“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் 16:15) என்ற இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து, உலகின் ஒருமுனை முதல் மறுமுனை வரை மறைபரப்புப் பணியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்கள் என்பது வரலாறு. 19-ஆம் நூற்றாண்டு வரை மேற்கத்திய நாடுகளிலிருந்து அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினரும் கிழக்கு நோக்கி வந்தார்கள். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் கிழக்கத்திய நாடுகளிலிருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் புதிய மறைபரப்புப் பணியாற்ற பணியாளர்கள் அதிகம் தேவைப்பட்டார்கள்.
அதன்படியே,
கனடா நாட்டின் ஆதிப் பழங்குடி மக்களிடையே 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் சூசை ஜேசு, மத்திய கனடாவில் சஸ்காட்செவன் மற்றும் மணிடோபாவின் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 7,25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மறைமாவட்டமான கீவாடின்-லெ பாவின் புதிய
பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
என்ற செய்தி இந்தியாவிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் இலங்கையிலும், ஏன் கனடா நாட்டிலும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மூன்றாம் உலக நாடாகக் கருதப்படும் இந்தியாவிலிருந்து ஒருவர் மேற்குலமாகக் கருதப்படும் கனடா நாட்டில் எப்படி ஆயர் ஆனார்? கனடா நாட்டு வெள்ளையின அருள்பணியாளர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்களா?’ என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.
2025, நவம்பர் 17, திங்கள்
அன்று திருத்தந்தை லியோ 54 வயதான அருள்தந்தை சூசை ஜேசு அவர்களை இப்பணிக்கு நியமித்தார். 2007 முதல் கனடாவில் பணியாற்றி வரும் அமலமரி தியாகிகள் (Oblates of Mary Immaculate, OMI) சபையைச் சார்ந்த
இவர், கனடியத் திரு அவைக்கும் பழங்குடிச் சமூகங்களுக்கும் இடையிலான ஒப்புரவு மற்றும் நல்லிணக்கத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
2022-ஆம் ஆண்டு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்கு வழிவகுத்த - வத்திக்கானில் நடந்த ஆரம்பக் கூட்டத்திற்கு, பூர்வீக மக்கள் குழுவுடன் அருள்தந்தை சூசை ஜேசு முன்பு சென்றிருந்தார். 2022-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆல்பெர்ட்டா மாநிலத்தில் எட்மண்டன் நகருக்கு வருகை தந்தபோது அருள்தந்தை சூசை ஜேசு அவர்கள் பணியாற்றிய பழங்குடியின மக்களின் மறைத்தளமான திரு இருதய ஆலயத்திற்கும், தற்போது பணிபுரியும் ஆல்பெர்ட்டா ஏரியில் அமைந்துள்ள புனித அன்னாள் திருத்தலத்திற்கும் சென்று பழங்குடியின மக்களைச் சந்தித்து, அவர்களின் ஆண்டாண்டு கால வரலாற்றுக் குறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் தந்த நிகழ்வுகளில் அருள்தந்தை சூசை ஜேசு அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது.
அருள்தந்தை
சூசை ஜேசு, இந்தியாவின் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி அருகேயுள்ள புஷ்பவனத்தில் 1971, மே 17 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்தே இறைவாழ்வில் பெற்றோரால் வளர்க்கப்பட்ட இவர், அமல மரி தியாகிகள் சபையில் சேர்ந்து, இலங்கையில் நவசந்நியாசப் பயிற்சியையும், பெங்களூரு தர்மாவரத்தில் தத்துவயியலும், வட இந்தியாவில் உள்ள
அஸ்டா என்ற இடத்தில் இறையியலும் கற்று 27-07-2000 அன்று காஞ்சிபுரத்தில் குருவாக, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத் துணை ஆயர் இலாரன்ஸ் பயஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
2000 முதல் 2007-ஆம்
ஆண்டு வரை வட இந்தியாவின் பலகாட்,
சுரலா கப்பா என்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் கொம்படி மதுரை பங்குத்தளத்திலும் பணியாற்றினார். 2007-ஆம் ஆண்டு கனடா வந்து கீவாடின் லெ பா என்ற
உயர்மறைமாவட்டத்தில் பெலிக்கன் நேரோஸ் மற்றும் சண்டி பே என்ற இடங்களில்
பங்குப் பணியாற்றினார்.
தாய்மொழியான
தமிழ் மற்றும் ஆங்கிலம், வட இந்திய பணித்தளங்களில்
இந்தி கற்று சரளமாகப் பேசக்கூடிய அருள்தந்தை சூசை, க்ரீ என்ற கனேடியப் பழங்குடியினரின் மொழியையும் சிறப்புடன் கற்று, அம்மொழியிலேயே திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றி, பாடல்கள் பாடி, மக்களுடன் அளவளாவி, தனது மேய்ப்புப்பணியை கனடா நாட்டில் மேற்கொண்டார். இந்தியாவில் உளவியலில் முதுகலைப்பட்டத்தையும், ஒட்டாவாவில் உள்ள செயிண்ட் பால் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆலோசகர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
கனேடிய
குடிமகனான இவர், பழங்குடிச் சமூகங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளின் அர்ப்பணிப்புள்ள அருள்பணியாளராகப் பணியாற்றுகிறார். நகர்ப்புற வீடற்ற மனிதர்களுக்கு மதிய உணவுத் திட்டங்கள், உணவு வங்கி, குளிர்கால ஆடை விநியோகம் மற்றும் கனடா பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார-கலாச்சார மேம்பாடு, பிற சமூகங்களிடையே நல்லுறவு மற்றும் ஒப்புரவு உள்ளிட்ட பல முயற்சிகளை இவர்
வழிநடத்தி ஆதரித்துள்ளார். இவர் தனது இரக்கம், கலாச்சார உணர்திறன் மற்றும் நல்லிணக்கம், சமூகக் கட்டமைப்பு மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களை ஆதரிப்பதில் அசைக்க இயலாத அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார்.
“அவர் மேய்ப்புப் பணியை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நான் எப்போதும் அவரிடம் ஒரு சிறப்புப் பண்பைக் கண்டிருக்கிறேன்” என்று
தனது மாமாவின் முன்மாதிரியால் ஈர்க்கப்பட்டு, அவர் சார்ந்த அமல மரி தியாகிகள் சபைக் குருவாக உருவாகியுள்ள இவரது மருமகன் அருள்பணியாளர் கிறிஸ்டோபர் கூறுகிறார். மேலும், “அவர் மக்களுடன், குறிப்பாக ஏழைகளுடன் எப்படிப் பழகினார் என்பதை நான் பலமுறை அவதானித்துள்ளேன். அவர் எங்கு சேவை செய்தாலும், சமூகத்துடன் ஒன்றறக் கலந்து, போதிக்கும் கடவுளின் வார்த்தையின் மீதான அவரது அன்பு, என்னை உட்பட பலரை ஊக்கப்படுத்தியது. ஏழைகள் மீதான அவரது நட்பும் அன்பும் எனது பணியில் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் நான் தொடர்ந்து பணியாற்ற என்னை ஊக்குவிக்கின்றன” என்கிறார்.
எட்மண்டன்
உயர்மறைமாவட்டப் பரிபாலகர் பேரருள்திரு. பால் காவனா அவர்கள் மறைமாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்தார். அவர் கூறியது: “அருள்தந்தை சூசை, கடவுள் மற்றும் திரு அவை மீது கொண்ட ஆழ்ந்த அவரது அன்பினால் அவர் செய்கிற பணியின் நிமித்தம் பலரின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறார். எட்மண்டனில் உள்ள பழங்குடியினருக்கான திரு இருதயப் பங்கிலும், அண்மையில் புனித அன்னாள் ஏரியில் அமைந்துள்ள திருத்தலத்திலும், ஈனாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள இரக்கமிகு கன்னி மரியா ஆலயத்திலும், அலெக்சிஸ் பழங்குடியினர் பகுதியிலும் அன்பு, நம்பிக்கை மற்றும் ஆற்றுப்படுத்துதலின் உண்மையுள்ள சாட்சியாகப் பேரருள்தந்தையின் பணி அமைந்துள்ளது.”
அமல
மரி தியாகிகள் துறவற சபையின் கனடா லெக்கொம்ப் மாநிலத் தலைவர் அருள்தந்தை கென்தோர்சன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்: “சகோதரர் சூசையுடன் பல்வேறு தருணங்களில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மேலும் அவர் இந்தியாவில் தனது பணியிலிருந்து கொண்டு வந்த பண்புகளான பூர்வீக மொழி மீதான பற்று, கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை நேரில் கண்டிருக்கிறேன். கனடாவில் உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்தவர். இவரது வலுவான பணி நெறிமுறை, ஆழமான பக்தி, துறவு வாழ்வில் பற்று, எம் சபையில் அர்ப்பணிப்பு மற்றும் திரு அவை மற்றும் அவரது குடும்பத்தினரின் மீதான அவரது அன்பு அனைத்தும் அவர் சேவை செய்யும் விதத்தில் பெரும் பங்காற்றியுள்ளன. எங்கள் சபையில் ஒரு நல்ல அருள்பணியாளரை நாங்கள் இழக்க நேரிடும். ஆனால், அதேவேளையில், கீவாடின்-லெ பா உயர்மறைமாவட்ட
மக்களுக்கும், அவர் தனது தாயகமாகக் கருதும் பரந்த வடக்குச் சமூகங்களுக்கும் இவர் ஓர் ஆசிர்வாதமாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.”
2024, டிசம்பர் 30 முதல்
கீவாடின் லெ பா உயர்மறைமாவட்ட
அப்போஸ்தலிக்கப் பரிபாலகராகப் பணியாற்றி வரும் வின்னிபெக் பேராயர் மேதகு முர்ரே சாட்லைன் அவர்களும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்: “அருள்பணியாளர் சூசை இங்கு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் எங்கள் சமூகங்களை நன்கு அறிவார். பழங்குடியின மக்களின் பங்காகிய திரு இருதய ஆலயத்திலிருந்து நேரடி ஒளிபரப்புச் செய்த திருப்பலிகள் மூலம் குறிப்பாக, ‘கோவிட்’ காலத்திலிருந்து அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்” என்கிறார்.
கனடாவில்
வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ்மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் பேரருள்தந்தை சூசையின் ஆயர் பணி இறையாசிரையும் அருளையும் நிறைவாகப் பெற்றுத்தந்து இறைவழியில் வழிநடத்தும் என்று நம்புவோம். தொடர்ந்து அமல அன்னை பரிந்துரையை நாடுவோம்.