அன்புப் பேராயர் அவர்களே, தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம் வெளிக்கொணரும் ‘நம் வாழ்வு’ கத்தோலிக்க வார இதழ் நிர்வாகத்தினர், ஆசிரியர் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
• உங்களுடைய குடும்பம் மற்றும்
இறையழைத்தல் பற்றிக் கூறுங்களேன்....
“தமிழ்நாட்டில் புஷ்பவனம் கிராமத்தில், உழவுத் தொழில் செய்த திரு. ஜேசு - திருமதி. ஜெயசீலி தம்பதியரின் எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான். குடும்பத்தில் முதல் பட்டதாரி.
என்
ஆன்மிக வாழ்விற்கு வித்திட்டவர் என் தாயார். அதிகாலை 4.30 மணிக்கே என்னை எழுப்பி செபத்திலும் திருப்பலியிலும் பங்கேற்கச் செய்தார். ஆலயத்தில் வழிபாட்டுத் தலைவராகவும், பாடகர் குழுத் தலைவராகவும் பணியாற்றிய சிறுவயது அனு பவங்கள் என் தலைமைப் பண்பை வளர்த்தன.
மேலும்,
‘மக்களோடு தங்கி அவர்களுக்காக நேரத்தைச் செலவிடும் நல்ல மேய்ப்பனாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த உந்துதல் மற்றும் சகோதரியின் வழிகாட்டுதலால் அமலமரி தியாகிகள் (OMI) சபையில்
இணைந்தேன்.”
• உங்கள் இறைப்பணி
அனுபவங்கள்
குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
“வட இந்தியாவில் ஐந்து
ஆண்டுகள் பழங்குடியின மக்களுடன் பணியாற்றினேன். 2007 முதல் கனடாவில் பூர்வக்குடி (First Nations) மக்களிடையே
19 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறேன். நீண்ட காலம் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்ததால் தமிழில் உரையாற்றுவது இன்று எனக்குச் சவாலாக இருக்கிறது. அதை நேர்மையுடன் ஏற்கிறேன். Sacred Heart தேவாலயத்தில்
தெருவோர மக்கள், வீடற்றவர்கள், போதைப்பொருளால் பாதிப்புக்குள்ளானவர்களுடன்
இருந்தேன். அன்னை தெரேசாவின் முன் மாதிரியில், மக்களின் கோபமும் வலியும் புரிந்து பணிவிடை செய்தேன். உடல்-மனம்-உள்ளம்-ஆன்மிகம் என்ற நான்கையும் சமநிலையில் பேணுவது அதன் மையம். இயேசு கிறிஸ்து இந்த நான்கு நிலைகளிலும் முழுமையான சமநிலையுடன் வாழ்ந்தவர்; அதையே மக்களுக்கு எடுத்துரைத்தேன்.”
•
நீங்கள்
பணிசெய்ய
இருக்கும்
கீவாடின்
லெ
பா
உயர்மறைமாவட்டம்
பற்றிக்
கூறுங்களேன்...
“கீவாடின் லெ பா உயர்மறைமாவட்டம்
கலாச்சார ரீதியாக மிகவும் வேறுபட்டது. பல்வேறு மொழிகள் பேசும் பல பழங்குடியின மக்களான
மேத்திஸ், க்ரீ, ஒஜி-க்ரீ, டெனே மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களின் தாயகமாக அது விளங்குகிறது. மத்திய கனடா பகுதியில் ஜேம்ஸ் விரிகுடாவின் மேற்கே உள்ள பகுதி நீண்ட காலமாக ‘வடக்குக் காற்று’ என்று பொருள்படும் ‘கீவாடின்’
என்று அழைக்கப்படுகிறது.
கனடா
நாட்டில் சஸ்காட்செவன் மாநிலத்தில் உள்ள பெலிகன் நரோஸ் மற்றும் சாண்டி பேயில் உள்ள பழங்குடிச் சமூகங்களுடன் ‘க்ரீ’ மொழியைக் கற்றுக்கொண்டதிலும், அவர்களுடன் பழகி வந்ததிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் எட்மண்டனில் உள்ள பழங்குடியின மக்களின் பங்காகிய இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது ஆர்வம் ஏழை மக்களை இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதாகும். இது எங்கள் சபையை நிறுவிய புனித யூஜின் மசினோட் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகிறது. இப்போது கீவாடின்-லெ பா உயர்மறைமாவட்டத்தின்
அருள்பணியாளர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மக்களின்
ஆயராகப் பணியாற்ற கடவுளின் அழைப்பைப் பெறுவது ஒரு தாழ்மையான அனுபவம். பலவீனமானவர்களை நம்பிக்கையிலும் அன்பிலும் பலப்படுத்தக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நான் உண்மையிலேயே உணர்கிறேன். என் இதயம் நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. மேலும், திருத்தந்தையின் இந்த நியமனம் எனது குருத்துவ வெள்ளி விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சியை எனக்குத் தருவதாக அமைகிறது.
இந்த
மறக்கமுடியாத தருணத்தில் என் உணர்வுகளைப் பற்றி நான் சிந்திக்கும்போது, அன்னை கன்னி மரியாவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன: ‘ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது; என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.’ என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் குறிப்பாக, எனது மறைந்த தாயாருக்கும், நான் ஒரு குருவாக வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் மற்றும் தொடர்ச்சியான மன்றாட்டுகள் இப்போது நிறைவேறியுள்ளன.
கனடாவில்
உள்ள பழங்குடியின மக்களுக்குப் பணியாற்ற இந்தியாவிலிருந்து என்னை அழைத்த மேனாள் பேராயர் சில்வைன் லாவோய் OMI அவர்களுக்கும்,
இந்த நாட்டிற்கு ஓர் இளம் அருள்பணியாளரை அழைத்து வந்து பல்வேறு பொறுப்புகளை நம்பிக்கையோடு தந்த, நான் சார்ந்துள்ள அமலமரி தியாகிகள் சபைக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கனடாவில் நான் பணிபுரிவதற்குத் தேவையான வழிகாட்டுதலையும், மனநல ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல் கல்வியையும் எனக்குத் தந்தார்கள். மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் பணிபுரிந்த எட்மண்டன் உயர்மறைமாவட்டத்திற்கும், அதிலும் குறிப்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2022-ஆம் ஆண்டு வருகையின்போது என்னை வழிநடத்தி ஆதரவு தந்த மேனாள் பேராயர் ரிச்சர்ட் ஸ்மித் அவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.”
• பேராயராக, உங்கள்
பணித்தளத்திற்கு
உள்ள
முன்னுரிமைகள்
என்னென்ன?
“கீவாடின் லெ பா உயர்மறைமாவட்டத்தில்
உறவுகளைச் சீரமைத்தல், பொதுநிலைத் தலைமைத்துவத்தை (Lay Leadership) வளர்த்தல்,
உள்ளூர் மொழிகளில் பணியாற்றுவதற்குத் திருத்தொண்டர்களை உருவாக்குதல் போன்றவை என் முன்னுரிமைகள். இந்தப் பணிகள் உன்னதமும் பொறுப்புகளும் நிறைந்தவை. புவியியல் சவால்கள் அதிகம். உங்கள் செபம் எனக்கு மிக அவசியம். உங்கள் செபங்களில் என்னை நினைவு கூருங்கள்.”
• ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கு
உங்கள்
செய்தி..
“நம் வாழ்வு’ நெடுங்காலமாய் வெளிவரும் நல்லதொரு வார இதழ் என்பதை நான் அறிவேன். இந்தியாவில் இருந்தபோது நான் அடிக்கடி வாசிப்பதுண்டு. அண்மைக்காலமாக டிஜிட்டல் தரப்பிலும் வருவதை அறிவேன். இவ்விதழ் இன்னும் வளர, நிறைய வாசகர்கள் உருவாக மனதார வாழ்த்துகிறேன். எனது இந்த ஆயர் பணியேற்பு நினைவாகச் சிறப்பிதழ் வெளிக்கொணரும் ‘நம் வாழ்வு’ நிர்வாகத்திற்குச் சிறப்பாக எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள்
பணி சிறக்க எமது வாழ்த்துகளும் செபங்களும்!