் இந்தப் பணிக்கு மரியா கொடுத்த வரவேற்பையும் வெளிக்காட்டுகின்றது” (Catechism of the Catholic Church, n. 502).
மனித
தந்தையைத் தவிர்த்த இந்தக் கன்னி கருத்தரிப்பானது இயேசுவின் ஒரே தந்தை வானகத் தந்தை ஒருவரே என்பதையும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்த மகனின் இந்தப் பிறப்பு அவரின் நிலையான பிறப்பையும் குறிக்கிறது. காலவரையறைக்கு உட்படாத மகனைத் தோற்றுவித்த தந்தையானவர், குறிப்பிட்ட காலகட்டத்தில் அவரை மனிதனாகவும் தோற்றுவிக்கிறார்.
2. கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு நிகழ்வானது இயேசுவின் பிறப்பில் கடவுளுடைய இடையீட்டின் விளைவால் ‘கடவுளின் மகன்’ என்ற அவரின் நிலையை வலியுறுத்துகிறது. “தூய ஆவி உம்மீது வரும்; உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்; ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது; அக்குழந்தை இறைமகன் எனப்படும்”
(லூக் 1:35).
கன்னி கருத்தரிப்பானது
மரியாவினுடைய ஒத்துழைப்பின் பயனாக இருக்கின்றது
மரியாவிடமிருந்து
பிறந்தவர், அவரின் நிலையான பிறப்பின் காரணமாக ஏற்கெனவே
கடவுளின் மகனாக இருக்கின்றார். உன்னதமானவரால் வழங்கப்பட்ட கன்னியிடமிருந்தான அவரின் பிறப்பானது அவருடைய மனித இயல்பிலும் அவர் கடவுளின் மகனாகவே இருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.
கன்னியிடமிருந்தான
இயேசுவின் பிறப்பில் வெளிப்படுத்தப்படும் அவருடைய நிலையான பிறப்பானது, அவரின் மனிதப் பிறப்பினால் “தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும், கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனுடைய...” (யோவா 1:18) பணியை, கட்புலனாகாத கடவுளுடைய வெளிப்பாட்டோடு தொடர்புபடுத்துகின்ற தூய யோவான் நற்செய்தியினுடைய முகவுரையின் வழியாகக் குறிப்பிடப்படுகின்றது: “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்; அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” (யோவா
1:14).
இயேசுவின்
பிறப்பை விவரிப்பதில், நற்செய்தியாளர்களான லூக்காவும் மத்தேயுவும் தூய ஆவியானவரின் பங்கையும் பற்றிப் பேசுகின்றனர். தூய ஆவியானவர் அந்தக் குழந்தையின் தந்தை அல்ல; தூய ஆவி வழியாக இந்த உலகிற்கு வந்து, அவரின் மனித இயல்பில் வார்த்தையைத் தோற்றுவிக்கின்ற என்றுமுள்ள தந்தையின் மகனாக மட்டுமே இயேசு இருக்கின்றார் (ஒப்பிடுக. லூக் 1:32-35). உண்மையில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் வானதூதர் தூய ஆவியாரை, மனித வாழ்வில் அற்புதச் செயல்களைச் செய்யவல்ல வேலைகளில் ஒரு தெய்வீகச் சக்தியாக முன்னிறுத்துகின்ற பழைய ஏற்பாட்டின் வழியில் “உன்னதக் கடவுளின் வல்லமை”
(லூக் 1:35) என்றே அழைக்கின்றார். மனுவுருவாதலின் மறைபொருளில் மிகச்சிறந்த வகையில் அதையே வெளிப்படுத்தி, மூவொரு கடவுளின் வாழ்வில் அன்பாக இருந்து செயல்படுகின்ற இந்தச் சக்தியானது, வார்த்தை மனுவுருவானவரை இந்த மனுக்குலத்திற்கு அளிக்கின்ற செயலைக் கொண்டுள்ளது.
3. குறிப்பாக,
தூய ஆவியானவர்தான் தெய்வீக வளங்களை மனிதர்களுக்குக் கொடுக்கிறார் மற்றும் கடவுளுடைய வாழ்வில் அவர்களையும் பங்குதாரர்களாக ஆக்குகின்றார். மூவொரு கடவுள் மறையுண்மையில் தந்தையையும் மகனையும் இணைக்கின்ற அவரே, இயேசுவின் கன்னியிடமிருந்தான பிறப்பின் வழியாகக் கடவுளோடு
மனுக்குலத்தை இணைக்கின்றார்.
மனுவுருவாதல்
மறைபொருளானது ஒப்பீடு செய்ய இயலாத மரியாவின் கன்னித்
தாய்மையினுடைய மேன்மையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இயேசுவின் கருத்தரிப்பானது, எல்லா வளங்களின் ஊற்றாகிய அன்பின் ஆவியாரினுடைய செயலோடு, அவருடைய தாராள ஒத்துழைப்பினால் விளைந்ததொரு கனியாக இருக்கிறது.
ஆகவே,
இந்த இறைமீட்புத்
திட்டத்தில், கன்னி நிலையில் கருத்தரிக்கும் நிகழ்வானது ஒரு புதிய படைப்பின் அறிவிப்பாக இருக்கின்றது. தூய ஆவியாரின் செயலால், புதிய ஆதாமாக இருக்கப் போகிறவர் மரியாவில் உருப்பெறுகிறார்.
கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி நூல் குறிப்பிடுவதைப் போல, “இயேசு கன்னி மரியாவின் கர்ப்பத்தில் தூய ஆவியாரினால் கருவாக உருவானார்; ஏனென்றால், அவர்தான் புதிய படைப்பைத் தொடங்கவிருக்கின்ற புதிய ஆதாமாக இருக்கிறார் (Catechism of the Catholic Church, n.. 504).
நம்பிக்கையுள்ளோர்
கடவுளின்
குழந்தைகளாவதற்கான
ஆற்றல்
கொடுக்கப்படுகிறார்கள்
மரியாவினுடைய கன்னித்
தாய்மையின் பங்கானது இவ்வாறு புதிய படைப்பின் மறையுண்மையில் மிளிர்கின்றது. “கன்னியின் முதற்கனி”
(Ad Haer., 3,16,4) என்று
கிறிஸ்துவை அழைப்பதில் புனித எரோணிமுஸ் அவர்கள், கிறிஸ்துவின் புதுவாழ்வைப் பெறுகிறார்கள் என்ற அர்த்தத்தில் இயேசுவிற்குப் பின் கன்னியிடமிருந்து மற்றவர்களும் பிறந்தார்கள் என்பதை நினைவுகூர்கின்றார். “மரியாவின் ஒரே
மகன் இயேசுதாம். ஆனால், அவரின் ஆன்மிகத் தாய்மையானது உண்மையில் இயேசு யாரையெல்லாம் மீட்க வந்தாரோ அவர்களுக்கும் அகலப்படுத்தப்படுகின்றது. எந்த மகனை அவர் பெற்றெடுத்தாரோ அவரோடு, ஒரு தாயன்போடு ஒத்துழைத்து அவர் யாரையெல்லாம் பெற்றெடுத்து உருவாக்கினாரோ அந்த நம்பிக்கை கொண்டோருள் எல்லாச் சகோதரர்களுக்குள்ளும் முதன்மையானவராகக் கடவுள் அவரை வைத்தார்”
(Catechism of the Catholic Church, n. 501).
4. புது
வாழ்வின் பரிமாற்றமானது இறைமக்கள் ஆவதற்கானதொரு வழியாக இருக்கின்றது. இங்கு நற்செய்தியாளர் புனித யோவான் அவருடைய நற்செய்தியின் முகவுரையில் கூறியுள்ள கூற்றை நாம் நினைவிற்கொள்ளலாம்: “அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ, உடல் இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்லர்; மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்” (ஒப்பிடுக.
யோவா 1:12-13). இவ்வாறு, கன்னியிடமிருந்தான பிறப்பானது இறைதந்தைக்கான நீட்சியை அனுமதிக்கின்றது; கன்னியின் மற்றும் இறைத்தந்தையின் மகனில் அனைத்து மனிதர்களும் தத்தெடுக்கப்பட்ட மக்களாக (adoptive children
of God) ஆகின்றனர்.
இவ்வாறு,
கன்னியிடமிருந்தான பிறப்பின் மறைபொருளைத் தியானிப்பதென்பது, கடவுள் அவரின் தந்தையன்பை மிகத் தாராளமாக மனுக்குலத்திற்கு வழங்குவதற்கு, அவருடைய மகனுக்கு ஒரு கன்னித் தாயைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்துகொள்ள நமக்கு உதவியாக இருக்கின்றது.
மூலம்:
John Paul II, Eternal son of God is also born of Mary, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 7/14
August 1996, p.7.