news-details
தமிழக செய்திகள்
வேளாங்கண்ணியில் 18 சிறந்த பொதுநிலையினருக்கு விருதுகள்!

தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு சார்பில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வைர விழா, புனித தேவசகாயம் பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்ட நிகழ்வு மற்றும் மாநில அளவிலான கருத்தரங்கு ஆகிய முப்பெரும் விழாக்கள் மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணி தியான மையத்தில் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்நாட்டின் 18 மறைமாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். பணிக்குழுவின் தலைவர் ஆயர் மேதகு சகாயராஜ் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 சிறந்த பொதுநிலையினருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. புனித தேவசகாயத்தின் ஆன்மிகம், பொதுநிலையினரின் அதிகாரம் மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்பட்டன. ஆயர் மேதகு நீதிநாதன் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் புனித தேவசகாயத்தின் தமிழ் மன்றாட்டு அட்டை வெளியிடப்பட்டது. பொதுநிலையினர் திரு அவையிலும் சமூகத்திலும் சாட்சிகளாக வாழவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பங்கேற்பாளர் அனைவருக்கும் வத்திக்கான் சங்க ஆவணங்களின் தொகுப்பு வழங்கப்பட்டது. பணிக்குழுச் செயலர் அருள்தந்தை மரிய மைக்கேல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.