news-details
ஆன்மிகம்
வாழ்வை எழுதுதல் (கண்டனையோ, கேட்டனையோ! – 28)

அமெரிக்க இறையியலாளர் ஜெரி மெக்ரெகோர் எழுதி,  மும்பை பவுலைன் பதிப்பகம் வெளியிட்டுள்ள40 Ways to Get Closer to Godஎன்ற ஆங்கில ஆன்மிகப் புத்தகத்தை அண்மையில் விரும்பி வாசித்தேன். சிறிய நூல். ஆற்றொழுக்கான ஆங்கிலம். திருவிவிலியச் சான்றுகளும், பிரபல ஆன்மிகவாதிகளின் மேற்கோள்களும், எழுத்தாளர் படித்தவர் என்பதைக் காட்டுகின்றன.  விரிவான 40 தலைப்புகள்; ஒவ்வொரு பிரிவின் கீழும் வாசகர் செய்து பார்க்கக்கூடிய பயிற்சிக் குறிப்புகள்... என ஜெரி மெக்ரெகோர் இந்த நூலை ஏறக்குறைய ஒருspirtual workbook-ஆன்மிக பயிற்சிக் கையேடு வடிவில் தந்துள்ளார்.  200 ரூபாய்  தாராளமாகக் கொடுக்கலாம்.

கடவுளை நெருங்கிச் செல்ல வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், அது Repidex-இன்முப்பது நாளில் ஆங்கிலம் கற்பதுபோன்று அவ்வளவு எளிதான செயல் அல்ல; ஆயுள்கால அர்ப்பணிப்பு தேவை. ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டும். நிறையத் தேர்வுகள் நடக்கும். விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும். பல நேரங்களில் இது கடினமாக உள்ளது. ஒரு கோர்வையாக நம்மால் ரொம்ப தூரம் செல்ல முடிவதில்லை. உலகம் அடிக்கடி குறுக்கே வந்துகேட்போடுகிறது. ‘சரிஎன்று ஓர் இடைவெளி எடுத்துக்கொண்டு போய், சில பலஇன்ப/துன்ப சுற்றுலாக்கள்அடித்துவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கடவுள் விலகிப் போய், கண்ணுக்கெட்டாத தொலைவில் நின்றுக் கொண்டிருக்கிறார். திரும்பவும் முதலிலிருந்தா? கடவுளை நெருங்கிச் செல்லும் ஆன்மிகப் பயணத்தில், நாம் தொடர்ந்து நீடித்திருக்க ஜெரி மெக்ரெகோர் 40 நடைமுறைக் குறிப்புகளை இந்நூலில் தருகிறார். அவற்றில் இரண்டு பற்றி மட்டும் சுருக்கமாக இங்கே...

நோன்பு: அறிவியலாளர்கள் அவ்வப்போதுஅழிந்து வரும் உயிரினங்கள்என்று ஒரு பட்டியல் வெளியிடுவார்கள். வாசித்திருக்கிறீர்களா? காண்டாமிருகம், பனிச்சிறுத்தை, கொரில்லாக்கள் என்று. அதுபோல அழிந்து வரும் நல்ல பழக்கங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், முதல் பத்து இடத்தில் நோன்பு கட்டாயம் இருக்கும். மற்றொரு பழக்கம், பெரியவர்களுக்குவணக்கம்சொல்வது (அழிந்து வரும் அருளடையாளம்-ஒப்புரவு). உடல் ஒறுத்தலுக்கு தமிழ்க் கலாச்சாரத்தில் முக்கிய இடம் உண்டு. முன்பெல்லாம் நிறைய பேர் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருப்பார்கள்இப்போது அது வழக்கொழிந்து விட்டது. மக்கள் நிறையச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைகள். பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற துரித உணவுகள் வருகைக்குப் பின், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இன்றுobesityஎன்று சொல்லப்படும் உடல் பருமன் பிரச்சினை, இந்தியாவில் ஒரு கொள்ளை நோய்an epidemic எனக் கூறுகிறார்கள். ஆசைப்படுவதை, ஆசைப்படும் நேரத்தில், ஆசைப்படும் அளவுக்குச் சாப்பிடுவது சுதந்திரம் அல்ல, அடிமைத்தனம். இதை foodies உணர வேண்டும்.

உணவு விளம்பரங்கள் அளவுக்கு, உடல் எடையைக் குறைக்கும் நிறுவன விளம்பரங்கள் பெருகிவிட்டன. அண்மையில் இரயிலில் பயணம் செய்தபோது, இரயிலின் சிறிய டாய்லட் கதவில் இது போன்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ‘உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?’ என்ற கேள்வியும், வயிறு தள்ளிய ஓர் ஆணின் அரை நிர்வாணப் படமும் போட்டு முகவரி, போன் நம்பர் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளம்பரம் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று இது ஒரு பணம் கொழிக்கும் தொழில். சிறப்பு உணவுகள், ஆலோசனைகள், உடற்பயிற்சிகள், சப்போர்ட் குழுக்கள் எனக் கலர் கலர் வார்த்தைகளில் ஆசை வலை விரித்து, பணம் பிடுங்குகிறார்கள்.   அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் மக்கள் 40 கோடி டாலர்களை எடையைக் குறைக்கச் செலவிடுகிறார்களாம். அந்தப் பயிற்சியாளர்கள் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறார்கள்? ‘உணவைக் குறை, நடஎன்பதைத் தவிர்த்து! ஓர் ஆன்மிகப் பயிற்சியாக நோன்பும் அதையே சொல்கிறது... ‘உணவைக் குறை; கடவுளை நோக்கி நட!’

திருவிவிலியம் நோன்பிற்கு முக்கிய இடம் கொடுக்கிறது. யூதப் பண்பாட்டில் அது ஒரு முக்கிய சமய, ஆன்மிகச் செயல்பாடு. கடவுள்மீது கவனத்தைக் குவிக்கும் அரசபாட்டைபாவக்கழுவாய் நாளில், இஸ்ரயேல் நாடு முழுவதும் மக்கள் நோன்பிருந்தார்கள். மத்தேயு 6:16-இன் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்: “நீங்கள் நோன்பு இருக்கும் போது....” என்று கூறி இயேசு ஆரம்பிக்கிறார். “நீங்கள் நோன்பு இருந்தால்.....” என்று கூறவில்லை. நோன்பு, ஒரு சாதாரண யூதச் செயல். இயேசு தம் பணிவாழ்வை ஆரம்பிக்கும் முன், பாலைவனத்திற்குச் சென்று நாற்பது நாள்கள் நோன்பிருக்கிறார். “அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லைஎன்று லூக்கா 4:2-இல் கூறப்பட்டுள்ளது. நோன்பும் இறைவேண்டலும் கைகோர்க்கும்போது, அது ஒரு வல்லமை மிக்க கருவி. “ஏன் இந்தப் பேயை எங்களால் ஓட்ட முடியவில்லை?” என்று சீடர்கள் கேட்கும்போது, இயேசு, “இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி, வேறு எதனாலும் வெளியேறாதுஎன்று மாற்கு 9:29-இல் கூறுகிறார்.

தொடக்கக்காலத் திரு அவை வாழ்விலும் நோன்பைப் பார்க்க முடிகிறது. திப 13-ஆம் பிரிவில், பவுலையும் பர்னபாவையும் பணிக்கு அனுப்பும் போது, “அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள். தங்கள் கைகளை அவ்விருவர் மீதும் வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்என்று கூறப்பட்டுள்ளது.

நோன்பு கடவுளை நெருங்கிச் செல்ல ஒரு முக்கிய வழி. உணவில் மட்டுமல்ல, பல வடிவங்களில் நோன்பு செயல்படுத்தப்படலாம். பொருள்களை வாங்கிக் குவிப்பது, அலங்காரம் செய்வது, ஃபேஸ் புக், ரீல்ஸ் போன்ற தளங்களில் மேய்வது, வீடியோ கேம்ஸ் ஆடுவது, புறணிப் பேசுவது.... என நம்மை ஆட்டுவிக்கும் எந்த இச்சையையும் சில காலம் உத்தரவாதமாகத் தவிர்த்து, அது ஏற்படுத்தித் தரும் sielnt space... அமைதி வெளியில், கடவுளைப் பற்றி சிந்திக்க முடிந்தால், அதுதான் நோன்பு. முயன்று பார்க்கலாம்.

ஆன்மிக நாள்குறிப்பேடு: ஜெரி மெக்ரெகோர் தன் நூலில் பரிந்துரைக்கும் மற்றொரு வழி, ஆன்மிக நாள்குறிப்பேடு எழுதுவது A spiritual diary! இன்றைக்கு யாரும் டைரி எழுதுகிறார்களா? என்று தெரியவில்லை. அப்பாயின்ட்மென்ட் மற்றும் நிகழ்வுளைக் கூட google calendar போன்ற செயலிகளில் குறித்துக்கொள்வது வசதியாக உள்ளது. ஆனால், கடவுள் டைரி எழுதுகிறார்... ஒவ்வொரு நாளும்! திபா 56:8-இல், “என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?” என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்கிறார். அந்தக் குறிப்பேட்டை வாய்ப்பு கிடைக்கும்போது வாசித்துப் பார்க்க வேண்டும்.

எதில் எழுதுகிறோம் என்பது முக்கியம் அல்ல; எழுதுவதுதான் முக்கியம்! தாளிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ... எதிலாவது எழுதி வையுங்கள். அதுதான் ஜெரி மெக்ரெகோர் கூறும் அறிவுரை.

பிரபல டச்சு ஆன்மிக எழுத்தாளர் ஹென்றி நோவன், “நான் தொடர்ந்து எழுதுகிறேன். எழுதுவதை எப்போதும் நிறுத்துவதில்லை. எழுத்தே என்னை உயிருடன் வைத்திருக்கிறது. என் எழுத்து, என்னிடமிருந்தே என்னை சற்று விலக்கி வைத்து, நான் ஆற்றாமையில் அமிழ்ந்து விடாமல் பாதுகாக்கிறதுஎன்று கூறுகிறார்.

எழுதச் சொல்லிப் பணிக்கிறது திருவிவிலியம். குறிப்பாக, பழைய ஏற்பாடு. ‘எழுதி வை... எழுதி வைஎன்று எத்தனை முறை கடவுள் திருவிவிலியத்தில் கூறுகிறார். விடுதலைப் பயணம் 17:14-இல் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதை நினைவு கூரும்படி ஒரு நூலில் எழுதிவை; ‘நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவைஎன்று கூறுகிறார். அபக்கூக்கு 2:2: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுதுஎன்று கூறுகிறது. திருவெளிப்பாடு 1:19-இல், வானதூதர் யோவானிடம், “எனவே, நீ காண்பவற்றை அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவைஎன்று கூறுகிறார்.

ஏன் எழுத வேண்டும்? ஏனென்றால், மனிதர்கள் மிகப்பெரும் மறதியாளர்கள். நம் டிசைன் அப்படி! எளிதில் எல்லாவற்றையும் மறந்து விடுவோம். எழுதி வைக்கப்படும் சொற்கள் நம் நினைவைப் புதுப்பித்து, அவை அழிந்துவிடாமல் பாதுகாக்கின்றன.

சரி, மெக்ரெகோர் சொல்லும் இந்த ஆன்மிக டைரியில் என்ன எழுத வேண்டும்? ‘அங்கே  போனேன், இங்கே போனேன், அவளைப் பார்த்தேன், புடவை நன்றாக இருந்தது, சாப்பாடு காரமாக இருந்ததுபோன்றஅல்பங்கள்கூடாது. இது போன்ற தகவல்களுக்கு எந்த டைரி மதிப்பும் இல்லை. உங்கள் ஆன்மிக அனுபவங்களை எழுதுங்கள். நீங்கள் நினைப்பது, உணர்வது, உங்களுக்குத் தோன்றுவது, உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், ஆற்றாமைகள், நம்பிக்கைகள், தோல்விகள், சவால்கள், உறவுகளில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசங்கள், துக்கங்கள், முடிவுகள்! இதில்சரி-தப்புஎன்று எதுவும் இல்லை. இது உங்களுக்கே உங்களுக்கான பிரத்யேக டைரி.

இலக்கணப் பிழையில்லாமல், மார்ஜின் கோடு போட்டு, கண்ணில் ஒத்திக்கொள்ளும் கையெழுத்தில், அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இயல்பாக எழுதுங்கள். நீங்கள் மட்டும்தான் வாசிக்கப் போகிறீர்கள். கடவுள் இலேசாக எட்டிப் பார்க்கலாம். உண்மையாக எழுதுங்கள். பொறாமைப்பட்டால், ‘பொறாமைப்பட்டேன்என்று எழுதுங்கள். உங்களுக்கு நீங்களே பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி எழுதிய பல நாள்களின் குறிப்புகளை ஓர் இடைவெளி விட்டு, ஒருசேர வாசிக்கும்போது, உங்களுக்குச் சில புரிதல்கள் கிடக்கும். ‘நான் முன்னேறுகிறேனா? இல்லை, பின்னோக்கிச் செல்கிறேனா? என் பலவீனங்கள் என்ன? நான் எங்கு சறுக்குகிறேன்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்? என் பலங்கள் என்ன? அவற்றை எப்படி இன்னும் வளர்க்கலாம்? நான் கைவிட வேண்டிய விசயங்கள் என்ன? நான் மாற்றி அமைக்க வேண்டிய விசயங்கள் என்ன?’

அந்தக் குறிப்புகளினால் உங்களுக்குக் கிடைக்கும் திறப்புகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

யாருக்குத் தெரியும்? ஒரு சாதாரண டைரி எழுதும் பழக்கம், உங்கள் வாழ்க்கை வரலாற்றையே மாற்றி எழுதலாம்.

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)