இன்று நாம் புனித வாரத்தின் நுழைவுவாயிலில் நிற்கிறோம். ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடி, மீட்பு வரலாற்றின் மிக முக்கியமான வாரத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கின்றோம். இவ்வாரம் முழுவதும் நமது ஆண்டவரின் இலட்சியப் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பைக் கொண்டாட அன்னையாம் திரு அவை நம்மை அழைக்கின்றது.
எருசலேம்
நகருக்குள் வெற்றியோடு நுழைந்த இயேசுவை, ‘ஓசன்னா’ பாடி, ஒலிவக் கிளைகளை அசைத்து வரவேற்ற அதே மக்கள், சில நாள்களிலேயே “அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்திய முரண்பாடான நிகழ்வை இன்றைய வழிபாடு நம் கண்முன் நிறுத்துகிறது. மனித உள்ளங்களின் நிலையற்ற தன்மையையும், இறைவனின் மாறாத அன்பையும் இந்த நாள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த வாரம் முழுவதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. வாருங்கள்,
கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு!
ஆண்டின்
52 வாரங்களில், இந்த ஒரு வாரத்தை மட்டும் ஏன் ‘புனித வாரம்’ என்று அழைக்கிறோம்? இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இறுதி நாள்கள் இவை என்பதாலும், மானிட மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள் அரங்கேறிய காலம் என்பதாலும் இதனைப் புனித வாரம் என்கிறோம். ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அந்த இறுதி நாள்களில் ‘புனிதம்’ என்று சொல்லிக்கொள்ள எதுவுமே வெளியில் தெரியவில்லை, மாறாக மனித பலவீனங்களும், துரோகங்களுமே மலிந்து கிடந்தன.
உடன்
இருந்த நண்பனே முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான். உயிருக்கு உயிரான சீடனோ “அவரைத் தெரியாது”
என மறுதலித்தான். ஆபத்து வந்தபோது ஏனைய நண்பர்கள் சிதறி ஓடி ஒளிந்தனர். மனசாட்சிகள் விலைபேசப்பட்டு, பொய் சாட்சிகள் புனையப்பட்டன. “இவரிடம் எக்குற்றமும் காணவில்லை”
என்று தெரிந்தும், அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மாசற்ற இளைஞனுக்கு மரணத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, சித்திரவதை செய்து, ஒரு கந்தல் துணி போலச் சிலுவையில் தொங்கவிட்டனர். இவற்றில் புனிதம் எங்கே இருக்கிறது?
துரோகமும்
அநீதியும் வன்முறையும் நிறைந்த ஒரு வாரத்தை ‘புனிதம்’ என்று அழைப்பது முரண்பாடாகத் தோன்றலாம். உண்மையில், புனிதம் என்ற சொல்லுக்கு இயேசு இங்கே ஒரு புதிய இலக்கணத்தை எழுதுகிறார். கடவுள் என்ற மறையுண்மைக்கு மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் என்பவர் எட்டாத உயரத்தில் அரியணையில் அமர்ந்திருப்பவர் அல்லர், அவர் அன்புக்காகத் துன்பப்படக் கூடியவர். அதுவும் எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு கொடுமையான சிலுவையாயினும், மானிடர் மீதான பேரன்பினால் அதனை மனமுவந்து ஏற்பவரே உண்மையான கடவுள் என்பதைச் சிலுவைச் சாவின் வழியாக எண்பித்தவர். துரோகங்களுக்கு நடுவிலும் மாறாத அன்பைக் காட்டியதால்தான் இது புனித வாரம். அதிகாரத்தின் அநீதிக்கு முன்னால் மண்டியிடாமல், மன்னிப்பை ஆயுதமாக்கியதால்தான் இது புனித வாரம்.
இன்றைய
நற்செய்தி வாசகம் இயேசுவின் இலட்சிய மரணத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. அனைத்துத் தியாகச் செயல்களுக்கும் அடிப்படை ஊற்றாக இருப்பது உண்மையான அன்பு மட்டுமே. அந்தத் தூய அன்பிலிருந்து தான் தியாகம் பிறக்கிறது. அந்தத் தியாகத்தின் உச்சக் கட்டத்தில்தான் ஓர் இலட்சிய மரணம் அரங்கேறுகிறது. இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது, எவ்விதத் தூண்டுதலுமின்றி மக்கள் தாங்களாகவே திரண்டு வந்து அவரை வரவேற்றனர். அன்று எருசலேமில் உருவான அந்தத் தன்னிச்சையான மக்கள் கூட்டம், யூத மதத் தலைவர்களுக்கும் உரோமை அரசுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இயேசு
தனது பணிவாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்தே, மதத் தலைவர்களின் அதிகாரப் போக்கிற்குச் சவால் விடுத்து வந்தார். அதன் சிகரமாகவே எருசலேம் நகரில் அவருக்குக் கிடைத்த இந்த மாபெரும் வரவேற்பு அமைந்தது. இதனைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் கோட்டையாக விளங்கிய எருசலேம் கோவிலுக்குள் நுழைந்த இயேசு, அங்கிருந்த அவலங்களைச் சாட்டையடி கொடுத்துச் சுத்தப்படுத்தினார். இவ்வாறு, அந்த முதல் குருத்தோலை ஞாயிறு, நிலவி வந்த அதிகார அமைப்புகளைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சி நாளாக மாறியது.
ஆண்டுதோறும்
பாஸ்கா விழாவைக் கொண்டாட இயேசு எருசலேம் வந்திருந்தாலும், இதுவே தனது இறுதிப் பயணம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால்தான், எருசலேம் நோக்கிய அந்தப் பயணத்தின்போது, தனது பாடுகள் மற்றும் இறப்பைப் பற்றி மூன்று முறை முன்னறிவிக்கிறார் (மாற் 8:31; 9:31;
10:33-34). தான் காட்டிக்கொடுக்கப்பட்டு, கொலை செய்யப்படப்போவதை அறிந்திருந்தும், அவர் தனது இலட்சியத்திலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை. இயேசுவின் நோக்கத்தை ஓரளவேனும் உணர்ந்திருந்த மக்களும், இறைவாக்கினர் செக்கரியாவின் வாக்குப்படி, “தாழ்ச்சியுடன் கழுதையின் மேலேறி”
(9:9) வரும் மெசியாவை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, ஒரு மாபெரும் இயக்கமாக இயேசுவோடு இணைந்து எருசலேம் நோக்கி ஆர்ப்பரிப்போடு பயணித்தனர்.
எருசலேம்
என்பது உண்மையில் ஒரு முரண்பாடுகளின் நகரம். இயேசுவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைபொருளின் நிகழ்வுகளோடு இந்நகரம் பிணைக்கப்பட்டிருப்பதால் இது தனிச்சிறப்பு பெறுகிறது. இது கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் புனித பூமியாக இருந்தாலும், விவிலிய வரலாற்றில் இது பல முரண்பாடுகளைத் தன்னகத்தே
கொண்டுள்ளது. இது “ஆண்டவரின் நகர்”
(எசா 60:14) என்று புகழப்பட்டாலும், ‘இறைவாக்கினரைக் கொல்லும் நகராக’
(மத் 23:37) மாறியது. இது உண்மையின் நகராக (எசா 1:21; 26, சக் 8:3) இருந்தாலும், மக்களை அடிமைப்படுத்திய நகராகவும் (எரே 5:1-5; மீக் 3:10) இருந்தது. இது மகிழ்ச்சியின் நகர் (திபா 48:2) என்று போற்றப்பட்டாலும், வேதனையின் நகரமாகவும் (புல 2:15) காட்சியளித்தது. சாலமோன் மன்னர் கட்டிய அந்தப் பிரம்மாண்டமான கோவில், இறைவனின் பிரசன்னத்தையும், மன்னிப்பையும், இரக்கத்தையும் பறைசாற்றும் இடமாக விளங்கியது. அது ஒரு பலியின் இடமாகத் தொடங்கி, பிற்காலத்தில் மக்களைச் சுரண்டும் இடமாக மாறியதுதான் வரலாற்றுச் சோகம்.
இன்றைய
வழிபாட்டில் சில கேள்வியை நம் இதயங்களில் ஏந்துவோம்: “துன்பங்களைத் தாங்கும் இயேசுவுக்கு முன்னால் நான் யாராக இருக்க விரும்புகிறேன்?” புனித வாரத்தின் இந்தத் தொடக்கத்தில், நாம் வெறும் பார்வையாளர்களாக இருக்கப் போகிறோமா அல்லது பங்கேற்பாளர்களாக மாறப்போகிறோமா? நற்செய்தி காட்டும் மாந்தர்களில் நாம் யாரைப் பிரதிபலிக்கிறோம் என்பதைச் சிந்திப்போம்.
இன்றைய
எருசலேம் பவனி பல கேள்விகளால் நிறைந்துள்ளது.
இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவிய சிரேன் ஊர் சீமோனைப்போல, பிறரின் துன்பங்களில் தோள் கொடுக்கிறோமா? சிலுவையடியில் நின்ற அன்னை மரியாவைப்போல, இக்கட்டான சூழலிலும் உறுதியான நம்பிக்கையோடு நிற்கிறோமா? அடக்கத்திற்கு உதவிய யோசேப்பைப் போல, மறைமுகமாக நற்செயல்கள் செய்கிறோமா? அல்லது... சுயநலத்திற்காக அன்பைக் காட்டிக் கொடுக்கும் யூதாஸாகவா? பொறுப்பிலிருந்து கை கழுவும் பிலாத்துவாகவா?
அதிகார போதையில் மற்றவரைக் கண்டனம் செய்யும் மதத் தலைவர்களாகவா? இவ்வாரம் முழுவதும் இக்கேள்விகள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.
கல்வாரிப்
பயணத்தில் இயேசு நமக்குக் கற்பிக்கும் முக்கிய வாழ்வியல் பாடங்கள் இவை: முதலில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தப்படுத்தியதும், அதிகார வர்க்கத்தை எதிர்த்ததும் நமக்கொரு பாடமாகும். இன்று நாம் வாழும் சமூகத்தில் அநீதியான அதிகார அமைப்புகளுக்குப் பணிந்து போகாமல், உண்மையை உரக்கச் சொல்லவேண்டும். அதிகாரம் என்பது அடக்கி ஆள்வதற்கல்ல, அது அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கான ஒரு கருவி என்பதை இயேசு தன் சிலுவைச் சாவின் மூலம் நிரூபித்தார்.
இரண்டாவதாக,
இயேசுவின் இறுதி நாள்கள் துரோகங்களால் சூழப்பட்டிருந்த வேளையிலும் அவர் காட்டிய பதில் “மன்னிப்பு”.
“தாம் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்”
என்ற அந்தச் சொல், பழிவாங்கும் உணர்வைத் தகர்த்தெறிகிறது. நம் வாழ்வில் நம்மை வீழ்த்த நினைப்பவர்களையும், காட்டிக்கொடுத்தவர்களையும் மன்னிப்பதன் மூலமே நாம் “புனிதத்தை”
எட்ட முடியும்.
மூன்றாவதாக,
இன்றைய போட்டி நிறைந்த உலகில், தாழ்ச்சியே உண்மையான வலிமை என்பதைக் கல்வாரி மலை நமக்குக் கற்றுத்தருகிறது. குதிரையில் ஏறி வரும் போர் வீரனாக அல்லாமல், கழுதையின் மேல் ஏறி வரும் அமைதித் தூதுவராக எருசலேமுக்குள் நுழையும் இயேசு ஆரவாரங்களுக்கு மத்தியில் அகந்தை இல்லாமல் செல்வது எப்படி என்பதை காட்டுகிறார். துன்பம் என்பது ஒருபோதும் வீணாவதில்லை; அது அன்போடு ஏற்றுக்கொள்ளப்படும்போது.