இதயத்தை ஈரமாக்கவும் இறைவனோடு ஒப்புரவாகவும் மனமாற்றம் பெறவும் தகுந்த காலம் இதுவே! ‘ஒப்புரவு’ என்ற சொல் உலக நடை, உலக ஒழுக்கம், சமம், வேற்றுமை, வேளாண்மை என்ற பல பொருள்களைக் கூறும். ஒப்புரவறிதல் என்பது உலக நடைமுறையினை அறிந்து செயல்படுவதைக் குறிக்கும். அச்சொல்லைச் சில ஆண்டுகளுக்கு முன் நம்மவர் ‘பாவசங்கீர்த்தனம்’ என்று கூறினர். ‘பாவம்’ என்பது தீமையிலும் தீயக்குற்றம். அது பாவம், பாபம், பாவனை, பிறப்பு என நான்குவகைப் பொருள்களில் விரிவாக்கம் பெறும். இந்த நான்குமே அக்கிரமம் முதலான பல பொருள்களில் வரும். ‘சங்கீர்த்தனம்’ என்பது புகழ்ந்து பாடுகை, சொல்லுகை, பாவ அறிக்கை என்ற அருஞ்சொற்களைத் தரும். ‘அருள்’ என்பதற்குக் கணக்கில் எண்ணிலாப் பொருள்கள் உள்ளன. குணமளிக்கும் (ஒப்புரவு) அருளடையாளம் என்பது, இறைமகன் இயேசு தம் திருத்தூதர்களுக்கு வழங்கியது. “அவர் அவர்கள் மேல் ஊதி, ‘தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்; எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார் (யோவா 20:22-23). ‘மனந்திரும்புதல்’ என்ற சொல்லின் பொருளும் அதுவே.
திருமுழுக்குப்
பெற்ற பின்பு, நாம் செய்த பாவத் தீமைகளுக்கு மன்னிப்பு அருளப்படுகிறது. மனித மனம் தன் துன்ப துயர், வருத்தம், கலக்கம், இடர்கள் யாவற்றையும் களைந்திட, தக்காரிடம் கூறி ஆற்றுப்படுத்திக்கொள்வதும் இயல்பு. ‘ஆற்றுதல்’
என்பது அலந்தவருக்கு உதவுதல் (கலித்தொகை); ‘துன்பம்’ கலக்கமுற்றவருக்கு உதவுதல் ஆகும். அதுபோல, இறைவனிடம் நம் துயர் (பாவம்) களைந்திட மனந்திரும்பி வரும் மனிதர் மனம் மாறுதல் பெறுகிறார். இறைவனுக்குப் பதிலாளியாக அருள்பணியாளர் இருந்து ஆற்றுப்படுத்துகிறார். பாவத்தின் கனாகனம் கருதி பாவப்பரிகாரம் (தண்டனை), பாவ அறிக்கை இடுபவருக்குக் கட்டளையிடுகிறார். அத்தகுதியை அருள்பணியாளர்களுக்கே திரு அவை வழங்கியுள்ளது. பாவியின் மனம் (உள்ளம்) வெளுத்து தூய்மையாகி விடுகிறது. அருள் வாழ்வைப் பெற்று இறைவனோடு ஒப்புரவாகி விடுகிறார்; திரு அவையோடு ஒப்புரவாகி விடுகிறார்; மன அமைதி, நிம்மதி,
ஞான அருள்வாழ்வில் ஆறுதல் அடைகின்றார். இதனால் ஏற்படும் ஞான பலன் தண்டனையிலிருந்து விடுதலையும் வேதனையுறும் மக்களுக்கு மன்னிப்புப் பெறவும் உதவுகிறது. பாவ மன்னிப்புப் பெற சஞ்சலம், ஐயம், சலனம் மூன்றையும் வெறுத்து, பொய்க்கூறல், புறங்கூறல், முகஸ்துதி, தற்புகழ்ச்சி ஆகிய தீயன நீக்கி வாழ்தல் வேண்டும். அவ்வாறே, ‘ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சமில்லை; அவனின்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை’ என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
இந்தத்
தவக்காலத்தில் நாம் செய்யும் செபம், தானம், நோன்பு, பக்தி முயற்சிகள் நம் இறுதி நாளில் விண்ணுலக வாழ்விற்குச் செல்ல நமக்கு உதவும் கடவுச்சீட்டு. பயனின்றி இருப்பதன் மூலமாகவும், வீணடிக்கும் நேரங்களின் மூலமாகவும், வெட்டியாய், சோம்பேறியாய் சும்மா இருப்பதன் மூலமாகவும், பாவங்கள் முளைவிட்டுத் துளிர்க்கின்றன என்பதைச் சிந்திப்போம். மேலும், திரு அவை ஒழுங்குமுறை இரண்டில் ‘தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க’
வலியுறுத்துகிறது.
சேசுநாதர் சதகம்:
ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவம் பற்றி, ‘சேசுநாதர் சதகம்’ என்ற நூலில் சுட்டிக்காட்டுவதைப் படித்து உய்த்துணர்வோமா? தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகில் உள்ள வில்வராயன் பட்டியில் 1848, சித்திரை மாதம் 27-ஆம் நாள் வியாழன் அன்று பிறந்தவர் வித்துவான் ந. சவரிமுத்து என்பவர்.
இராயநல்லூரில் வாழ்ந்தவரும் அன்னாரின் நண்பருமான இறைநேசச் செல்வர், சத்தியநாத தென்கொண்டாரின் வேண்டுகோளுக்கு இணங்க, மணலூர் ஜெயங்கொண்ட மாதா பெயரில் அவர் பதிகம் பாடினார். இந்த ஓலைச்சுவடி நூலை 8.12.1977-இல் தஞ்சை புலவர் தாமஸ் நூலாக்கி தஞ்சை ஒளி நிலையம் மூலம் வெளியிட்டுள்ளார். கோவையில் பணி செய்த அருள்பணி. சி.சா. மரிய
ஆரோக்கியநாதர் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்.
இந்த
நூல் திருத்தந்தையின் புகழ், திரு அவையின் பெருமை, ஆயர்கள், குருக்கள் பெருமை, திரு அவை ஒழுங்குமுறை (6), பத்து கட்டளைகள் பற்றி 14 சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல்கள் நூறும் (சதகம் = நூறு, தசாங்கம்
= பத்து) பாடி எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலின் இறுதி வரி ‘சேசுநாதக் கடவுளே’ என்று முடிகிறது.
யூதேயா
நாட்டை மனத்தில் வைத்து, தமிழ் நாட்டை வருணிப்பது படிக்கச் சுவையூட்டுகிறது. நன்று எது? தீது எது? மனித நீதிகள், இளைஞர்கள், முதியோர், குடும்ப உறவுகள், சுற்றம், மனைவியர், பரத்தையர் நாடும் குடும்பத் தலைவர் எனப் பல பாடல்களில் உவமைகள்
வழியாக எடுத்துக்கூறி அறிவுறுத்திக் கூறுவது சிறப்பும் இன்பமும் பயப்பதாகும். மனித அறம், சமூக அறம், குடும்ப அறம், பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் போன்ற அரிய கருத்துகளை எடுத்துக் கூறும் பாங்கு படித்து இன்புற வேண்டியது. ‘மனம் வெளுக்க வழி இல்லையே?’ என அங்கலாய்க்கும் பாரதியின்
கருத்துக்கு இப்பாடல் தரும் பதில். இந்நூலின் 98-வது பாடல் தரும் கருத்துகள், படித்துச் சுவைக்க வேண்டிய தகுந்த காலம் இதுவே.
“சேற்று நீர் தேத்திடும் கொட்டையாலே
மண்டி தெளிந்த
நன்னீராகும்.
செய்ய மாத்திரையொடு மருந்துக ளூடம்பினோய்
சேரினும் சொஸ்தமாகும்;
கோத்திடும் அழுக்காடை யுவர் மண்ணினால்
சலவை கொள்ள வால் வெள்ளையாகும்;
குவலயத்தில் பசும்பொன் னுலை யிடுவதால்
கொண்ட மாசற்று மின்னும்;
ஊற்றதிக மான கிணறோடு, குளமும்
தூய்மையுறும் நீரிறைத்து விடலால்,
உற்றது சொல்லினா லிற்றது பொருந்துமென
நூல்கோ ருரைக்கு மொழிப் போல,
சீர்த்த
பாவ சங்கீர்த்தனம் புரியலாகும் என
தேவனே!
சத்திய நாதன்,
சிந்தையிலு கந்தநிதி யந்தனை மகிழ்ந்து உதவ
சேசுநாதக் கடவுளே!” (சேசுநாதர்
சதகம் 98)
அதாவது,
“கலங்கிய மண்டித் தண்ணீரை (காழ்) தேற்றாங்கொட்டை விதை கொண்டு மண்குடத்தில் உரசினால் அது நல்ல நீராகும்... உண்மை சொல்லினேன் உற்றது உலகோர்க்கு உவமை, உரைமொழி
வாயிலாக; ஆகவே, நீங்கள் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து இறையருள் பெற்று வளர சத்தியநாதனைச் சிந்தையில் இருத்தி மகிழ்ந்திடுக சேசுநாதர் கடவுளே” என்று கூறுகிறார்.
ஒப்புரவு
அருளடையாளம் மன்னிப்பு வழங்கவே உள்ளது. இவ்வருளடையாளத்தை வழங்கும்போது, பாவத்திற்குப் பரிகாரம் வழங்க முடியவில்லையே என்று நினைத்தாலும், மனம் வருந்தும் ஒரு பாவியை மேலும் மேலும் வருத்தாமல் இருக்குமாறு அருள்பணியாளர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொள்கிறார்.
“ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கும்போது திறந்த மனத்தோடும், திறந்த இதயத்தோடும் இறை மன்னிப்பை வழங்குவதில் ஒருபோதும் சோர்வடையாத கருவிகளாகவும், மனம் வருந்தும் பாவியின் துன்பங்களைப் புரிந்து
கொள்பவராகவும் அருள்பணியாளர் இருப்பதை நான் காண விரும்புகிறேன்” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
மக்களிடம்
தவறான புரிதல் மிக உண்டு. மனம் வருந்தும் பாவி, வருந்தி குருவிடம் கூறித் தண்டனை பெற்றுவிடின் அத்துடன் முடிவுற்றது என நினைக்கின்றனர். மீண்டும் அதே
பாவத்தைச் செய்து, மீண்டும் கூறி வருவதும் மன்னிப்புப் பெறுவதும் தொடர் செயலாகிறது. அதனால்தான் குடும்ப உறவு, இல்லறச் சிக்கல்கள், தவறான பாலியல்கள், பிரிவினைகள் மிக எழுகின்றன. இதுபற்றிப் பொதுநிலையினருக்குச் சரியான புரிதல்கள் விளக்கப்பட வேண்டிய காலமும் இதுவே.
தொடர்ந்து
பாவம் செய்திடின் முதல் சாவு உடல் அழிவு; இரண்டாம் சாவு ஆன்மா அழிவு! “உம்
உடல் கடவுளின் ஆலயம்”
(1கொரி 6:19).