news-details
சிறப்புக்கட்டுரை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த மனித வாழ்வில்அடுத்து என்ன நடக்கும்?’ என்ற புதிரும், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்ற வழியும் வாழ்வைச் சுவாரசியம் நிறைந்ததாக மாற்றுகின்றன. குழந்தையாய் பிறந்து, மழலையாய் தவழ்ந்து, இளமையில் நிமிர்ந்து, முதுமையில் நாணலாய் வளையும் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தால் நலமாயிருக்கும் என்ற பட்டியலை நிச்சயம் வைத்திருப்பார்கள்.

எனக்கு எந்த ஆசையும் இல்லை, நான் எதையும் எதிர்பார்ப்பது இல்லைஎன்று யாராலும் கூறமுடியாது. ஏனெனில், எதன் மீதும் பற்றில்லாத புத்தர் கூடபற்றில்லாமையில் பற்றுக் கொண்டிருந்தார்என்று கூறுவார்கள். மனிதன் பிறக்கும் நொடியில் அவனோடு பிறக்கும் அவனுடைய தேவைகள் வாழ்க்கை முழுவதும் அவனை இயங்க வைக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் விருப்பமும் ஒருவரையொருவர் பொறுத்து மாறுபடலாம்; ஆனால், அனைவருக்கும் விருப்பம் இருக்கும் என்ற உண்மை ஒருபோதும் மாறுபடாது. ஏனெனில், தேவைகளே மனித குல வளர்ச்சிக்கு அடிப்படை. இதைத்தான் ஆங்கிலத்தில்necesscity is the mother of inventionஎன்பார்கள். இதை மையமாக வைத்துச் சிந்திக்கும் பொழுது, மனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவது மட்டும்தான் வாழ்க்கையா? என்று தோன்றும். உண்மையில் மனிதன் வாழ்வதற்கான காரணத்தை அவனுடைய தேவைகளும் ஆசைகளுமே அளிக்கின்றன.

நம்முடைய இலட்சியமும், அதை அடைய நாம் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளில் நாம் அடையும் வெற்றிகள் மற்றும் தோல்விகளின் தொகுப்புமே வாழ்க்கையாகும். இலட்சியமில்லாத மனிதர் என இவ்வுலகில் யாரும் இருக்கவே முடியாது. கேலியாகக் கூற வேண்டுமெனில், எதன் மீதும் ஆர்வம் இல்லாத ஒரு மனிதன்கூட சோம்பித்திரிவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார் என்று கூறலாம். எனவே, இலட்சியமும் அதை மையமாக வைத்து ஏற்படும் ஆசைகளும் விருப்பங்களும் அனைவருக்கும் பொதுவானவை. அதேவேளையில், நம்முடைய தனிப்பட்ட சுய ஒழுக்கமே நம்முடைய இலட்சியத்தை மதிப்புமிக்கதாக மாற்றுகின்றது. நம்முடைய இலட்சியம் எத்தனை உயர்வானதாக இருக்கின்றதோ, அத்தனை மதிப்பை அது நமக்குப் பெற்றுத்தரும். நம்முடைய கனவுகளும் எண்ணங்களும் எப்பொழுதும் நம்மைச் சுற்றி மட்டும் இருக்குமெனில், அதனால் பிறருக்கு என்ன பலன்? சில சமயங்களில் பிறருக்குப் பயனளிக்காத இதுபோன்ற இலட்சியங்கள் பிறருக்கு ஆபத்து அளிக்கவும் நேரிடும். நாம் நமக்காகக் கனவு காணும்பொழுது மனிதனாகின்றோம்; பிறருக்காகச் சிந்திக்கும் பொழுது தலைவனாகின்றோம். எனவே, நமக்கும் நம் சுற்றத்திற்கும் பயன் அளிக்கும் வகையில் வாழ வேண்டும் என முனையும் பொழுது, நம்முடைய இலட்சியம் நலமானதாக இருக்கும்; நம் பாதையும் சிறப்படையும்.

அப்துல் கலாம் விண்வெளி வீரராக ஆசை கொண்ட பொழுது, தன்னுடைய ஆசையைத் தனக்கானதாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், நம் தேசத்தின் கனவாக அதை தகவமைத்தார். அதன் பலனை நாம் அனைவரும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். நாமும் நம்முடைய தனிப்பட்ட கனவுகளைப் பிறருக்கு உகந்ததாக மாற்றும் பொழுது அளப்பரிய மாற்றங்களை இச்சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றோம்.

இலட்சியம், கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் என நம்முடைய நிகழ்காலத்தைத் தொட்டுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் இந்த வார்த்தைகள் அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்டவையாகத்  தோன்றினாலும், இவற்றுக்கிடையில் பெரிய வேறுபாடு உள்ளது. கனவுகள் ஒரு மனிதன் தனது வாழ்க்கையை எப்படி உருவாக்க விரும்புகிறான் என்பதைக் குறிக்கும் கற்பனை உலகம். ஆசைகள் என்பது மனத்தின் ஆழ்ந்த உந்துதல். இது மனத்தின் உள்ளார்ந்த தேவைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கின்றன. விருப்பங்கள் ஒருவரின் இப்போதைய தேவைகளையும், மனத்தின் இச்சைகளையும் பிரதிபலிக்கும். இலட்சியம் என்பது தெளிவான ஒரு பயணத்திற்கான இறுதி இடம். இது மனிதன் தனக்காகத் தீர்மானித்த நோக்கத்தைக் குறிக்கிறது. மேற்குறிப்பிட்ட நம்முடைய வாழ்வின் நான்கு எதிர்காலப் பாதைகளில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றோம் என்பதே நம்மைத் தலைநிமிர்த்துகின்றது.

நாம் நம்முடைய கனவுகள், ஆசைகள் அல்லது விருப்பங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் அலைந்து நம் வாழ்வைச் சிறுமைப்படுத்துவதும், உயரிய இலட்சியத்தின் மூலம் நம் வாழ்வைப் பெருமைப்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது. நம்முடைய இலட்சியம் உயர்ந்ததாக இருந்ததால், நம்முடைய பாதை தெளிவடையும். நாம் பயணிக்கும் பாதை தெளிவானால், நம்முடைய அன்றாடத் தேவைகள் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும்இதன்மூலம் நம்முடைய அன்றாடத் தேவைகளும் எதிர்கால நோக்கமும் ஒன்றிணைந்து, ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவுக்கு வரமுடிகின்றது.

நம் வாழ்வில் நாம் நினைப்பவையெல்லாம் நடக்க, நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். நம்முடைய தற்போதைய வாழ்க்கை முறை நம்முடைய இலட்சியத்திற்கு உறுதுணையாக இல்லாததால்தான் நாம் நினைப்பவையெல்லாம் நம் வாழ்வில் நடைபெறவில்லை. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, கல்வி, பொருளாதார நிலை மற்றும் சமூக வாழ்வு என அனைத்துத் தளங்களுக்கும் ஏற்றவாறு நம்முடைய அன்றாட வாழ்க்கைமுறை மாற வேண்டும். தினமும் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழித்தல், சிக்கனமாகச் செலவு செய்தல், தினமும் படித்தல், நேர மேலாண்மையில் கவனமாக இருத்தல் போன்ற சில தினசரி ஒழுங்குமுறைகளுக்கு நாம் பழகும் போது, நம்முடைய இலட்சியப் பாதையில் எவ்வித இடையூறும் இருக்காது. நம் வாழ்வில் நாம் என்னவெல்லாம் நினைக்கின்றோமோ, அவையெல்லாம் நடக்கும்.

நடைமுறைக்குத் தகுந்தவாறு நம்முடைய உயரிய இலட்சியத்தை நோக்கி நேர்மையுடன் பயணித்து, நம் அன்றாட வாழ்வின் தேவைகளை நம் வாழ்க்கை பயணத்திற்கு ஏற்றார்போல் தகவமைக்கும் பொழுது, நாம் நினைத்தவை எல்லாம் நடக்கும். நாம் நினைக்காதவை நடக்கும் பொழுது அதை எதிர்கொள்ளும் சக்தியும் நம்மிடம் இருக்கும். நம்மை இயக்கும் நம் வாழ்வின் தேவைகளை நாம் இயக்கி, நாம் நினைப்பதையெல்லாம் செய்வோம்! ‘ஆகாயமே எல்லைஎனக் கொண்டு இவ்வுலகை வெல்வோம்!