இந்திய சனநாயகத்தில் சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கை நீதி மன்றங்கள். அங்கு நீதிபதிகள், எவ்வளவு மழை பெய்தாலும், குளத்தில் எவ்வளவு நீர் இருந்தாலும், அதில் மிதக்கும் தாமரையின் இலையில் விழும் தண்ணீர்போல், எதிலும் ஒட்டாமல் இருக்க வேண்டும். ஒட்டுறவு இல்லாது வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா போன்றோரை அடையாளம் கண்டதே பேரழகு! நீதியரசர் குன்ஹா அவர்கள் இறை வார்த்தையின்படி உலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் வாழ்ந்து காட்டியவர்.
இன்று
இக்கட்டுரையைத் தட்டச்சு செய்யும்போது கேட்கிற தொலைக்காட்சி செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புதுதில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹோலி பண்டிகை கொண்டாட வெளியூர் சென்று விடுகிறார். எதிர்பாராத விதமாக அவரது வீடு தீப்பற்றி எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாகப் பணம் எரிகிறது. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அக்காட்சி வீடியோவில், தீயணைப்பு வீரர் ‘காந்தி எரிகிறார்’
என்கிறார். தீயணைப்புத் துறையினர்
வழங்கிய பட்டியலில் எரியாத நிலையில் 26 கோடி ரூபாய் இருந்ததாக அறிக்கை தரப்படுகிறது. அது மறுநாள் தீயணைப்புத் துறை தலைவரால் மறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நீதிபதி விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக மாற அவரது வயது மூப்பு 9 என்பதிலிருந்து 2-ஆக மாற்றவே, அவரது
பணிமாற்றம் புதுதில்லிக்கு நடந்தது எனவும் கூறப்படுகிறது. அவருக்கான பெரிய தண்டனைகள் எதுவும் இதுவரை இல்லை.
இதே
அலகாபாத் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பெங்களூரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் என வர்ணிக்கிறார். உச்ச
நீதிமன்றம் அவரைக் குட்டுகிறது. பல உயர் நீதிமன்ற
நீதிபதிகள் திறந்த நீதிமன்றக் கூடத்தில் சொந்தக் கருத்து என்ற பெயரில், வழக்கிற்குச் சம்பந்தப்படாத செய்திகளைப் பேசுவதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. பல வழக்குகளில், பட்டியலிடப்படாமல்
அன்றே வழக்கை எடுத்துக்கொள்ளுதல், ‘சுமோட்டா’
என்ற பெயரில் தானே வலிந்து வழக்குகளை எடுப்பது, ‘பிரேயர்’ எனப்படும் கோரிக்கை இல்லாமல் தீர்ப்பு வழங்குவது, திரைப்படங்கள், திரைப்பாடல்களை மேற்கோள்காட்டுவது, புராண இதிகாசங்களைத் துணைக்கு அழைப்பது என நீதி பரிபாலன
முறைக்கு உட்படாத ஒவ்வாத செயல்களைச் செய்கிறார்கள்.
இதே
அலகாபாத் நீதிமன்றம் சமீப நாள்களில் வழங்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பெண்களின் ஓர் உடல் பகுதி தீண்டல் குற்றமல்ல எனத்¹ தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து வழக்கைத் தானாக முன்வந்து எடுத்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை ‘திறன் குறைபாடு உள்ளவர், மனிதாபிமானம் அற்றவர்’ எனக் கூறிவிட்டு, ‘இத்தீர்ப்பு அதிர்ச்சி தந்தது’ என்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும்
இதுபோன்ற நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. ‘மதமாற்றம்’
எனச் சோடிக்கப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி ஒருவரிடம் போகிறது. அந்த வழக்கில் வாதிடும் வழக்குரைஞரை மையப்படுத்தி, அந்த வழக்கு நடைபெற்ற ஊர், பெயர் பற்றி நீதிமன்றத்தில் நீதிபதி
ஆராய்ச்சி நடத்துகிறார்.
அத்துடன் கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம் உள்பட்ட, வலதுசாரிக் கருத்துகளைத் தன் தீர்ப்பில் பதிவிடுகிறார். இருப்பினும், இவ்வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை எந்த மதமாற்றமும் நடக்கவில்லை எனத் தற்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது,
மேலும்,
எச். இராஜாவின் தந்தை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், காஞ்சி விஜேயந்திரர் தமிழ்த்தாய் வணக்கத்திற்கு எழுந்து நிற்காததற்கு விலாவாரியாக வியாக்கியானம் செய்து, தியானத்தில் இருப்பது தவறல்ல என்று நியாயப்படுத்துவது, முட்டுக்கொடுப்பது நீதிமன்றப் பாரம்பரியம் மீறியதாகும். விஜயேந்திரரும் சட்டத்திற்கு உட்பட்டவர்தான் எனத் தமிழ்நாடு அரசு யாராக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டும் எனச் சட்டம் போட்டுவிட்டது. செல்வி ஜெயலலிதா ஜெயேந்திரர் வழக்கில் காட்டிய துணிவுதான் அவரை ‘இரும்புப் பெண்மணி’ எனக் கூறவைத்தது என்பதையும் நாம் வலுவாகச் சொல்ல வேண்டும்.
நீதிமன்றத்
தீர்ப்புகளுக்கு உள்ளர்த்தம் கற்பிக்கக்கூடாது, தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் தேடக் கூடாது, தனிமனித விமர்சனங்கள் கூடாது, அது ஏற்றுக்கொள்ளக்கூடிய மரபுதான். ஒரே நீதிபதி அளித்த தொடர் தீர்ப்புகள் ஒரு பக்கம் சார்ந்தவை என்ற பின் குரல்கள் எழுப்பக்கூடாதா? மூட நம்பிக்கை குறித்து கவலைகொள்ளாமல், சட்ட விதிகளைப் பாராமல், பழைய உச்ச, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மதியாமல், மதநம்பிக்கை என்ற பெயரில் எல்லாவற்றிலும் தனி நீதிபதியே முடிவெடுத்தால்,
மக்கள் எங்கே போவது?
ஒரு
நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். அவர் “கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா? மசூதிகள் மற்றும் தேவாலயங்கள்மீது அரசு அதே கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டாமா? அவ்வாறு வாதிடுவதில் நியாயம் இல்லையா?” என்று கேட்கிறார். சில சமூக, மதநல்லிணக்க விரோதிகள், வழக்கு நீதிமன்றம் போகட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்ற ஏகாந்த மனநிலைக்கு வந்துவிட்டனர். இந்த மனநிலை சட்டத்தின் ஆட்சியின் முன் சாபம் அல்லவோ? ஒரு சமயச் சார்பற்ற நாட்டில், இவ்வாறான நீதி பரிபாலனையை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்?
ஓய்வுபெறும்
நாளில் நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் கூறுகிறார், “என் வாழ்வின் கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறது.” நான் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்புகளை எவ்வாறு விமர்சிப்பது? மேலும், உச்ச நீதிமன்ற பார்கவுன்சில் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல், “நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன், தாங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றும், அங்கேயே திரும்பச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறார்கள்” என்ற
உண்மையைப் பொதுவெளியில் போட்டு உடைக்கிறார்.
விசுவ
இந்து பரிஷத் அமைப்பின் சட்டப்பிரிவு 1) காசி,
மதுராவில் பள்ளி வாசல்கள் இருக்கும் இடத்தில் இந்துக் கோவில்கள் கட்டுவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகள், 2) வக்ஃப்
சட்டத் திருத்தம், 3) மதமாற்றத் தடைச்சட்டம் என
மூன்று முக்கிய
மதவாத பிரச்சினைகளை விவாதிக்கிறது. மத்திய சட்ட அமைச்சர் இதில் கலந்துகொள்கிறார். இக்கூட்டத்தில் காவி சால்வை அணிந்து, 30 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். இதைத்தான் தந்தை பெரியார் அன்றே கூறினார்... “நாம் போராடி சட்டங்கள் கொண்டு வரும் நாளில், ஒரு சாரார் நீதிமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர்”. ஆம்,
நீதித்துறை சார்ந்த ஒரு புள்ளி விவரம் அதை உறுதிப்படுத்துகிறது.
உயர்
நீதிமன்றங்களில் 650 நீதிபதிகள். அதில் உயர் சாதியினர் 75.69% 492 பேர், ஓ.பி.சி.
11.7% 76 பேர், எஸ்.சி. பிரிவினர் 3.54%
23 பேர், எஸ்.டி. பிரிவினர் 1.54% 10 பேர். இதைத்தான்
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் காட்டமாகப் பேசுகிறார்: “பார்ப்பனியத்தின் அதிகார மையங்களைத் தகர்க்காமல், சமூக நீதியைப் பெற முடியாது.” சமூகத்தின் வெறும் 3% மக்கள் எப்படி அனைத்து அரசு உயர் பணிகளிலும் பெரும்பான்மை பெற்றார்கள்? என்று கேட்கிறார்.
இங்கேதான்
நம் சமூக நீதியின் குரல் ஒலிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 124/217 மற்றும் 224-இன்படி, நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. இச்சட்டம் திருத்தப்பட்டு, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறை
முன்னெடுக்கப்பட வேண்டும்.
அக்காலத்தே ஆர்.எஸ்.எஸ். நீதிபதிகள் முடிவுக்கு வருவார்கள். வருங்காலத்தில் தேசத்தில் சமூக நீதிக்கு உள்பட்டே நீதி
பரிபாலனம் வலுப்பெறும்.
அதுவே சிறந்த சனநாயகம்.