திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் புதிய மாற்றங்களை உருவாக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், திரு அவையின் வாழ்விலும் பணியிலும் பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தார். அதாவது, திரு அவையின் உலகப் போக்கு குறைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்த திருத்தந்தை, கோவிட்19-இன் காலகட்டத்தில் உலகில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தப்படவும் மற்றவரைச் சந்திக்கக்கூடாது என்னும் காலகட்டத்திலும் கிறித்தவ மக்கள் தங்களது திருவழிபாட்டின் உண்மை அழகை மீண்டும் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த அக்கறையுடன் செயல்பட்டார்.
திருவழிபாட்டில்
மாற்றங்கள்
திரு
அவையின் வாழ்விற்கு அடிப்படையானது நற்கருணைக் கொண்டாட்டம். அதுவே கிறித்தவ வாழ்வின் ஊற்றும் சிகரமுமாக உள்ளது என்கிறது இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம். அத்தகைய மேன்மை நிறைந்த திருப்பலிக் கொண்டாட்டத்தின் நற்கருணை மன்றாட்டில் அன்னை மரியாவின் பெயருக்குப் பின் புனித யோசேப்பின் பெயர் இடம்பெற 2013, மே 1 அன்று சிறப்பு ஆணை பிறப்பித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத் திரு அவை இன்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் புனித யோசேப்பை நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்வது குறிப்பிடத்தக்கது.
‘தந்தையின் இதயத்தோடு’
என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடலில் (2020) புனித யோசேப்பின் சிறப்புப் பண்புகளைக் கத்தோலிக்க நம்பிக்கையாளர் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் விவரித்துள்ளார். குறிப்பாக, அன்பான, கனிவான, கீழ்ப்படிதலுள்ள, ஏற்றுக்கொள்ளும், துணிவுள்ள, படைப்பாற்றல்மிக்க, கடினமாக உழைக்கக்கூடிய, மறைந்திருந்து செயல்பட்ட தந்தையாகவும், அன்னை மரியாவுக்கு நல்ல கணவராகவும், ஆண்டவர் இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் இருந்தார் என்பதையும் உலகளாவியத் திரு அவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு எனவும் அறிவித்தார். அதோடு 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2021 டிசம்பர் 8 வரை ‘புனித யோசேப்பின் ஆண்டு’ எனத் திரு அவையில் அறிவித்து புனித யோசேப்பின் மனநிலையை நம்பிக்கையாளர் அனைவரும் கற்றுக்கொள்ள, கடைப்பிடிக்க, வாழ்ந்துகாட்ட வலியுறுத்தினார்.
உறங்கும்
நிலை புனித யோசேப்பின் பக்தியைப் பரவச் செய்தவர். நற்செய்திகளின் பின்னணியில் கடவுளின் தூதர் புனித யோசேப்புடன் கனவின் மூலம் பல்வேறு வகையான உரையாடல்களை மேற்கொண்டார். இவைகளின் மூலம் கடவுள் கவனித்துக்கொள்வார், கடவுளின் உடனிருப்பு உண்டு எனவும், கடவுளின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளவும் இந்தப் பக்தி முயற்சி துணைபுரியும் என்பதைத் தனது வாழ்வில் கடைப்பிடித்து நம்பிக்கையாளர் அனைவரும் கற்றுத் தந்துள்ளார்.
கோவிட்-19
பெருந்தொற்றுக் காலத்தில் உண்மையான கத்தோலிக்க நம்பிக்கையை வளர்க்கவும் அர்த்தம் தேடும் வழிபாடாக நமது வழிபாடு அமையச் சிறந்த வகையில் அருகிலிருந்து அக்கறை காட்டும் கலாச்சாரத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். உலகம் பல்வேறு நிலைகளில் துன்பத்திற்கு உள்ளான நிலையில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் தங்களது அடிப்படையான நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதில் கருத்துடன் செயல்பட்டார்.
பெரிய
வியாழன் அன்று கத்தோலிக்கத் திரு அவையில் இடம்பெறும் பாதம் கழுவும் சடங்குகளில் மாற்றத்தை வலியுறுத்தினார். 2016-ஆம் ஆண்டு சனவரி மாதம் பாதம் கழுவும் சடங்குகளில் பெண்களும் பங்கேற்கலாம் என்னும் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியவர். மேலும், பெண்களின் பணியும் வாழ்வும் திரு அவையின் செயல்பாடுகளில் முதன்மை பெற வேண்டும் என்பதில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தியவர்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் 2021-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி வெளியிட்ட ‘Traditionis Custodes’ என்னும் ஆவணத்தில் பாரம்பரிய இலத்தீன் திருப்பலியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புதிய திருப்பலி முறையே திரு அவையின் வழிபாட்டு முறையில் ஒற்றுமையை உருவாக்கவும், அதனை வலுப்படுத்தவும் சிறந்தது என்பதை வலியுறுத்தினார். கத்தோலிக்கத்
திரு அவையின் செயல்பாடுகளில் இலத்தீன் மொழி சிறந்த இடம் வகிக்கிறது. இருப்பினும், பல்வேறு அமைப்புகள் மீண்டும் கத்தோலிக்கத் திரு அவையின் வழிபாடுகள் இலத்தீன் மொழியிலேயே நடைபெற வேண்டும் என்னும் ஆர்வத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஆவணத்தின் மூலம் நாம் இப்போது பயன்படுத்துகின்ற புதிய திருப்பலி முறையைப் பயன்படுத்தும்போதுதான் திரு அவையில் ஒற்றுமையை உருவாக்கும் வழிகள் உருவாகும் என்பதையும் வலியுறுத்தினார்.
2022-ஆம் ஆண்டு
‘மிக மிக ஆவலாய் இருந்தேன்’
என்னும் திருத்தூது மடல் வழியாகக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், நம்பிக்கையாளர் ஆகிய அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டிய திருவழிபாட்டுப் பயிற்சி பற்றித் தெளிவுபடுத்துகிறார். திருவழிபாடு கிறிஸ்துவைச் சந்திக்கும் இடம் எனவும், திருவழிபாடுதான் உலகுசார் ஆன்மிக நஞ்சுக்கு மாற்றுமருந்து எனவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, திருவழிபாட்டு உருவாக்கமும் திருவழிபாட்டின் வழியாக உருவாக்கம் பெறுவதும் அவசியத் தேவை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். திருப்பலியும் அருளடையாளக் கொண்டாடங்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு.
‘உலகம் அறிவுணர்வு என்னும் நச்சுத்தன்மையால் மயக்குகிறது; அங்கே கடவுளும் இல்லை, அடுத்தவரும் இல்லை. இத்தகைய நிலையிலிருந்து மாற்றம் பெற்று இறைவனுக்கே முதலிடம் தரவேண்டும்; அவரிடம் மன்றாடுவதே நமது முதல் கடமையாகும். இறைவன் தமது சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் இறை ஒன்றிப்பின் முதல் ஊற்று திருவழிபாடு; அதுவே ஆன்மிக வாழ்வின் முதல் பள்ளி’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியவர்.
நற்செய்தி
அறிவிப்பில்லாத ஒரு கொண்டாட்டம் உண்மையானதல்ல; அதேபோல நற்கருணைக் கொண்டாட்டத்தில் உயிர்த்த ஆண்டவரைச் சந்திப்பதற்கு வழிவகுக்காத அறிவிப்பும் உண்மையானதல்ல என்னும் உண்மையை ஒவ்வொரு வழிபாட்டுக் கொண்டாட்டமும் உணர்த்துகிறது என்ற உண்மையை உரக்கக் கூறியவர்.
வழிபாடு
வெறும் விதிமுறைகளின் இயங்கு தளமாகவோ, கற்பனையான விதிமுறைகளின் படைப்பாற்றலாகவோ குறைத்து மதிப்பிடுவது அல்ல; ஒவ்வொரு கொண்டாட்டதிற்கும் தேவையான கொண்டாட்டத்திற்குரிய கலை தேவைப்படுகிறது. மறையுண்மைகளைத் திருமுழுக்குப் பெற்ற ஒரு நபரே அனுபவிக்க முடியும். ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கொண்டாடும் கலைக்கு எதிரானவைகளான இறுக்கமான கடுமை அல்லது எரிச்சலூட்டும் படைப்பாற்றல், ஆன்மிகமயமாக்கும் மாயவாதம் அல்லது நடைமுறைச் செயல்பாட்டுவாதம், அவசரமான சுறுசுறுப்பு அல்லது மிகைப்படுத்தப்பட்ட மந்தநிலை, அலட்சியமான கவனக்குறைவு அல்லது அதிகமான நுணுக்கம், பொங்கி வழியும் நட்பு அல்லது குருத்துவ இயலாமை என்பனக் கொண்டாடும் கலைக்கு எதிரானவைகள் எனக் குறிப்பிட்டு திருவழிபாட்டு மாற்றங்களை மையப்படுத்திய நிலையில் கவனம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ள மாற்றங்கள் ஆற்றல் பெறவும், அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாறுதல் பெறவும் இறைவேண்டலில் இணைவோம்.