news-details
சிறப்புக்கட்டுரை
ஒன்றுபட்டால் வெற்றியுண்டு!

மக்கள் இயக்கமாக ஒன்றுபட்டுப் போராடும்போது வெற்றி கிடைக்கும் என்பது அரிட்டாப்பட்டி மக்களின் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராட்ட வெற்றியில் மீண்டும் உண்மையாகியுள்ளது.

நவம்பர் 7, 2024 மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மேலூர் தெற்குத் தெரு, அரிட்டாப்பட்டி, . வல்லாளப்பட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம்மாங்குளம், நாயக்கர்பட்டி, கொட்டாம்பட்டி, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி மற்றும் கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டமானது டங்ஸ்டன் தாதுக்களில் ஒன்றான சீலைட்டை எடுப்பதாகும். இந்தத் தாதுப்பொருளானது பொதுவாக உயர் வெப்பநிலை, நீர் வெப்ப நரம்புகள் மற்றும் தொடர்பு-உருமாற்றமடையும் அரிட்டாப்பட்டி போன்ற மலையடுக்குகளில் காணப்படுகிறது. இதனால்தான் அரிட்டாப்பட்டி சுற்றியுள்ள பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான நீர் ஆதாரமாக, பெரியாறு நீர்ப்பாசனமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

டங்ஸ்டன் சுரங்கம் உருவாக இருந்த இடங்கள் அனைத்தும் வளமான விளைநிலங்களாகும். அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பெரியாறு பாசனத்தை நம்பியே உழவுத் தொழில் செய்கின்றனர். இந்த நீர்ப்பாசனம் சுரங்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் விளைநிலங்கள் நீர்ப்பாசனமின்றி தரிசுகளாக மாறியிருக்கும். மேலும், அழகர்கோவில் காப்புக் காடுகள் அழிவது மட்டுமின்றி 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் மூன்று தடுப்பு அணைகள் சுரங்கத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் காட்டு விலங்குகள் அழிவதோடு, அரிட்டாப்பட்டி மலைப்பகுதியில் உள்ள 250 பறவை இனங்கள் காணாது போயிருக்கலாம்.

இவற்றை உணர்ந்த மக்கள் விழித்துக் கொண்டவர்களாகத் தங்களுக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக, ஒரே உணர்வுடன் டங்ஸ்டன் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பலகட்டப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

டங்ஸ்டன் ஏலத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் டிசம்பர் 9 அன்று டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் இரத்து செய்யும் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அரிட்டாப்பட்டியிலுள்ள பல்லுயிர் தலங்களைத் தவிர்த்து மீதி இடங்களில் சுரங்கத்திற்கு மறுஆய்வு செய்யவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

தற்காலிக நிறுத்தத்தில் மக்கள் நிறைவுகொள்ளவில்லை. அதோடு மட்டுமல்லாது ஒன்றிய அரசு அறிவித்த மறு ஆய்வையும் எதிர்த்து,  “எங்கள் வாழ்விடங்களில் எங்குமே ஆய்வு செய்யக் கூடாதுஎனத் தெரிவித்தனர். இதன் நீட்சியாக, மாபெரும் நடைபயணப் போராட்டத்தைவேண்டாம் டங்ஸ்டன்என முழக்கமிட்டு முன்னெடுத்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜனவரி 7-ஆம் தேதி நரசிங்கம்பட்டியிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரம் நடை பயணமாக மதுரை வந்து தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தன்னெழுச்சியாக ஒன்றுபட்ட மக்களின் தொடர் போராட்டம் மாற்றத்தைக் கொணர்ந்தது. 24 ஜனவரி, 25 அன்று ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை இரத்து செய்தது. இந்த அறிவிப்பால் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் உற்சாகம் அடைந்த மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தமிழ் நாட்டில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டங்களைப் போல அல்லாமல், மூன்று மாதங்களுக்குள் தீர்வு கிடைத்திருப்பது கவனத்திற்குரியது. இதற்குக் காரணம் மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக, ஒருமித்த உணர்வுடன் போராடியதேயாகும்.

ஒருமித்தப் போராட்டத்தோடு சுரங்கங்கள், கனிமங்கள் (வளர்ச்சி ஒழுங்குமுறை) 1957 சட்டமும் டங்ஸ்டன் திட்டம் இரத்து செய்யப்பட ஒரு காரணமாகும். இச்சட்டத்தின்படி, ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் நேரடியாக ஏலம் விட முடியும். ஆனாலும் சுரங்கத்திற்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும். அதேபோல நில விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்பதும்சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க முடியும் என்பதாலும், மாநில அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு ஏலத்தில் இறங்கியது தவறாகும். தனது தவறை உணர்ந்த ஒன்றிய அரசு இத்திட்டத்தை இரத்து செய்துள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்பது வெறும் பழமொழியல்ல; மாறாக, தமிழர்களின் வரலாற்று அனுபவம். இன்று அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள மக்களும் அந்த வரலாற்று அனுபவத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். தமிழர்களாகிய நாம் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டுப் பங்கெடுக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பானது மக்கள் தொடங்கி, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல்வாதிகள் வரை நீண்டு ஒருமித்த தீர்மானத்தை வெளிப்படுத்தியதும் நமக்கான உரிமைகளைப் பெற எல்லாரும் கேட்கும் வகையில் குரல் எழுப்ப வேண்டியதும் இன்று காலத்தின் கட்டாயம்.