அனிதாவிற்குக் காலை படுக்கையிலிருந்து எழும் போதே ‘இந்த நாள் நன்றாக இருக்கும்’ என்று தோன்றவில்லை. அவளின் உள் மனம் ஏனோ எச்சரிக்கை மணியை ஒலித்தது. அவசரம் அவசரமாகக் காலை வீட்டு வேலை, அசௌகரியமான பேருந்துப் பயணம், கல்லூரி மாணவர்களின் அலப்பறைகள் இவையெல்லாம் மிடில் கிளாஸ் அனிதாவிற்குப் புதிதல்ல. தனியார் கல்லூரிப் பேராசிரியைப் பணி என்றபோதும், அதிலே அனிதாவிற்கு மகிழ்ச்சியில்லை. தந்தையை இழந்த பிறகு குடும்பம் வறுமையில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக அவ்வேலையினைத் தொடர வேண்டியிருந்தது. அதிலும் குறிப்பாக, தேர்வில் சில சீனியர் மாணவர்கள் ‘பிட்’ அடித்ததைக் கண்டுபிடித்து ‘ரிப்போர்ட்’ செய்ததிலிருந்து அவர்களின் பகையைச் சம்பாதிக்க நேர்ந்தது. அவர்களின் குறுகுறு பார்வை, இரட்டை அர்த்த கமெண்ட்ஸ்கள், நரிகளைப் போன்று அவளுக்குத் தெரியாமலே பேருந்தில் பின்தொடர்வது, வீட்டிற்கு முன்பாகக் கூட ஆக்ஸ்சிலேட்டரை முறுக்கிக்கொண்டு பைக்கில் வலம் வருவது... இவையெல்லாம் அப்பாவை இழந்திருந்த அனிதாவிற்குத் தர்மசங்கடத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தன.
வீட்டிலிருந்து
அனிதா இளமஞ்சள் நிற சேலை உடுத்தி வெளியேறும்போதே சூரியன் தன் காலைக் கதிர்களால் அச்சேலையைப் பட்டாடையாக்கியிருந்தது. வெண்டைக்காயை நிரப்பியிருக்கும் அதன் விதைகளைப்போல பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் என்று பேருந்தே நிரம்பியிருந்தது அன்று. கூட்டத்தில் யாரோ தன்னைத் தவறாகச் சீண்டியது அனிதாவிற்குத் தெரிந்தது. கூட்டத்தில் யாரைக் குற்றப்படுத்துவது? வழக்கம்போல பல்வேறு சீண்டல்களுக்கு ஆளாகும் பல பெண்களைப்போல மௌனம்
என்னும் முகம் அணிந்திருந்தாள் அனிதா.
வியர்த்து
விறுவிறுக்க நிறுத்தத்தில் வந்து நின்றது பேருந்து. அனிதா பேருந்தை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
“ஏம்மா!” அனிதா யாரோ கூப்பிட்டதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். ஒரு நடுத்தர வயது பெண், “எனக்கு ஊரு கோவில்பட்டியாக்கும். என் வீட்டுக்காரர் இங்கதான் வேலை செய்றார். பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கால் பண்ணச் சொன்னார். ஆனா, யாரோ கூட்ட நெரிசலில் என் போனைத் திருடிட்டாங்க. உன் போன் கிடைக்குமா? ஒரு கால் பேசிக்கிட்டு குடுத்திடுறேன்.”
அனிதாவிற்கு
அந்தப் பெண்ணைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “இதோ, பேசிக்கிட்டு கொடுங்கம்மா” என்று
பாசத்தோடு கொடுத்தாள். அந்த நடுத்தர வயது பெண்மணி யாருடனோ பேசி விட்டுப் போனைத் திருப்பி அனிதாவிடமே தந்தாள். “ரொம்ப தேங்க்ஸ்மா...” என்று சொல்லி விட்டுச் சென்றாள். யாருக்கோ உதவி செய்திருக்கிறோம் என்ற மனமகிழ்ச்சியில் கல்லூரி நோக்கி உற்சாகமாக நடந்தாள் அனிதா.
அன்று
கல்லூரி நுழைவாயில் வழியாகச் செல்வது என்பது ஏதோ பிளந்து திறந்திருக்கும் ஹிப்போ பொட்டாமசின் வாய்க்குள் நுழைவதுபோல் இருந்தது. வழியில் மரத்தடியில் அமர்ந்திருந்த சில சீனியர் மாணவர்கள் அனிதாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். ஒருவரோடு ஒருவரின் காதில் ஏதோ கிசு கிசுத்துக்கொண்டனர். அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, அனிதா தொடர்ந்து நடந்தாள்.
பேராசிரியர்கள்
அறையில் வந்து தனது இருக்கையில் அமர்ந்ததும் அனிதாவிற்குத் தெரியாத நபரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.
“நான் நீங்க ஒரு பெண்ணோடு பஸ்சில் வந்தீங்கல, அவங்க கணவர் பேசுறேன்.”
“சொல்லுங்க சார்” என்றாள் அனிதா.
“இந்த நம்பரிலிருந்துதான் அவள் எனக்குப் போன் பண்ணினா. ஒரு பெண்பிள்ளை கிட்ட போன் வாங்கிப் பேசுறேன்னா. ஆனா, நான் வந்து பஸ் ஸ்டாண்டுல பாக்குறேன், அவளைக் காணல. சுத்திச் சுத்தி அலைஞ்சு தேடி பாத்தாச்சு. எங்கயும் அவளைக் காணல. எனக்கு உன்மேலதான் சந்தேகமா இருக்கு. என் பொண்டாட்டிய எங்க கடத்தி வச்சிருக்க?”
அனிதாவிற்கு
ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. கல்லூரி மாணவர்கள் வராந்தாவில் இங்கும் அங்குமாக நடக்கும்போது எழும் காலடிச் சத்தம் கூட மனத்தைத் தொடர்ந்து உலக்கையால் இடித்ததுபோல் இருந்தது அனிதாவிற்கு.
“சார்! என் போனை வாங்கித்தான் பேசினாங்க. ஆனா, அவங்க எங்க போனாங்கன்னு எனக்குத் தெரியலை.” அனிதாவின் பதில் அந்தக் கரகர குரல் மனிதருக்கு நம்பக்கூடியதாய் இல்லை.
“இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கிறீங்க? என் பொண்டாட்டி வீடு வரலனா உன்னைத் தேடி வந்து சாகடிக்கிறேன் பாரு.”
அனிதா
இதுபோல் கெட்ட வார்த்தை அர்ச்சனைகளைக் கேட்டதில்லை. உடனேயே அந்த நம்பரை ‘பிளாக்’ செய்தாள். உதவி செய்யப் போய் இப்படி ஆகிவிட்டதே என்று யோசிக்கும்போதே மற்றொரு போன் அழைப்பு வந்தது. இப்போது அது வேறு நம்பர். “வீட்டுக்கு வாரேன் என்று சொன்ன என் பொண்டாட்டியைக் காணல. இந்த நம்பர்ல இருந்துதான் அவ பேசினா. பஸ்
ஸ்டாண்டுல இருக்கேன்னு சொன்னா? என் பொண்டாட்டி மட்டும் வீடு வரல உனக்குச் சங்குதான்.”
இப்போது
பேசிய குரல் ‘கீச்’சென்றிருந்தது. அனிதா தான் ஒரு மோசமான கும்பலிடம் மாட்டிக் கொண்டதைப் புரிந்துகொண்டாள். அவளுடைய கண்கள், கதவைக் குடைந்து வெளியே பார்த்தன. தூரத்தில் மரத்தடியில் சில சீனியர் மாணவர்கள் அவள் அறையை உற்றுநோக்கிக் கொண்டே நின்றனர். அனிதாவின் கண்களுக்கு அவர்கள் நரிக்கூட்டமாகத் தெரிந்தனர்.
ஒரு
பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை ஓர் ஆணோ அல்லது ஒரு கும்பலோ நிழல்போல பின்தொடர்வது, அவரைக் குற்றப்படுத்தி எதற்கேனும் கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது மற்றும் தொடர் தொல்லை கொடுப்பதை ‘ஸ்டாக்கிங்’ என்கிறோம்.
இத்தகைய செயல் இணையம், சமூக ஊடகம் அல்லது திறன் பேசி (ஸ்மார்ட் போன்) வழியாக நடந்தால் அதனை ‘சைபர் ஸ்டாக்கிங்’ என்கிறோம்.
காதல் வயப்பட்டவன், பழி வாங்கும் உணர்வுள்ளவன், பொறாமைக்காரன், வக்கிரப்புத்திக்காரன், மனநோயாளன் ஆகியோர் வசதியாகச் சைபர் தளங்களில் தங்களை மறைத்துக் கொண்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தொடர் துன்புறுத்துதலை ஏற்படுத்தி வருகின்றனர்.
தேசியக்
குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுப்புடி, இந்தியாவில்
2020 முதல் 2023 வரை 2,051 சைபர் ஸ்டாக்கிங் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவுகள் 66E, 67 மற்றும்
இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354D -இன்படி
சைபர் ஸ்டாக்கிங் குற்றமாகக் கருதப்படுகின்றது.
பெண்களுக்கு
மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றமாக மட்டும் சைபர் ஸ்டாக்கிங்கை நாம் இன்று பார்த்துவிடக் கூடாது. ஆண்களும் இளம் மாணவர்களும் கூட பல்வேறு விதங்களில் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆபாசமாகப் பேசுவது, நிர்வாணமாகச் சித்தரித்து போட்டோ அல்லது வீடியோ மார்ஃபிங் செய்து அச்சுறுத்துவது, தெரிந்தவர்களாக இருப்பின், ஏற்கெனவே நெருக்கமாய் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ அல்லது வீடியோக்களைக் காட்டி “பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டானு போட்டு உன் பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாருக்கும் சென்ட் பண்ணுறேன் பாரு” என்று மிரட்டிப் பணம் பறிப்பது அல்லது தேவைக்கு இணங்க வைப்பது... இவையெல்லாம் நம் வாழ்விலோ அல்லது நம் நண்பர்களின் வாழ்விலோ தினந்தினம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய
அமில வீச்சும், பாலியல் அத்துமீறல்களும் இன்று சமூக ஊடகங்களில் அரங்கேறுகின்றன. களமும் கருவியும் வேறென்றாலும், காரணம் ஒன்றாகவும் அது ஏற்படுத்தும் வலி அதிகமாகவும் இருக்கின்றது.
நரிகள்
இருக்கும்வரை அவற்றின் ஊளைச் சத்தமும் இருக்கத்தான் செய்யும் என்னும் மனநிலை கொண்டிராமல் பெண்களும் குழந்தைகளும் சைபர் ஸ்டாக்கிங்கினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களும், அதனை மனத்திலேயே அடைகாத்திடாமல் பெற்றோரிடம், நண்பர்களிடம், ஆசிரியர்களிடம் அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம், தான் பாதிக்கப்பட்டிருப்பதைக் கூற வேண்டும். தேவை ஏற்படின், சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறையிடுதல் அவசியம்.
அனிதாக்களும்
அமுதாக்களும் மௌனித்திருக்கும் வரை நரிகளின் எண்ணிக்கையும் அதன் ஊளைச்சத்தமும் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.