இன்றைய சூழல்
•
இஸ்ரயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் போர்; இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர்.
•
இந்தியாவில் சனாதன ஒன்றிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியரை வெறுக்கின்றனர். கிறித்தவர்கள், சனநாயகவாதிகளைப் பகைவர்களாகப் பார்க்கின்றனர்.
•
சாதிமறுப்புத் திருமணம் செய்கிறவர்களை ஆதிக்கச் சாதி உறவினர்கள், பெற்றோரே கொலை செய்யும் அளவுக்குச் சாதிவெறி தலைவிரித்தாடுகிறது.
•
மாற்றுக்கருத்துகள், விமர்சனங்களை முன் வைப்போர் எதிரிகளாகவும் பகைவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். கவுரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்க்கி, தபோல்கர் போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர்.
•
ஜார்க்கண்ட் பழங்குடியினரின் நில உரிமைக்காகவும் வாழ்வாதார உரிமைக்காகவும் போராடிய அருள்பணி. ஸ்டேன் சாமியை அரசு - நீதிமன்றம்
- சிறைச்சாலை மூன்றும் இணைந்து அநியாயமாகக் கொன்றன. அவரோடு ஒன்றித்துப் போராடியவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்.
அன்றும் இன்றும்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் உலக உறவுப் பண்பாட்டுப் புரட்சியாளர் புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (குறள்
972), ‘எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி, அருள்நெறியில் நிற்பவர்களே அந்தணர்’
(குறள் 30) என்றார் வள்ளுவர் பெருந்தகை.
இந்தப்
பண்பாட்டுப் புரட்சியில் உலகிலுள்ள ‘அனைவரும் உடன் பிறந்தோரே’
(Fratelli tutti)
என்றார் தனது சுற்றுமடலில் (2020) திருத்தந்தை பிரான்சிஸ். மானுட ஒன்றிப்பின் மகத்தான அடையாளம் (icon) திருத்தந்தை பிரான்சிஸ். இவர் தாம் வாழ்ந்ததைக் கூறியவர், கூறியதை வாழ்ந்து காட்டிய அரிய முன்மாதிரி. இதனால்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலகின் பேசு பொருள் ஆனார்.
2019-இல் தெற்கு
சூடானில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நாட்டின் அதிபர் சர்விர்கிர், அதிருப்தித் தலைவர் ரியக் மக்சார் இவர்கள் இருவரது கால்களில் விழுந்து முத்தமிட்டு, போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட மானுட ஒன்றிப்பின் குறியீடு திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சிஸ்
(அசிசி) என்று யாருடைய பெயரைத் திருத்தந்தை தனது பெயராக எடுத்துக்கொண்டாரோ, அவரும் ஒரு மகத்தான சமய ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அது சிலுவைப் போர் நடந்து கொண்டிருந்த காலமும் சூழலும். 1220-இல் புனித பிரான்சிஸ் அசிசியார் துணிச்சலோடு எகிப்துக்குச் சென்று அந்நாட்டின் தலைவர் சுல்தான் மாலிக் - அல் கமில் என்பவரைச் சந்தித்தார். சமய நல்லிணக்க ஒன்றிப்பின் உறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்தினார். இவ்வாறு போருக்கு மத்தியிலும் அமைதியின் தூதராகச் செயல்பட்டார் புனித அசிசியார். இந்த வரலாற்று நிகழ்வின் 800-ஆம் ஆண்டு நினைவாக, 04.02.2019-இல் திருத்தந்தை பிரான்சிஸ் அபுதாபியில் வாழ்ந்த தலைமை இமாம் அகமத் - அல் - தாயெப் என்பவரைச் சந்தித்து உரையாடினார். ‘உலக அமைதிக்கான மானுட சகோதரத்துவமும் இணைந்து வாழ்தலும்’
(தோழமை ஒன்றிப்பு) என்ற ஆவணத்தில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டனர்.
அனைவரும் உடன்பிறந்தோர்
உலகச்
சகோதரத்துவ ஒன்றிப்பு என்பதே ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய சுற்றுமடலின் மையக் கருத்து. அடுத்தவர்களைச் சகமனிதர்களாக ஏற்க மதிக்காது (சமுதாயத்தின் எச்சங்களாகப் பார்க்கும் நிலை), தங்களது சுயநலச் சொகுசு வாழ்வுக்காக அவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் சூழலில், மானிடர் அனைவரும் சகோதர உறவு கொண்டவர்கள் என்ற புதிய, புரட்சிப் பார்வையை முன்வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இதன் அடித்தளமாக இறைமையைச் சுட்டுகிறார்.
ஒரு
கையில் ஐந்து விரல்கள் உள்ளன. விரல்களின் நுனியில் மேம்போக்காகப் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், மிகச் சிலர் நுனி விரல்களின் அடி ஆழத்திற்குச் செல்கின்றனர். அங்குச் சமவெளிபோல் இருக்கும் அகலமான உள்ளங்கையில் ஒருங்கிணைகின்றனர். மேல் மட்டத்தில் தனித்தீவாக நின்றவர்களை இப்போது ஒருங்கிணைப்பது, அவர்களைத் தாங்கி நிற்கும் உள்ளங்கை இறைவன் ஆகும். இதை நன்குணர்ந்து அனுபவித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். தனது
சுற்றுமடல்களில் சகோதரத்திற்கும் சமூக நட்புக்கும் சவாலான அடைபட்ட உலகையும் இருண்ட மேகங்களையும் அடையாளப்படுத்துகிறார்.
பெந்தகோஸ்து
நிகழ்வின்போது ஆவியாரைப் பெற்ற இளைஞர்கள் காட்சிகள் கண்டனர்; முதியோர்கள் கனவுகள் கண்டனர்; புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைத்தனர் (திப 2:16-17). நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் இலட்சிய உலகை, சகோதர-சகோதரிகள் ஒன்றித்து வாழும் உன்னத உலகைக் கனவு காணத் திருத்தந்தை அழைத்தார். நாம் அனைவரும் பூமித்தாயின் புதல்வர்கள்; இயற்கையின் சிகரப் படைப்புகள்; கண்ணால் காணும் கடவுளின் சாயல்கள் என்றார். இயற்கையில் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தும் ஒன்றை மற்றொன்று சார்ந்தும் இருப்பதுபோல மானிடரும் வாழ அழைத்தார். உலகின் சகோதரத்துவச் சேவையில் சமயங்கள் ஒன்றிணைய வேண்டும். சமயங்கள் மானிடரின் இறுதிப் பொருளை முன்வைக்கின்றன. இதை நடைமுறைப்படுத்த ஏதுவான புதிய சமுதாய - அரசியல் - பொருளாதார - பண்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
இளையோர் எழுச்சியும்
நான்கு
முனைப்
போராட்டமும்
‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற
திருத்தூது ஊக்க உரையில் அநீத, அசமத்துவ, ஏற்றத்தாழ்வு உலகில் ஒன்றிப்பை உருவாக்க இளையோர் கலகம் செய்யவும் கிளர்ச்சியை உருவாக்கவும் அழைக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் கனவு காணும் (இதுவே இயேசுவின் இறையாட்சிக் கனவும் ஆகும்) உடன் பிறந்தவர்களாக அனைவரும் அன்பிலும் நீதியிலும் வாழ உறுதி ஏற்பின், நான்கு முனைப் போராட்டங்களை அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
1. நமது
மனத்திலும் இதயத்திலும் கட்டியிருக்கும் பிரிவினைச் சுவர்களை இடிக்கவும், ‘நான்’,
‘எனது’ என்ற
அகந்தைச் சிறையை உடைக்கவும், தன்னையும் பிறரையும் அழிக்கும் சுயகாதல் கோட்டையில் இருந்து வெளியேறி, பிறரை, குறிப்பாகச் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பொதுநன்மையை நோக்கி நகரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
2. ஏழைகளின்
உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள், முதலாளி வர்க்கத்தினர் (முதலாளித்துவத்தைக் கடுமையாக விமர்சித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ்) முதல் உலக நாடுகளின் பொருளாதாரச்
சுரண்டல் அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில், இதனால் பாதிக்கப்படும் அடித்தள மக்களை, அமைப்புகளை, முற்போக்கு இயக்கங்களை ஒன்றிணைக்க வேண்டும்.
3. பிறப்பின்
அடிப்படையில் உயர்வு-தாழ்வுக் கற்பிக்கும் சனாதன அதர்மத்திற்கு எதிராகச் சவால்விடும் சமூக நீதிப் போராட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும்.
4. தந்தை
வழி ஆணாதிக்கத்தைத் தகர்த்து, ஆண் - பெண் உறவுகளில் சரிநிகர் சமத்துவம் (ஆண் - பெண் வேறுபாடுகள் உண்டு; ஆனால், ஏற்றத்தாழ்வு கூடாது) என்பதைத் தூக்கி நிறுத்த பெண் விடுதலைப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்.
அனைத்துப்
போராட்டங்களின் அடித்தளம், கைம்மாறு கருதாத இயேசு காட்டிய அன்பாக அமைய வேண்டும். இப்போராட்டங்களின் இலக்கு நீதி - சமத்துவ சகோதரச் சமுதாயம் படைப்பதாகும். அன்பும் நீதியும்தான் திருவிவிலியக் கடவுளின் இரு பெரும் பண்புகள் (மத் 23:23; லூக் 11:42). மற்ற விழுமியங்களான இரக்கம், பரிவு, மன்னிப்பு, நேர்மை, உண்மை, நன்மை போன்றவை அன்பு- நீதி என்ற விழுமியங்களின் நீட்சி-விரிவாக்கமாகும்.
நிறைவாக...
அன்று
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்க யாவே கடவுள் மோசே வழியாக அம்மக்களோடு இணைந்து போராடினார் (விப 14:14,23-24). இன்று மகன் இயேசு புதிய சகோதரத்துவ உலகை உருவாக்க இம்மானுவேலராக நம்மோடு உடனிருந்து ஆவியாரின் ஆற்றலால் நம்மை உறுதிப்படுத்துகிறார் (மத் 28:20; மாற் 16:20).
சமயங்கள்,
கோட்பாடுகள், சட்டத்திட்டங்கள், சமூகப் பழக்கவழக்கங்களைக் கடந்து மனிதர்களைக் குறிப்பாக சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் உள்ளவர்களை அன்பு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் மானுட ஒன்றிப்பின் விடிவெள்ளியாக ஒளிர்ந்து இன்று நமக்கு வழிகாட்டுகின்றார்.