ஆழ்மனச் செப அனுபவம் என்பது ஆண்டவருக்கும் தூய ஆவியாருக்கும் முழுமையாக, திறந்த மனத்துடன் இருத்தலாகும். வாழ்வின் ஒவ்வோர் அனுபவத்திலும் நிகழ்விலும் இறைவனின் உடனிருப்பை உணர்தலும், அனைத்திலும் இறைவனைக் காணும் உளக்கண்களைப் பெறுதலும் இதன் மையப்பொருளாகும். இவ்வாறு இறைவனுக்குத் தொடர்ந்து திறந்த மனநிலையில் வாழ்ந்ததுதான் அன்னை எலிஸ்வாவின் ஆளுமையின் மிக முக்கியமான பண்பாக விளங்கியது.
திருமணம், தாய்மை,
விதவையாதல் என வாழ்வில் நிகழ்ந்த
எல்லா நிலைகளிலும் அந்த மனநிலையை அவர் கலையாமல் காத்தார். ஒரு மனைவி, தாய் மற்றும் விதவை என்ற நிலைகளுக்குரிய அனைத்துக் கடமைகளையும் கடுகளவும் பிறழாது நிறைவேற்றினார். அதேசமயம், இறைப்பிரசன்னத்தை எப்போதும் உணரவும், தன் இறையனுபவத்தை மேலும் ஆழப்படுத்தவும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். தன் வாழ்வில் ஏதோ ஓர் உயர்ந்த, அர்த்தமுள்ள செயலைச் செய்யவேண்டும் என்ற உள் அழுத்தம் எப்போதும் அவரது உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.
“நாம் நமது அறிவுக்கும் திறனுக்கும் ஏற்றாற்போல் எல்லாச் செயல்களையும் செய்து வந்தாலும், இன்னும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதை உணர்த்தும் ஒரு வலி என் உள்ளத்தில் இருக்கிறது” என்று
அவர் தன் சகோதரர் அருள்திரு. லூயிஸ் OCD அவர்களிடம்
கூறிய வார்த்தைகள் இதற்குச் சான்றாகின்றன.
“கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்”
(உரோ 8:14) என்ற இறைவாக்கிற்கேற்ப, அன்னை எலிஸ்வா தனிப்பட்ட முறையில் இறைத்தூண்டுதலுக்குத் திறந்த மனத்துடன் செவிமடுத்தார். ஆழ்ந்த நம்பிக்கை, ஆழமான தாழ்ச்சி, பற்றற்ற நிலை, தைரியமான மனப்பான்மை ஆகிய நற்குணங்கள் அவரை ஒரு வித்தியாசமான, ஒளிரும் பெண்மணியாக மாற்றின.
தாழ்ச்சியில்
தூய ஆவியாருக்கு முழுமையாகப் பணிந்திருந்ததால், தன் உள்ளத்தில் உண்மை மற்றும் நேர்மையின் மூல காரணத்தைத் தேடும் ஆன்மிகப் பயணத்தில் அவர் ஈடுபட்டார். கார்மல் ஆன்மிகத்தின் மையக் கருப்பொருளான ஆழ்மன செபம் அன்னை எலிஸ்வாவின் வாழ்வில் இளம் வயதிலிருந்தே இடம்பிடித்திருந்தது. தொல்லைகளுக்குத் துணை போகும் தேவையற்ற பேச்சுகளை அவர் தயக்கமின்றித் தவிர்த்து வந்தார். உள்மன அமைதியும், ஒப்பற்ற தனிமையும் ஆன்மிக உயர்வுக்கு அழைத்துச் செல்லும் சிறந்த வழி என அன்னை உறுதியாக
நம்பினார்.
“என் முன் பழுதின்றி உன்னைக் காத்துக்கொள்வேன்; உன்னைப் பெரும் குலமாகப் பெருகச் செய்வேன்”
என்ற இறைவாக்குறுதிக்கேற்ப மண்ணின் ஆசைகளை மனத்திலிருந்து நீக்கி, விண்ணின் ஆசையில் விருப்பம் கொண்டு வாழ்தலே ஆழ்மன செபத்தின் அடித்தளம் என அவர் போதித்தார்.
இறைச்
சேவைக்கு ஆன்மாவை முழுமையாக அர்ப்பணித்தால், தேவையான ஆறுதல்கள் அனைத்தும் அவரிடமிருந்தே கிடைக்கும் என்ற அசையா நம்பிக்கை அன்னையிடம் இருந்தது.
ஆகவே,
செபத்தில் நிறைவும், பணியில் பணிவும், உதட்டில் உண்மையும், இதயத்தில் குழந்தைத் தன்மையும், நல்லதையே பேசும் மனநிலையும் நம்மில் இருந்தால், நாம் உண்மையில் அன்னை எலிஸ்வாவின் அன்புக் குழந்தைகளாக வாழ்வோம்.