இந்தியாவில் பத்தாண்டுகள் ஆட்சி நடத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பற்றிய நினைவு நம் குடிமக்கள் மனத்தில் இன்னும் குடியிருக்கிறதா? என்றால், கொஞ்சம் குழம்பிய நிலையில்தான் நம்மவர்கள் பதில் அளிப்பர். ‘இந்தியா ஒளிர்கிறது’ (India shining) என்ற பொய்ப் பரப்புரையை நாளும் விடாது பரப்பி வந்த அன்றைய தேசிய சனநாயக அரசின் முகமூடி கிழிக்கப்பட்டு, சோனியாகாந்தி அவர்களின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் கட்டிலேறியது. இராஜீவ் காந்தியின் துணைவியாரான திருமதி. சோனியாகாந்திமீது தூவப்பட்ட அந்நியத் தேசத்தவர்; கிறித்தவ மறையைச் சார்ந்தவர் போன்ற கொடுந்துயர அவதூறுகளை மக்கள் அப்புறப்படுத்தி, எளிய ஒரு பெண்மணியை அரியணையில் அமர்த்திப் பார்த்தப் பெருமை இந்த மண்ணுக்கு உண்டு.
சோனியாகாந்தி
இந்தியப் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், முழுநேரப் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் அவர்கள் சோனியா அவர்களால் கைகாட்டப்பட்டார். இவர் பதவி வகித்த பத்து ஆண்டுகளில் இந்தியா கண்ட வெற்றிகள் பற்றி அவர் மரணத்திற்குப்பின் நிறையவே நாடு பேசியது. அவர்
பதவி வகித்த நாள்களில் அவரின் நேர்மை பேசப்பட்டது; நாணயம் பாராட்டப்பட்டது. அதேவேளை, இன்றைய ஆட்சியாளர்களால் ‘வலிமைக் குன்றியவர்’ எனவும்
அவர் இகழப்பட்டார். தனக்குத் தரப்பட்ட பதவியை ‘Accidental’ என்று ஏற்றுக்கொள்ளவும்
அவர் தயங்கியதில்லை.
இன்றைய
மதவாதிகள் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுக்
கட்டமைத்த பொய்மைகளைத் தாண்டியும் பத்தாண்டுகள் ஆட்சி நடத்திய பெருமை அவருக்கு உண்டு. அவரின் பத்தாண்டு கால ஆட்சியில் அவர்மீது ‘ஊழல்’ குற்றச்சாட்டுகள் எவையுமில்லை. ஆனால், நிறையப் படித்திருந்த இம்மேதையின் ஆட்சி ‘ஊழல்’ எனும் பொய்மையால் கட்டமைக்கப்பட்டுக் கவிழ்க்கப்பட்டது.
இந்தியாவில்
திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல் ‘இராமசென்ம பூமி’ எனும் அடையாள அரசியலால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, வாஜ்பாய் தலைமையில் ஆறாண்டுகள் ஆட்சி நடத்தப்பட்ட பின்பும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றி கண்டமை வியப்பைத் தருவதே! ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த வெற்று முழக்கம் எது? கவிழ்க்கப்பட்ட ஆட்சியை மீண்டும் வென்றெடுக்க முடியாமல் மோடி அரசில் வாழ வேண்டிய சூழலை உருவாக்கியது எது?
மும்பையைச்
சேர்ந்த அன்னா ஹசாரே என்பவர் ஒரு சிறந்த சமூகச் செயற்பாட்டாளர். மராட்டியத்தின் மும்பை அரசின் ஊழல் பிரச்சினைகளைத் தெருவுக்குக் கொணர்ந்தவர். இவருடைய நோக்கம் பற்றியோ, எடுத்துக்கொண்ட பிரச்சினைகளின் கனம் பற்றியோ நாம் சந்தேகப்பட வேண்டியது இல்லை. இவரோடு அணி சேர்ந்தவர் கெஜ்ரிவால், கிரண்பேடி, இன்னும் பலர். இவர்கள் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் ஊழல் பிரச்சினைகளைப் பெரிதாக்கி தலைநகரைக் குலுக்கி வந்தார்கள். நாடு முழுவதும் இவர்கள் எழுப்பிய ஊழலுக்கு எதிரான முழக்கங்களே முதன்மை பெற்றன.
அன்னா
ஹசாரே தலைமையிலான போராட்டம் மக்களின் மனத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அசைத்துப் பார்த்தது. இந்தியத் தலைநகர் ஊழலுக்கு எதிரான முழக்கங்களால் திகைத்து நின்ற நிலையில் மதவாதக் கருத்தியலால் வளர்ந்து, ஆறாண்டுகள் ஆட்சியும் நடத்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் தன் ஆட்சிப் பொறுப்பை இழந்து நின்ற மதவாதிகள் என்ன செய்தனர்? எரியும் நெருப்பில் தாமும் குளிர் காய்வது மட்டுமின்றி, எரிக்கும் நெருப்புக்கு உரமிட்டுத் தம் தோழமையைக் காட்டிக்கொண்டனர். ஊழல்
என்ற ஓர் ஆயுதத்தைக் கையில் எடுத்த அன்னா ஹசாரேக்கள் தலைநகர்
ஜந்தர் மந்தரைப் போராட்டத்தளமாக முன்னெடுத்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொஞ்சம் அசைந்துதான் போயிற்று. இன்று நேர்மையானவர் என்று போற்றிப் புகழப்பெறும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் இச்சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கப்பட்டார். உரிய காலத்திற்காகக் காத்திருந்த மோடி பரிவாரங்கள், அன்னா ஹசாரே விதைத்த விதையை ஆட்சி அதிகாரத்தால் அறுவடை செய்தது.
ஆளும்
அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிற்கான ஆதாரமாக ஊழலை முன்னெடுத்தவர்கள் காணாமற்போக, நீண்ட பெரிய திட்டத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ‘மதவாதம்’ பெரும் வெற்றி பெற்றது என்பதுதான் இதில் காணப்பெறும் பெரிய முரண்பாடாகும்.
இன்றைய
ஆளும் ஒன்றிய அரசு ஊழலின் அனைத்துப் பரிமாணங்களையும் வழுவாமல் ஏற்றுக் கொண்டிருப்பதோடு, ஊழலின் ஊற்றுக் கண்ணை மௌனம் எனும் சூழ்ச்சி கொண்டும், வளர்ச்சி என்னும் பொய் முழக்கம் கொண்டும் மக்களிடம் நாடகமாடி வருவதோடு, பெரும்பான்மைவாதம் எனும் கொடிய நாசக்காரக் கருத்தியலால், பொதுமக்களிடம் பொய்யான அங்கீகாரத்தையும் பெற்று வருகிற அவலத்தை மக்கள் நாளும் சந்தித்து வருகின்றனர். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே தலைமையில் முன்னெடுத்தவர்கள், இன்று இந்திய அரசியல் அரங்கில் எங்குள்ளனர்? ஊழல் என்னும் பெருச்சாளி இன்னும் சாகா நிலையில், ஊழலையும் தாண்டிய மிகப்பெரும் பாசிசக் கோரத்துள் இந்தியா சிக்கித் தவிக்கையில், இன்று இவர்கள் எங்கே போனார்கள்?
அன்னா
ஹசாரே எனும் காந்தியார் வழிவந்தவர்க்கு முதல் சீடனாய் வளர்ந்து நின்ற கெஜ்ரிவால் என்னும் ஊழலுக்கு எதிரான போராளி, ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு வலுப்பெற்றார். எந்த ஊழலுக்கு எதிரான போராட்டம் இவருக்கு ஆட்சியைத் தந்ததோ அதே வகையான ஊழல் குற்றச் சாட்டினால் சிறை சென்றவரும் இவரே. முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதே, இன்றைய மதவாத ஒன்றிய அரசின் சூழ்ச்சி வலையால் விசாரணையின்றிச் சிறையிலடைக்கப்பட்ட பெருமையைப் பெற்றவர் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கண்ட இவர், ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியேற்ற மதவாதிகளின் பிரித்தாளும் மதவாதக்கொள்கையை என்றுமே கேள்விக்குள்ளாக்கவில்லை. அது மட்டுமல்லாது, தனது ஆட்சியைக் காப்பாற்ற மெல்லிய இந்துத்துவக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தவும் இவர் தயங்கியதில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமியருக்கு எதிரான சட்டம் என்பதனால் எழுந்த போராட்டத்திற்கு இவர் துணை நிற்கவில்லை. டெல்லி மாநகரில் இசுலாமியப் பெண்கள் ஒன்று திரண்டு நடுங்க வைக்கும் குளிரில் இரவும் பகலுமாய்ப் போராடியபோது, டெல்லி முதலமைச்சரான கெஜ்ரிவால் கண்டுகொள்ளவும் இல்லை. அயோத்தியில் இராமருக்கான கோவில் எழுப்பப்பட்டது பற்றியோ, சமயச் சார்பற்ற இந்திய அரசின் தலைமை அமைச்சர் தலைமைப் பூசாரியாக நின்று பூஜை செய்ததெல்லாம் கெஜ்ரிவாலை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை.
ஆனால், அரியானா தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக அனைத்துத் தொகுதிகளிலும் களம் கண்டு காங்கிரஸ் தோல்விக்குக் காரணமானார்.
‘ஊழல்’
(Corruption) நம்
சமூகத்தைப் பற்றி நிற்கும் ஒரு நோய். வலுவான அரசுக் கட்டமைப்பை உடைய பொதுவுடைமை அரசுகள் கூட இந்நோயை அகற்றிட முடியவில்லை என்பதே உண்மை. இப்படியிருக்க, பாராளுமன்ற சனநாயக அரசியல் ஆட்சியுள் ஊழலுக்கான வெளி
எப்போதுமே பெரிது என்பதுதான் உண்மை. இது வளர்ந்த நாடுகளிலும் சரி, வளர்ச்சி பெறாத நாடுகளிலும் சரி, நாட்டின் தன்மைக்கேற்ப பரந்து விரிந்த அளவில் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும், தவிர்க்கவியலா வகையிலும் தன் சதிராட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தியப்
பிரதமராக ஆட்சி செய்த திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக் காலத்திலும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. திருமதி. இந்திராகாந்தி அவர்கள் அப்போது அளித்த பதில் இப்போதும் நினைவுகூரத்தக்கது. அதாவது, “ஊழல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி சார்ந்த பிரச்சினை அல்ல; மாறாக இது உலகு தழுவிய பிரச்சினை (Universal Phenominal)” என்றார்.
ஊழலின் நியாயப்படுத்துதல் பொருட்டு முன்வைக்கப்படும் கருத்தல்ல; ஊழல் எனும் நோய் ஒழிக்கப்பெற வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகுந்த இந்தியச் சமூகத்தில் ஊழல் வரைமுறையின்றி ஊடுருவி, இச்சமூக அமைப்பை அரித்துவிடும் கரையானாக மாறுமாயின், இச்சமூக அமைப்பின் கடைத்தட்டு மக்களைக் காக்கின்ற ஆயுதம் எதுவுமே இல்லை என்றாகிவிடும்.
ஊழலுக்கு
எதிரான போராட்டத்தை முன்னெடுத்தோர் ‘ஊழல் ஆட்சி’ என்று முத்திரை குத்தி, ஓர் ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதில் வெற்றி கண்டனர். ஆனால், நாம் நாளும் சந்திக்கும் பொருள் ரீதியான ஊழலைத் தாண்டி, நம் சமூகத்தைச் சீரழித்து வரும் வகுப்புவாதம், மதவாதம், மத அடிப்படைவாதம், மதவழி
தேசியம், பிரிவினைவாதம் என்பனவெல்லாம் ஊழலின் பரிமாணங்கள் இல்லையா? கையூட்டு என்னும் ஊழலின் வெளிப்பாடு (Manifestation) மட்டுமே
நாம் நேரடியாக அனுபவிக்கும் தீமை என்பதால், மேற்கண்ட வாதங்கள் ஒப்புமையில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தி விடுமா? ஊழல் எனும் ஒரு நோயை மட்டுமே சுட்டிக்காட்டி ஓர் அரசின் இருப்பை அல்லது தரத்தை நிர்ணயிக்க முடியுமா?
நமக்கு
எழுகின்ற கேள்வியெல்லாம், ஊழல் மட்டுமே ஒரு கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அளவுகோலாக இருக்க முடியுமா? சுதந்திரம் பெற்ற இந்தியா இன்று சந்தித்து வரும் சவால்களைப் புரிந்துகொள்ள முயன்றால், ஊழல் மட்டுமே அளவுகோலல்ல!
இந்நாட்டின்
சனநாயகத்தைக் காக்கும் பணியில், சமூக நீதியைச் சமரசமின்றி காக்கும் வகையில், இந்தியக் கூட்டாட்சியின் மகத்துவம் பேணும் வகையில், நாட்டின் உயிர்மூச்சாம் சமயச் சார்பின்மையைப் போற்றும் வகையில் நம் அரசியல் நிலைப்பாடு இருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட இந்நிலைப்பாடுகள் ஊழல் ஒழிப்பைக் காட்டிலும் உன்னதமாகப் போற்றப்படக் கூடியவை.
ஒரு
குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவு என்பது, அக்கட்சி மேற்கொண்ட கொள்கையில் காட்டும் உறுதியில் அமைவது. ஆனால், இவ்வேளையில் மக்கள் சார்புக் கொள்கையில் உறுதியாக நாம் நிற்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
நிதர்சனக் கண்ணோட்டத்தோடும், தெளிந்த பார்வையோடும் நாம் முன்னெடுக்கப்பட வேண்டிய பார்வை இது. இது முற்றுப்பெறும் கட்டுரை அல்ல; தொடர்ந்து எடுத்துச்செல்ல வேண்டிய முயற்சி.