news-details
ஆன்மிகம்
மரியா காட்சி அனுபவங்கள் (திரு அவையின் புதிய விதிமுறைகள் – 02)

2. பொதுவான வழிகாட்டுதல்கள்

உரோமைப் பேராயம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி திரு அவை தனது உய்த்துணரும் கடமையைக் கீழ்க்காணும் நான்கு பொதுவான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் செய்கிறது:

1) சாட்டியுரைக்கப்பட்ட (Alleged) இயல்நிலை கடந்த நிகழ்வுகளில் இறைச் செயல்பாட்டின் அறிகுறிகளை உறுதிப்படுத்துதல்;

2) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களின் எண்ணங்கள் அல்லது எழுத்துகளில் நம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறிகளுக்கு முரணானது எதுவும் உள்ளனவா? என்று கண்டறிதல்;

3) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளிலிருந்து வெளிப்படும் ஆன்மிகக் கனிகளை அடையாளம் கண்டு, அவற்றை ஏற்கலாமா? பிரச்சினைக்குரிய கூறுகளிலிருந்து அவை சுத்திகரிக்கப்பட வேண்டுமா? அல்லது இடையூறு நேர்வுகளிலிருந்து இறைமக்கள் எச்சரிக்கப்பட வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதல்;

4) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளின் அருள்பணித் தரத்தைக் கணித்திட திரு அவைசார் அதிகாரத்திற்குப் (மறைமாவட்ட ஆயர், ஆயர்கள் பேரவை, நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம்) பரிந்துரைக்கலாமா? என்ற கேள்விக்குப் பதில் காணுதல்.

3. கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாட்டு முறைகள்

சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளைப் பற்றிய தகவலை மறைமாவட்ட ஆயர் பெறும் பொழுது, குறைந்த அளவு உண்மை இருக்கிறதா? என்பதைக் கண்டறியதானோ அல்லது பொருத்தமான தனது பதிலாள் வழியாகவோ கவனமுடன் விசாரணை நடத்த வேண்டும். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வு போலியானது என்றறிந்தால் அதற்கான அறிவிப்பைக் கொடுத்து அவ்விவகாரத்தை அத்துடன் முடித்துவிட வேண்டும். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வில் குறைந்த அளவு உண்மை இருப்பதாகத் தெரிந்தால், அடுத்து மறைமாவட்ட ஆயர் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அதில் ஓர் இறையியல் வல்லுநர், ஒரு திரு அவைச் சட்ட வல்லுநர், நிகழ்வின் இயல்புக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிபுணர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அக்குழு சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய அறிவியல், தொழில்நுட்ப, உளவியல்பூர்வமான சான்றுகளைச் சேகரிக்க வேண்டும். அச்சான்றுகளைக் கீழ்க்காணும் நேர்மறை மற்றும் எதிர்மறை வரன்முறைகளின்படி திறனாய்வு செய்ய வேண்டும்.

நேர்மறை வரன்முறைகள்

1) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களைப் பெற்றவர்கள் மற்றும் அவர்களது சாட்சிகளின் நன்னடத்தை மற்றும் நம்பகத்தன்மை;

2) இயல்நிலை கடந்த நிகழ்வும் நிகழ்வின் செய்தியும் திரு அவை மறைக் கோட்பாடு மற்றும் மரபுறுதி வழுவாமைக்கு முரணாக இல்லாதிருத்தல்;

3) நிகழ்வைப் பற்றி முன்னறிந்து கூற முடியாத இயல்பு; அது சம்பந்தப்பட்டவர்களின் திட்டமிடப்பட்ட செயலாக இல்லாதிருத்தல்;

4) தூய ஆவியாரிடமிருந்து வரும் கிறித்தவ வாழ்வின் கனிகளான செப ஆர்வம், மனமாற்றம் இறையழைத்தல், பிறரன்புப் பணிகள், பக்தி, திரு அவை உறவு ஒன்றிப்பின் வளர்ச்சி போன்றவை இந்நிகழ்வுகளில் வெளிப்படுகின்றனவா? என்று கண்டறிதல்.

எதிர்மறை வரன்முறைகள்

1) வெளிப்படையான மறைக்கோட்பாடு சார்புடைய தவறு இந்நிகழ்வில் இருப்பதற்கான சாத்தியம்;

2) திரு அவையில் பிளவை ஏற்படுத்தும் மனப்பான்மை;

3) நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புள்ள ஆதாயம், புகழ், சமூக அந்தஸ்து, சுய இலாபம், ஆதிக்கம்;

4) நிகழ்வுடன் தொடர்புள்ள மோசமான ஒழுக்கக் கேடு நடவடிக்கைகள்;

5) நிகழ்வில் சம்பந்தப்பட்டவரின் உளவியல் மற்றும் மனநோய் கோளாறுகள்;

6) காட்சி அனுபவங்களைப் பெற்றதாகக் கூறுவோரிடம் காணக்கூடிய மனப்பிரமை, மனப்பிறழ்வு, மனச்சிதைவு மற்றும் வெறித்தனம்.

மறைமாவட்ட ஆயர் மேற்கண்ட நேர்மறை / எதிர்மறை வரன்முறைகளைக் கையாண்டு, சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த நிகழ்வைக் கவனமுடன் ஆய்வு செய்து தனது தீர்ப்பை உரோமைப் பேராயத்திற்கு அனுப்ப வேண்டும்.

4. சாத்தியமான முடிவுகள்

சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களின் நிகழ்வைப் பற்றியத் தீர்ப்பை மறைமாவட்ட ஆயரிடமிருந்து பெற்ற பின்னர் கீழ்க்காணும் சாத்திய முடிவுகளை உரோமைப் பேராயம் செயல்படுத்தும்.

தடை இல்லை(Nihil Obstat)

தடை இல்லைஎன்ற முடிவு, சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த ஒரு நிகழ்வில் வெளிப்படும் தூய ஆவியானவருடைய செயல்பாட்டின் அறிகுறிகளுக்கு ஏற்புத் தெரிவித்தல் ஆகும். அதாவது, அந்த நிகழ்வின் அருள்பணிசார் பயன்களை உய்த்துணர்ந்து அதனைப் பரப்புவதை-திருப்பயணங்கள் உள்பட- மறைமாவட்ட ஆயர் ஊக்குவிப்பது ஆகும். ‘தடை இல்லைஎன்ற முடிவு அந்நிகழ்வை நேர்மறையாக அங்கீகரிக்கும் அறிக்கை என்று கருதமுடியாது; அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் பொருளாகாது; அதை எல்லாரும் ஏற்றுக்கொண்டு நம்பவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதும் ஆகாது; அதை நம்பினால்தான் ஒருவர் உண்மைக் கிறித்தவராக இருக்கமுடியும் என்று கருதவும் முடியாது. ஏனெனில், கிறித்தவ அருள் வாழ்விற்கும் மீட்பினை வழங்கும் நிரந்தர வழிமுறைகளுக்கும் அடிப்படையானவை நற்செய்திப் படிப்பினைகள். குறிப்பாக, நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு மட்டுமே (எபே 3:17; தெச 1:3). அதனால் ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்விற்கு நம்பிக்கையாளர் தங்களின் பற்றை விவேகமான முறையில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது என்பதுவேதடை இல்லைஎன்ற முடிவின் அர்த்தம் ஆகும்.

2) ‘கண்முன் காட்டுக (Prae Oclis Habeatur)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வில் முக்கிய நேர்மறை அறிகுறிகள் காணப்பட்டாலும், அதில் குழப்பங்கள் அல்லது சாத்தியச் சிக்கல்களின் அம்சங்கள் இருப்பதாக மறைமாவட்ட ஆயர் உய்த்துணர்ந்தால், அந்நிகழ்விலிருந்து ஆன்மிக அனுபவம் பெற்றதாகக் கூறுபவர்களிடம் கவனமாக உரையாடல் நடத்த வேண்டும் என்பதும், அந்நிகழ்வைப் பற்றிய எழுத்துப் பதிவுகள் அல்லது செய்திகள் இருப்பின், அவற்றின் மறைப்படிப்பினைத் தெளிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும்கண்முன் காட்டுகஎன்ற முடிவின் அர்த்தம் ஆகும்.

3) ‘கவனத்தில் கொள்க (Curatur)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த காட்சி அனுபவ நிகழ்வும் அதனை எண்பிக்கக்கூடிய ஆன்மிகக் கனிகளும் இணைந்துள்ளதாகத் தோன்றும் நிலையில், நம்பிக்கையாளர்களைக் கவலைக்குள்ளாக்கும் தடை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேவேளையில், அந்நிகழ்வை மறைமாவட்ட ஆயர் ஊக்குவிக்க வேண்டாம் என்று இந்த முடிவின் வழியாக அறிவுறுத்தப்படுகிறார்.

4) ‘ஆணையின் கீழ் (Sub Mandato)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்விற்கும் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தொடர்பில்லை என்றாலும், அதைத் தவறாகப் பயன்படுத்தி முறையற்றப் பொருளாதார ஆதாயம் அல்லது ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடும் ஆள்கள் அல்லது குழுக்கள் இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தின் அருள்பணிசார் நிர்வாகத்தை மறைமாவட்ட ஆயரிடமோ அல்லது அவரது உரிமைப் பதிலாளரிடமோ திருத்தந்தை ஆட்சிப்பீடம் ஒப்படைக்கும்.

5) ‘தடை செய்தலும் மூடுதலும் (Prohibetur et Obstruatue)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வில் பல நேர்மறை அம்சங்கள் இருப்பினும், அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் சிக்கல்களும் தீவிரமாக இருக்கலாம். அப்பொழுது மக்களுக்கு முறையான மறைக்கல்வி வழங்கி அவர்கள் உண்மையான ஆன்மிக நலன்களில் கவனம் செலுத்தும்படி இடத்து ஆயரிடம் உரோமைப் பேராயம் இந்த முடிவின் வழியாகக் கோரும்.

6) ‘இயல்நிலை கடந்த நிகழ்வல்ல என்ற அறிக்கை (Declaratio de Non – Supernaturalitate)

புனைவுக் காட்சியாளர்கள் அல்லது நம்பத்தகுந்த சாட்சிகளின் உண்மை வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வு இயல் நிலை கடந்ததல்ல என்று அறிக்கையிடும்படி இடத்து ஆயருக்கு உரோமைப் பேராயம் அனுமதி அளித்தல் இந்த முடிவின் அர்த்தம் ஆகும்.         

(தொடரும்)