news-details
சிறப்புக்கட்டுரை
நூற்றாண்டு விழாக் காணும் சென்னை குட்ஷெப்பர்ட் கான்வென்ட்

1924 முதல் 2024 வரையிலான நூற்றாண்டு கால அன்புச் சேவையை, ஆழமான அர்ப்பணிப்பைப் பெருமையுடன் நினைவு கூரும் வகையில் சென்னை குட் ஷெப்பர்ட் கான்வென்ட் தன் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை இத்தருணத்தில் கொண்டாடுகிறது.

1835-ஆம் ஆண்டு புனித மேரி யூப்ரேசியா பெல் லெட்டியர் அவர்களால் பெண்களுக்கான நல்மேய்ப்பரின் சபை (Congregation of Good Shepherd Sisters) பிரான்சில் நிறுவப்பட்டது. அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் மறைபரப்புப் பணியின் ஆர்வத்தால் இச்சபை இந்தியாவில் - பெங்களூரில் ஆகஸ்டு 15, 1854 அன்று தனது பணியை விரிவுபடுத்தியது. அன்று முதல் கல்வி, சமூக சேவை, மருத்துவம், இளம்பெண்களுக்கான குடியிருப்பு வசதிகள், சிறைத்துறை, திருமணமாகாத தாய்மார்களுக்கான வீடுகள், இளம் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கான விடுதிகள், நீதி - அமைதி முன்னெடுப்புகள், மிகவும் பாதிப்புக்குள்ளான தாழ்த்தப்பட்ட பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு ஆகியவற்றில் சகோதரிகள் தங்களையே அர்ப்பணித்து வருகின்றனர்.

மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு தெரியாத போதிலும், அன்றைய சென்னை-மயிலை ஆயர் டி காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் 21, 1924 அன்று லஸ் தேவாலயத்தில் பங்குப் பராமரிப்பு மற்றும் மேய்ப்புப் பணிகளைத் துணிவுடன் தொடங்கிய அருள்சகோதரிகள், பின்னர் மூரட்ஸ் கார்டனுக்குக் குடிபெயர்ந்து, 1930-இல் நுங்கப்பாக்கத்தில் தங்கள் முதல் இல்லத்தை உருவாக்கினர்

உலகம் முழுவதையும் விட ஒரு நபர் மிகவும் விலைமதிப்புள்ளவர்என்ற தங்கள் நிறுவுநரின் ஆழ்ந்த நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டு, தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களுக்குக் குட் ஷெப்பர்ட் கான்வென்ட் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் சரணாலயமாக மாறியது. அவ்வகையில் கடந்த பல ஆண்டுகளாக, இது ஒருங்கிணைந்த முழுமையான கல்வி, ஒழுக்கம், மதிப்பீடுகள் மற்றும் ஆற்றல்படுத்துவதன் வாயிலாக எண்ணற்றவர்களின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளது.

நூற்றாண்டு விழாச் சிறப்புகள்...

நன்றி தெரிவிக்கும் ஓர் ஆண்டு: குறிப்பிடத்தக்க இப்பயணத்தில் துணையிருந்த அருள்சகோதரிகள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு நன்றி தெரிவிப்பது.

அருட்கொடைகளின் ஆண்டு: இவ்விடத்தால் வாழ்வில் ஏற்றமும் சிறப்பும் கண்டவர்களைக் கௌரவித்தல்.

நம்பிக்கையின் ஆண்டு: சேவை மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் தழுவுதல்.

புதிய முயற்சிகளின் ஆண்டு: இக்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பணியை விரிவுபடுத்துதல்.

மேற்கொள்ளப்படும் பணிகள் ஒரு பார்வை:

சமூகப் பணிகள்: மேரியன் ஹோம் - பள்ளி இடை நிற்றவர்களுக்கான திறன் பயிற்சிக்கூடம். சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட், இளம்பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பின்னணியில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரிந்த உறவுகளிலிருந்து வரும் பெண்கள் மற்றும் குடிப்பழக்கத்தால் சிதைந்த குடும்பங்கள் உட்பட சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக, 1924-இல் இவ்வில்லத்தை அருள்சகோதரிகள் நிறுவினர். இந்த இல்லம் 1952-இல் மேரியன் ஹோம் என்று பெயரிடப்பட்டது. சிறுமிகள் மற்றும் பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது பேக்கரி, கேன்டீன் சேவைகள், தையல் மற்றும் வீட்டுப் பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்சார் பயிற்சிகளை வழங்குகிறது. இளம்பெண்களைத் தன்னிறைவு மற்றும் நிதிச் சுதந்திரத்திற்கான நடைமுறைத் திறன்களுடன் உருவாக்குகிறது.

நூற்றாண்டு காணும் சிறப்பான கல்விப்பணி:

வில்லியம் பட்லர் யீட்ஸ் கூறுவதுபோல, ‘கல்வி என்பது ஒரு பாத்திரத்தை நிரப்புவது அல்ல: மாறாக, நெருப்பை மூட்டுவதாகும்.’ கல்வியே குட் ஷெப்பர்ட் பணியின் மூலைக்கல்லாகும். கற்றல் தனிநபர்களை மேம்படுத்துகிறது மற்றும் சமூகத்தையே மாற்றுகிறது என்ற நம்பிக்கையில், 1925-ஆம் ஆண்டு முதல், இப்பள்ளி இளம் மனங்களை வளர்த்து, வலுவான மதிப்பீடுகளை ஊக்குவித்துக் கல்விப்பணியில் சிறந்து விளங்குகிறது.

நீங்கள் செய்வதையெல்லாம் நன்றாகச் செய்யுங்கள்என்ற சபை நிறுவுநர் புனித மேரி யூப்ரேசியா பெல்லெட்டியர் வகுத்துக்கொடுத்தக் கொள்கையின் வழியில், அன்று எளிமையான தொடக்கம் கொண்ட இப்பள்ளி, இன்று கலங்கரை விளக்கமாக உயர்ந்து, சிறந்து விளங்குகிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, முழுமையான கற்றல், உறுதியான அர்ப்பணிப்பு, அறிவார்ந்த வளர்ச்சி, தார்மீக ஒருமைப்பாடு மற்றும் யாவரையும் அரவணைக்கும் அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்டு, ஞானம் நிறைந்த உயர் நோக்கத்துடன் இளம்பெண்களைத் தொடர்ந்து இப்பள்ளி வழிநடத்தி வருகிறது.

குட் ஷெப்பர்ட் நூற்றாண்டு நினைவுப் பள்ளி

100 வருட அர்ப்பணிப்பு மற்றும் சேவையைக் கொண்டாடும் வகையில், CICSE பாடத் திட்டத்தைப் பின்பற்றிக் குட் ஷெப்பர்ட் நூற்றாண்டு பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை ஜூன் 10, 2024 அன்று அருள்தந்தை ராஜ் மரியசூசை SDB அர்ச்சிக்க, எம் சபைத் தலைவி ஜோன் லோபஸ் மற்றும் அவரது ஆலோசகர் குழுவினர் ஜூன் 14, 2024 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். கடந்த காலத்தின் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலச் சாத்தியக்கூறுகளால் ஈர்க்கப்பட்டு, நூற்றாண்டு காணும் இப்பள்ளி, பள்ளிக் கல்வித்தளத்தில் சிறப்பான அடையாளமாகவும் புதுப்படைப்பாக்கும் கருவியாகவும் திகழ்கிறது.

பின்தங்கிய குழந்தைகளுக்கான தங்குமிடம்

மொட்டுகள்: வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பின் தங்கிய பெண் குழந்தைகளுக்குத் தங்குமிடம் மற்றும் அரவணைப்பும் வழங்கும் வண்ணம்மொட்டுகள்எனும் இவ்வில்லம் 1996-இல் நிறுவப்பட்டது. குறுகிய காலத் தங்கும் வசதிகள், ஆலோசனைகள், கல்வி ஆதரவு, குடும்ப மறு ஒருங்கிணைப்பு மற்றும் தொழில் பயிற்சி ஆகிய உதவிகளை  இவ்வில்லம் வழங்குகிறது.

குடிசைப்பகுதி செயல்திட்டங்கள்: சென்னை குடிசைப்பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டக் குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், குறிப்பாக, வீடுகளை விட்டுக் குழந்தைகள் வெளியேறுவதைத் தடுக்கவும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளை விட்டு வெளியேறிய சிறுமிகளைக் குறுகிய காலப் பாதுகாப்பிற்குப்பின் மீண்டும் அவர்களை அவர்களின் குடும்பத்தோடு ஒருங்கிணைக்க இந்தத் திட்டம் உதவுகிறது.

பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடம்

ரோஷினிவாஸ் விடுதி: பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்குவதற்காக ரோஷினிவாஸ் விடுதி 2000-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது 74 நபர்களுக்குத் தனிப்பட்ட வழிகாட்டுதல், பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் முழுமையான ஆதரவுடன் தொழில்முறை வளர்ச்சியையும் அவர்களுக்கு வழங்குகிறது.

உடன்பணியாளர்கள்: நல்மேய்ப்பன் பணிகளை முன்னெடுப்பதில் பல உடன்பணியாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பவர்களாக எம்மோடு பயணிக்கின்றனர். அருள்சகோதரிகளுடன் பணியில் உடனிருப்பதுடன் ஆலோசனை தரும் வழிகாட்டிகளாக ஒத்துழைத்து, இரக்கம், நீதி மற்றும் சேவை போன்ற மதிப்பீடுகள் சமூகத்தில் தொடர்ந்து செழித்து வளர்வதை இவர்கள் உறுதி செய்கிறார்கள்.

பாதுகாப்புக் கொள்கை: குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குட் ஷெப்பர்ட் சபை உறுதியாக உள்ளது. உலகில் 68 நாடுகளில் பரவியுள்ள இச்சபை எல்லா இடங்களிலும் இப்பாதுகாப்புக் கொள்கையைச் செயல்படுத்தி வருகிறது. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திப் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நூற்றாண்டு விழாக்கள்:

நவம்பர் 11, 2024 அன்று சிறப்பு நன்றித் திருப்பலியுடன் நூற்றாண்டு விழா தொடங்கியது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 2024 முதல் ஜூலை 2025 வரை ஒவ்வொரு மாதமும் செபம் மற்றும் நன்றியுணர்வுடன் ஒரே சமூகமாகப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த கால நினைவுகளைக் கொண்டாடக் குட் ஷெப்பர்ட் முன்னாள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட லெகசி காலா (Legacy Gala), ஏறக்குறைய 700 முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்தது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். கூடுதலாக, பிப்ரவரி 15, 2025 அன்று மேரியன் ஹோம் மொட்டுகள் 350 சிறுமிகளை ஒன்றிணைத்து, அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டு 2025 இல், நிறைவுக் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளன.

100 ஆண்டுகால அர்ப்பணிப்பு மற்றும் சேவையை நினைவுகூரும் நாங்கள், அன்பு, இரக்கம் மற்றும் ஊக்கமளித்தல் ஆகியவற்றின் நோக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்கிறோம். ஆழ்ந்த நன்றியுணர்வுடன், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம். வரவிருக்கும் தலைமுறைகளுக்குக் குட் ஷெப்பர்ட் நிறுவனத்தின் வளமான மரபுகளை எடுத்துக்கூறி அவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்வதை உறுதிசெய்கிறோம். ‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு (திபா 107:1). இதயம் நிறைந்த நன்றியுடன் எங்கள் பயணம் தொடர்கிறது...

நல்மேய்ப்பன் பணியில்,

அருள்சகோதரிகள்குட் ஷெப்பர்ட் கான்வென்ட்

சென்னை