அகிலனின் பெயர் பள்ளியின் கரும்பலகையில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இதுவரையில் அகிலன் என்ற பெயர் பள்ளியில் ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஓட்ட டௌசர், கருவண்டு, கூமுட்ட, ஊமை என்று பள்ளியில் பல பெயர்கள் அவனுக்கு உண்டு. கரும்பலகையில் அவன் பெயர் இடம்பெற்றதால், அவன் ஏதோ மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான் என்று நினைத்துவிட வேண்டாம். பள்ளி அரையாண்டுத் தேர்வில் பக்கத்திலிருந்தவனைப் பார்த்துக் காப்பி அடித்துவிட்டான். இரண்டு மாணவர்களின் தேர்வுத் தாள்களிலும் ஒரே மாதிரியான விடை எழுதப்பட்டிருந்தது. ஒருவன் ஒரு பிழை போட்டிருந்தால், மற்றவனும் அதே பிழையை எழுதியிருந்தான். தலைமையாசிரியர் எடுக்கின்ற பாடம் என்பதால் இந்தப் பெரிய தவறு வெளிச்சத்திற்கு வந்தது. இதில் யார் யாரைப் பார்த்துக் காப்பி அடித்தனர் என்பது இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில் விமல், “அகிலன்தான் என்னைப் பார்த்து எழுதினான்” என்று கூறிவிட்டான்.
அகிலன்
வழக்கம்போல் வாய் பேசவில்லை. எல்லார் முன்பாகவும் கூனிக்குறுகித் தலையைக் தொங்கவிட்டு அப்படியே கைகளைக் கட்டிக்கொண்டு வெறிநாய் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட முயலைப்போல அசையாது அழுதுகொண்டே நின்றான். தலைமையாசிரியர் கண்டிப்பாகக் கூறிவிட்டார் “நீ உன் பேரன்ட்சைக்
கூட்டிட்டு வரும் வரை உன் பெயர் ஸ்கூல் மெயின் பிளாக் போர்ட்ல ‘காப்பி அடித்தவன் அகிலன்’னு எழுதப்பட்டிருக்கும்.”
அகிலன்,
வீட்டில் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. வகுப்பாசிரியர் அகிலனிடம் கேட்டேவிட்டார் “அதான் உன் பேரன்ட்சைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காருல ஹெட்மாஸ்டர்... கூட்டிட்டு வரவேண்டியதுதானே.” அகிலன்
பேசாதிருந்தான். அவனுடைய இதயத்தின் மௌன அறைக்குள் வலிகள் நிறைந்த கதைகள் அடைப்பட்டுக் கிடந்தன.
அகிலன்
ஏழாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவன். அவனுக்குக் கிராமமே இல்லை. அவனிடம் ‘உன் ஊர் பெயர் என்ன?’ என்று கேட்டால், அவனால் சொல்ல முடியாது. ஏனெனில், அவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு செங்கல் சூளைக் குடியிருப்பில்தான். குடிசை வீடுகளாலும் பிளக்ஸ் கூரை வீடுகளாலும் அந்த வெட்டவெளிக் குடியிருப்பு அமைந்திருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் கொத்தடிமைகளாக அவனுடைய குடும்பமே மீசைக்காரனிடம் பல ஆண்டுகளாக வேலை
பார்த்து வந்தது. அகிலனுடைய அக்கா, அம்மா, அப்பா ஆகியோர் மற்றவர்களைப்போல அந்தச் செங்கல் சூளையில்தான் வேலை பார்த்து வந்தனர். அகிலனுக்கு மூத்தவன் கைக்குழந்தையாக வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டு இருக்கும்போது எலி கடித்து இறந்துவிட்டான். இதனால் மீசைக்காரனுக்கு ஒரு குற்றவுணர்வு கொஞ்ச நாள் இருந்தது. அகிலனின் அப்பா மீசைக்காரனிடம் மன்றாடி தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பச் சம்மதம் வாங்கினார்.
“டேய் ராசா! நல்லா படிச்சு, நல்ல பெயர் வாங்கணும்டா” என்று
அவர் அடிக்கடி அகிலனிடம் கூறுவார். அகிலனின் அக்கா அகிலாவுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தும். “ஆம்பளனா என்ன அவனுக்குக் கொம்பா மொளச்சிருக்கு? அவன மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, என்ன இந்த வெயில் காட்டுல மீசைக்காரனுகிட்ட கஷ்டப்பட வைக்கிறீங்க?” என்று அடிக்கடி அழுதுகொண்டு குறைபடுவாள்.
இரண்டு
மூன்று நாள்களாகியும் அகிலனின் பெயர் அழிக்கப்படாமல் கரும்பலகையில் இடம்பெற்றிருந்தது. இதுவரை அகிலனைப் பாவம் என்று பார்த்தவர்கள், இப்போதெல்லாம் அவனை ஏளனமாக ஒரு குற்றவாளியாகப் பார்த்தனர். இது அகிலனுக்குப் பிடிக்கவே இல்லை. இப்போதெல்லாம் அவன் அருகில் வந்தால் கூட யாரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ‘காப்பி அடித்தவன் அகிலன்’ என்ற கரும்பலகை வாக்கியமும், ‘டேய் ராசா! நல்லா படிச்சு நல்ல பெயர் வாங்கணும்டா’ என்ற
தன் அப்பாவின் வார்த்தைகளும் அகிலனின் மனத்தில் வந்து வந்து சென்றன. தன்னால் தன் பெயரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று எண்ணி வருந்தித் தவித்தான் அகிலன்.
அன்று
பள்ளி முடிந்து ஓட்டம் பிடித்தவன்தான்... அதன் பிறகு பள்ளிக்கூடம் பக்கமே அவன் வரவில்லை. பள்ளியிலிருந்து யாரும் அவனைத் தேடவுமில்லை. பள்ளிக்கூட கரும்பலகை மட்டும் அவனுடைய வருகைக்காக மழை, வெயில் பாராது காத்துக்கிடந்தது.
பள்ளியின்
கரும்பலகைபோல இன்று சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் சிலரின் வாழ்வைக் கெடுக்கின்றது. சிலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது. ஒருவருடைய பெயரை அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்போடு பலர் இணையத்தளங்களையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். யாருக்கும் தெரியக்கூடாது என்று பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனிப்பட்ட வங்கி விவரங்களையோ, போன் நம்பர்கள் அல்லது இமெயில் விவரங்களையோ, புகைப்படங்கள் அல்லது காணொளிகளையோ, ஆவணங்களையோ அந்த மனிதருக்கோ நிறுவனத்திற்கோ ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் வலைத்தளங்களில் பகிரும் செயலை ‘டாக்சிங்’
(Doxing or Doxxing) என்கிறோம்.
டிசம்பர்
2024-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ‘எப்.ஐ.ஆர்.’ வலைத்தளங்களில்
அனுமதியில்லாமல் பகிரப்பட்ட நிகழ்வை டாக்கிங்கிற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் தலைவர்களில் ஒருவர் முன்னணி நடிகர் ஒருவரின் சமயப் பின்னணியைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவருடைய முழுப்பெயரை அப்போதைய ‘டுவிட்டர்’
பக்கத்தில் வெளியிட்ட செயலையும் ‘டாக்சிங்’
எனலாம்.
‘டாக்சிங்’
ஒரு சைபர் குற்றமாகும். நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர், காதல் முறிவால் புறக்கணிக்கப்பட்ட காதலன், பண மோசடியால் ஏமாற்றப்பட்ட
நண்பர்களில் ஒருவன், சக நிறுவனத்தின் வளர்ச்சியைச்
சகித்துக்கொள்ளாத போட்டி நிறுவனம்... என்று இப்படி யார் வேண்டுமென்றாலும் ‘டாக்சிங்’
என்னும் குற்றச் செயலில் ஈடுப்படுவதுண்டு.
‘டாக்சிங்’
என்னும் சைபர் குற்றத்தை எதிர்கொள்ள நாம் நம் சைபர் பழக்கத்தை (Cyber-etiquette) ஆரோக்கியமானதாக
வைத்துக்கொள்ள வேண்டும். தெரியாத நபர்களின் மின்னஞ்சல் லிங்கை ‘கிளிக்’ செய்யாமல் இருப்பது, தனிப்பட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்யாமல் இருப்பது, ‘டிஜிட்டல் செக்யூரிட்டிக்கு’ அதிக
முக்கியத்துவம் கொடுப்பது, ஆன்லைன் சர்வேக்களைத் தவிர்ப்பது போன்ற பழக்கவழக்கங்கள் ‘டாக்சிங்’
போன்ற சைபர் குற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடும். பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள்
பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ அல்லது சைபர் கிரைம் காவல்துறையிடமோ தகுந்த ஆதாரத்தோடு தங்களின் நிலையை எடுத்துரைக்க முன்வர வேண்டும்.
கரும்பலகை
ஒன்றுதான்; ஆனால், அது பலரையும் கல்வியாளர்களாக, அரசியல்வாதிகளாக, அறிவியல் மேதைகளாக, தொழில்நுட்பக் கலைஞர்களாக மாற்றியுள்ளதுபோல, சமூக ஊடகப் பலகையினைச் சரிவரப் பயன்படுத்தினால் அதுவும் நம்மை உயர்ந்த இடத்திற்கே கொண்டு செல்லும். பள்ளியை விட்டு ஓடிய அகிலனைப்போல, இன்று யாரும் வாழ்க்கையை விட்டு ஓடிவிடாமல் இருக்க வழி செய்வோம்.