news-details
ஆன்மிகம்
இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடே குருத்துவம்

குருத்துவம்என்ற வார்த்தையை எழுதும்போதே என்னைப் புரட்டிப் போடுவதை உணர்கிறேன். என் மூளை, மூட்டு, நரம்புகளையெல்லாம் ஆட்டிப் படைத்து அசைத்துப் போடுவதை உணர்கிறேன். ஏனென்றால், குருத்துவம் இயேசுவின் இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடு என்பதை அவரின் பணி வாழ்வின் வீரியத்திலிருந்தும் விருட்சத்திலிருந்தும் உணர முடிகிறது. அவரின் இறையாட்சிக் கனவின் இன்ப ஊற்றிலிருந்து உன்னதமாக வெளிப்பட்ட உயர்ந்த நிலை என்பதை என்னால் அறிய முடிகிறது.

இயேசு தமக்குப்பின் இறையாட்சிப் பணிக்காகப் பணியாளர்களைத் தெரிந்தெடுத்து, அர்ச்சித்து அனுப்புவதே குருத்துவம். இயேசுவின் குருத்துவம் மனிதப் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும் வேறுபட்டதும் ஆகும். புனித வியாழனன்று அழியா முத்திரையாகச் சிறப்பான சித்திரமாகக் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

குருத்துவம் ஆண்டவர் இயேசுவால் கொடுக்கப்பட்ட தனிப்பெரும் கொடை! தனித்தன்மை வாய்ந்த தன்னிகரற்ற வாழ்வு! இத்தரணியையே தலைசாய்க்க வைக்கும் பணி! அர்ப்பணம் கொண்ட தலைசிறந்தப் பரிசு! இது திரு அவைக்கு இறைவன் கொடுத்த ஒப்புயர்வற்ற மாபெரும் கொடை!

திரு அவையிலிருந்து குருத்துவத்தைப் பிரிக்க முடியாத அளவுக்குப் பிணைப்பையும் இணைப்பையும் இறைவன் பகுத்துத் தொகுத்து வைத்துள்ளார். அதுதான் இறைவன் வகுத்து வைத்தத் திட்டமும் தீர்மானமும் ஆகும். எனவேதான் திரு அவையிலிருந்து குருத்துவத்தைத் தனித்துப் பிரித்துப் பார்க்கவோ பகுக்கவோ இயலாது. குருவானவர் இல்லையேல் நற்கருணை இல்லை. நற்கருணை இல்லையேல் இயேசு இல்லை. இயேசு இல்லையேல் திரு அவை இல்லை. இம்மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. தாம் பாடுபடுவதற்கு முந்தைய நாள் புனித வியாழன் அன்று இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதோடல்லாமல் தமது இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடாகக் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

குருத்துவ வாழ்வு என்பது மகிழ்ச்சிஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். நற்கருணையாக வாழவும், நற்கருணையை நாளும் இறைமக்களுக்கு வழங்கவும் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசுவின் குருத்துவக் கனவு யூத சமயக் குருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மாற்றுச்சிந்தையில் உருவானது. அவ்வேளையில் குருத்துவம் மக்களிடமிருந்து அகன்று அந்நியப்பட்டிருந்தது. ஆணவமும் ஆதிக்கமும் தலைதூக்கி நின்றது. வெறும் வெற்றுச் சடங்குகளுக்கும் சட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவத்தையும் முதன்மை இடத்தையும் கொடுத்து, ஏழைகளை முன்னேறவிடாமல், முன்னுக்குவரவிடாமல் முடக்கிப் போட்டக் குருத்துவத்தைக் கேள்வி கேட்கிறார் இயேசு. ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றாமல் மக்களை ஆடு மாடுகளாகவும் அடிமைகளாகவும் நுகர்வோர்களாகவும் மட்டுமே பார்த்தனர் யூத சமயக் குருக்கள்.

இப்பார்வையையும் பணியையும் வேரறுத்து, குரு என்பவர் மனிதர்களை இறைவனோடு இணைக்கும் பாலம் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார் இயேசு. அதையும்விட மேலாகக் குருவானவர் என்பவர் பணி ஏற்பவர் அல்லர்; பணிவிடை புரிபவர். பாதங்களைப் பணிந்து, குனிந்து, கழுவித் துடைத்து முத்தமிடுபவர் என்பதைச் சொல்லால் அல்ல, செயலால் காட்டுகிறார். “இயேசு பந்தியிலிருந்து எழுந்து தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார் (யோவா 13:4-5). பின்னர் அவர் சீடர்களிடம்நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவான் 13:13-14) எனக் குறிப்பிடுகிறார்.

இயேசு தம்மை ஒரு குருவென்று அழைக்க விரும்பவில்லை. அவர் தம்மை ஓர் இறைவாக்கினர் என்றே அடையாளம் காட்டினார். ஆனால், அவரது வாழ்வும் பணியும் அவரை நல்லதொரு குருவாக அடையாளப்படுத்தின. இயேசு தேவையில் இருந்தவர்களைத் தேடிச்சென்று பேணிக்காத்தார். அவர்களின் வாழ்வை வளமாக்கி, அவர்களோடு வாழ்வைக் கொண்டாடி மகிழ்ந்தார். கடவுள் தூரத்தில் இல்லை, துன்பப்படும் மக்களின் மத்தியில்தான் உள்ளார் என்பதை உடனிருந்து உணர வைத்தார். அவரது குருத்துவப் பணியின் உச்சமாகவும் துச்சமாகவும் உயிராகவும் உயரமாகவும் விளங்கியது அவரது சிலுவைச் சாவு. குரு என்பவர் தனக்காக வாழ்பவர் அல்லர்; தன்னலத்தோடு வாழ்பவரும் அல்லர்; சுயநலத்தில் சுருங்கி வாழ்பவரும் அல்லர்; அவர் பிறருக்காக, பிறர் வாழ்வுக்காகத் தன்னை முழுமையாகக் கொடுப்பதே குருத்துவத்தின் அர்ப்பணம் என்பதை அவருடைய இறப்பு நமக்கு வெளிப்படுத்துகிறது. குருத்துவம் பிழைப்புக்காக அல்ல, பிறரைப் பிழைக்க வைக்க என்பதை உணர்வோம். குருத்துவ வாழ்வை மதிப்போம்.

கடவுளின் அருளும் இரக்கமும் இல்லாமல் யாரும் குருத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, நாம் குருக்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்களின் வாழ்வும் பணியும் இயேசுவின் வாழ்வும் பணியுமாக அமைய வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் அவர்களைத் திருப்பலியிலும், நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப இறைவேண்டல்களிலும் ஒப்புக்கொடுப்போம். “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால், தமது அறுவடைக்கு வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் (லூக் 10:2) என்று மொழிந்த ஆண்டவரிடம் மன்றாடுவோம். “என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள் (எரே 3:15) என்று கூறிய கடவுள் தொடர்ந்து நல்ல அருள்பணியாளர்களைத் தர வேண்டுவோம்.

அருள்பணியாளர்களே! அருளடையாளங்களை நிறைவேற்றுபவர்களே! அயராது அன்பு மக்களுக்காய்ப் பணியாற்றி அர்ப்பணிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அருள்பணியாளர்கள் தின நல்வாழ்த்துகள்!