சென்னை ‘ஏயர் N~h’ 2024, அக்டோபர் மாதம் மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது. மெரினா கடற்கரையில் புறாக்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு தானியங்கள் தரையில் சிதறிக் கிடப்பதுபோல ஏராளமான மக்கள் கூட்டம் கடற்கரையில் திரண்டிருந்தது. உச்சி வெயில் தலையைப் பிளக்க, மணல்சூடு காலை வறுத்தெடுக்க கடலை நோக்கி ஓடினேன். கடல் தண்ணீரில் கால் நனைத்ததுமே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சிலர் கையில் குடைகளோடும், தண்ணீர் பாட்டிலோடும் தயார் நிலையில் வந்திருந்தனர். ஒரு சிலர் என்னைப்போல முன்தயாரிப்பு இல்லாமல் வந்திருந்தனர்.
‘ஏயர் N~h’ தொடங்கியதுமே
பாராசூட்டில் வீரர்கள் தேசியக்கொடி தாங்கி வந்திறங்கினர். அணிவகுத்துப் பறக்கும் பறவைகள் புகை கக்கிச் செல்வது போன்று இயந்திரப் பறவைகளின் அணிவகுப்பு அங்கு வட்டமடித்துக் கொண்டிருந்த பறவைகளுக்கே பிரமிக்கத்தக்கதாய் இருந்தது.
இயந்திரப்
பறவைகளை இயற்கை பறவைகள் வீழ்த்திவிடும் என்பதாலோ என்னவோ பட்டாசு வெடிக்கச் செய்து அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மற்றும் காகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி விரல் நீட்டி வானூர்திகளைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தந்தைமார்கள், கடல்நீரில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த கரையேறிய குழந்தைகள், களைத்துப்போய் தாயின் சேலை நுனியைப் பிடித்துக் கொண்டு விழாமல் நின்ற சிறார்கள், ஆரத்தழுவக் காத்திருந்த கடல், உச்சிமுகர்ந்து வியர்வை வழியச் செய்த வெயில், ‘காற்றே வீசு’ என்றிருந்த மனம், மௌனத்தைக் கலைத்துச் சென்றது வானில் சீறிப்பாய்ந்த இரபேல் விமானங்கள். மனம் புத்துணர்வு பெற்றது. ‘அடுத்தென்ன?’ என்று ஏங்கித் தவித்தது. மீண்டும் அதே வெயில், அதே உஷ்ணம், அதே மௌனம், அதே வியர்வை, அதே கூட்ட நெரிசல் அத்தனையும் கொத்திச் சென்றது தீ கக்கும் இயந்திரப்பறவை.
‘அடுத்து என்ன?’ என்று கேட்டு, வானம் பார்த்து நின்றது என் மனம்.
‘அது என்ன?’ என்று தொடங்கி, ‘அடுத்து என்ன?’ என்று ஏங்கித் தவிப்பதுதான் மனித மனத்தின் இயல்பாக உள்ளது. இதனை உளவியலாளர்கள் ‘நெஸ்டிங்’
(Nexting) என்கின்றனர்.
சமூக ஊடக உலகில் ‘நெஸ்டிங்’
என்பது மனித மனத்தில் ‘அடுத்து என்ன?’ என்ற ஆர்வத்தைக் கிளர்ந்தெழச் செய்து, சமூக ஊடக வலைப்புழுக்களாக நம்மை மாற்றிவிடுவது. சமூக ஊடகங்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது நமது உடலில் டோபோமைன் (dopomine) என்ற மகிழ்ச்சி அமிலம் சுரந்து, அந்த வெகுமான சுழற்சிக்குள் (reward loop) நம்மைச் சிக்கவைத்து
விடுகின்றது.
ஒரு
வீடியோவைப் பார்க்கிறோம்; அது ஒருவித மகிழ்மயக்கத்திற்கு இட்டுச்செல்கின்றது. மீண்டும் உடலும் உணர்வும் அதே மகிழ்மயக்க நிலையை எதிர்பார்க்கின்றது. எனவே, மீண்டும் அடுத்த வீடியோவைப் பார்க்க வைக்கின்றது. இதுவே தொடர் செயலாகிப் பல மணி நேரம்
நம்மை அறியாமல் சமூக ஊடகங்களின் கைதிகளாக்கி விடுகின்றது. இந்தச் சுழற்சியின் சூத்திரத்தை அறியாமல் இருப்பது என்பது காளை மாட்டின் கண்ணுக்கு முன்பாகக் கட்டப்பட்ட புற்கட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காளை மாட்டின் ஓட்டத்திற்கு ஒப்பானது. புற்கட்டு கண்ணுக்குப் புலப்படுமே தவிர, அதனால் அந்தக் காளைக்கு எந்தப் பயனும் இல்லை. அந்தக் காளையினை ஓடச்செய்ய திட்டம் தீட்டிய வியாபாரிக்கே அதிகப் பயன். அதே சூத்திரத்தைப் பயன்படுத்தியே நம்மையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது நுகர்வுக் கலாச்சார உலகம்.
நம்மைச்
சமூக ஊடகங்களை அதிகமாக நுகரச் செய்வதால் வியாபாரம் பல தளங்களில் அதிகரிக்கின்றது.
பொருள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
பொருள் வியாபாரப்படுத்தப்படுகின்றது.
‘டேட்டா’ விற்பனையாகின்றது.
நம் சொந்தத் தரவுகள் விற்கப்படுகின்றன. நாம் வீடியோக்களைப் பகிர்வதால், நாமும் அந்த விற்பனையாளர்களின் ஊதியமில்லாப் பங்காளிகளாக்கப்படுகின்றோம்.
மனிதர்களின்
‘அடுத்து என்ன?’ என்று எதிர்பார்க்கும் இயல்பை நன்கு புரிந்துகொண்டு, அதிலே ஆதாயம் தேடும் ஒரு வணிக யுக்தியை அடையாளம் காண்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த ‘டோபோமைன்’
வெகுமதி சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
சமூக
ஊடகங்களை உள்சென்று ஆழ நுகர்வதற்குப் பதிலாக,
புறம் நின்று தேவைக்கு நுகர்கின்ற கட்டுப்பாடு நம்மில் வளர வேண்டும். போதையும் பொழுதுபோக்கிற்காக நுகரப்படுகின்ற போனும் ஒரே டோப்போமைனை (depomine) சுரக்கச் செய்கின்றது என்ற அறிவியல் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்ற அறிதல் வந்தால் அதனிடமிருந்து கொஞ்சம் விலகி இருப்பது (digital detox) நல்லது.
நாம்
பயன்படுத்தும் ஊடகங்கள், நம்மைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது அறிவு.