news-details
ஆன்மிகம்
குருத்துவம் எனும் அருள்கொடைக்காக ஒரு குருவின் நன்றிப் பாமாலை!

அன்பின் இறைவா உமக்கே நன்றி!

தூய குருத்துவத்தை நீர் ஏற்படுத்தியதற்காக!

இறையாட்சிப் பணிபுரிய என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக!

தூய திரு அவையில் பணியாற்றும் சிறப்புக் கொடைக்காக!

போதிக்கும் பணிசெய்ய நீர் தந்த அருளுக்காக!

உம் மந்தையைப் பேணிக்காக்கும் திருக்கொடைக்காக!

நம்பிக்கை மறையுண்மைகளைக் கற்பிக்க நீர் அளித்த தகுதிக்காக!

திருமுழுக்கு வழங்க நீர் தந்த ஆற்றலுக்காக!

• திருமணம் எனும் அருளடையாளத்தை நிகழ்த்தி சாட்சியாகிட நீர் தந்த                                                                                          மதிப்பிற்காக!

இது என் உடல்என மொழிந்திட நீர் தந்த அருள்கொடைக்காக!

நோயுற்றோரைக் குணமாக்குவதிலும், இறக்கும் தருவாயில் உள்ளோரைத் தேற்றுவதிலும்  பெறுகின்ற மகிழ்வுக்காக!

உன் பாவங்களை மன்னிக்கின்றேன்என்னும் வார்த்தைகளைக் கூற நீர் தந்த ஆற்றலுக்காக!

கிறிஸ்துவின் பதிலாளாய்பணிசெய்ய நீர் தந்த கொடைக்காக!

செபத்தில் வேரூன்றியிருக்க என்னை வழி நடத்துவதற்காக!

தூய பலி நிறைவேற்ற என் கரங்களைத் திருநிலைப்படுத்தியதற்காக!

உன்னதக் குருவின் வழிமரபுடன் வாழ்ந்திட நீர் தந்த மாண்பிற்காக!

அடியேனின் தகுதியற்ற நிலையைப் பாராது, புனிதத்தின் மாதிரியாக வாழ அழைத்ததற்காக!

மேய்ப்புப்பணியில் மக்களை ஆற்றுப்படுத்த என்னைத் தகுதியுள்ளவனாக மாற்றுவதற்காக!

குருத்துவத்தின் சகோதரத்துவ உறவுக்காக!

துன்ப துயர வேளைகளில் நீர் எம்மைத் திடப்படுத்துவதற்காக!

 ஏழைகளையும் கைவிடப்பட்டோரையும் தேடிச் சென்றிடும் ஆர்வத்தைத் தந்ததற்காக!

குருத்துவத்தின் இரக்கம், மேன்மை மற்றும் பெருந்தன்மையான கொடைகளுக்காக!

எனது பலவீனங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் என்னை உருமாற்றம் செய்வதற்காக!

உம்மீது மாறாத பற்று கொண்டு வாழ எமக்குத் துணை செய்வதற்காக!

முழுமையான தியாக அன்பில் வாழ வழிகாட்டுவதற்காக!

கிறிஸ்துவின் உடனிருப்புக்காகவும், அவர் எனது குருத்துவத்தில் ஒளிர்வதற்காகவும்!

பிறரை ஊக்குவிக்க நீர் தந்த கொடைகளுக்காக!

உமது மந்தைக்கு உணவூட்ட நீர் தந்த வாய்ப்புக்காக!

அருள் வழங்கும் கருவியாக என்னைப் பயன்படுத்துவதற்காக!

திரு அவையின் ஒன்றிப்பின்போது ஒவ்வொரு முறையும் நற்கருணை வழங்கியதற்காக!

முழுமையான அர்ப்பண வாழ்வு வாழ கற்பு எனும் கொடையைத் தந்ததற்காக!

குருக்களின் அன்னையாம் தூய மரியாவின் அன்புக்காக!

இயேசுவின் திரு இதய அன்பைப் போலிருக்க குருத்துவத்தை ஏற்படுத்தியதற்காக!

பிறரைப் புனிதப்படுத்த நீர் தந்த தெய்வீகக் கட்டளைக்காக!

இயேசுவின் திருப்பீடமாக விளங்கிட நீர் தந்த அளவில்லாக்  கொடைகளுக்காக!

எண்ணிலா வரங்களால் நீர் என் வாழ்வைப் புனிதப்படுத்துவதற்காக!

தூய ஆவியே துணையாக வாரும்!

எனது குருத்துவ அருள்பொழிவு நாளில் நான் அறிக்கையிட்ட வாக்குறுதிகளில் குறிப்பாக, குருத்துவத்தின் கடமைகளைத் தடையின்றி ஆற்றவும், குருகுலத்தில் ஆயருடன் இணைந்து உண்மையான மனச்சான்றுடன் இறைவனின் மந்தையைப் பேணிக்காத்திட...

கடவுளின் அதிமிக மகிமைக்காகவும், கிறிஸ்துவின் மக்களைப் புனிதமாக்கவும், திரு அவை வழங்கியுள்ள மறைப்பணிகளை நேர்மையுடனும் அர்ப்பணத்துடனும் கிறிஸ்துவின் மறைப்பொருளை நான் நிறைவேற்றிட...

எனது இறைவாக்குப் பணியில் நேர்மையுடனும் ஞானத்துடனும் நற்செய்தியைப் போதிக்கவும், கத்தோலிக்கத் திரு அவையின் மறையுண்மைகளையும் நம்பிக்கைக் கோட்பாடுகளையும் தக்க விதத்தில் விளக்கிக் கூறிட மன்றாடுகிறேன்:

மிகவும் இரக்கமுள்ள தந்தையே! தலைமைக் குருவாம் இயேசு, புனிதமான குருத்துவத்தை ஏற்படுத்திய இந்த மகிமையான நாளில், அம்மறைநிகழ்வைக் கொண்டாடவிருக்கும் என்னை அதே தூய ஆவியானவரால் திடப்படுத்துவீராக! எனது குருத்துவ வாழ்வின் வாக்குறுதிகளில் கருத்தாய் இருந்து, அவற்றை எனது இறுதி மூச்சுவரை உறுதியோடு நிறைவேற்றிட அருள்புரிவீராக. கிறிஸ்துவின் உன்னதக் கொடையாம் குருத்துவத்திற்காக நான் நன்றியுள்ளவனாக வாழ்ந்திடவும், இறைமக்களுக்குப் புனித நிலையில் எந்நாளும் பணி செய்ய வழங்கப்பட்ட உன்னதக் கொடை அது என மகிழ்ந்திடவும், எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவின் சாயலாக வாழ அருளப்பட்டுள்ள மாபெரும் கொடையெனக் கருதி நான் வாழ்ந்திடவும் துணை செய்வீராக. இவற்றை எல்லாம் எம் உன்னத குருவாம் கிறிஸ்து வழியாகவே உம்மை வேண்டுகிறேன். ஆமென்.”

(நன்றி: ‘Magnificat’ – Magazine,  April – 2022)

மொழிபெயர்ப்பு: அருள்சகோதரி முனைவர் லூர்துமேரி FMM