இயற்கை அன்னை வழங்கிய கொடைகளை நாம் நுகர்வுப் பொருள்களாக மாற்றியதன் விளைவே, இன்று நாம் அனல் பறக்கும் காற்றையும், கரைபுரண்டோடும் பெரு மழையையும் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.
இலக்கிய
உலகில் புகழ்பெற்ற கவிதை வரிகள் இவை:
‘பின்னர் எழுத்தாளர்கள் மரத்தில்...
இலையற்ற
மரங்கள் கூட்டமாக,
துர்நாற்றம்
வீசும் கடல்கள்
மோசமான
காற்றுக்குக் கீழே.
ஆயிரம்
மைல்கள் பெட்ரோலியக் குப்பைகளால்....’
என
நீளும் ஐம்பத்திரெண்டு வரிகள் கொண்ட ‘பாராளுமன்றம்’ எனும்
அக்கவிதையைப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்துக் கவிஞர் கரோல் ஆன் டஃபி படைத்துள்ளார்.
இது
ஆபத்தில் இருக்கும் ஒரு கிரகத்தைப் பற்றி அறிக்கை செய்ய பறவைகள் சபை ஒன்று கூடுவதாகவும், ஒவ்வொரு பேச்சாளரும் வெவ்வேறு சூழலை விவரிப்பதாகவும், அனைத்தும் சேதமடைந்து அழிந்து வருவதை எடுத்துரைப்பதாகவும், இறுதியில் கூட்டம் எந்தத் திட்டமும் இல்லாமல் முடிவடைவதாகவும் பொருள்பட அமைக்கப்பட்டுள்ளது.
காலநிலை
நெருக்கடிக்கு எதிரான அரசியல் அமைப்புகளின் மந்தநிலையை இக்கவிதை வன்மையாகச் சாடுகிறது. பறவைகளின் கூட்டத்தைப் பாராளுமன்றமாக உருவகப்படுத்தும் இக்கவிதை, நெகிழிக் கழிவுகள் மற்றும் உருகும் பனிப் பாறைகள் போன்ற இயற்கையின் அழிவைச் சாட்சியங்களாக முன்வைக்கிறது. மனிதர்கள் அமைதியாக இருக்கும்போது, பாதிக்கப்பட்ட பறவைகள் தங்கள் குரல் வழியே உலகின் தோல்வியை அம்பலப்படுத்துகின்றன. இவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தும், உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உலகம் அமைதியான முறையில் அழிவை நோக்கிச் செல்வதை இக்கவிதை துயரத்துடனே பதிவு செய்திருக்கிறது.
இவ்வாண்டு
2026 - உலகம் இதுவரை கண்டிராத ஒரு வெப்பமான கோடை காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என அறிவியல் வல்லுநர்கள்
எச்சரிக்கின்றனர். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் வந்த செய்தி அல்ல; மாறாக, அறிவியல்பூர்வமான தரவுகளின் வெளிப்பாடு. மனிதகுலம் தனது வரலாற்றில் ஒரு மிக முக்கியமான, ஆபத்தான கால கட்டத்தை எட்டியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையங்களின் அண்மைக் காலத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இங்கிலாந்து
வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வுப்படி, 2026-ஆம் ஆண்டு தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட (1850-1900), 1.340C
முதல் 1.580C
வரை அதிக வெப்பமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நிலவிய 1.550C
என்ற உச்சக்கட்ட வெப்ப நிலையைவிட இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், 2023 முதல் 2026 வரையிலான நான்கு ஆண்டுகள் தொடர்ந்து 1.40C என்ற அபாய எல்லையைத் தாண்டியிருக்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய உண்மை.
“இதற்கு முன்பு உலக வெப்பநிலை, 1.30C-ஐத் தாண்டியதே அரிதான ஒன்றாக இருந்தது; ஆனால், இன்று பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான 1.50C
என்ற எல்லையை நாம் நெருங்கிவிட்டோம்” எனும்
காலநிலை விஞ்ஞானி ஆடம் ஸ்கைஃப்பின் கூற்று இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது!
மேலும்,
பூமி வெப்பமடையும் வேகம் முன்னெப்போதையும்விட இப்போது இரட்டிப்பாகியுள்ளதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1970 முதல்
2015 வரை உள்ள ஆண்டுகளில் 0.20C
என்ற அளவில் உயர்ந்து வந்த வெப்பம், கடந்த 10 ஆண்டுகளில் 0.350C
என்று அதிரடி வேகத்தில் உயர்ந்து வருகிறது எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய
மற்றும் கிழக்கு வெப்ப மண்டலப் பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் அசாதாரணமாக வெப்பமடைவதால் வகைப்படுத்தப்படும் ‘எல் நினோ’
(El Nino) போன்ற இயற்கை மாற்றங்கள் உலகளாவிய வானிலை மாற்றத்திற்கும் குறிப்பாக, ஆசிய, ஆஸ்திரேலியாவில் வறட்சி ஏற்படுவதற்கும், தென் அமெரிக்காவில் கனமழை பொழிவதற்கும் காரணமாக ஒருபுறம் இருந்தாலும், புதைபடிவ எரிபொருள்களை (Fossil Fuels) இடைவிடாது
எரிப்பதன் மூலம் நாம் வளிமண்டலத்தில் உருவாக்கியுள்ள ‘கார்பன் போர்வை’தான் இத்தனை பேரழிவிற்கும் முதன்மையான காரணமாகக்
குறிப்பிடப்படுகின்றது.
“இதே வேகம் தொடர்ந்தால் 2030-க்குள் நாம் 1.50C
என்ற இலக்கை நிரந்தரமாகத் தாண்டிவிடுவோம்” என்று
எச்சரிக்கின்றார் விஞ்ஞானி ஸ்டீபன் ரஹ்ம்ஸ்டோர்ஃப்.
மேலும்,
வெப்பம் என்பது வெறும் அசாதாரணமான சூழல் மட்டுமல்ல; அது ஓர் உயிர்க்கொல்லியும்கூட. இதனால் விவசாய நிலங்களிலும், கட்டுமான இடங்களிலும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் வேலை செய்ய முடியாமல் போகிறது. அவ்வாறே, ‘தி லான்செட்’ எனும் இதழின் 2025-ஆம் ஆண்டு அறிக்கை, “உலகளவில் வெப்பம் காரணமாக நிமிடத்திற்கு ஒரு நபர் உயிரிழக்கிறார்; 1990-களுடன் ஒப்பிடும்போது வெப்பம் தொடர்பான மரணங்கள் 23% அதிகரித்துள்ளன” என்று
அதிர்ச்சியூட்டும் உண்மையைப் பகிர்ந்துள்ளது.
எனவே,
காலநிலை மாற்றம் என்பது ஏதோ அரசுகள் மட்டுமே தீர்க்கவேண்டிய பிரச்சினை அல்ல; மாறாக, ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்வியல் முறையிலும்
சில மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும். சிறப்பாக, மக்களின் நுகர்வு வெறி தணியவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், சொகுசு வாகனங்கள் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு வளிமண்டலத்தில் வெப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்ற புரிதல் நமக்கு வேண்டும். மரங்களை வெட்டிவிட்டு அடுக்கு மாடி வீடுகளை நாம் உருவாக்கி வருவதால், நகரங்கள் வெப்பத் தீவுகளாக மாறிவருகின்றன. நம்மைச் சுற்றி நாம் மேற்கொள்ளும் இயற்கைச் சீரழிவுகளில் உச்சமானது, கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும்
காடுகளை அழிப்பதுதான். அதனால் பூமியின் ‘கார்பன் சின்ங்ஸ்’
(Carbon Sinks) எனப்படும்
இயற்கை வடிகட்டிகளை நாம் பெரிதும் இழந்து வருகிறோம்.
2026-கோடையின் தாக்கத்திலிருந்து
தப்பிக்கவும், எதிர்காலப் பேரழிவைத் தடுக்கவும் சில போர்க்கால நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். அரசின் நிர்வாகச் செயல்பாட்டில் குறிப்பாக, எரிசக்தி மாற்றம் இன்றியமையாதது. அதாவது, புதைபடிவ எரிபொருள்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்திவிட்டு, சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாம் மாறவேண்டும். அவ்வாறே, பசுமைத் திட்டங்களை எங்கும் செயல்படுத்தவேண்டும். குறிப்பாக, நகரங்களில் நுண் காடுகளை (Miyawaki Forests) உருவாக்கி
வெப்பத்தைக் குறைக்கவேண்டும்.
அரசு
மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளில் கவனம் கொண்டிருக்கவேண்டும். குறிப்பாக, நீர் மேலாண்மை என்பது மிக அவசியமானது. நீரை எங்கும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும், அதேவேளையில் கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும் இன்றியமையாதது. காலந்தோறும் நாம் முழங்கிக்கொண்டிருக்கும், ‘வீட்டுக்கொரு மரம்’ என்பது செயலாக்கம் பெறவேண்டும். ஒவ்வொரு வீடும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட்டு வளர்ப்பது, வருங்காலத் தலைமுறைக்கு நாம் தரும் பெரும் கொடை!
பூமி
வெப்பமடைவது என்பது வெறும் அறிவியல் எச்சரிக்கை மட்டுமல்ல; மாறாக, அது நமது வாசற்படியில் வந்து நிற்கும் மரணத்தின் எச்சரிக்கை. “பூமி எவ்வளவு விரைவாக வெப்பமடைகிறது என்பது, நாம் கார்பன் வெளியேற்றத்தை எவ்வளவு விரைவாகப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வருகிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2026-ஆம் ஆண்டின் இந்தக் கடுமையான வெப்பம் நமக்கு விடுக்கும் கடைசி எச்சரிக்கை மணி இதுவே.
இயற்கையோடு
இயைந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு, செயற்கை நுகர்வுகளில் இன்பம் காணும் மனிதகுலம், இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில்...
‘கடைசி மரமும் வெட்டுண்டு
கடைசி
நீரும் விசமேறி
கடைசி
மீனும் பிடிபட
அப்போதுதான்
உறைக்கும்
பணத்தைத்
தின்ன முடியாது என்று’
எனும்
கவிஞர் இளைய பாரதியின் வரிகள்தான் நம் கோர வாழ்வியலை உணர்த்தும் வலிமிகுந்த உண்மையாகும். தாள முடியாத புவி வெப்பத்தினால், ஒரு புழுவைப்போலத் துடித்து வதங்கும் அவல நிலையை இன்று நாம் எங்கும் காண்கிறோம். “நீர் நெருக்கடியும் புவி வெப்பமயமாதலும் உலகை எதிர்நோக்கியிருக்கும் இரு பெரும் பேரழிவுகள்” என்று
1990-களிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் அமைப்பு (UNEP) எச்சரிக்கை
மணி அடித்தது.
சுமார்
50 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமர்ப்பித்த ஆய்வு முடிவுகள், இந்தப் பேராபத்துகள் இந்தியாவைச் சூழ்ந்து நிலைகுலையச் செய்யத் தொடங்கிவிட்டதை உறுதிப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு இன்று இந்த நெருக்கடியின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
இதே
நிலை நீடித்தால், நச்சுப்புகை சூழ்ந்த ஆகாயத்தையும், தகிக்கும் புவி வெப்பத்தையும், வறண்ட நிலத்தையும், சீர்குலைந்த சுற்றுச்சூழலையும் மட்டுமே நாம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சொத்தாக விட்டுச் செல்ல நேரிடும். பசுமையற்ற அந்தப் பாலைநிலம், நமது வாரிசுகளின் வாழ்க்கையை ஒரு தீராதத் துயரமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய கொடூரச் செயல், ஒரு மாபெரும் சமூகக் குற்றமே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்