கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் திடீர் பரபரப்பு. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ (Manju mmel Boys) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ‘குணா’ குகைக்கு அலைமோதியக் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தவே காவல்துறையினருக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் மதுரை மாவட்டப் பள்ளி ஒன்றிலிருந்து வந்திருந்த மாணவி ஒருவரைக் காணவில்லை என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேடி அலைந்தனர். அவர்களின் முகத்திலே பயமும் சோர்வும் ஒட்டிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பாக ஆடிப்பாடி ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்திருந்த பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் மாலைநேர குளிரிலும் வியர்வையில் குளித்திருந்தனர்.
நண்பர்களாகச்
சுற்றுலா சென்றிருந்த நாங்களும் காணாமல் போன அந்த 12-ஆம் வகுப்பு மாணவியின் அடையாளங்களை ஓர் ஆசிரியரிடம் கேட்டறிந்து கொண்டு தேடித் திரிந்தோம். வானம் முட்டி வளர்ந்திருந்த யூக்கலிப்டஸ் மரங்களும், கொண்டை ஊசி வளைவுகளும் பள்ளமேடுகளும் இருட்டேறிய பாறைப் பிளவுகளும் சிவப்பேறிய மாலைப்பொழுதும் ஆரவாரமில்லாச் சாலைகளும் திகில் படங்களை நொடிப்பொழுதில் ஓட்டிக்காட்டின.
ஆசிரியர்களும்
சில மாணவர்களும் அங்கிருந்த போலீஸ் ஸ்டேசன் சென்று கம்பிளைன்ட் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தனர். சுற்றுலாப் பேருந்திலேயே காணாமல் போன மாணவிக்காகக் காத்திருந்த பிற மாணவ-மாணவிகள் செய்வதறியாது நகத்தைக் கடித்துக்கொண்டும் இருளை வெறித்துப் பார்த்துக்கொண்டும் இருந்தனர். பேருந்து சன்னல் கம்பிகளுக்கு வெளியே ஆசிரியர்களோ தலைமை ஆசிரியருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமலேயே விழி பிதுங்கி நின்றனர். அவர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.
“சார் கவலைப்படாதீங்க. மாணவி கிடைத்து விடுவாள்”
என்று ஆறுதல் கூறி விட்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றோம். சில நேரம் கழித்து அந்தப் பள்ளிப் பேருந்து நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டலுக்கு முன்பாக வந்து நின்றது. பேருந்திற்குள் மாணவ-மாணவிகள் மின்னித் தெறிக்கும் கலர் வெளிச்சத்தில் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கிச் சாலையோரங்களில் சிலிர்த்து நிற்கும் மரங்களைப்போல மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டனர். சற்று நேரத்தில் சாப்பிட வந்த ஆசிரியர் ஒருவரிடம் பேரார்வத்தில் கேட்டேன் “மாணவி கிடைத்துவிட்டாளா?” என்று. இருக்கையை அருகிலே இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு மெல்லிய குரலில் அவர், “சார்! அது ஒரு பெரிய கதை. அந்த மாணவி யாரையோ ஒரு பையனை இன்ஸ்டாகிராமில் காதலிக்கிறாளாம். சுற்றுலாவிற்கு வருவது தெரிந்து தற்கொலைப் பாறை இருக்குல... அங்க சந்திப்பதாக அவனுக்கிட்ட சொல்லியிருக்கிறா. நாங்க காலையில தற்கொலைப் பாறைக்குப் போயிருக்கும்போது அவங்க யாருக்கும் தெரியாம சந்திச்சுப் பேசியிருக்காங்க.” அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மற்ற மாணவ-மாணவிகள் பேருந்திலிருந்து இறங்கி ஹோட்டலுக்குள் சாப்பிட வந்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் தொடர்ந்தார் “பேருந்தை எடுக்கும்போது நாங்க சரியா அந்த மாணவிய கவனிக்காம விட்டுட்டு வந்துவிட்டோம். அவ பிரண்ட்ஸ் கூட
ஆட்டம்பாட்டத்துல அவளக் கவனிக்காம விட்டுட்டாங்க. குணா பாறையில வச்சுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.”
நண்பர்களில்
ஒருவர் “இப்போ அந்த மாணவிக்கு என்ன ஆச்சு? திரும்பி வந்துட்டாளா?” என்று கேட்டுக்கொண்டே மாணவர் கூட்டத்தில் காணாமல் போன மாணவியைத் தேடினார்.
“அவ எங்க திரும்பி
வந்தா? அவ அவளுடைய பாய்
பிரண்டோட எங்களைத் தேடி
அலைஞ்சிருக்கிறாங்க, நாங்கதான் அங்க இருந்து கிளம்பிட்டோமே. பிறகு
போலீஸ்காரங்கதான் அந்தப் பொண்ணுடைய யூனிபார்மைப் பார்த்துவிட்டு நாங்க கம்ப்ளைண்ட் கொடுத்த மாணவி அவதானு தெரிஞ்சிக்கிட்டு அந்தப் பையனுங்க பெயர், அட்ரசை எழுதி வாங்கிட்டு இவளை எங்ககிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்க. இப்போதான் சார் போன உசிரு திரும்பி வந்திருக்கு” என்று
சொல்லும்போது அந்த ஆசிரியரின் மனம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.
எல்லா
மாணவர்களும் மகிழ்ச்சியாக அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். காணாமல் போய் திரும்பி வந்த மாணவியை எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஆசிரியரிடமும் ‘அந்த மாணவி யார்?’ என்று கேட்க நாங்கள் துணியவில்லை. மாணவி
திரும்பி வந்ததே சந்தோசமாக இருந்தது.
இன்றைய
காலகட்டத்தில் சைபர் உலகத்தில் கத்தரிக்காயும் கிடைக்கிறது, காதலும் கிடைக்கிறது. ‘காதல்’ என்ற போர்வையில் ஏராளமான சைபர் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. சமீபத்தில் குஜராத்தைச் சார்ந்த 10 வயது சிறுமிக்கும் 16 வயதான சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் வழியாகக் காதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியச் சூழலில், காவல் துறையினர் அருகாமையில் இருக்கும் கிராமம் ஒன்றில் இவர்களைக் கண்டறிந்து பெற்றோரிடம் சேர்த்துள்ளனர்.
கொல்கொத்தாவில்
2016-ஆம் ஆண்டு 19 வயது இளைஞன் 15 வயது சிறுமியைப் பேஸ்புக்கில் காதலித்து, அச்சிறுமியைத் தனியாக வரவழைத்து, தன் நண்பரோடு சேர்ந்து அச்சிறுமியைப் பலாத்காரம் செய்திருக்கிறான். இதேபோன்ற செயல்கள் இன்று பத்திரிகைகளில் தினச்செய்தியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சைபர்
குற்றவாளிகள் சிறார்களைக் குறிவைத்துச் சமூக ஊடகம் வழியாகக் காதல் வலைவீசி, அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் செயலை ‘சைபர் குரூமிங்’
(Cyber-grooming) என்கிறோம்.
இது பல்வேறு வகைகளில் அரங்கேறுகின்றன. சைபர் தளங்கள் வழியாகச் சிறார்களுக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்புவது, ஆபாசப் படங்களை அனுப்புவது, காதல் மொழி பேசி வீட்டை விட்டு வெளியே தனியாக வரவைத்துப் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்குவது போன்றவை சைபர் குற்றங்களே. தேசியக் குற்ற ஆவணப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுப்படி, இந்தியாவில்
2021-ஆம் ஆண்டு மட்டும் 1376 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராகச் சைபர் வலைத்தளங்களில் அரங்கேறியுள்ளன.
சிறார்கள்
இத்தகைய சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டால் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் முறையிடவோ அல்லது 1930 என்ற உதவி எண்ணையோ அழைக்கலாம். இத்தகைய சைபர் குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள குழந்தைகளோடு பெற்றோர்கள் தொடர்ந்து உரையாட வேண்டும். அவர்களின் இணைய ஆர்வத்தைக் கண்காணிக்க வேண்டும். இணைய ஆபத்துகளிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்னும் படிப்பினையைக் குழந்தைகளுக்கு எளிய வழியில் கூற வேண்டும். குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், அதில் அவர்களின் புகைப்படம் அல்லது தனிப்பட்டத் தரவுகளைப் பதிவேற்றம் செய்வதையும் தவிர்க்க உதவி செய்ய வேண்டும். குழந்தைகளின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாகப் பெற்றோர்கள் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.
இணையமும்
சமூக ஊடகங்களும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானமில்லை; அங்கு உலவுகின்ற பொம்மைகள் உண்மையில்லை; சைபர் தளங்களில் அன்பொழுகப் பேசுபவர்கள் உறவுகளுமில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.