news-details
சிறப்புக்கட்டுரை
நமக்காகப் பரிந்துபேசும் அன்னை நம்முடன் இருக்கிறார்!

அருள்மிகப் பெற்றவர்; ஆன்மிக வழிகாட்டி; திரு அவையின் தாய்; ஏழைகளின் அன்னை; துயருறுவோருக்கு ஆறுதல்; குடும்பங்களின் பாதுகாவலி; உறவுகளின் சிகரம்; பெண் குலத்திற்குப் பெருமை; மனிதகுல மாணிக்கம்... எனப் பல்வேறு பெயர்களில் அன்னை மரியாவை அழைக்கிறோம். ஆண்டின் முதல் நாளில் அன்னையின் மகிமையை எண்ணிப்பார்த்து, அன்னை மரியாவைஆண்டவரின் தாய்என்று அறிக்கையிட்டுக் கொண்டாடுகிறோம்.

கடவுளின் தாயான அன்னை மரியா

கடவுளின் அன்னையான மரியா, நமக்காகப் பரிந்து பேசுபவராக, நமது நம்பிக்கைப் பயணத்தில் உடன் வரும் சகோதரியாக இருக்கிறார். கடவுளின் தாயாகத் தெரிந்துகொள்ளப்பட்ட மரியா தன்னையே தாழ்த்தி, தன் மகனோடு துன்புற்றார். கடைசி வரைக்கும் கீழ்ப்படிந்ததால் நம் அனைவருக்கும் தாயாக, எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் எனப் போற்றும் அளவிற்குக் கடவுள் அவரை உயர்த்தினார். “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்று கூறி, கடவுளின் வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததால் கடவுளுக்கே தாயாகும் பேற்றினைப் பெறுகிறார். கடவுளின் தாயாகும் பேற்றினைப் பெற்ற அன்னை மரியா, மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருந்து பணிவிடை புரிந்தது நாம் கற்கவேண்டிய உன்னதமான பாடம்.

நம்மோடு பயணிக்கும் அன்னை மரியா

அன்பு செய்பவர்கள் பயணம் செய்தாக வேண்டும். ஆண்டவர் மீதும் அன்னை மரியா மீதும் நாம் அன்பு கொண்டிருப்பதால்தான் நாம் திருப்பயணங்கள் மேற்கொள்கிறோம். அன்னை மரியா புறப்பட்டு யூதேயா மலை நாட்டிலுள்ள எலிசபெத்தைச் சந்தித்து பணிவிடை புரிய மேற்கொண்ட பயணம் (லூக் 1:39); மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது தன் பெயரைப் பதிவு செய்ய மண ஒப்பந்தமான மரியா, யோசேப்போடு கலிலேயாவில் உள்ள நாசரேத்திலிருந்து மேற்கொண்ட பயணம் (2:5); மோசேயின் சட்டப்படி தூய்மைச்சடங்கை நிறைவேற்ற குழந்தை இயேசுவோடு எருசலேமுக்கு மேற்கொண்ட பயணம் (2:22); ஏரோதின் கொலை வாளுக்குப் பயந்து குழந்தையைக் காப்பாற்ற எகிப்திற்குப் பயணம் (மத் 2:14); ஏரோது காலமானதும் இஸ்ரயேல் நாட்டுக்குப் பயணம் (2:19); ஆண்டுதோறும் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமை நோக்கியப் பயணம்; குழந்தையைக் காணாததால் மீண்டும் எருசலேமுக்குப் பயணம் (லூக் 2:45)... என வாழ்நாள் முழுவதும் அன்னை மரியா பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். இறுதியில் கல்வாரி மலையை நோக்கிய பயணம் எனத் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டவர், இன்று நம்மோடும் தனது பயணத்தைத் தொடர்கிறார். திரு அவையோடு தொடர்ந்து பயணிக்கிறார்.

பயணங்களின் நோக்கம் அன்னை மரியா நம்மீது கொண்ட அன்பு மட்டுமே. இன்று அன்னை மரியா நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்புடன் பிறருக்கு உதவி செய்ய, அன்பைத் தெரிவிக்க, அக்கறையை வெளிப்படுத்த நாமும் பயணிக்கவேண்டும் என்பதுதான்.

நமக்காகப் பரிந்துபேசும் அன்னை மரியா

கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்தைச் செயல்படுத்துபவர்களோடு அன்னை மரியா முழுமையாக ஒத்துழைக்கிறார். ஏழை-பணக்காரர், சிறியவர்-பெரியவர் என்ற வேற்றுமை அன்னை மரியாவுக்குத் தெரியாது. நாம் யாராக இருந்தாலும் கடவுளிடம் அன்பு கொள்ள வேண்டும், கடவுளை நோக்கி வர வேண்டும், தன் மகனின் சாயலுக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும் என்பதுதான் அன்னை மரியா நமக்குக் கற்றுத்தருவது.

ஓர் ஏழை தச்சுத் தொழிலாளியின் மனைவியான அன்னை மரியா அமைதியாய் துன்புற்ற வேளையிலும், அந்தத் துன்பத்தை இறைவன் தாமே நீக்குகிறார். அடிப்படைக் காரணம் மரியா கடவுள்மீது கொண்ட நம்பிக்கைதான்.

அன்னை மரியாவைப் போல நாமும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து அமைதியாகத் துன்புறும் போது கடவுள் நம்மை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையை நாம் அன்னையிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.

ஆகவே, நம்முடைய அன்புத் தாய் என்றைக்குமே நமக்கு நல்லது மட்டுமே செய்துகொண்டே இருக்கிறார். அந்தத் தாயினுடைய பாதுகாவல், பரிந்துபேசுதல் நம் அனைவருக்கும் உண்டு என நம்புவோம். எத்தனையோ வல்ல செயல்களை அன்னையின் பரிந்து பேசுதலால் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.

இப்புதிய ஆண்டிலும் எல்லா அருளையும் ஆசிரையும் பிறந்துள்ள பாலன் இயேசு வழியாக அவர் நமக்குப் பெற்றுத்தருவார்.

எல்லாத் தலைமுறையினராலும் பேறுபெற்றவராக உயர்ந்து நிற்கும் நம் அன்னை மரியாவைப் போல, நாமும் எந்நிலையிலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தவர்களாக வாழ்வோம்.