news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு (25-01-2026) எசா 9:1-4; 1கொரி 1:10-13,17; மத் 4:12-23

திருப்பலி முன்னுரை

மனம் மாற்றம் பெற்று, இயேசுவின் சீடர்களாக வாழ பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. அழைப்பு - இது உன்னதக் கொடை; கடவுளின் கருணையால் கொடுக்கப்படும் விலைமதிக்க முடியாத பரிசு! இன்றைய நற்செய்தியில் இயேசு தமது பணிக்காகச் சீடர்களைஎன் பின்னே வாருங்கள்என்று அழைக்கிறார். இயேசுவின் அழைப்பைக் கேட்டவுடன், உலகச் செல்வங்களை உதறித் தள்ளிவிட்டு உன்னத வாழ்வுக்கு உயிர் கொடுக்க தயக்கம் சிறிதுமின்றிஆம்என்று கூறி பெற்றோர், உடன்பிறப்புகள், உறவுகள், குடும்பம், தொழில்  என அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றனர். நானிலம் முழுவதும் சென்று வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அறிவித்து, இயேசுவின் பெயரால் வல்லமையான செயல்களைச் செய்து, தங்களது இன்னுயிரையும் கொடுத்து இயேசுவின் திரு நாமத்தின் மகத்துவத்தை அனைத்து மக்களும் அறியச் செய்தனர்இத்தகைய சீடத்துவ வாழ்வுக்கு இன்று இயேசு நம்மையும் அழைக்கிறார்.

இந்த உலக வாழ்க்கையின்மீது நாம் கொண்டுள்ள அனைத்துப் பற்றுகளையும் துறந்து, இயேசுவே எனக்கு ஆதாரம் என வாழத் தொடங்குவோம். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ்ந்து, இறையாட்சியின் மதிப்பீடுகளை இம்மண்ணில் விதைப்போம்இயேசு என்ற உன்னத உறவை நமதாக்கி, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இயேசுவின் மதிப்பீடுகளில் நிலைத்து, பல மடங்குப் பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

ஒளியின் பாதையில் நடக்கும் மக்களுக்கு இறைவன் மகிழ்ச்சியைத் தருவார், துன்பங்களிலிருந்து விடுதலையைக் கொடுப்பார், அழுகையை அக்களிப்பாக மாற்றி பேரானந்தத்தைச் சுவைக்கச் செய்வார் என்று கூறி, இறைவன் என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு அமைதியோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்களாகிய நாம் பிரிவுகளைக் களைந்து, பிளவு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, ஒரே எண்ணமும் ஒரே நோக்கமும் கொண்டு நற்செய்தியை அறிவிக்கவும், நம்மிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களும் இயேசுவின் அன்பைச் சுவைக்க உழைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘என் பின்னே வாருங்கள்என்று சீடர்களை அழைத்த ஆண்டவரே! உமது பணிக்காக நீர் தேர்ந்து கொண்ட எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் அனைத்துப் பற்றுகளிலிருந்தும் விலகி உம்மீது பற்றுக் கொண்டு வாழவும், அதன் வழியில் எம்மை வழிநடத்தவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டில் நிலவுகின்ற பிரிவுகள், பிளவுகள், வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து, மக்கள் பாதுகாப்போடு வாழவும், நடைபெறவிருக்கும்  தேர்தலில் மக்களைக் காக்கும் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களைக் கைவிட மாட்டேன்என்று கூறிய ஆண்டவரே! எங்கள் குடும்பங்களில் அன்பு, அமைதி, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல் போன்ற மதிப்பீடுகள் வளர்ந்திடவும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவராக வாழ்ந்திடவும் தேவையான தூய மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறிய ஆண்டவரே! அழைப்பின் மகத்துவத்தையும் உன்னதத்தையும் அறிந்த நாங்கள், எமது குழந்தைகளை இறைப்பணிக்கு மனமுவந்து அனுப்பவும், இறையழைத்தலை எமது குழந்தைகளிடம் ஊக்குவிக்கவும் தேவையான நல்ல மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.