news-details
சிறப்புக்கட்டுரை
சட்டவிரோதக் குடியேற்றமும் திரு அவை படிப்பினையும்

பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை அமெரிக்காவில் கடந்த 1868-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிறக்கும் சுமார் 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நாட்டுக் குடியுரிமையைப் பெறுகிறார்கள். இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த சுமார் 16 இலட்சம் பேருக்கும் அமெரிக்கக் குடியுரிமை கிடைத்திருக்கிறது.

கடந்த சனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பிறப்பு ரீதியிலான குடியுரிமையை இரத்து செய்ததோடு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை உடனடியாக வெளியேற்றவும் உத்தரவு பிறப்பித்தார். இவ்வாணை அடுத்த 30 நாள்களில் அமலுக்கு வரும் என்றார். இச்சூழலில், சனவரி 24-ஆம் நாள் அவரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது கூட்டாட்சி நீதிமன்றம். இருப்பினும், ‘என்ன நடக்குமோ?’ என்கிற பீதியில் பிறப்புக் குடியுரிமை நடைமுறை இரத்து செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கின்றனர்.

முன்கூட்டியே குழந்தை பெற்றுக்கொள்வதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து அதிகம். குறிப்பாக, வளர்ச்சி அடையாத நுரையீரல், நரம்பு மண்டல பாதிப்பு, எடைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதற்கிடையில், வாஷிங்டன் எபிஸ்கோப்பல் சர்ச்சின் முதல் பெண் பிஷப்பாக அறியப்படும் மரியன் எட்கர் பட்டே (Marianne Edgar Budde) டிரம்ப் பங்கேற்ற பிரார்த்தனையில்ஒரு நாட்டை வழிநடத்த அநீதத் தீர்ப்பு எழுதுவது ஆபத்தான வழிஎன்கிற ரீதியில் மறைச்செய்தி வழங்கினார். தற்சமயம் இதுவும் பேசுபொருளாகி உள்ளது.

ட்ரம்பின் நடவடிக்கை குறித்து கடந்த சனவரி 19-ஆம் தேதி, இத்தாலிய தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், “இது (ட்ரம்ப் நடவடிக்கை) உண்மையாக இருந்தால், இது அவமானகரமானது; ஏனெனில், ஒன்றும் இல்லாத ஏழை மக்களைத் திணறச் செய்யும். இதுவே பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி அல்லஎன்றார். “எல்லாரும் ஒரேவிதமான மனித மாண்போடு பிறந்திருப்பதால் இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. நிறம், மதம், திறமைகள், பிறப்பிடம், வசிப்பிடம் இவை போன்ற இன்னும் பல காரணிகளில் வேறுபாடு இருப்பதால், எல்லாருக்குமான உரிமைகளின் மீது ஒரு சிலருக்கு மட்டும் அதிகச் சலுகைகள் என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. ஒரு சமூகமாக நம் அனைவருக்கும், எல்லா மனிதர்களும் மாண்போடு வாழவும், அவர்களுடைய முழுமையான வளர்ச்சிக்குப் போதுமான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்யவும் கடமை இருக்கிறது (அனைவரும் உடன்பிறந்தோர் (FT), எண் 118).

குடியேற்றம் மற்றும் வெகுமக்கள் வெளியேற்றம் - இவ்விரு சூழ்நிலைகள் குறித்த திரு அவை அணுகுமுறையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

1. குறிக்கோளுடன் கூடிய வெளியேற்றம் (Targeted Deportation): ஒவ்வொரு நாடும் தத்த மது மக்களைக் காக்கும் பொறுப்பினைப் பெற்றுள்ளது. அதற்கு இடையூறாக வரும் எதையும் அகற்றுவது அதன் கடமை. இதனைத் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், “தோன்றும் பொதுநலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு குடியேற்றத்தை ஒழுங்குபடுத்துவது ஒவ்வொரு நாட்டின் உரிமையாகும் (2013) என்கிறார். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களை வெளியேற்றுவது என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் அமையும் வெளியேற்றமாகும். இது நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியம். “தேவையற்ற அந்நிய நாட்டுக் குடியேற்றம் என்பதைத் தவிர்ப்பதுதான் சிறப்பானது (FT, எண் 129).  குடியேற்றச் சட்டங்களும் சரியான நுழைவை உறுதிப்படுத்த வேண்டும்.

2. வெகுமக்கள் (கும்பல்) வெளியேற்றம் (Mass Deportation): கடந்த செப்டம்பர் 2024-இன் படி மொத்தம் 11.9 மில்லியன் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் அமெரிக்காவில் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பொருளாதார நெருக்கடி, போர், வன்முறை, மனிதக் கடத்தல் மற்றும் போதைக்கடத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கவே இங்குக் குடியேறியுள்ளனர். இவர்கள் இங்கு வேலை செய்கிறார்கள், சமூகத்திற்குப் பங்களிப்பு நல்குகிறார்கள், குடும்பங்களை உருவாக்குகிறார்கள். “குடியேற்ற உரிமையின் பயன்முறைகள் பொதுநலத்திற்குப் பாதகமாக இருப்பதாக இருந்தால் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்என்கிறார் புனித இரண்டாம் ஜான்பால். குடியேற்றக்காரர்கள் தங்கிய நாட்டின் சட்டங்களை மதிக்கவும், நன்றி தெரிவிக்கவும், அவர்களின் பொருளாதார மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும் கடமைப்பட்டுள்ளனர் (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி ஏடு (CCC), எண் 2241). “வளர்ந்து கொண்டே போகும் பொருளாதாரத் துறையோடு ஒருங்கிணைந்து செல்கின்ற இடப்பெயர் பண்பானது தனிமனிதரையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வையும் பாதுகாப்பின்றி இடருக்குள்ளாக்காத விதத்தில் முறைப்படுத்தப்பட வேண்டும்...” (இன்றைய உலகில் திரு அவை, எண், 66). ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பத்திற்காகச் சிறந்த வாழ்க்கையைத் தேடி மற்ற நாடுகளுக்குக் குடியேற உரிமை உள்ளது.” இத்தகையோரை வெளியேற்றும் நடவடிக்கை என்பதனை மனித மாண்புடன் அணுக வேண்டும் என்பதே திரு அவை நிலைப்பாடு.

குடிவரவு மற்றும் வெகுமக்கள் வெளியேற்றங்கள் மீது மேற்கொள்ளப்படும் கொள்கைகள் மனித மாண்பு மற்றும் ஒற்றுமை போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். ‘அனைவரையும் அனுமதிப்பதுஅல்லதுஅனைவரையும் வெளியேற்றுவதுஎன்ற நெறிமுறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சட்ட முறைப்படி நமது நாட்டிற்குக் குடியேற வரும் நபர்கள் மீதான நமது நடவடிக்கையும் வரவேற்பு (Welcome), பாதுகாப்பு (Protect), வளர்ச்சிக்குத் துணைசெய்தல் (Promote) மற்றும் சமூகத்தில் ஒருங்கிணைத்தல் (Integrate) என்பதாக அமைய வேண்டும். இதனையே 1888-இல் திருத்தந்தை 13-ஆம் லியோ எழுதியQuam Aerumnosaமுதல் 2020-இல் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியFratelli Tutti’ (அனைவரும் உடன்பிறந்தோர்) வரை வலியுறுத்துகின்றன. “குடியேறிகள் (சரியான விதத்தில் குடியேறிய சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்) ஓர் ஆசிர், சமூகச் செறிவூட்டலுக்கு ஒரு மூலாதாரம், மற்றும் ஒரு சமூக நிறைவை நோக்கி வளர்வதற்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை (FT, எண் 135). யாவற்றிற்கும் மேலாய், பிரெஞ்சு தத்துவஞானி பால் ரிகோயர் (Paul Ricoeur) சுட்டிக்காட்டுவதுபோல், “நாம் அனைவருமே இவ்வுலகில் குடியேறியவர்கள் (அகதிகள்) என்பதனையும் ஒருபோதும் மறவோம்! நம் உடலில், சிந்தனையில், செயலில் நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருப்பதால் நாமேநமக்கு-நமக்குள்அகதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எதுவும் யாருக்கும் நிலையானதல்ல!