2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு உரோமையர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த யூதேயா நாட்டில் முகவரி இல்லாத சில மனிதர்களால் துவங்கப்பட்ட ‘சத்தியத் திரு அவை’ காலக் கரையானால் அரிக்கப்படாமல், அதிகாரச் சுனாமிகளுக்கு அசைந்து கொடுக்காமல் இனம், மொழி, பிராந்தியம் என்ற எல்லாப் பிரிவினைகளையும் கடந்து இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. இது மனித முயற்சியாலா!
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக வார்த்து எடுக்கப்பட்ட ஆகம வழிமுறைகளைத் தங்கள் பெருமைமிகு அடையாளமாக விரித்திருந்த யூத மேலாக்கத்தின் மரண அச்சுறுத்தல்களுக்கும், பேரரசு மன்னர்கள் அள்ளி எறிந்த அக்கினி எரிகணைகளுக்கு இடையிலும், விசுவாசக் கண்ணீரை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தங்களை அழிக்க நினைத்த பேராசை மேல் வெற்றி கொண்டு இன்னும் உயிரோட்டமாக வாழ்கிறது கிறித்தவம் என்றால் அதற்கு யார் காரணம்?
இந்த
நீண்ட காலப் பயணத்திற்கு ஒவ்வொரு காலத்திலும் பல வழிகாட்டிகள் தேவைப்பட்டார்கள்.
காலத்தின் தேவைகளை எதிர்கொள்ளத் தகுதியான தலைமைகள் தேவைப்பட்டன. போர்க்காலத்தின் தன்மைகளின் அடிப்படையிலும், எதிரிகளின் தகுதியின் அடிப்படையிலும் போருக்குத் தேவையான கருவிகளும் ஆயுதங்களும் யுக்திகளும் தேவைப்பட்டன. தேவையான அனைத்தையும் இறைவனே தம் தூய ஆவியின் மூலம் திரு அவைக்குத் தந்தார் என்பதுதான் உண்மை. இதில் முதன்மையாகத் தமது திரு அவையைத் தலைமையேற்று வழிநடத்த இறைவன் உருவாக்கின நிறுவனமே ‘பாப்பரசர்’
என்ற திருப்பீடம் (Holy see).
இந்த மேய்ப்பர் மூலமாகத்தான் இறைவன் தம் ஆடுகளைக் கட்டுக்கோப்பான மந்தையாக 2000 ஆண்டுகளாக வழிநடத்தி வந்துள்ளார்.
மேய்ப்பரை
அறியாத ஆடுகளும், ஆடுகளை அறியாத மேய்ப்பரும் ஒரு நாளும் மந்தையாக வாழ முடியாது. உடல் சோர்ந்து, திரு அவையின் ஆட்சிப் பாரத்தைச் சுமக்க முடியாமல் மற்றொரு சுமைதாங்கியின்மீது பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் என்று முன்னாள் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் முடிவெடுக்கையில், இறைவன் தமது திரு அவையின் அடுத்தக்கட்ட பயணத்தைத் தலைமையேற்று நடத்த ஒரு சரியான மாலுமியை அவரே அடையாளம் காண்பித்தார். அவர்தான் திருத்தந்தை பிரான்சிஸ்!
உலகின்
மிகப்பெரிய ஆன்மிக இயக்கமான கத்தோலிக்கத் திரு அவையைத் தலைமையேற்று வழிநடத்தும் ஒரு திருத்தந்தை, ஒரே நாளில் உருவாக்கப்படுவதில்லை. இறைவன் அவரைக் கருவின் உருவிலேயே அடையாளம் காண்கிறார். அவரை ஒவ்வொரு நாளும் செதுக்கிச் சமைக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் இறைவன் எப்படி இந்த 12-ஆண்டு காலகட்டத்திலும் தம் அருள் எனும் உளி கொண்டு செதுக்கி வடிவமைத்தார் என்பதற்கு அவர் ஆற்றிய பணிகளே மிகச்சிறந்த சான்று.
காலம்
எவ்வளவு மாறுபடுகின்றது? உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம், பயங்கரவாதம், புதிய தகவல் தொழில்நுட்பங்கள், சீரழியும் சுற்றுச்சூழல், பெரும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பேராசை, அரசியல் தலைவர்கள் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் ஊழல், ஆண்-பெண் உறவுகள்-திருமண பந்தங்களில் ஏற்பட்டுள்ள உரசல்கள் மற்றும் விபரீதங்கள் போன்ற பல புதிய சவால்களைத்
திரு அவை எதிர்கொள்கிறது. பயணத்தின் ஆபத்துகளை நாம் புரிந்திருந்தாலும், நம்மை வழிநடத்தும் திருத்தந்தை அந்தச் சவால்களைச் சந்திக்கும் தகுதியும் தலைமைத்துவமும் பெற்றவராகவே விளங்கினார்.
உரோமாபுரி
மாளிகையின் நான்கு சுவர்களுக்குள் பாதுகாத்து வைக்கப்பட்ட புனித பொருளாகப் பாப்பரசர்கள் இருந்த காலம் போய், உலகின் தெரு வீதிகளில் உள்ளம் நிறைய கவலைகளோடும், கண்களில் நிறைய கண்ணீரோடும் காயப்பட்டு உயிருக்குப் போராடும் மனிதத்தைத் தூக்கி தன் மார்பில் சாய்த்து, நம்பிக்கை பால் ஊட்டி, மனித நேயம் வளர்க்கும் மகத்தான பணிதான் பாப்பரசரது பணியாக இருந்தது.
‘நீங்கள் யார்?’ என்று கேட்டால், ‘நான் ஒரு பாவி’ என்று தாழ்ச்சியுடன் தன்னை அடையாளப்படுத்துகிற ஒரு பாப்பரசராக நம் திருத்தந்தை விளங்கினார். ஊழல், உலகம் வெப்பமயமாதல், இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு இடையே உலகம் முழுவதும் இருக்கின்ற பெரும் இடைவெளி, ஓரினச் சேர்க்கையாளர்களின் உளவியல் பிரச்சினைகள், கத்தோலிக்கக் குருத்துவத்தால் கசக்கி முகரப்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள், கத்தோலிக்கத் திரு அவையின் மேல்மட்ட நிர்வாகங்களில் இருக்கிற குளறுபடிகள்... என்று எல்லாவற்றைப் பற்றியும் உணர்வுப்பூர்வமாகத் தன் உள்ளத்தைத் திறந்து பேசும் ஒரு சமூக நீதிப் போராளியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி அமைந்திருந்தது.
தனது
தலைமையிலான திரு அவை ‘ஏழை மக்களுக்கான ஏழைத் திரு அவை’ என்று நமது திருத்தந்தை கூறியபோது, நமது கண்கள் நன்றியின் கண்ணீரால் நனைந்தன.
இத்தனை
நல்ல பண்புகளைத் தாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு நம் ஒட்டுமொத்தத் திரு அவைக்கும் அளவில்லாத துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதர-சகோதரிகளாக ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அவர் விதைத்துச் சென்ற விதையானது நல்லெண்ணம் கொண்ட நம் அனைவரின் உள்ளங்களிலும் தொடர்ந்து முளைக்கும் என்பதில் ஐயமில்லை!