பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி பா.ச.க.வை நோக்கி வெடித்துப் பேசினார்: “உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை நீங்கள் ஆளமாட்டீர்கள்.” இது மோடி மற்றும் அமித்ஷாவிற்கு விடப்பட்ட பகிரங்கச் சவால்!
பா.ச.க.வைப்
பொறுத்தவரை மாநில அரசியலில் ஒரு நிலையற்றத்தன்மை வேண்டும். தொங்கு சட்டமன்றங்கள் அமைய அங்கு வேண்டிய குதிரைப் பேரங்கள் நடத்த, அரசியல் சூழல்களில், தேர்தல் முடிவுகளில் தெளிவில்லாத நிலை அவசியம். சேறு
நிறைந்த குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பதுபோல மாநிலக் கட்சிகளை வளைக்க வேண்டியது பா.ச.க.வுக்கு அத்தியாவசிய
மற்றும் அடிப்படைத் தேவை. வலையில் விழுந்த அக்கட்சிகளை உடைத்து, மெல்ல வைத்த முதல் அடியை விரிவாக்கி ஆட்சிக் கட்டிலில் அமர்தல் காலத்தின் கட்டாயம். எல்லா மாநிலங்களுக்குமான பா.ச.க.வின் பொதுவான சூத்திரம் இதுதான். 2031-இல் தமிழ்நாட்டில் பா.ச.க.
ஆட்சி என்ற ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம் இவ்வாறே வடிவு பெறுகிறது.
ஒரு
மாதிரி மகாராஷ்டிரா கதையைக் காண்போம். தமிழ்நாட்டில் தி.மு.க.வைப் போலவே பால்தாக்கரே ஊட்டிய மொழியுணர்வு, இனவுணர்வால் ஆட்சிக்கட்டிலை அடைந்தது சிவசேனா கட்சி. ஆனால், மத உணர்வு என்ற
பெயரில் பா.ச.க.வுக்கு உற்றத்தோழனாக இருந்தது. 2019, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பா.ச.க.வுடன் கூட்டணி கண்டு 50 இடங்களைப் பிடித்தது. பா.ச.க.
105 இடங்களை வென்றது. நியாயப்படி, தார்மீகப்படி இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும். ஆனால், 44 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சியும், 54 இடங்களை வென்ற தேசியவாதக் கட்சியும் சிவசேனாவுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தன. பா.ச.க.
நல்ல பொழுதிற்குப் பொறுமை காத்தது. அதற்கான வேளை வந்தது.
2022-இல் சிவசேனாவைச்
சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே என்பவருடன் பா.ச.க.
இரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்தியது. சிவசேனா கட்சியை உடைத்தது. சிவசேனா கட்சி ஆட்சி இழந்தது.
பா.ச.க. ஆதரவில்
ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். கட்சி, கொடி, சின்னம் அனைத்தும் ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பா.ச.க.வால் தூக்கித் தரப்பட்டது. பாரம்பரிய சிவசேனா புதிய சின்னத்தில் நின்றது.
2024-இல் அடுத்த
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை. கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளோ, கேட்ட தொகுதிகளோ தரப்படவில்லை. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகப் பதவி இறக்கப்பட்டார். 2026, சனவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இதே புறக்கணிப்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு நடந்தது. பா.ச.க.வின் எல்லாக் கொத்தடிமை அரசியல் தலைவர்களுக்கும் நாளைய நிலை இதுதான்.
நாம்
2026 தமிழ்நாட்டுத் தேர்தல் களத்திற்குத் திரும்புவோம். தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நான்கு அணிகள் உள்ளன. ‘இந்தியா’ கூட்டணி தவிர்த்த மூன்று அணிகளும் ‘தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவோம்’ என்ற
பொது முழக்கம் வைக்கிறார்கள். நாம்
தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க.வில் பா.ச.க.வின்
தலையீடு ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி வாய்ப்பைத் தடுக்கும். 2016-இல் ‘வானவில் கூட்டணி’ என அமைக்கப்பட்ட மக்கள்
நலக் கூட்டணி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிச் சிதறவிருந்த அ.தி.மு.க.வை மீண்டும்
ஆட்சி அமைக்க உதவியது. இரண்டு பொதுவுடைமைக் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தே.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை பெற்ற வாக்குகள் வெறும் 6 விழுக்காடுதான். இன்றும் இதேநிலையில் தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளாகக் கணிக்கப்படுபவையும் உள்ளன.
தமிழ்நாட்டில்
பா.ச.க. மற்றும்
அ.தி.மு.க.வின் என்.டி.ஏ. அணி
2024 - பாராளுமன்றத் தேர்தலில் உடைந்திருந்தது. 2026 - சட்டமன்றத் தேர்தல்களில் சற்றேறக்குறைய அதே பழையபடியான புதிய பொலிவைப் பெற்றுள்ளது எனலாம். அதற்கான நிர்ப்பந்தங்கள், அழுத்தங்கள் தனித்தனி திரை மறைவு அரசியலே காரணம்.
ஒரு
காலத்தில் தேசியக் கட்சிகள் தேர்தல் கூட்டணிக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சென்று காத்திருந்த காலம் போனது. சம்மனுக்கு ஆஜராகும் குற்றவாளிகள்போல புதுதில்லி அமித்ஷா வீட்டிற்கு அ.தி.மு.க.வினர் நடையாய்
நடக்கின்றனர். இவர்களைக் காணும்போது கொதிநீருக்காகக் குளிர்நீரில் போடப்பட்டு, வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் மகிழும் தவளையின் நிலைதான் நினைவிற்கு வருகிறது.
அமித்ஷா
‘என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சி’ என்கிறார்.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ, “நான்தான் தமிழக என்.டி.ஏ. கூட்டணித்
தலைவர், கூட்டணியில் எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன், நான்தான் அடுத்த முதல்வர்”
என்கிறார். ஆனால், உண்மையில் என்.டி.ஏ. கூட்டணி
குறித்த அனைத்து முடிவுகளையும் அமித்ஷாவே எடுக்கிறார். “தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு உள்ள 60 தொகுதிகள் பா.ச.க.வுக்குத்தான்” என
அடித்துக் கூறிவிட்டார் என்பதே தகவல். அவரின் தப்புத்
தாளங்களுக்கு அ.தி.மு.க. அடிமைகளாக ஜதி
பிறழாமல் ஆடுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் என்.டி.ஏ. கூட்டணிக்கு வந்துவிட்டால் ‘நான்தான் அடுத்த முதல்வர்’
என எடப்பாடி கனா காண்கிறார். அதற்கான அனைத்து நகர்வுகளும் நடக்கின்றன. நீதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்பதோடு, மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையும், பா.ச.க.
மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்காக
வேலை செய்கிறது.
தமிழ்நாடு
வந்த அமித்ஷா, மேனாள் அமைச்சர் வேலுமணி மூலம் கூட்டணிப் பேரம் பேசுகிறார். அவரையும், மேனாள் அமைச்சர் தங்கமணியையும் பா.ச.க.
தங்கள் பிடியில் புதிதாக வளைத்துப் பிடித்திருக்கிறது. முன்பே சசிகலா, ஓ. பன்னீர் செல்வம்,
டி.டி.வி. தினகரன்
போன்றோரையும் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டு, இவர்களை வைத்து அ.தி. மு.க.வை உடைப்பது,
கூட்டணி ஆட்சி என்பது பின் பா.ச.க.
ஆட்சி என மாற்றுவது பா.ச.க.விற்குப்
புதிதான ஒன்றல்ல. பா.ச.க.வின் வழக்கப்படியான நடைமுறைச் செயல்தான். அ.தி.மு.க.வை இதுபோன்ற
நிலைக்குப் பா.ச.க.
நகர்த்திவிட்டது என்பது மறுக்க முடியாத
உண்மை.
பா.ச.க. ஆளாத
மாநிலங்களைக் கைப்பற்றி ‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தலைவர்’ என்ற நிலைக்கு அரசியல் அமைப்பை மாற்றுவார்கள். புதுதில்லியை மையமாகக் கொண்ட அதிபர் ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படும். மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளாக மாற்றப்படும். பா.ச.க.
ஆளாத மாநிலங்களே பா.ச.க.வின் இந்தச் செயல்திட்டங்களுக்குத் தடைக்கல்லாக உள்ளன. அதனால் மாநில அரசுகளைக் கைப்பற்றுவதில் பா.ச.க.
அதீத ஆர்வம் காட்டுகிறது. அறமற்றச் செயல்களை நடத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அதற்கான செயல்திட்டங்களை வடிவமைத்துத் தருகிறது. மதவாதம் பூதாகரமாய் உருமாறுகிறது.
மதவாதம்
சார்ந்த பா.ச.க.
செயல்திட்டத்தில் நீதிபதி குன்ஹா கூறிய வார்த்தைகள் பொருந்திப் போகிறது:
“அநீதிக்கு எதிராகப் போராடாதவன் தூய்மையான கிறித்தவன் அல்லன்.” ஆம், நாம் தெருவில் இறங்கிப் போராடவேண்டாம். 2026-தமிழ்நாட்டுத் தேர்தலில் வாக்குகள் வழியாக நம் வலிமையைக் காட்டுவோம். மதவாதக் கூட்டணியின் எல்லா வடிவுகளையும் விரட்டி அடிப்போம்.