news-details
ஆன்மிகம்
4 வகை உறவு (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 28)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு  அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்: “தந்தையே, கடந்த முறை நாம் பேசிக்கொண்டிருந்தபோது, வாழ்வின் மட்டிலான நம் ஆழமான பார்வைக்கும், பிரபஞ்சத்தின் ‘இருப்பு நிலைக்கும் தொடர்பு இருப்பதை எடுத்துரைத்தீர்கள். பிரபஞ்சத்தின் இருப்புநிலை அல்லது உண்மைநிலை என்பது எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டும் பிணைக்கப்பட்டும் இருக்கிற நிலை என்பதையும் எடுத்துரைத்தீர்கள். மனித வாழ்க்கையைப் பொறுத்த அளவில் சுற்றியுள்ளவற்றோடு இணைந்து இருக்கும் நிலையையே நாம் ‘உறவு என்கின்றோம். அதாவது மனிதர்களாகிய நாம் உறவோடும், உறவிற்காகவுமே படைக்கப்பட்டுள்ளோம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மேற்கூறப்பட்ட இருப்புநிலைக்கும் இணைப்பு நிலைக்கும், அதாவது உறவிற்கு எதிராகச் செல்வதே ‘பாவம் என்றழைக்கப்படுகிறது. உறவு பற்றிய இன்னும் சில தெளிவுகளையும், உறவிற்கு எதிராக நாம் செல்வதன் காரணமாக எவ்வாறு பாவங்களைக் கட்டிக்கொள்கிறோம் என்பதைப் பற்றியும் எங்களுக்குத் தரமுடியுமா... தந்தையே?”

அருள்பணி: “பொதுவாக உறவை நான்கு வகைகளாகப் பிரிப்பதுண்டு: அ) தன்னோடு உறவு, ஆ) சகமனிதர்களோடு உறவு, இ) இயற்கையோடு உறவு மற்றும் ஈ) கடவுளோடு உறவு. இந்த நான்கு உறவுகளிலும் சரியான மனநிலையோடு நடந்துகொள்ளாமல் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொள்வதே பாவம் என்பதாகும்.”

கிறிஸ்டினா: “தன்னோடு உள்ள உறவில் ஒரு மனிதர் எவ்வாறு பாவம் செய்யமுடியும் தந்தையே?”

அருள்பணி: “ஒவ்வொரு மனிதரையும் கடவுள் இந்தப் பூவுலகிற்கு அனுப்பும்போது தமது சாயலோடுதான் அனுப்புகின்றார். நாம் கடவுளின் பிம்பமாக இவ்வுலகில் இருக்கிறோம் என்பது உண்மை. எனினும், பல மனிதர்கள் இவ்வுண்மையை உணராமல், வெளிப்படையாகத் தெரியும் தங்களின் உடல் அமைப்பு, நிறம், குடும்பப் பின்னணி போன்றவற்றை மட்டும் வைத்து தங்களை அளவுக்கதிமாகவோ அல்லது அளவுக்குக் குறைவாகவோ மதிப்பிடுகிறார்கள். தங்களை அளவுக்கதிகமாக மதிப்பிடுவது அகந்தைக்கும், அளவுக்குக் குறைவாக மதிப்பிடுவது தாழ்வு மனப்பான்மைக்கும் காரணமாக இருக்கின்றன. இவ்விரண்டு அணுகுமுறைகளும் நம் உண்மைநிலையை நாம் ஏற்றுக்கொள்ளாத, அன்பு செய்யாத நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அகந்தையும் தாழ்வு மனப்பான்மையும் தன்னோடுடனான உறவில் ஒரு மனிதர் செய்யும் பாவங்கள் என்று நாம் கூறலாம். அகந்தையும் தாழ்வு மனப்பான்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே! இரண்டுமே நாம் நம்மைச் சரியாக மதிப்பிடத் தெரியாததன் காரணமாக நம்மில் நிகழ்வது. இரண்டுமே நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மையை உணராததன் காரணமாகவும், நம் வழியாகக் கடவுள் செயல்படுகின்றார் என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லாததன் காரணமாகவும் நம்மில் நிகழ்வது.”

அன்புச் செல்வன்: “அகந்தையைப் பற்றிய கதை இது! மின்சார வசதி கிராமப்புறங்களைச் சென்றடையாத காலத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை இது! ஒரு நபர் கிராமத்திலிருந்து வெளியேறி, ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய கிராமப்புற நண்பர் சிலகாலம் கழித்து அவரைச் சந்திக்கச் சென்றார். நண்பரிடம் சென்ற கிராமத்தவர், ‘ஒரே புழுக்கமாக இருக்கிறது. ஒரு விசிறி கொடு என்றாராம். நண்பரோ, ‘நீ இப்போது நகரத்தில் இருக்கிறாய். இங்கு விசிறியெல்லாம் தேவையில்லை. நான் கையசைத்தாலே காற்று வரும் என்று பெருமையோடு கூறிவிட்டு மின் விசிறிக்கான பொத்தானை அழுத்த, காற்று வந்தது. அடுத்து கிராமத்தவர், ‘இரவு நேரம் வந்துவிட்டது. அரிக்கேன் விளக்கை ஏற்று என்று கூற நண்பர், ‘இது கிராமமல்ல; நகரம்! இங்கு நான் கையசைத்தாலே எல்லாம் நடக்கும். இப்போது என் கையசைவில் வெளிச்சம் வரும் பார் என்று பெருமையோடு கூறிவிட்டு, பொத்தானை அழுத்த குழல்விளக்கு எரிந்தது. கிராமத்தவர் இவற்றையெல்லாம் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். இவ்வாறு வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றையெல்லாம் தன் கை அசைவினாலே இயக்கினார். இதற்கிடையில் திடீரென மின்சாரம் போய்விட்டது. காற்று இல்லை, வெளிச்சம் இல்லை. கிராமத்தவர், ‘நண்பா! உன் கையை அசை! காற்றும் வெளிச்சமும் வரட்டும் என்றாராம். இப்படித்தான் நம்மில் பலர்! கடவுளின் ஆற்றல் நம் வழியாகப் பாய்வதன் காரணமாகவே நம்மால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது என்கின்ற விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருக்கின்றோம். ஏதோ நம்மாலேயே எல்லாம் நடைபெறுகிறது என்று நம்மைக் குறித்து அளவுக்கதிகமாகவே எடை போட்டுக்கொள்கிறோம்.”

அருள்பணி: “இது ஒருபுறம் இருக்க, தாழ்வு மனப்பான்மையில் உழன்று, தங்களின் ஆற்றல் என்னவென்று தெரியாமலேயே வாழ்ந்து மடிவோரும் உள்ளனர். வங்கக்கவி இரவீந்தரநாத் தாகூரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. அவரது குடும்பம் பெரிய குடும்பம். பெற்றோருக்குப் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவர் இவர். எனவே, இவரை அதிகமாக வளர்த்தது இவரது வீட்டில் வேலை செய்த ஒரு பணியாளரே! இந்தப் பணியாளருக்கு மற்ற வேலைகளும் இருந்ததன் காரணமாக, தாகூரோடு உடனிருந்து இவரைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. குழந்தையான தாகூரைக் கையாள ஒரு வழிமுறையைக் கையாண்டார். தாகூரை வீட்டின் ஓரிடத்தில் வைத்து, அவரைச் சுற்றித் தன் கையாலே ஒரு வட்டமிட்டு, ‘இது ஒரு மந்திர வளையம். இதைத் தாண்டி நீ வெளியே வந்தால், ஒரு பெரிய மிருகம் வந்து உன்னை விழுங்கிவிடும் என்று கூறிப் பயமுறுத்தி, அவரை அங்கேயே இருக்க வைப்பாராம். மேலும், அவரது குடும்பம் பக்தியான குடும்பமாதலால் இராமாயணம், மகாபாரதம் போன்றவை இவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. இதன் பின்னணியில் அந்தப் பணியாளர், ‘இராமாயணத்தில் இராமர் சொன்ன எல்லையைத் தாண்டிச் சென்றதாலே, இராவணன் சீதையைக் கடத்திச் சென்றான். நீயும் நான் வரைந்த எல்லையைத் தாண்டி வந்தால், உனக்குத் தீங்கு தான் ஏற்படும் என்று கூறி, அவரை வட்டத்திற்குள்ளே கட்டுப்படுத்தி வைப்பாராம். இதுபோலத்தான் நம்மில் பலரது வாழ்வும்! நம்மைச் சுற்றி நாமே ஒரு மனவட்டத்தை உருவாக்கி, ‘அதுதான் நாம் என்கின்ற மனநிலையோடு, நம் உண்மையான ஆற்றல் என்னவென்று தெரியாமலேயே வாழ்கிறோம்.”

மார்த்தா: “தந்தையே, அடுத்ததாக சக மனிதர்களுக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் நாம் அதிகம் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் பற்றிக் கூறுங்கள் தந்தையே!”

அருள்பணி: “மானிட வாழ்வின் நல்வாழ்விற்கென்று கடவுள் கொடுத்துள்ள மாபெரும் கொடை இயற்கை! இயற்கைக்கு எதிராக நாம் இரண்டு பாவங்களைக் கட்டிக்கொள்ள முடியும். ஒன்று, அளவுக்கதிமாக இயற்கை வளங்களை நம் வசதிக்காக நுகர்வது. இரண்டு, இயற்கையைப் பாதுகாக்கவும் பாராமரிக்கவும் நம்மால் இயன்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது.”

அன்புச் செல்வன்: “இன்றைய சூழ்நிலையில் மனிதர்களாகிய நாம் நம் வசதிக்காக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாகவே நுகர்கிறோம் என்பதைப் பல சூழலியலாளர்கள் தெளிவாக எடுத்துரைக்கிறார்கள். மனிதர்களது அதீத நுகர்வு மற்றும் பராமரிப்பின்மையின் காரணமாக நதிகள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன; மலைகள் மறைந்து கொண்டிருக்கின்றன; காடுகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன; மண் மலடாகிக் கொண்டிருக்கிறது. இவற்றின் காரணமாக அடுத்து வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லவேண்டிய இயற்கை வளங்களை நாமே சூறையாடிக்கொண்டிருக்கின்றோம். இவை இயற்கைக்கு எதிரான பாவங்கள்தானே!”

அருள்பணி: “நிச்சயமாக! இயற்கை வளங்களைச் சூறையாடுவதால் அதிக பாதிப்பு மனிதர்களுக்குத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையின் பாதிப்பு காலநிலைச் சீர்கேடாக நம்மைத் தாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இயற்கையைப் பராமரித்துப் பாதுகாக்கின்ற கடமை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமாக ஒவ்வொரு கிறித்தவருக்கும் உண்டு. மரங்களை நடுவது, மரங்களை வெட்டாமல் இருப்பது, வாகனங்களை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்துவது, போதுமான தேவைகளோடு வாழக் கற்றுக்கொள்வது போன்றவை இயற்கையுடனான நம் உறவைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் சிறுசிறு முயற்சிகளே!”

அன்புச் செல்வன்: “இயற்கை குறித்துப் பேசும்போது, இயற்கைமட்டிலான நம் முன்னோர்களின் அணுகுமுறை என் மனக்கண்முன் வருகிறது. அவர்கள் இயற்கையில் இறைவனின் பிரசன்னம் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தனர். ‘மாசில் வீணையும் மாலை மதியமும் / வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் / மூசு வண்டறை பொய்கையும் போன்றதே / ஈசன் எந்தை இணையடி நீழலே என்ற அப்பரின் வார்த்தைகள் நமக்குத் தெரிந்ததே! அத்தகைய மனநிலை இயற்கையை மதிக்க வேண்டும் என்ற மனநிலையை நம் முன்னோர்களுக்குக் கொடுத்தது. எனவே, இயற்கையைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருந்தனர். நவீன மனிதர் இயற்கையைத் தூக்கி எறிகின்ற பொருளாகப் பார்க்கின்றனர். இவ்வாறு பார்ப்பதே ஒருவகையில் இயற்கைக்கு எதிரான பாவம்தான்.”

(முற்றும்)