news-details
ஆன்மிகம்
நற்செய்தியும் நல்வாழ்வும் (2026, சனவரி 25 இறைவார்த்தை ஞாயிறு

2026, சனவரி 25-ஆம் நாள் அகில உலக 7-வது இறைவார்த்தை ஞாயிறாகக் கொண்டாடப்பட நம் திருத்தந்தை லியோ திரு அவைக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2020-ஆம் ஆண்டு முதல் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு, அகில உலக இறைவார்த்தை ஞாயிறாகக் (Sunday of the Word of God) கொண்டாடப்பட நம் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு நல்கினார்.

அப்போது அவர்களுடைய கண்கள் திறந்தன (லூக் 24:31) என்ற புனித லூக்காவின் இறைவார்த்தையை மையப்படுத்தி, 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் திருவிவிலியத்தின் பேரறிஞர் புனித ஜெரோமின் விழாவன்றுAPERUIT ILLISஎன்ற தன் திருத்தூது ஊக்கவுரையை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலக இறைவார்த்தை நாளை அறிவிப்புச் செய்தார்.

இறைவார்த்தை நம் உள்ளத்தையும் வாழ்வையும் நல்வழிப்படுத்தி, அவநம்பிக்கையையும் அறியாமையையும் அகற்றி, புதிய ஒளியோடு பயணிக்க நம் கண்களைத் திறக்கவல்லது என்ற எம்மாவு அனுபவத்தை, உயிர்ப்பின் அனுபவமாகத் தரும் நாளாக அகில உலக இறைவார்த்தை ஞாயிறு கொண்டாடப்பட திரு அவை நமக்கு வழிகாட்டுகிறது. இயேசுவின் நற்செய்தியைக் கேட்பதும், வாசிப்பதும், தியானிப்பதும், வாழ்வாக்குவதும் நம்பிக்கையாளர் அனைவரின் இன்றியமையாதக் கடமை என்பதை இந்த இறைவார்த்தை ஞாயிறு மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையச் சிந்தனையை இறைவார்த்தையின் அடிப்படையில் முன்மொழிந்து, இறைவார்த்தையின் மேன்மையையும் புனிதத்தையும் போற்றும் நாளாகவும், இறைவார்த்தைக்கேற்ப நம் நம்பிக்கை வாழ்வு அமையவேண்டும் என அறிவுரை வழங்கும் ஆண்டவரின் நாளாகவும் அகில உலக இறைவார்த்தை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டின் சனவரி 25-ஆம் நாள் இறைவார்த்தை ஞாயிறாக நாம் கொண்டாடப்பட அகில உலகமும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு திரு அவையில் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் திருவிவிலிய மாதமாக நாம் சிறப்பாகக் கொண்டாடினாலும், அண்மை ஆண்டுகளில் அகில உலக இறைவார்த்தை ஞாயிறுக்காகத் திருத்தந்தை முன்மொழியும் இறைவார்த்தையையே தமிழ்நாடு திரு அவையும் தன் சீரிய சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் அந்த ஆண்டின் மையக்கருத்தாக எடுத்துக்கொள்கிறது என்பதை இங்கே பணிவுடன் உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனவே, இந்த ஆண்டுக்கான அகில உலக இறைவார்த்தை ஞாயிறுக்கான திருத்தந்தையின் அழைப்பை இங்கே மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்ய விழைகிறேன்.

கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) எனும் புனித பவுலின் அழைப்பே இந்த 2026-ஆம் ஆண்டின் இறைவார்த்தை ஞாயிறுக்கான முழக்கமாக, அறைகூவலாக விடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் நாளில் புனித பவுலின் (மனமாற்ற) அழைப்பு விழாவில், இறைவார்த்தை ஞாயிறாக இந்த நாள் கொண்டாடப்படுவது இன்னும் இந்த நாளுக்கு மெருகூட்டுகிறது. அத்துடன், அகில உலகக் கிறித்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளான ஜனவரி 25-ஆம் நாள், அகில உலக இறைவார்த்தை நாளாக இந்த ஆண்டு கொண்டாடப்படுவது கூடுதல் சிறப்பையும் இந்த நாளுக்கு வழங்குகிறது.

கிறிஸ்துவே நற்செய்தி (Christ and His Gospel at the Centre)

இந்த ஆண்டுக்கான இறைவார்த்தையை நாம் வாசிக்கிறபோது முதல் சிந்தனையாகநற்செய்தி என்பது என்ன? யார் என்பதைப் புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம்?’ இறைவார்த்தை என்பதைகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்திஎன்று புனித பவுல் அடையாளப்படுத்துகிறார். ‘கிறிஸ்துஎன்றாலே அது ஒருநற்செய்திஎன்பதும், ‘நற்செய்திஎன்றாலே அதுஇயேசு கிறிஸ்துவேஎன்பதும் திரு அவையில் திருப்பயணிகளாகிய அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆழமான உறுதிப்பாடு என்பதை மறுக்க இயலாது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம் (மாற் 1:1) என்று முதல் நற்செய்தி நூலான மாற்கு நற்செய்தி தொடங்குவதை நாம் காணும்போது, இயேசு எனப்படும் வார்த்தையும் செயலும் நற்செய்தி என்பதாகவே நமக்குத் தரப்படுகிறது. இயேசு பேசியதும் செய்தவை அனைத்துமே நற்செய்திதான்.

இயேசு தம் போதனையாலும், நல்ல செயல்களாலும், வல்ல செயல்களாலும், தம் முன்மாதிரிகைச் செயல்களாலும் கொணர்ந்த இறையாட்சிப் பணியின் சாராம்சமே அவரின் நற்செய்தியாகும். “ஏழையருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்...” (லூக் 4:18) என்ற நாசரேத்தூர் இயேசுவின் தொழுகைக் கூட இறைவாக்கு வாசிப்பு அவரின் ஒட்டுமொத்தப் பணியையும்நற்செய்திஎனும் ஒற்றை வார்த்தையில் உள்ளடக்கி விடுகிறது. “இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியது ஆகும் (உரோ 1:3) என்ற பவுலின் வார்த்தைகள் அவரின் தீர்க்கமான நம்பிக்கையையும், அதன் அடிப்படையிலேயே தன் நற்செய்திப் பணியையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டதையும் நமக்கு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. எனவே, நற்செய்தி என்பதையும் இயேசுவையும் நம்மால் பிரித்துப் பார்க்க இயலாது. இயேசுவே நற்செய்தி. நற்செய்தியே இயேசுதான். நமது வாழ்வும் நற்செய்தியாகவேண்டும் என்பது இதன் உள்ளீடு.

நற்செய்தியால் இயக்கப்படுதல் (New Way of Living by Word)

நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) என்ற புனித பவுலின் அழைப்பு, ஒரு கிறித்தவன் தன் வாழ்வின் முதன்மையான வாழ்வுக் கடமையாக இயேசு தன்னில் தங்கவும் செயல்படவும் இயங்கவும், தன்னையும், தான் சார்ந்துள்ள சமூகத்தையும் இயக்கவும் இடம்தரவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இன்று உலகச் சிந்தனைகளாலும், போலியான மெய்யியல்களாலும், உலகத்தரமான கொள்கைகளாலும், ஆதிக்க அரசியலாலும் நாம் வழிநடத்தப்படும் சூழலில், நமது சுயநல எண்ணம், விருப்பு, கொள்கை, சுயநலம் ஆகியவற்றின் அடிப்படையில் பிறரையும் வழிநடத்தும் நிலையில், ‘கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி நம்மில் குடிகொள்ளட்டும்என்று புனித பவுல் அழைப்புவிடுக்கிறார்.

இறைவார்த்தையை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ள நம்மில் பலர், சில நேரங்களில் நம்மைப் பற்றியே அறிவிக்கிறோம். இயேசுவை அறிவிப்பதை விட்டுவிட்டு, அவரின் நற்செய்தியை முதன்மைப்படுத்துவதை மறந்துவிட்டு நம்மை எல்லாவற்றிலும் முன்னிலைப்படுத்துவது முரண்பாடான நம்பிக்கை வாழ்வாகும். பணியாளர்களுக்கும் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் இந்த முரண்பாட்டு வாழ்வு அழகல்ல.

கிறிஸ்துவின் நற்செய்தியே நம் வாழ்வின் மையமாக மாறவேண்டும். “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) எனும் புனித யோவானின் வார்த்தைகள்குடிகொள்தல்என்பதன் பொருளை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. “நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா 15:7) என்ற இயேசுவின் அழைப்பு அவரின் வார்த்தையும் வாழ்வும் நம்மில் தங்கவேண்டும் (குடிகொள்ள வேண்டும்), நம்மை வழிநடத்தவேண்டும்; அதுவே நம் வாழ்வின் செயல்பாடாக, சாட்சியமாக வெளிப்படவேண்டுமென்பதை நமக்கு வலியுறுத்திக் கூறுகிறது. “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் (யோவா 15:10) என்பதிலேயே, இயேசுவின் நற்செய்தி நம்மில் ஏன் குடிகொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை, விளக்கத்தை இயேசுவின் வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

நற்செய்தியால் மாற்றம் பெறுதல் (Transformation by Word)

நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) என்ற புனித பவுலின் அழைப்பு, யூபிலி ஆண்டினை நிறைவு செய்துள்ள நமக்கு, எதிர்நோக்கு வாழ்வுக்கான தொடர்ந்த பாதையைக் காட்டுகிறது. நற்செய்தியின் எதிர்நோக்கு நம்மை நிறைவுக்கு அழைக்கிறது. அனைவரும் இணைந்த கூட்டியக்கத் திரு அவையின் பயணத்திலும் நிறைவை நோக்கியே நாம் பயணிக்கிறோம். “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டுமிருந்து, உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்; அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள் (யாக் 1:22) என்ற புனித யாக்கோபின் அறிவுரை, இந்த ஆண்டுக்கான நம்பிக்கைப் பயணத்தில் நமக்குத் தெளிவான பாதையைக் காட்டுகிறது. எனவே, நிறைவாகக் குடிகொள்ள வேண்டிய வாழ்வு தரும் இறைவார்த்தையை வாசித்து, தியானித்து, வாழ்வாக்கி சான்றுபகர நாம் இந்த ஆண்டில் அழைக்கப்படுகிறோம்.

நற்செய்திக்கு முரணானதைக் களைந்து கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்!

புனித பவுலின் அழைப்பான கொலோ 3:16- உள்ளடக்கிய பகுதிகிறிஸ்துவில் புதுவாழ்வுஎனப் பெயரிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானவற்றையும் முரணானவற்றையும் களைந்து விட்டு, கிறிஸ்துவையும் அவரின் நற்செய்தியையும் நமதாக்க வேண்டும். இன்னும் சாட்சியம் நிறைந்த நம்பிக்கை வாழ்வை வாழ்வாக்க 2026-ஆம் ஆண்டில் முன்வருவோம். இயேசுவின் நற்செய்திக்கு எதிரான மனநிலைகள், ஆதிக்கச் சிந்தனைகள், வேற்றுமை உணர்வுகள், போட்டி பொறாமைகளை விட்டு விலகுவோம். தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், அருள்பணி நிலையிலும், துறவற அழைப்பிலும் நற்செய்திக்குச் சான்று பகர்வோம்.

இந்த ஆண்டு முழுவதும் இறைவார்த்தை நம்மில் தங்கட்டும். இயேசுவே நம் பயணமாகட்டும்.