எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் யூபிலி 2025 -ஆம் ஆண்டில் பயணிக்கும் நம் ஒவ்வொருவருடைய வாழ்வும் மாற்றம்பெற, கடவுள் நல்கும் கருணையின் காலம் இந்தத் தவக்காலம். ஆகவேதான், நமது வாழ்வு எதிர்நோக்குடன்கூடிய ஒரு பயணம் என்பதையும், அதன் இலக்கு கடவுள் விரும்பும் நமது வாழ்வு மாற்றத்தில் உள்ளடங்கியுள்ளது என்பதையும் நம் திருத்தந்தை இந்த ஆண்டுக்கான தன் தவக்காலச் செய்தியில் குறிப்பிடுகிறார்.
யூபிலியின்
தொடக்கமே மனமாற்றத்திற்கான பாவப்பரிகாரச் செயலுடன்தான் நிகழ்ந்தது என்ற திருவிவிலிய வரலாற்றை நாம் மறந்துவிட இயலாது. யூபிலியின் தொடக்கம் மட்டுமல்ல, யூபிலியின் இலக்கும் வாழ்வு மாற்றத்திற்கான பயணமே! எதிர்நோக்கின் திருப்பயணத்தை மேற்கொள்ளும் நாம் உண்மையான, நிலையான, நிறைவான வாயிலான கிறிஸ்து வழியாக இந்தத் தவக்காலத்தில் நுழைந்து, உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற நம் திருப்பயணம் தவக்காலப் பயணமாய் தொடரட்டும் எனவும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
உயிர்ப்பை நோக்கிய
எதிர்நோக்கின்
பயணம்
தவக்காலம்
கிறிஸ்துவின் உயிர்ப்பினைக் கொண்டாட அழைப்பு விடுக்கும் காலம். கிறிஸ்துவின் பாடுகள், மரணம்... இதையும் கடந்து அவரது உயிர்ப்பே அவரது நிறைவாழ்வுப் பயணத்தின் வெற்றி என்பதை உறுதியாய் நம்பும் நம்பிக்கையாளர்கள் நாம். ஆகவே, நம் எதிர்நோக்கின் திருப்பயணத்திற்கான இலக்காக, கிறிஸ்துவின் உயிர்ப்பையும் அதில் பங்கு பெறுவதையுமே நம் கண்முன் கொண்டு பயணிக்கிறோம். “ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்... சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. “சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” (1கொரி 15:53-56) எனும் புனித பவுலின் ஆர்ப்பரிப்பும் அழைப்பும் உயிர்ப்பு என்பது உண்மையான வெற்றி என்பதையும், நமது நம்பிக்கை வாழ்வின் இலக்கும் எதிர்நோக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வெற்றியில் பங்கு பெறுவதிலேயே நிறைவுபெறும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
முடங்கிப் போகாமல்,
ஒதுங்கி
நிற்காமல்
பயணித்தல்
கிறித்தவ
வாழ்வு எனும் திருப்பயணத்தில் பல்வேறு தடைகள், தடுமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. ஆனால், அவை அனைத்தும் முன் மாதிரிகையாக நம் ஆண்டவர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ள வேண்டும். பணம், பொருள், செல்வம், களிப்பு, ஆதாயம், ஆணவம், அடக்குமுறை எனும் எதிர்மறைச் சக்திகளால் நாம் நம் பயணத்தை நிறுத்திக் கொள்ளக்கூடாது. எதிர்சக்திகளின் வலிமையால், ஆதிக்கத்தால் அழுத்தப்படும்போது முடங்கிப்போய்விடக்கூடாது. நமது பயணத்தை இன்னமும் மனவுறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் நற்செய்தி விழுமிய வேட்கையுடனும் தொடர வேண்டும். எனவே, நம் கிறித்தவ வாழ்வு என்பது, கிறிஸ்துவின் இறையாட்சிப் பயணத்தில், நாம் செய்யும் தொடர்பயணம் என்பதை நாம் மறந்துவிட கூடாது.
பிறர்
நலன் தேடி, பிறரின் விடுதலையை முன்னிறுத்தி ஏழை, எளிய, பாமர மக்களின் பாகுபாடற்ற சமூக விடுதலைக்காய் இயேசு போராடியபோது, அதில் எழுந்த எதிர்ப்புகள், தடைகள் அனைத்தையும் நம்பிக்கையை ஒருபோதும் இழக்காமல் அவர் பயணித்து நமக்கு நிறைவாழ்வைத் தம் உணர்வின் மூலம் பெற்றுத்தந்த அதே பயணத்திற்கு நமக்கு அழைப்பு விடுக்கும் பயணமே உயிர்ப்பினை நோக்கிய நம் தவக்காலத் திருப்பயணம்.
எதிர்நோக்கின்
திருப்பயணம்
ஒரு
சமூகப்
பயணம்
உயிர்ப்பு
எனும் வெற்றியை நோக்கி, நிறைவை நோக்கிப் பயணித்த இயேசு, இறையாட்சியில் பலரை இணைத்துக்கொண்டு பயணித்தார். இயேசுவின் இறையாட்சிப் பயணம் ஒரு சமூகப் பயணம். தனித்து விடப்பட்ட சூழ்நிலையிலும், தடுமாற்றங்கள் தடங்கல்களாக, தடைக்கற்களாக மாறிய நேரங்களிலும் உடனே தம் தந்தையைத் தேடி ஓடிய இயேசு, அதன் தொடர்ச்சியாக மக்களோடு, அதிலும் குறிப்பாக ஏழைகளோடு, எளியவர்களோடு, இல்லாதவர்களோடு, இழந்தவர்களோடு தம்மை இணைத்துக் கொண்டார். அவரின் சீடர்கள், திருத்தூதர்கள், நலம் விரும்பிகள் எனப் பலரோடு இணைந்தே இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் கலிலேயா தொடங்கி நிறைவுவரை காணப்பட்டது. அதே மனநிலையும் இணைப்பும் ஒற்றுமையும் உறவும் தம் சீடர் எல்லாரிடமும் காணப்பட வேண்டும் என்பதை இயேசு அழுத்தமாக எடுத்துக் கூறினார்: “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” (யோவா 17:21-23) எனும் இயேசுவின் இறைவேண்டலில், சீடர்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற தம் ஆவலை, ஆழமான எதிர்பார்ப்பை, அறிவுறுத்தலை இயேசு வெளிப்படுத்துகிறார்.
இயேசுவின்
பயணமும் பணியும் தெளிவான இலக்குடன் இலட்சிய உறுதியுடன் செய்யப்பட்டது. ஆதிக்க மனநிலையை, அதிகாரப் போக்கை, அடக்குமுறையான ஆணவத்தை விடுத்து தம் சீடர்களும் உருவாகவும், சமூகத்தில் பணியாற்றவும் இயேசு விரும்பினார். இணைந்து
பயணித்தலில், சீடர்கள் மத்தியில், இயேசு மிகப்பெரும் தடையாகப் பார்த்தது, ‘தங்களுள் பெரியவர் யார்?’ (மாற் 9:34) என்ற ஆதிக்கமும் ஆணவமும் கொண்ட மன நிலையே! எனவேதான்
இயேசு அவர்களிடம் “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிடமும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” (மாற் 9:35) என்று அறிவுரை நல்கினார். இன்றைய திரு அவைக்கும் மிகக் குறிப்பாக அனைத்துப் பணியாளர்களுக்கும் இது பொருந்தும். ஆகவே, பதவி மோகம், ஆதிக்க மனநிலை, ‘நான் பெரியவன்’
என்ற அகந்தை, பிறரை அடக்கி ஆளும் உலகப் போக்குகளை விடுத்தால்தான் திரு அவை இன்று இணைந்து பயணிக்க இயலும்.
மேலும்,
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்” (மாற்
10: 43-44) என்று தம்மையே பணியாளராக முன்னிலைப்படுத்தி, சீடர்களை உருவாக்கியது இன்றைய திரு அவையின் இணைந்த பயணத்திற்கு, ஒன்றிப்பின் பயணத்திற்கு, உறவின் பயணத்திற்கு மிகவும் அவசியம்.
எதிர்நோக்குடன்
பயணித்தல்,
வாழ்வு
மாற்றத்தை
நோக்கியது
யூபிலி
2025-இன் மையப்பொருளாக நம் திருத்தந்தை முன்மொழிந்துள்ள அறைகூவலில் “எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது”
(உரோ 5:5) என்ற புனித பவுலின் வார்த்தைகளை நம் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் முன்மொழிந்துள்ளார். இந்த எதிர்நோக்கு கிறிஸ்துவின் நற்செய்திப் பணியிலும், மானிட விடுதலைப் பணியிலும், சமத்துவச் சமூகம் படைக்கும் பணியிலும் இயேசு தம் இலட்சியமாகக் கொண்டிருந்த எதிர்நோக்கு.
எத்தனை
இழப்புகள் ஏற்பட்டாலும், எதிர்நோக்கு எனும் இலட்சியப் பார்வையை இயேசு ஒருபோதும் இழக்கவில்லை. தன்னல மறுப்பு, பிறர்நலம் பேணல், பணியாளர் வாழ்வு முறை, தியாகம் நிறைந்த அன்புப்பணி இவற்றினை இலட்சிய மதிப்பீடுகளாகக் கொண்டு இயேசு தம் இறையாட்சிப் பணியில் எதிர்நோக்குடன் பயணித்தார். இன்றைய திரு அவையின் எதிர்நோக்குத் திருப்பயணத்திற்கும் இதுவே முதன்மையும் முக்கியமானதாகவும் மாறவேண்டும்.
ஆகவே,
பிறரின் நலன் தேடிப் பயணிப்பதும், இணைந்து உறவுடன் பயணிப்பதும், இயேசுவின் இலட்சியத்தை நமதாக்கிப் பயணிப்பதும் உயிர்ப்பின் சாட்சிகளாக நம்மை மாற்றும்.