நான் அறிந்த திரு அவைத் தலைவர்களுள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வும் பணியும் ஆண்டவர் இயேசுவின் வாழ்வு மற்றும் பணியோடு நெருக்கமாக ஒத்திருப்பதாகவே உறுதியாக நம்புகிறேன். இயேசுவின் வாழ்வும் திருத்தந்தையின் வாழ்வும் ஒன்றோடொன்று பிரிக்க முடியா இணைப்பைக் கொண்டுள்ளதாக உணர்கிறேன். ஒருசில ஒற்றுமைகளை மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
தீவனத் தொட்டியில்
கந்தைத்
துணியில்
பொதிந்தவர்
“துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்.” வாழ்நாள் முழுவதும் எளிமையே இயேசுவின் அடையாளம். திருத்தந்தை 13-ஆம் நூற்றாண்டு புனித அசிசி நகர் பிரான்சிஸ் பெயரை ஏற்று, அதற்கேற்ப எளிய வாழ்வும் ஏழைகளுக்கான அர்ப்பணமும் கொண்டு வாழ்ந்தவர். ஆயராகப் பணியாற்றியபோது ‘குடிசைப் பகுதிகளின் ஆயர்’ என்றே அறியப்பட்டவர். திருத்தந்தையரின் ஆடம்பர வாழ்வைத் துறந்து, எளிய குடிலில் தங்கி உணவு, உடை, பயணம் என யாவற்றிலும்
எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
எதிர்க்கப்படும்
அடையாளம்
இது
சிமியோன் குழந்தை இயேசுவைப் பற்றி முன்குறித்த இறைவாக்கு. யூத சமயத் தலைவர்கள், மறைநூல் அறிஞர் இயேசுவை வன்மையாக எதிர்த்தனர். உண்மையைவிட தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பாரம்பரியங்களையும் உயர்வாக அவர்கள் கருதினார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அண்மைக்காலத் திரு அவைத் தந்தையர்களில் அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தவர். திரு அவை பற்றிய அவருடைய கருத்துகள், ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடு போன்றவை எதிர்ப்புக்குக் காரணங்களாய் அமைந்தன. வரம்பு மீறிய முதலாளித்துவம், உலகச் சந்தை போன்றவற்றைக் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்தபோது, “அமெரிக்கர்கள் என்னைத் தாக்குவதை மரியாதையாக ஏற்கிறேன்”
என்றார். ‘From Benedict’s peace to francis’ war’ மற்றும்
‘lost shepherd’ போன்ற நூல்கள் இத்தகைய எதிர்ப்பின் வெளிப்பாடுகள். ஆயினும், வேடிக்கையாகத் திருத்தந்தை குறிப்பிட்டார், “தம் எளிய குடிலில் மற்றவரோடு வரிசையில் நின்று உணவு பெறுவதால் உணவில் நஞ்சைக் கலக்கவும் வாய்ப்பில்லை.”
‘என் திருச்சபையைக்
கட்டுவேன்’
திரு
அவை ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பெற்று, கட்டியமைக்கப்பட்ட சமூகம். நம்பிக்கையின் தொடர் பயணத்தில் இணைந்து செல்லும் மக்கள் திரு அவை. தலைவர்கள் ஏற்றத் தாழ்வு அற்ற, அனைவருக்கும் பணியாளர்களாகச் செயல்படும் மாறுபட்ட சமூகம். அவ்வாறே, திருத்தந்தையும் இறைமக்களைத் திரு அவையின் மையத்திற்குக் கொணர்கிறார். திருமுழுக்கு அருளடையாளம் மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டும் அடையாளம். திரு அவை வாழ்விலும் பணியிலும் அனைத்து இறைமக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்குடன் திருத்தந்தை கூட்டொருங்கியக்கத் திரு அவையை முன்னிலைப்படுத்தினார். இதன் வழியாக அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருடைய பங்கேற்பையும் உறுதி செய்கின்ற திரு அவையைச் சமைக்க முற்பட்டார். திரு
அவையில் ஓரங்கட்டப்பட்டவர்களான பெண்கள், இளைஞர் ஆகியோருக்குப் பொறுப்புகளையும் பங்களிப்புக்கான அழைப்பையும் வழங்கினார்.
‘நான் இம்மக்கள்
மீது
பரிவு
கொள்கிறேன்’
‘ஏழைகளுக்கு நற்செய்தி’
இயேசுவின் திருப்பணிக்கும் திருத்தந்தையின் திருப்பணிக்கும் மையமாக அமைகிறது. தன் ஆண்டவரைப் போன்று திருத்தந்தையும் மனவுருக்கம் நிறைந்தவர். பிற நாடுகளில் குடிபுகுந்தவர்கள், அகதிகள் ஆகியோருடைய நலன்களை நோக்கிப் பயணித்தவர். தன் கிரீஸ் பயணத்தின்போது லெப்பாஸ் என்னும் இடத்திலுள்ள அகதிகள் முகாமைப் பார்வையிட்டு அங்கிருந்து 12 சிரியா நாட்டு இஸ்லாமியர்களைத் தன் விமானத்தில் உரோமை நகருக்கு அழைத்து வந்தார். ஆலயங்கள் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என ஆயர்கள், பேராயர்களுக்கு
அறைகூவல் விடுத்தார். கிறித்தவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நற்செயல்கள் செய்யவும் அந்நியரை ஆதரிக்கவும் வேண்டும் என வலியுறுத்தினார். மற்றவர்களைப் பற்றிய
அக்கறையின்மையை, உலகமயமாக்குதலை வன்மையாகக் கண்டித்தார்.
‘நானும் தீர்ப்பளிக்கவில்லை’
பரிசேயர்
என்னும் குழுவினர் இயேசுவை ‘பாவிகளின் நண்பர்’ எனக் குறைகூறினர். ஆயக்காரரோடு உணவருந்துகிறார், ஒழுக்கக்கேடான பெண்களுக்குச் சார்பான நிலைப்பாடு எடுக்கிறார் என்றனர். பாவிகளை மீட்கவே தாம் வந்துள்ளதாக இயேசு பதில் மொழிந்தார். அதுபோல, தற்காலச் சூழலில் கேள்விக்குள்ளான சில அறநெறிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர் திருத்தந்தை. ஓரினப் பாலியல் உணர்வு கொண்டிருப்பது குற்றமல்ல என்றும், அப்படிப்பட்டவர் ஆண்டவரைத் தேடி அவரது அருளைப் பெறுவாராயின், அவரை நியாயம் தீர்ப்பதற்கு நான் யார்? என்று குறிப்பிட்டார். மணவிலக்குப்
பெற்றவர் மற்றும் மணவிலக்குப் பெற்று மறுமணம் செய்தவர் நற்கருணையில் பங்குபெற வகை செய்தார். “நற்கருணை என்பது தூயவருக்கு அளிக்கப்படும் பரிசு அன்று; மாறாக, பலவீனமானவர்களுக்கு அளிக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து மற்றும் ஊட்டச்சத்து” என்றார்.
‘இஸ்ரயேலரிடத்திலும்
இத்தகைய
நம்பிக்கையை
நான்
கண்டதில்லை’
இயேசு
யூதர்-யூதர் அல்லாதோர் எனும் வேறுபாடு இன்றி சமயம், இனம் கடந்து மக்களை இறைவனின் அன்புக்குரியவராய் கண்ணோக்கினார். உண்மைகளை அனைவருக்கும் போதித்து நற்சுகம் அளித்தல், உணவளித்தல் போன்ற அருங்கொடைகளை அனைவருக்கும் வழங்கினார். யூதர் அல்லாதோரிடையே காணப்பட்ட நம்பிக்கையைப் பாராட்டினார். நற்செயல் செய்வதற்கு உதாரணமாக ஒரு சமாரியரைச் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையும் முழு மனுக்குல ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர், பாடுபட்டவர். “பாலம் கட்டாமல் தடுப்புச் சுவர் கட்டுகிறவன் கிறித்தவன் அன்று” எனத் துணிச்சலுடன் முழக்கமிட்டவர். துபாய் அல் அசார் மசூதியின் தலைமை இமாமைச் சந்தித்தபோது, அமைதி மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான அறிக்கையைப் பிரகடனப்படுத்தினார். ‘சமயப் பன்மை இறைவனின் திருவுளம்’
எனும் புரட்சிக் கருத்தையும் முன்வைத்தார். “பிற சமயங்களை அவர்தம் கண்ணோட்டத்திலும் உடன்பாடு முறையிலும் பார்க்க வேண்டும்; தம் சமயம் உயர்வானது என்னும் கண்ணோக்கில் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனற்றது”
என்றார். உலகம் சீரமைவதற்குச் சமயங்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இவர் பிற சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்.
இஸ்லாமும் வன்முறையும் பிரிக்க முடியாதது என்ற தவறான கருத்தினைத் தகர்த்தார்.
‘உப்பும் ஒளியும்
நீங்களே...
உங்கள்
ஒளி
மனிதர்
முன்
ஒளிர்க’
ஆண்டவர்
இயேசு தம் சீடரை உப்பாகவும் ஒளியாகவும் உருவகப்படுத்துகிறார். “சீடர் உப்பையும் ஒளியையும் கொண்டு செல்பவர் அல்லர்; மாறாக, அவர்களே உப்பாக ஒளியாக வாழ்பவர்.” “அப்பொழுதுதான் அவர்கள் உங்கள் நற்செயலைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” என்றார்.
திருத்தந்தை பிரான்சிஸ் நம் கிறித்தவ நம்பிக்கை வெறும் கோட்பாடு அன்று; அது வாழ்வின் நெறி என்பதை வலியுறுத்தினார். நற்செய்தி வழி நின்று அன்றாட வாழ்வில் நற்செய்தித் தகவுகளின் வழியில் வாழ்வதே வலிமையுள்ள நற்செய்தி என்கிற அர்த்தத்தை, நற்செய்தி வாழ்வியலை தம் வழியாக வாய்மையாக வாழ்வாகக் கொண்டு பயணித்த திருத்தந்தை தம் ஆண்டவரோடு விண்ணுலகில் இப்பயணத்தைத் தொடர்கிறார்.
திருத்தந்தைக்கு
என் தாழ்மையான அஞ்சலி. அன்னாரது சீர்திருத்த கருத்தாக்கம், நிலைப்பாடு, செயலாக்கம் தொடரவும் திருச்சபை தொடர்ந்து புதுப்பிக்கப்படவும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.