நாம் வாழும் சமூகத்தில் அநீதிகள் என்பது அரிதான நிகழ்வுகளல்ல; அவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. பசியால் வாடும் மனிதரின் அலட்சியம், அதிகாரத்தின் பெயரால் நிகழும் அத்துமீறல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், ஏழைகளின் உரிமைகள் மறுக்கப்படுதல், உண்மை பேசுபவர்களின் குரல் அடக்கப்படுதல், புலம்பெயர்ந்தோர் தாக்கப்படுதல், போதை கலாச்சாரச் சீரழிவு... என இவை அனைத்தும் நம்மைச் சுற்றி தினந்தோறும் நடைபெறும் அநீதியான செயல்களின் வெளிப்பாடுகளாகும். பல நேரங்களில் இவற்றைக் காண்கிறோம்; ஆனால், பழகிப்போன மனநிலையால், பயத்தால் அல்லது பொறுப்பற்ற தன்மையால் அமைதியாகக் கடந்து செல்கிறோம்.
அநீதி
நிகழும் இடங்களில் மட்டுமல்ல, அதைக் கண்டும் மௌனம் காக்கும் நம்மிடமும் அதன் வேர்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. ‘இது நம்முடைய பிரச்சினை அல்ல’ என்ற மனப்பாங்கு சமூகத்தின் மனிதநேயத்தை மெல்ல மெல்ல நீர்த்துப் போகச் செய்கிறது. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காத ஒவ்வொரு தருணமும், அது மேலும் வலுப்பெற நாமே வழிவகுக்கிறோம்.
நீதி
இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? உள்ளிருந்தா? வெளியிலிருந்தா? பொதுவாக, வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும் - செல்வர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம்வேண்டும்; ஆட்சியாளர்கள் மாற வேண்டும்; இது மாறவேண்டும்; அது மாறவேண்டும்... என்ற பட்டியலைத் தயாரித்து, நம்மில் பலர் காத்திருக்கிறோம். அதேவேளையில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றங்கள் தேவை என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெறும் வெளி மாற்றங்களால் எவ்விதப் பயனும் நிகழப்போவதில்லை.
மகாத்மா
காந்தியின் ஒரு வாசகம் இவ்வாறு அமைகிறது: “நீங்கள் இந்த உலகத்தில் என்ன மாற்றத்தைக் காண விரும்புகிறீர்களோ, அதைப்போல நீங்களும் மாறியிருக்கவேண்டும்” (Be the change that you wish to see in the world). அப்படி மாறாவிட்டால் தார்மிகமாக அவர்கள் பேசத் தகுதியற்றவர்களாகிறார்கள்.
‘இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும்? என்னவெல்லாம் மாறவேண்டும்?’ என்று அதிகம் பேர் பேசுகிறார்கள். ஆனால், அந்த மாற்றத்தை அவர்கள் உள்வாங்கி மாறியிருக்கிறார்களா என்றால் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.
இன்று
நாம் அன்றாடம் இவ்வுலகில் காணும் அநீதியான செயல்கள் அனைத்துமே, மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தாம். உள்ளத்தில் உருவாகும் இந்தக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கு மனமாற்றம் அவசியம். மனமாற்றத்தின் வழியே கலாச்சார மாற்றத்தையும், அவற்றின் விளைவாக இன்னும் பல உன்னத மாற்றங்களையும்
கொணர்வதே தம் பணி, தம் வாழ்வு என்பதைக் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்தார் இயேசு. மாற்றங்கள் மேலிருந்து அல்ல; மாறாக, கீழிருந்து அதாவது, மக்களிடமிருந்து தொடங்கவேண்டும் என்பதைத் தெளிவாக்க தம்மையே மக்களில் ஒருவராகக் கரைத்துக்கொண்டார். தம் பணிவாழ்வின் முதல் அடியை யோர்தானில் எடுத்துவைத்தார். அதுதான் அவர் பெற்ற திருமுழுக்கு.
இன்று
நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். பொதுக்காலத்தின் முதல் வாரத்தைத் தொடங்குகின்றோம். மனிதகுலத்தை மீட்க இறைவனுக்கு எத்தனையோ பல வழிகள் இருந்திருக்கும்.
வானிலிருந்த வண்ணம் அவர் மக்களைக் காக்க வழியிருந்தும், இயேசு நம்மில் ஒருவராகத் தம்மையே இணைத்துக்கொண்டார். பாவிகளோடு இருக்க விரும்பி அவர்களோடு வரிசையில் நின்ற இயேசுவின் செயல் மேலிருந்துகொண்டே இயேசு நம்மை மீட்க விரும்பவில்லை; மாறாக, பாவங்களைத் தம்மீது சுமந்துகொண்டு நம்மை மீட்க கீழிறங்கி வந்தவர் என்பதை இயேசுவின் திருமுழுக்கு நமக்குக் காட்டுகிறது. இயேசு தண்ணீருக்குள் இறங்குமுன்னரே மக்கள் கூட்டத்திற்குள் இறங்கியது-பாவம் தவிர மற்றனைத்திலும் அவர் மனித உருவெடுத்திருந்தார் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.
பாவிகளோடு
தம் அருகாமையை, இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசுவின்மீது தூய ஆவியார் இறங்கி வந்ததும் வானத்திலிருந்து, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; அவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத்
3:17) என்று தந்தையின் குரலொலியால் அவர் கடவுளின் மகனாக உலகிற்கு அறிவிக்கப்படுகிறார். இறைத்தந்தை தமது முகம் மற்றும் குரல் வழியாகத் தம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துகின்றார். அவரது முகம் இணக்கமான உறவையும், குரல் மனித நேயத்தையும் வெளிப்படுத்துகின்றன. இறைத்தந்தையின் முகத்தையும் குரலையும் இன்றைய விழாவில் நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அவரது குரலுக்குச் செவிசாய்த்து, தந்தையின் கருணையின் முகத்தை இயேசுவிலும் பிறரிலும் கண்டுகொண்டு மக்களின் நல்வாழ்விற்காகப் பணியாற்றிய பலநூறு நல்ல உள்ளங்களுள் ஒருவராக அறியப்படுபவர் புனித தமியான்.
1850-ஆம் ஆண்டு,
ஹவாய் தீவுகளில் வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு அனுப்பப்பட்டனர். அத்தீவில் ஒரு சிற்றாலயத்தை நிறுவுவதற்கென இளம் அருள்பணியாளர் தமியான் ஆயரால் அனுப்பப்பட்டார். தன் 33-வது வயதில் மொலக்காய் தீவை அடைந்த இளம் அருள்பணியாளர் தமியான், கோவிலை வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மரக்கட்டைகளைக் கொண்டு அந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட, அங்குள்ள மனிதர்களைக் கொண்டு இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார்.
ஆயரின்
அனுமதியுடன் அத்தீவில் தங்கிய அருள்பணியாளர் தமியான் விரைவில் அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். ஒருசில மாதங்கள் தங்கலாம் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. தனக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அவர் திருப்பலி நிறைவேற்றும்போது, ‘தொழுநோயாளிகளாகிய நாம்’ என்று அவர்களோடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.
ஐந்தாண்டுகள் தொழுநோயாளியாக அவர்கள் நடுவே உழைத்துவந்த அவர், 1889, ஏப்ரல் 15-ஆம் தேதி தன் 49-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
தம்மை
முன்னிலைப்படுத்தாமல்,
முப்பது ஆண்டுகள் சாதாரண ஒரு வாழ்வை வாழ்ந்த இயேசு, மூன்று ஆண்டுகளே பொதுவாழ்வில் ஈடுபட்டார். இயேசுவின் பொதுவாழ்வு மற்றும் பணியின் தொடக்கமாக அமைந்திருந்தது அவரது திருமுழுக்கு. இயேசு தம் திருமுழுக்கை யோர்தான் நதியில் தனியே பெறவில்லை; மக்களோடு மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். இயேசுவின் இந்தப் பணிவு மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்வித்தன. இயேசு யோர்தான் நதியில் மக்களோடு மக்களாய் தம்மைக் கரைத்துக் கொண்டதற்கு ஒரு முக்கியக் காரணம், தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கை. இயேசுவும் தம் மைந்தனுக்குரிய தம் பணியைச் செய்யும் பணியாளருக்குரிய இலக்கணத்தை உலகறியச் செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சொற்களாக ஒலிக்கின்றன. “இதோ, என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது...” (எசா 42:1-4).
இயேசுவின்
திருமுழுக்கு பல்வேறு சிந்தனைகளை இன்று நமக்கு விட்டுச்செல்கின்றன. முதலில், நாம் இயேசுவோடு இணைந்து பணியாற்ற வேண்டியதைக் குறித்து நிற்கிறது. சமூகத்தில் நிலவி வரும் அநீதி அமைப்புகளின் தொடர் செயல்பாடுகளுக்குத் தாமும் பொறுப்பேற்கவேண்டும் என்பதன் வெளிப்பாடாக இயேசு திருமுழுக்குப் பெறுகிறார். சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற உழைப்பதும், நமக்கான சமூகப் பொறுப்புகளை ஏற்பதும் தேவையானது என்பதே இயேசுவின் திருமுழுக்கு நமக்கு உணர்த்தும் பாடம். இரண்டாவதாக, இயேசுவின் திருமுழுக்கு, நம் திருமுழுக்கின் வாக்குறுதிகள் குறித்த உறுதிப்பாட்டைப் புதுப்பிக்க உதவுகிறது. இயேசுவைப் போல நாம் ஒருவர் மற்றவரது சுமைகளைப் பகிரவேண்டும் எனவும், கருணையுடன் ஒருவர் மற்றவருக்கு உதவவேண்டும் எனவும் இயேசுவின் சீடர்களாகிய நாமும் உடன் வாழ்பவர்கள், திரு அவை மற்றும் சமூகத்துடன் நீதியைக் கடைப்பிடிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
நிறைவாக,
மக்களை நல்லவர்-கெட்டவர் என்று பிரித்து கடுமையாகத் தீர்ப்பளித்துக் கண்டனம் செய்பவர்களைப்போல் அல்லாமல், உடன் வாழ்பவர்களின் காயங்கள் மற்றும் பலவீனங்களைக் கருணையுடன் பகிர்ந்துகொள்பவர்களாக, நாம் அனைவருமே இறைவனின் அன்புக்குரிய குழந்தைகள் என்பதை உணர்ந்து எல்லாரும் அவர் அன்பில் வாழ முயற்சி செய்வோம். இறைத்திட்டத்தை மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும் எளிமையுடனும் தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டிய இயேசுவைப் போன்று சமூக மாற்றத்திற்காக உழைக்க முன்வருவோம்.