news-details
ஆன்மிகம்
மூவோர் இறைவனோடு மரியாவுக்கு உள்ள உறவு (Mary’s relationship with the Trinity) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 11

1. ‘இறைத்திட்டத்தில் திரு அவைஎன்ற சங்க ஏட்டின் 8-வது இயலானது, கிறிஸ்துவின் மறையுண்மையில் மரியா கோட்பாட்டிற்கு உள்ள மிக முக்கியமானதொரு தொடர்பைக் காட்டுகிறது. இதைப் பொருத்தவரையில், அவ்வேட்டின் முகவுரையில் உள்ள தொடக்க வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவைகளாக இருக்கின்றன: “அவருடைய உயர்வான நன்மைத்தனத்தை விரும்பியும், உலக மீட்பின் விளைவுக்கான ஞானத்தை விரும்பியும்காலம் நிறைவேறிய போது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உள்பட்டவராகவும் அனுப்பினார் (கலா 4:4-5) (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 52). பழைய உடன்படிக்கையின் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா மற்றும் வரலாற்றின் இறுதியில் தந்தையால் அனுப்பப்பட்ட மகன் இவரே. ‘காலம் நிறைவேறியபோது (கலா 4:4) என்கின்ற இந்தத் திருவிவிலிய வார்த்தைகள் இந்த உலகில் பெண்ணிடமிருந்து பிறந்த அவரின் பிறப்போடு ஒத்துப்போகிறது. கடவுளின் மகனை மனுக்குலத்திற்குக் கொண்டு வந்த மரியாவை வரலாற்றில் நிறைவேற்றப்பட்ட இறைத்திட்டத்தின் மையமாக இருக்கின்ற இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் ஒருபோதும் பிரிக்க முடியாது.

அவருடைய மறையுடலாகிய திரு அவையில் கிறிஸ்துவுக்கான முதலிடமானது திருச்சங்கத்தால் பின்வரும் வார்த்தைகளால் விவரிக்கப்படுகிறது: அவரில்நம்பிக்கையாளர்கள் தலையாம் கிறிஸ்துவோடு இணைந்துள்ளார்கள் மற்றும் அவருடைய அனைத்துப் புனிதர்களோடும் நல்லுறவில் இருக்கின்றார்கள் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 52). கிறிஸ்துதாம் அனைவரையும் அவரிடம்  இணைக்கிறார். மரியா தனது தாய்மையின் விளைவாக அவரின் மகனோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால், நம்பிக்கையாளர்களின் பார்வை மற்றும் இதயத்தை இயேசுவை நோக்கி நடத்திச் செல்வதில் உதவுகின்றார்.

கிறிஸ்துவிடம் நடத்திச் செல்லும் வழி மரியாதான்: உண்மையில், “தன்னுடைய இதயத்திலும் உடலிலும் வானதூதருடைய செய்தி வழியாகக் கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 53), நம் வாழ்வின் மைய மற்றும் மிக முக்கியக் காரணருமாக இயேசுவை வைக்க நமக்குக் கற்றுத்தந்து, வானிலிருந்து இறங்கி வந்த இறைமகனை நம் வாழ்வில் எவ்வாறு ஏற்றுக்கொள்வதென்று நமக்குக் காட்டுகிறார்.

மரியாவுக்கும் தூய ஆவியாருக்கும்  இடையேயான தனித்தன்மை வாய்ந்த உறவு

2. மீட்புப் பணி முழுமைக்குமான தொடக்கத்தில் எல்லா மனிதர்களையும் தம் ஒரே மகனில்மகன்களாகமற்றும்மகள்களாகஅழைக்கின்ற எல்லாம்வல்ல தந்தையின் செயலைக் கண்டுகொள்வதற்கு மரியாவும் நமக்கு உதவுகின்றார். “கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் வழியாக இணைந்து உயிர்பெறச் செய்தார் (எபே 2:4-5) என்று எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள மிக அழகான சொற்றொடர்களை நினைவு கூர்ந்துதிருச்சங்கமானது கடவுளுக்குமிகவும் இரக்கமுள்ளவர் (most merciful) என்ற சிறப்புப் பெயரைக் கொடுக்கின்றது. ‘பெண்ணிடமிருந்து பிறந்தவரானமகன் இவ்வாறு தந்தையின் இரக்கத்தின் விளைவாகப் பார்க்கப்படுகின்றார். இது அன்னை மரியா எவ்வகையில்இரக்கத்தின் தாய் (mother of mercy) என அழைக்கப்படுகின்றார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவுகிறது.

இப்பின்னணியில், மரியாவுக்கும் தம் மறைமுகமான திட்டத்தில் கன்னியின் தாய்மையை விரும்பிய இறைஞானத்திற்குமிடையேயான நெருங்கியத் தொடர்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க கவனத்தை வேண்டி, திருச்சங்கமானது கடவுளைமிகவும் ஞானமுள்ளவர்(most wise) என்றும் அழைக்கிறது.

3. நற்கருணை வழிபாட்டில் நாம் கூறுகின்ற நிசேயன்-கான்ஸ்டான்டின் நாபோலிட்டன் திரு மறைக் கோட்பாட்டின் (Nicene-Constantinopolitan Creed) வார்த்தைகளைப் பயன்படுத்தி, திருச்சங்க ஏடானது மரியாவையும் தூய ஆவியாரையும் இணைக்கின்ற தனிச் சிறப்புமிக்க உறவு நிலையையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது: “நமக்காகவும் நம்முடைய மீட்பிற்காகவும் வானகத்திலிருந்து அவர் இறங்கி வந்தார்; தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார் மற்றும் மனிதரானார்.”

திரு அவையின் மாறாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதில், தூய ஆவியாரின் வல்லமையால், ஆணின் துணை இல்லாமலேயே கன்னி மரியாவின் உதிரத்தில் இறைமகனின் அந்த வியக்கத்தக்க மனுவுருவாதல் நிகழ்ந்ததைத் திருச்சங்கமானது நமக்கு நினைவுபடுத்துகின்றது.

இறைத்திட்டத்தில் திரு அவைஎன்ற சங்க ஏட்டின் 8-வது இயலானது மரியா கோட்பாட்டின் முக்கியக் கூற்றை இவ்வாறு தமத்திரித்துவக் (Trinitarian) கண்ணோட்டத்தில் காட்டுகின்றது. உண்மையில் அனைத்தும் தந்தையின் விருப்பத்திலிருந்து வருகின்றன. அவர் தமது மகனை உலகிற்கு அனுப்பி, அவரை மக்களுக்கு வெளிப்படுத்தி, அவரைத் திரு அவையின் தலைவராகவும் வரலாற்றின் மையமாகவும் நிறுவினார். இது மனுவுருவாதல் மற்றும் தூய ஆவியாரின் செயல்பாட்டின் வழியாக ஆனால், மூவோர் இறைவனை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகின்ற நிகழ்வின் ஒருங்கிணைந்த செயலில் ஒரு பெண்ணின் இன்றியமையாத ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டதொரு திட்டமாக இருக்கிறது.

4. மூவோர் இறைவனோடு மரியாவுக்குள்ள உறவானது பின்வரும் தெளிவான வார்த்தைகளோடும் ஆண்டவருடைய தாயைத் திரு அவையோடு இணைக்கின்ற பண்புறவின் விளக்கத்தோடும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: “அவர் உயர்நிலையோடும் கடவுளின் மகனுடைய தாய் என்ற மாண்போடும் அணி செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் தந்தையினுடைய அன்புக்குரிய மகளாகவும் மற்றும் தூய ஆவியாரின் ஆலயமாகவும் இருக்கின்றார் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 53).

மரியாவின் அடிப்படைத் தகுதியானது கிறித்தவக் கோட்பாட்டிலும்கடவுளின் தாய்என்ற சிறப்புத் தகுதியிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறமகனின் தாயாகஇருப்பதன் விளைவாகும்.

இது அவரின் மனுவுருவாதலில் கடவுளின் ஒரே அன்பு மகனின் தாழ்ச்சியைக் காட்டுகின்ற மற்றும் அதனுடன் தொடர்புடைய, அவருக்கு மனித உடல் கொடுப்பதற்காக அழைக்கப்பட்ட, படைப்புகளுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த சிறப்புச் சலுகையின் வியப்புக்குரிய சிறப்புக் கூறாகும்

மகனின் தாயாக, மரியா தனிச்சிறப்பான வகையில்தந்தையின் அன்பு மகளாகஇருக்கிறார். அவரின் தாய்மைக்கும் தெய்வீகத் தந்தைக்குமிடையே முற்றிலும் சிறப்பானதோர் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மறுபடியுமாக, திருத்தூதர் பவுல் அடியாரின் கூற்றுப்படி ஒவ்வொரு கிறித்தவனுமேதூய ஆவி தங்கும் கோவில் (1கொரி 6:19). ஆனால்மரியாவில்  இந்தக் கூற்றானது சிறப்பான பொருளைப் பெறுகிறது; அவரில் தூய ஆவியாருடன் உள்ள உறவானது திருமணம் சார்ந்த பரிணாமத்தால் (with a spousal dimension) வளமைப்படுத்தப்படுகிறது. இதைத் திருத்தந்தை அவர்கள்மீட்பரின் தாய் (Redemptoris Mater) என்ற திருமடலில் இவ்வாறு நினைவு கூர்ந்துள்ளார்: ‘தூய ஆவியானவர் ஏற்கெனவே மரியா மீது வந்து இறங்கியிருந்தார் மற்றும் அவர் இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் உண்மையான கடவுளின் வார்த்தையை வரவேற்று, அவருடைய நம்பிக்கைக்குரிய மணவாட்டியாக (his faithful spouse) இருந்தார் (மீட்பரின் தாய், எண். 26).

மரியாவின் தகுதியானது ஒவ்வொரு படைப்பின் தகுதியையும் விஞ்சுகின்றது

5. ஆகவே, மூவோர் இறைவனோடு மரியாவுக்குள்ள சிறப்பு உறவானது மற்ற எல்லாப் படைப்புகளைவிடவும் மிகவும் விஞ்சி நிற்கும் அளவுக்கு அவருக்குத் தனிமதிப்பைக் கொடுக்கிறது. இதைத் திருச்சங்கம் வெளிப்படையாகவே இவ்வாறு நினைவு கூர்கின்றது: இந்தமாண்புமிக்க அருளினுடைய கொடையின் காரணமாக மரியாஅனைத்து உயிர்களையும் வெகுவாக விஞ்சி (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 53) நிற்கின்றார். இருப்பினும், இந்த மிக உன்னத மாண்பானது நம் ஒவ்வொருவரோடும் மரியாவுக்கிருக்கின்ற தோழமையைத் (Mary’s solidarity with each of us) தடுக்கவில்லை. இதையேஇறைத்திட்டத்தில் திரு அவைஎன்ற ஏடானது இவ்வாறு கூறுகிறது: ‘ஆனால், ஆதாம் இனத்திலிருந்து வந்த அவர், அதே நேரத்தில் மீட்கப்பட வேண்டியோர் அனைவரோடும் ஒன்றுபட்டிருக்கிறார்மற்றும் மரியாஅவருடைய மகனுடைய தகுதியின் காரணமாக, மிகவும் மேன்மைமிகு வழியில் மீட்கப்பட்டுள்ளார் (ibid.).

இங்கு நாம் மரியாவின் தனிச்சலுகைகளுடைய மற்றும் மூவோர் இறைவனோடு அவருக்குள்ள சிறப்பு வாய்ந்த உறவின் உண்மையான பொருளைப் பார்க்கிறோம். அவற்றின் நோக்கமானது மனுக்குலத்தின் மீட்பில் அவரை ஒத்துழைக்கச் செய்வதாக இருந்தது. ஆகவே, ஆண்டவரின் தாயின் அளவிட முடியாத பெருந்தன்மையானது எல்லா மனிதர்களுக்குமான இறைவனுடைய அன்பின் கொடையாக நிலைத்திருக்கிறது. அவரைபேறுபெற்றவள் (லூக் 1:48) என்று அழைத்து, ‘அவருடைய இரக்கத்தின் நினைவாக (லூக் 1:54) அவரில் எல்லாம் வல்லவர் செய்தஅரும்பெரும் செயல்களுக்காக (லூக் 1:49) எல்லாத் தலைமுறையும் மரியாவைப்  புகழ்கின்றது.

மூலம்: Pope John Paul II, Mary’s relationship with the Trinity, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 17 January 1996, p.11.