இன்று நாம் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவ்விழாவை ‘மூன்று அரசர்கள் திருநாள்’ என்றும், ‘மூன்று ஞானிகள் திருநாள்’ என்றும் நாம் அழைக்கின்றோம். கீழ்த்திசை ஞானிகள் மெசியாவைத் தேடிவந்து வணங்கிய நாள் இந்த நாள். ‘இறைவனின் வெளிப்பாடு ஒரு சிலருக்கானதல்ல; இனம், சமயம், மொழி, பண்பாடு என அனைத்து எல்லைகளையும் கடந்து, மெசியா அனைத்துலக மக்களுக்குமானவர்’ என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இது. இவ்விழாவைக் குறித்துத் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடும்போது, “திருக்காட்சிப் பெருவிழா என்பது கிறிஸ்துவின் பிறப்பு என்ற மறையுண்மையை உலகறியச் செய்த ஒரு நிகழ்வு” என்றும், “கிறிஸ்து கொணர்ந்த மீட்பு, எவ்வித எல்லையுமின்றி அனைவருக்குமானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு,
கிறித்தவர்களின் கடவுள் மட்டுமல்லர்; அவர் அனைவருக்குமான கடவுள். அவர் அனைவரையும் அன்பு செய்யும் கடவுள். அவர் அனைவரையும் மீட்க வந்த மெசியா. அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டுப் பிரித்து, அதனால் மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை.
கடவுள் எல்லாருக்குமான தந்தை என்பதே இன்றைய விழா நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடம். இன்றைய வாசகங்கள் அனைத்திலும் இதே பாடம் இழையோடுவதைக் காணமுடிகிறது.
இன்றைய
முதல் வாசகத்தில், ‘நாடு கடத்தப்பட்டு நாலாப்பக்கமும் சிதறிக் கிடக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒன்றுகூட்டப்படுவர்; அனைவரும் எருசலேமுக்குக் கூட்டி வரப்படுவர்; அவர்கள் இழந்த மேன்மையை மீண்டும் அடைவர்; ஆண்டவரே முன்னின்று இதைச் செய்வார்’
என்ற நம்பிக்கை செய்தியைத் தருகிறார் இறைவாக்கினர் எசாயா. மேலும், ‘ஆண்டவருடைய மாட்சி எருசலேம் மீது ஒளிரும்போது எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் எருசலேமை நோக்கி வருவர்; எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவர்; எருசலேம் செல்வங்களால் நிறையும்’
என்கிறார். இவ்வாசகத்தில் “பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்”
(எசா 60:3) எனும் கூற்று, கடவுள் எல்லாருக்குமானவர் என்பதை நேரடியாகவே குறிப்பிடுகின்றது.
இரண்டாம்
வாசகத்தில், பவுல் எபேசு திரு அவைக்கு அறிவித்த மறைபொருள், நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளராகவும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள் (எபே 3:6). இந்த ஒன்றிணைப்பை உடன் உரிமையாளர்கள், ஒரே உடலின் உறுப்பினர்கள், உடன் பங்காளிகள் என்ற வார்த்தைகளில் விளக்கி, பிற இனத்தாரும் - யூதரும் இனி வெவ்வேறு நாட்டினர், சமயத்தினர், இனத்தினர் அல்லர்; இரு இனங்களும் வேறுபாடற்ற ஒரே சமூகமாகக் கிறிஸ்து வழியாக மாறிவிட்டது எனப் பிற இனத்தாருக்குக் கிடைத்த நலன்களை எடுத்துரைக்கின்றார் பவுல்.
நற்செய்தியில்,
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கின்றோம்” (மத்
2:1-2) என்று ஞானிகள் எருசலேமுக்குப் பயணம் மேற்கொண்டதை வாசிக்கிறோம். யார் இந்த ஞானிகள்? இவர்கள் எத்தனை பேர்? இவர்களின் தொழில் என்ன? எங்கிருந்து வந்தவர்கள்? ஏன் வந்தார்கள்? போன்ற கேள்விகளுக்குச் சரியான திருவிவிலிய ஆதாரம் இல்லை. அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகள் பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மூவராக இருக்கக்கூடும் என்றும், மெல்கியோர், கஸ்பார், பல்தசார் என்பதே அவர்கள் பெயர்கள் என்றும் பாரம்பரிய மரபு கூறுகின்றது. மேலும், ஞானிகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ‘மாஜாய்’
(Magi) என்பது
பாரசீகர்களைக் குறிக்கலாம் என்றும், அவர்கள் விண் ஆய்வாளர்களாக இருப்பதால் பாபிலோனியர்களாக இருக்கும் என்றும் இயேசுவுக்குக் கொண்டு வந்த பரிசுப்பொருள்களின் அடிப்படையில் அவர்கள் அராபிய அல்லது சிரியாவின் பாலைநிலங்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. மேலும், “கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள்” (மத்
2:1) என்பது பிற இனத்தாரைக் குறிப்பதாகவே கொள்ளலாம். அதாவது, யூதர்களுக்குக் கிழக்குப் பகுதி என்பது யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதியைக் குறிக்கிறது. இப்பகுதி எப்போதுமே பிற இனத்தார் பகுதியையே குறித்து வந்தது. எனவே, ஞானிகள் என்போர் பிற இனத்தார், தெரிந்துகொள்ளப்படாதவர்கள்,
திருவிவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களுக்கும் இயேசுவின் திருக்காட்சி அருளப்படுகின்றது என்பது யூதர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி.
வானதூதர்
வழியாகவும், எரியும் புதரிலும் தங்களுடன் பேசி, உறவாடி, உடன்படிக்கை ஏற்படுத்திய கடவுளைத் தங்களுடைய உடமையாக்க முயன்றனர் யூதர்கள். அனைவரும் கடவுளுடைய பிள்ளைகள் என்பது அவர்களுக்குக் கசப்பாகவே இருந்தது. அவர்கள் பிற இனத்தாரைப் புறக்கணித்தனர்; எரிநரகத்திற்குரியவர்கள் எனக் கருதினர். “நீங்களே எல்லா மக்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்” (விப
19:5), “நீங்கள் மக்களாய் இருப்பீர்கள், நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்”
(எரே 30:22) போன்ற வாக்குறுதிகளைத் தங்களுக்கே உரிய தனியுடைமையாக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், உன்னதக் கடவுளின் மகனாக உதித்தவரின் பிறப்பைத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் தெரிந்துகொள்வதற்கு முன்பே கீழ்த்திசை ஞானிகள் அறிந்துகொண்டதுதான் கடவுளின் திருவுளம்.
இம்மானுவேலாகப்
பிறந்தவர் (மத் 1:23) யூத இனத்திற்கான தனியுடைமை அல்ல; எல்லா மக்களுக்கும் உரிய பொதுவுடைமை. மீட்பு யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி அழைப்பு அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்று போதித்தார் பேதுரு (திப 10). இதைப் புரிந்துகொண்ட பவுல், ‘பிற இனத்தாரும் இயேசுவின் உடலின் உறுப்பினராகிறார்கள்’ என்று
கூறினார் (எபே 3:6). திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய மூவேளைச் செபவுரையில், “கிறிஸ்துவின் ஒளியை நாம் வரவேற்பதன் அடையாளமாக, அவரை நமது தனிப்பட்ட உரிமைச் சொத்தாகக் கருதாமல், அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளும் கடமையை நாம் பெற்றுள்ளோம்” எனக்
கூறியுள்ளார்
(06.01.2021).
இன்றைய
மதவாத அரசியல் சூழலில், கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்; அவர் அனைவருக்குமான தந்தை என்பது கருத்தியலாகவே நிற்கின்றது. கடவுள் எல்லாருக்கும் சொந்தம் என்று எல்லாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தானே மதங்களாலும் மார்க்கங்களாலும் மனிதர்கள் பிரிந்தே இருக்கின்றனர்! கடவுளை இதயத்தால் வழிபடும் மனிதர்கள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் மதவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இச்செயல் கடவுளின் இயல்புக்கே முரணானது. அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதே இறைமை. தம்மைத் தேடும் அனைவருக்குமே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். அன்பும் அமைதியும் கடவுளுக்கே உரித்தானவை.
கீழ்த்திசை
ஞானிகளின் தேடல் நமக்குத் தரும் அழுத்தமான அழைப்பு சமயம், சாதி, மொழி, இனம் - இவற்றால் எழுகின்ற பிணக்குகளைக் களைந்து ஒருவர் மற்றவரைச் சகோதர மனப்பான்மையோடு நடத்தவேண்டும் என்பதுதான். இதுதான் தந்தைக்குரிய விருப்பமாகவும் இருக்கமுடியும். ஆனால், ஏன் மானுட மனம் இன்னும் ஒன்றாகச் சங்கமிக்கவில்லை? மனிதகுலத்தோடும் மனிதகுல வரலாற்றோடும் நெருங்கி இணைக்கப்பெற்றுள்ள திரு அவையிலும் பிளவுகள் இல்லாமல் இல்லை. வெறுப்புகளுக்கும் பிரிவினைகளுக்கும் கிறித்தவர்களாகிய நாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், மூன்று நிலைகளில் நம் மனத்தை நிலைநிறுத்த வேண்டும். அவை 1. சமநிலை, 2. ஏற்புநிலை, 3. துணிவுநிலை.
இறைவனின்
வெளிப்பாட்டில் அனைவரும் சமம் என்பதற்கு மாட்டுத்தொழுவம் ஒரு சான்று. சமநிலையில் நுண்மதி கொண்ட ஞானிகளும், கடைநிலையில் வாழும் இடையர்களும் பிறந்த பாலன் இயேசுவைச் சமநிலையில் காண்கின்றனர். நீண்ட மற்றும் கடினமான பயணத்திற்குப் பிறகு, குழந்தை இயேசுவைக் கண்ட ஞானிகள், அக்குழந்தை தாங்கள் கற்பனை செய்த விதத்தில் அல்ல; மாறாக, அவர் எளியவராகவும் ஏழையாகவும் இருக்கிறார் என்ற நிலையிலும் அவரை மீட்பராக ஏற்றுக்கொள்கின்றனர். கடவுளை ஏற்றதால் உள்ளும் புறமும் வாழ்வில் மாற்றம் பெற்ற அவர்கள் ‘கடவுள் எல்லாருக்குமான தந்தை’ எனும் பேருண்மையைத் துணிவுடன் அறிவிக்கத் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.
எனவே,
இன்று வறியோரிலும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் இருப்போரிலும் பல நேரங்களில் மறைந்திருக்கும்
ஆண்டவரை வணங்குவதற்கு இந்த ஞானிகள் நம்மைத் தூண்டுகின்றனர். கடவுளின் பெயரால் அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் உருவாக்கும் பிரிவுகளையும் பிளவுகளையும் வேரோடு களைய இவ்விழா நம்மை அழைக்கிறது. இறுதியாக, நாம் புதிய பாதையில் பயணிக்கும்போது எழும் தடைகளையும் தளர்வுகளையும் வீழ்த்தி, எல்லாருக்கும் எல்லாமும் என்றிருக்கும் இறைவனைத் துணிவுடன் உலகுக்கு அறிவிக்க நாம் புறப்படவேண்டும்.