நம்பிக்கையே இறைவேண்டல்
இறைவேண்டலின்
அடித்தளமே நம்பிக்கைதான். இறைநம்பிக்கை இருப்பதால்தானே நாம் இறைவேண்டல் செய்கிறோம்? நம்பிக்கையின்றி நாம் எப்படி இறைவேண்டல் செய்ய இயலும்?
பல
கிறித்தவர்களின் வாழ்வில் தனி வேண்டலோ, குடும்ப வேண்டலோ இல்லாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்களது நம்பிக்கையின்மை அல்லது நம்பிக்கைக் குறைவே. “அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்?” (உரோ 10:14) என்னும் இறைமொழி நம்பிக்கைக்கும் இறைவேண்டலுக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்கிறது.
‘நம்பிக்கை என்றால் என்ன?’ என்பதை எபிரேயர் திருமடல் இவ்வாறு வரையறுக்கிறது: “நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை”
(எபி 11:1). இந்த நம்பிக்கையே இறைவனோடு உள்ள தொடர்பின் தொடக்கம், இறைவேண்டலின் அடிப்படை.
இறைநம்பிக்கை
என்றதும் நம்பிக்கையின் தந்தையான ஆபிரகாமின் நினைவுதானே நம் உள்ளத்தில் எழுகிறது. “ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்”
(தொநூ 15:6) என்பதுதான் ஆபிரகாமின் நம்பிக்கை பற்றிய முதல் திருவிவிலியச் செய்தி. அவரது நம்பிக்கையைப் புதிய ஏற்பாட்டின் உரோமையர் திருமடல் (4:3, 4:19-20), கலாத்தியர் திருமடல் (3:6), யாக்கோபின் திருமடல் (2:23) ஆகியன பாராட்டுகின்றன.
குறிப்பாக,
“தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை. கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை. நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார்” (உரோ
4:19-20) என்னும் இறை மொழி, முகாமையான ஒரு செய்தியைச் சொல்கிறது. ஆபிரகாம் தன் நம்பிக்கையால் கடவுளைப் பெருமைப்படுத்தினார் என்பதே அது. ஆம், நிறைவான நம்பிக்கையே மிகச் சிறந்த இறைப்புகழ்ச்சிதான்.
“யாக்கோபு தான் இறக்கும்முன் யோசேப்பின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கியதும், தன் ஊன்றுகோலின்மேல் சாய்ந்து கடவுளைத் தொழுததும் நம்பிக்கையினால்தான்” (எபி
11:21) என்கிறது எபிரேயர் திருமடல். நம்பிக்கை இருந்தால்தான் நாம் இறைவனைத் தொழமுடியும்.
இயேசுவின்
கீழ்ப்படிதலைப் புகழ்ந்து பாடும் கிறிஸ்தியல் பாடலில், “இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே
அறிக்கையிடும்” (பிலி
2:10-11) என்று எழுதுகிறார் பவுலடியார். எப்போதெல்லாம் ‘இயேசுவே ஆண்டவர்’ என்று நமது நம்பிக்கையை அறிக்கையிடுகிறோமோ, அப்போதெல்லாம் தந்தையாம் கடவுள் மாட்சியடைகிறார் என்பதே அதன் பொருள். ஆம், நம்பிக்கையே மிகச்சிறந்த இறைமாட்சி. நம்பிக்கை அறிக்கையே ஓர் இறைப்புகழ்ச்சிதான் என்பதற்கு இன்னொரு சான்றாக “ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்”
(திபா 31:14:) என்று திருப்பாடல்கள் நூலில் வாசிக்கிறோம்.
நாம்
இறைவேண்டல் செய்யும்பொழுது நம்பிக்கையுடன் கேட்க வேண்டும் என்பது இயேசுவின் போதனை. “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்” (மத்
21:22) என்று கற்பித்தார் இயேசு.
தமது
சீடர்கள் இறைநம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பது இயேசுவின் கரிசனைகளில் ஒன்றாக இருந்தது. எனவேதான், “நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை
உறுதிப்படுத்து” (லூக்
22:32) என்று பேதுருவிடம் கூறினார் இயேசு. நம் அனைவரின் நம்பிக்கையும் தளராதபடி நமக்காக இயேசுவே பரிந்து மன்றாடுகிறார் என்பது எத்துணை ஆறுதலான செய்தி!
தூய
ஆவியாரின் துணையின்றி நாம் இறைவேண்டல் செய்ய இயலாது என்பதை இறைவார்த்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதுபோலவே, நம்பிக்கையின்றி தூய ஆவியாரின் கொடைகளைப் பெற இயலாது என்பதையும் திருவிவிலியம் நமக்குச் சொல்லித் தருகிறது. “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்று இயேசு உரத்தக் குரலில் அறிவித்ததைப் பதிவு செய்யும் யோவான், “தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு கூறினார்”
(யோவா 7:37-39) என்று விளக்கம் தருகிறார்.
அதுபோலவே,
எபேசு நகரில் பவுல் சில கிறித்தவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் “நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?\"
(திப 19:2) என்று கேட்டார். தூய ஆவியாரைப் பெறுவதற்கான அடிப்படை நமது நம்பிக்கையே. தூய ஆவியாரின் துணையால்தான் நாம் இறைவேண்டல் செய்ய இயலும். எனவே, இறைவேண்டலுக்கு நம்பிக்கை அவசியம் தேவைப்படுகிறது.
நம்பிக்கையே
இறைவேண்டலின் அடித்தளம் என்பதை “நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும், அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்” (எபி
11:6) என்னும் இறைமொழி எடுத்துச்சொல்கிறது.
நமது
இறைவேண்டலின் தரம் அதிகரிக்க வேண்டுமென்றால், நமது நம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும். இயேசுவின் சீடர்களைப்போல நாமும் “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்\" (லூக் 17:5) என்று மன்றாடுவோமாக!