news-details
கவிதை
தரணி போற்றும் தந்தை லெவே!

விண்ணகப் பிறப்பு முடிவல்ல - வெற்றி தானே!

ஐம்பத்து மூன்று ஆண்டுகள் நினைவுகள் அல்ல - அது

அர்ப்பணத்தின் உயிரோவியமே; அருள்நிறை காவியமே!

1921- இல் இந்தியா நோக்கிய பயணம்

அழைப்பால் கொண்ட தியானம்!

1943 - இல் ஆண்டாவூரணி பங்குப்பணி

மறைநிறை கல்விப்பணி!

 

வானம் மூடியதால் வறண்டு போன நீர் நிலைகள்

வாடியது பயிர்கள் மட்டுமல்ல, மக்களும்தான்! தந்தை

வாஞ்சையோடு கைவிரித்துச் செபிக்கக் கண்டு,

வான்மழை கொட்டியதே; மகிழ்ச்சியெங்கும் கிட்டியதே!

மழைச்சாமிவேண்டியதால் இறைச்சாமி அருள்பொழிந்தார்!

 

பதினைந்து கிராமங்கள் பக்தியுடன் பாத யாத்திரை!

ஓரியூரின் திருத்தலத்தில் ஒற்றுமையில் ஒருங்கிணைப்பு;

வயிற்றுப் போக்கு, காலரா வலிநோய்கள் நீங்கிடவே

அன்பின் மருந்து ஆறுதலே அவர் விருந்து!

அற்புதங்கள் நிகழும் ஆற்றல்மிகு வல்லமையாய்!

 

கிராமந்தோறும் பணிகள் கால்நடந்த பயணம்;

ஆண்டாவூரணியில் ஆண்டுகள் இருபத்திரண்டு!

ஆற்றலுடன் ஆர்வமுடன் ஆண்டவனின் மகிமைக்காக!

இராமநாதபுர மண்ணிற்கு இடமாற்றம் கண்டதனால்

இறைப்பணிகள் தொடர்ந்தனவே பதின்மூன்று ஆண்டுகளாய்!

 

பெரும்புயல் வீசியதால் பெயர்ந்தனவே நம்பிக்கையும்

வீடுகள் இடிந்தனவே, மனங்களும் உடைந்தனவே.

உயிரான பயிர்களும் பூச்சியினால் அழிந்தனவே!

உணவும், உடையும், ஆறுதலும் ஓயாத நம்பிக்கையும்

ஓலைகொண்ட இறைவார்த்தை தீர்த்தம் சுகம் தந்தனவே!

 

சருகணி பங்கினிலே பணிக்காலம் 17 ஆண்டுகள்

புன்னகை பூத்த மனம் பூரிப்பில் திளைத்த குணம்

வளமில்லா இடத்தில் வளம் சேர்ந்ததங்கே!

பலமில்லா இடத்தில் பலம் சார்ந்ததங்கே!

ஒளியினிலே நாளெல்லாம் மிளிர்ந்ததங்கே!

 

உயிரோடு இருந்தபோதும் ஓயாத அற்புதங்கள்!

மண்ணில் அவர் ஓய்ந்தாலும் மறையாத சொற்பதங்கள்;

அன்பின் வாசமலர் அவரே! அருள்நிறைந்து - இறைப்

பண்பில் ஒளிர்ந்த திருச்சுடர் தந்தை லெவே!

வாழிய வாழியவே; நின்புகழ் என்றும் வாழியவே!