news-details
தலையங்கம்
திரு அவை பேருவகை கொள்ளும் பெருநாள்!

என் இனிய வாசகப் பெருமக்களே,

திரு அவை என்பது வெறும் ஓர் அமைப்பு மட்டுமல்ல; மாறாக, அது கிறிஸ்துவின் மறையுடலாகவும், ஒரு பெரிய நம்பிக்கைக் குடும்பமாகவும் விளங்கக் கூடியது. ஒரு தாய் தன் குழந்தைகள் சாதனை படைக்கும்போது எத்தகைய பெருமிதம் அடைவாளோ, அதைவிடப் பெரிய மகிழ்ச்சியைத் தன் குழந்தைகள்அருளாளர் (Blessed) அல்லதுபுனிதர் (Saintஎன்ற நிலைக்கு உயர்த்தப்படும்போது தாய்த் திரு அவை அடைகிறது.

அருளாளர் அல்லது புனிதர் நிலைக்கு ஒருவர்  உயர்த்தப்படுவது என்பது, அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது நற்செய்தி விழுமியங்களை வாழ்வாக்கினார் என்பதற்கான அங்கீகாரம். இது ஒரு தனி நபரின் வெற்றியல்ல; மாறாக, திரு அவை போதிக்கும் நம்பிக்கை அந்த மனிதரின் வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டது என்பதையே குறித்துக்காட்டுகிறது. அன்னை எலிஸ்வாவின் அர்ப்பண வாழ்வும் அதையே எடுத்துரைக்கிறது.

ஒருவர்அருளாளர்அல்லதுபுனிதர்என்று அறிவிக்கப்படும்போது, அவர் இப்போது இறைவனை முகமுகமாய்த் தரிசிக்கிறார் என்ற நம்பிக்கையைத் திரு அவை தருகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, “புனிதர்கள் திரு அவையின் அழகைக் கூட்டுகிறார்கள்; ஒரு தோட்டத்தில் பல்வேறு வண்ணமலர்கள் பூத்துக் குலுங்குவது போல, ஒவ்வொரு புதிய புனிதரும் திரு அவையின் ஆன்மிகத் தோட்டத்தில் ஒரு புதிய நறுமணத்தைப் பரப்புகிறார்கள்.” அவ்வகையில், அன்னை எலிஸ்வா  அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பது அந்தச் சபைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரு அவைக்குமே மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி!

சபை தொடங்கியபோது மேற்கொள்ளப்பட்ட பல பணிகளில், அன்னை எலிஸ்வாவின் அளப்பரிய பணி பெண்களுக்கான உயர்கல்விப் பணி. பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பள்ளிகளையும், அனாதை இல்லங்களையும் நிறுவுவதில் பெரும் பங்காற்றிய இவர், ‘பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறும்என்பதில் உறுதியாக இருந்தார். இறைவனோடு இணைந்திருத்தல் (Interior Silence), தாழ்ச்சியும் கீழ்ப்படிதலும் கொண்டிருத்தல், தன்னை முன்னிலைப்படுத்தாமல், இறைவனின் கருவியாக மட்டுமே இறுதிவரை வாழ்ந்தார்.

அருளாளர் எலிஸ்வா ஏற்றி வைத்த அந்தச் சுடர், இன்று அவரது சபையினரால் உலகம் முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது. கல்விப் பணி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஆதரவற்றக் குழந்தைகளுக்காக இல்லங்களை நடத்தி, அவர்களுக்குப் புகலிடமும் கல்வியும் வழங்குவதோடு, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கான மறுவாழ்வு மையங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவப் பணி, மேய்ப்புப்பணி, ஊடகப்பணி, மறைக்கல்விப் பணி மற்றும் நற்செய்திப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். தற்போது, அச்சு ஊடகங்கள் வழியாக இறைவார்த்தையைப் பரப்பும் நவீனகால மறைப்பணிகளிலும் இச்சபை சகோதரிகள் ஆர்வமுடன் பங்கெடுத்து வருகின்றனர்.

தங்கள் தாய்க்குஅருளாளர்என்ற பெருமை கூடும் இந்நாளில், சேய்கள் ஒன்றிணைந்து விழா எடுப்பதும், அவ்விழாவின் நினைவாகச் சிறப்பிதழ் வெளிக்கொணர்வதும் பெரிதும் பாராட்டத்தக்கது. இம்முயற்சியை முன்னெடுத்திருக்கும் CTC சபைத் தலைவி மதர் ஷஹிலா அவர்களுக்கும், விமலா மறை மாநிலத் தலைமை அன்னை அருள்சகோ. வெரோனி  அவர்களுக்கும், அவருடைய ஆலோசனைக் குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்அன்னை எலிஸ்வா புனிதர் நிலைக்கு விரைவில் உயர்த்தப்பட எமது வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகின்றேன்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்