புனித வியாழன் - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் உச்சக்கட்டமாக விளங்கிய இறுதி மூன்று நாள் நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வின் நினைவு. இந்நாளின் திருவழிபாடு கீழ்க்காணும் ஐந்து பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
1) பாஸ்கா (கடத்தல்) உணவின்
நினைவு
எகிப்து
நாட்டில் பார்வோனுக்கு அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களான ‘அபிருக்களை’ அவ்வடிமைத்தளையிலிருந்து
மோசே மீட்டு, அடிமை விலங்கொடிப்பின் முன் சுவையாக நீசான் மாதம் 14-ஆம் நாள் இரவில் ‘அபிருக்களுடன்’ இணைந்து
கொண்டாடிய பாஸ்கா உணவின் நினைவே இந்நிகழ்வு.
கி.மு. 1330-களில் உலகெங்கும் இருந்த அரசுகளில் எல்லாம் பேரரசாக விளங்கியது எகிப்து. அந்நாட்டில் பார்வோனுக்கு அடிமைகளாக வாழ்ந்த ‘அபிருக்கள்’ என்று
அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களோ இறைவன் யாவேயின் துணை கொண்டு மோசேயின் தலைமையில் பார்வோனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பினர்.
இறுதியாக, பார்வோனின் அடிமைத் தளையிலிருந்து இஸ்ரயேல் மக்களை மோசே மீட்டெடுத்த நீசான் மாதம் 14-ஆம் நாள் இரவில் அவர்கள் தங்கள் அடிமை விலங்கொடிப்பின் முன் சுவையாகப் பாஸ்கா உணவு உண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்கள். பாஸ்கா உணவை உண்டபின் எகிப்தை விட்டுப் புறப்பட்டார்கள். தங்கள் விடுதலை வாழ்விற்கு மிகப் பெரும் தடையாகத் தங்கள் முன் நின்ற செங்கடலை மாட்சி மிகு யாவேயின் துணை கொண்டு கடந்தார்கள். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதன் அடையாளமே புனித வியாழன் அன்று நினைவு கூரப்படும் பாஸ்கா உணவுக் கொண்டாட்டம்.
2) இறுதி இரவு விருந்தின்
நினைவு
தமது
இவ்வுலக வாழ்வை முடிக்கும் தருணத்தில் இயேசு தம் அன்புச் சீடர்களுக்குக் கொடுத்த இறுதி இரவு விருந்தின் நினைவு இது.
இயேசு
தாம் இவ்வுலகில் வாழ்ந்த போது பல்வேறு விருந்து குழுமங்களில் விரும்பி கலந்துகொண்டார். பரிசேயர்கள், பணக்காரர்கள் மட்டுமின்றி ஆயக்காரர்களும் இயேசுவை விருந்துக்கு அழைத்தனர். பாவிகள், சாமானியர்கள், பெண்கள் எனப் பலதரப்பட்டோரும் அவ்விருந்துகளில் கலந்து கொண்டனர். இயேசுவும் பசியோடு இருந்த மக்களுக்குப் பசியாற உணவு வழங்கினார். தமது இவ்வுலக வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வரப்போவதை உணர்ந்த இயேசு ஏறக்குறைய கி.பி. 29-ஆம்
ஆண்டின் வசந்த காலத்தில் அவ்வாண்டு பாஸ்கா விழா நாளாகிய வியாழக்கிழமை அன்று மாலை பாஸ்கா உணவு உண்ண எருசலேம் மலையின் தென்பகுதியில் அமைந்த சீயோன் மலை உச்சியில் இருந்த மேலறையில் தம் சீடர்களுடன் பந்தி அமர்ந்தார். அது இயேசுவுக்கு இவ்வுலகின் இறுதி இரவு விருந்தாகவும் சீடர்களுக்கு இயேசு கொடுத்த பிரியாவிடை விருந்தாகவும் அமைந்தது.
3) நற்கருணை நிறுவப்பட்டதன்
நினைவு
இன்றுதான்
இயேசு நற்கருணையை நிறுவி, அக்கொண்டாட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தும் அருள்பணி வாழ்விற்கும் அச்சாரமிட்டார். எனவே, இந்நாள் அருள்பணியாளர்கள் நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி வாழ்வின் மேன்மையை உணர்ந்து இறைவனுக்கு நன்றிகூறும் பெருநாள் இது.
இந்நாளில்
இயேசு, தம்மைப் பின்தொடர்ந்த சீடர்களுக்கெல்லாம் ஒப்பற்ற ஒரு நினைவை விட்டுச் சென்றார். பாஸ்கா உணவுக்காக ஏற்பாடு செய்திருந்த அப்பத்தைத் தம் கைகளில் எடுத்துச் சீடர்களுக்குக் கொடுத்து, ‘தம் உடல்’ என்றும், திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தையும் எடுத்து, ‘தம் இரத்தம்’ என்றும் கூறினார். அதைத் தம் நினைவாகச் செய்யுமாறும் அவர்களைப் பணித்தார். எனவே இந்நாள் ‘உலகம் முடியும்வரை நான் எந்நாளும் உங்களோடு இருப்பேன்’
(மத் 28:20) என்ற இயேசுவின் கூற்றுக்கு முழு வடிவம் கொடுக்கும் நாளாயிற்று.
4) பாதம் கழுவும் நிகழ்வின்
நினைவு
இயேசு
தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, தாமும் தம்மைப் பின்பற்றுபவர்களும் தொண்டாற்றும் பணியாளர்களாக இருப்பதிலே பெருமை கொள்ள வேண்டும் என உணர்த்திய பாதம்
கழுவும் நிகழ்வை நினைவுகூரும் பொன்னான நாள் இந்நாள்.
“தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்தவர் இயேசு”
(பிலி 2:6-8). “உங்களில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும்; உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத்
20:26-27) என்று கூறியவரும் அவரே. “நான் தொண்டு ஏற்பதற்கல்ல; தொண்டு ஆற்றுவதற்கே வந்தேன்”
(மத் 20:29) என்றும் உறுதிபடக் கூறினார். தலைவர்களாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தொண்டாற்றவும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்.
5) தலைமைச் சங்க விசாரணைக்கு
உட்படுத்தியதன்
நினைவு
இயேசுவைக்
கொலை செய்ய வேண்டும் என்னும் சதித்திட்டம் தீட்டிய யூதத் தலைவர்கள் யூதாஸ் இஸ்காரியோத்துவின் துணையோடு இயேசுவைக் கெத்சமனித் தோட்டத்தில் கைது செய்து இரவு முழுவதும் அவரைத் தலைமைச்சங்க விசாரணைக்கு உட்படுத்தியதின் நினைவு இன்று.
வியாழன்
இரவைக் கெத்சமனித் தோட்டத்தில் கழிக்க வந்த இயேசுவுக்கு அவ்விரவைத் தூங்கா இரவாகவே யூதாஸ் மாற்றிவிட்டான். கோவில் பாதுகாவலர்களின் துணை கொண்டு யூதத் தலைவர்கள் இயேசுவைக் கைது செய்து, அன்னா, அவரது மருமகன் கயபா மற்றும் தலைமைச்சங்கம் என இரவு முழுவதும்
அவரை விசாரணைக் கைதியாக அலைக்கழித்தனர். நாற்பதற்கு ஒன்றுக்குக் குறையக் கசையடி கொடுத்து, அவரை நையப் புடைத்தனர். ‘எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போனாலும் நான் ஒருபோதும் உம்மை விட்டு ஓடிப்போக மாட்டேன்’
என்று வாக்குறுதி தந்த பேதுரு, இயேசுவின் கண் முன்னாலேயே ‘நான் அவரை அறியேன்’ என்று மூன்று முறை மறுதலித்தார். இவ்வாறு கசையடியாலும் கேள்விக்கணையாலும் இயேசுவைத் துளைத்தெடுத்து விசாரணை செய்ததின் நினைவு நாள் இது.
வரலாறு படைத்த
புனித
வியாழன்
இந்நாளில்தான்,
தலைமைக் குருவின் வீட்டில் வைத்து இரவோடு இரவாக இயேசுவின்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைத் தயாரிக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கைகூடி வந்தது. யூதர்களை மீட்பதற்காகவே இம்மண்ணகத்தில் பிறந்த இயேசுவின்மீது ‘மனிதக் கையால் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத கோவிலை மூன்று நாள்களில் கட்டுவேன்’
(மாற் 14:58) என்றும், ‘இறைமகன்’
(மத் 27:43) என்றும் கூறினார் என்னும் குற்றப்பழிகளைச் சுமத்தி அவரை யூதர்களுக்கு எதிராகத் திசை திருப்ப முடிந்தது. மேலும், இயேசு ‘சீசருக்கு வரி செலுத்தக்கூடாது’ (லூக் 23:2) மற்றும் ‘தாமே மெசியாவாகிய அரசன்’
(லூக் 23:2) என்றும் கூறினார் என்னும் பொய்ச்சான்றுகளைச் சுமத்தி அவரை உரோமையருக்கு எதிராகத் திசை திருப்பும் நாளாகவும் புனித வியாழன் அமைந்தது.
‘இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி... இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்’ என்று
இயேசுவைச் சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான் (யோவா 1:29). பாஸ்கா விழாவில் பலி கொடுக்கப்படும் செம்மறி ஆட்டுக்குட்டியைப் போன்று உலக மக்களின் பாவங்களுக்காக இயேசு கல்வாரியில் சிலுவை மரணத்தை ஏற்றுப் பலியாகப் போகின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது இப்புனித வியாழன். அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து, பார்வோனின் ஆதிக்க விலங்கை உடைத்தெறிந்து முரசு கொட்டி நிற்கின்றது இப்புனித வியாழன்!
காலடித்
தொட்டுத் தொண்டாற்றுவதும் பாதம் பணிந்து பணியாற்றுவதும் இயேசுவின் சீடர்களுக்கான தனித்தகுதிகள் என எக்காள முழக்கமிடுகின்றது
இப்புனித வியாழன்!
சோகப்பாடல்
இசைத்து, முகாரி இராகமீட்டிய இப்புனித வியாழனே வெகுவிரைவில் பூபாள இராகத்துடன் பிறக்கப் போகும் புதுப்பாடலுக்கான தொடக்கப் புள்ளியே!