news-details
சிறப்புக்கட்டுரை
‘நம் வாழ்வு’ என் நெஞ்சுக்கு நெருக்கமானது!

பொன்விழா காணும்நம் வாழ்வுவார இதழின் என் நெஞ்சுக்கு நெருக்கமான வாசகப் பெருமக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் புலர்ந்துள்ள புத்தாண்டின் இனிய நல் வாழ்த்துகளும் ஆசிரும்!

1975-ஆம் ஆண்டு பிறப்பெடுத்தநம் வாழ்வுஎன்னும் இந்த அழகிய நங்கை இன்று தனது 50-வது அகவையை எட்டிப் பிடித்திருக்கிறாள். காலங்கள் உருண்டோடினாலும், அதன் அழகும் வனப்பும் வசீகரமும் சிறிதேனும் குறையாது பேரழகு நங்கையாய் அனைவரையும் தன் இனிய தமிழால், தெளிந்த சிந்தனையால், ஆழமான கருத்துகளால், கூர்மையான தொலை நோக்குப் பார்வையால் இளமைத் துடிப்போடு இன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறாள்.

திரு அவைக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உண்மையையும் நீதியையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உரிமைக்கான குரலையும் பதிவு செய்யும் நோக்குடன் நன்மைகளை மேற்கோள்காட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டி எந்தச் சூழலிலும், எவருக்கும் எவற்றிலும் சமரசமின்றி உண்மையை உரக்கச் சொல்லிநல்லவர்களின் நாடித்துடிப்பாகஇவள் பயணித்து வருவது இவள் கண்ட சாதனை.

50 ஆண்டு அகவை என்பது எளிதான சாத்தியக் கூறு அல்ல; கரடுமுரடான பாதைகளை ஏற்ற இறக்கங்களோடு சவால்களைச் சந்தித்து நீதியின் தடத்தில் தடம் பிறழாது, யாவரும் போற்றும் வண்ணம் இன்னும் துடிப்போடு இவள் பயணித்துக் கொண்டிருப்பதுதான் இவள் கொண்ட பெருமை! இத்தகைய பயணத்தின் வெற்றி விழா பொன்விழாவாகக் கொண்டாடப்படும் இத்தருணத்தில், இவள் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்பது நல்லதெனக் கருதுகிறேன்.

1970-களிலேயே தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஆயர்கள், பேராயர் பெருமக்கள் கிறித்தவ மக்களுக்குச் சமூக மற்றும் அரசியல் தளத்தில் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பதைக் காலத்தின் குறியீடாகக் கணித்திருக்கிறார்கள். அவர்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ‘கிறித்தவர்களை அரசியலுக்கும் அரசியலைக் கிறித்தவர்களுக்கும்அறிமுகம் செய்யும் இலக்கோடு மக்களைச் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் ஆற்றல்படுத்தும் (Empower) நோக்குடன் இவ்விதழ் தொடங்கப்பட்டிருப்பது இதனுடைய பயண இலக்கைக் கூர்மைப்படுத்துகிறது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சற்றேனும் தளராது தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதேநம் வாழ்வின்முதல் வெற்றி!

இப்பயணத்தில்நம் வாழ்வுஇதழின் மேனாள் ஆசிரியர்கள், வெளியீட்டுச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய ஆயர் பெருமக்கள், இதன் தொடக்கக் காலத்தில் களப்பணியில் ஈடுபட்ட பெரியவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் யாவரும் இப்பெருமைக்குரியவர்களே!

இந்த இதழை ஏழு ஆண்டுகள், மூன்று மாதங்கள் இதன் ஆறாவது முதன்மை ஆசிரியராகப் பயணித்து வழிநடத்திய காலத்தை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

அத்தருணத்தில் தமிழ்நாடு கடந்து உலகெங்கும் வாழும் எல்லாத் தமிழர்களின் கரங்களிலும் இவ்விதழ் சென்றடைய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். பல்வேறு மண்டலங்கள் உருவாக்கப்பட்டதும், துணை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதும் பொது இதழ் விற்பனை நிலையங்களில் இவ்விதழ் விற்பனைக்குக் களம் கண்டதும் வாசகர் வட்டங்கள், எழுத்தாளர் பயிற்சிப் பட்டறைகள், புதிய நூல்கள் வெளியீடுகள் எனப் பல்வேறு முயற்சிகள் நடந்தேறியதையும் எண்ணிப் பார்த்து மனநிறைவு அடைகிறேன். அத்தகைய பணிகள் இன்றும் தொடர்ந்து வருவதைக் காணும்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

வணிகமயமாகிப் போன பத்திரிகை உலகில், அரசியல் கட்சிகளைச் சார்ந்து மதிப்பீடுகளைக் காற்றில் பறக்கவிட்டு  விலைபோன பத்திரிகைகள் மத்தியில், ‘நம் வாழ்வுநம் ஆண்டவர் இயேசுவின் உரிமைக்குரலானஉண்மையை எடுத்துரைப்பதே எனது பணி, ‘உண்மைக்காகவே நான் அர்ப்பணம் ஆகிறேன்என்ற விழுமியங்களை உள்வாங்கி, உண்மையை உரக்கச் சொல்லி வருவது இவ்விதழின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அத்தகைய சிந்தனையில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மட்டுமல்லாது, மற்ற மத நண்பர்களும் சமூகச் சிந்தனையாளர்களும், ஏன் இறை நம்பிக்கையற்றவர்களும் கூட நம்முடன் பயணிப்பதும் இவ்விதழின் கருத்துகளை உள்வாங்குவதும் நீதிக்கான குரலில் நம்மோடு துணை வருவதும் இந்த இதழ் கண்ட சாதனையாகவே நான் கருதுகிறேன்.

இந்தச் சாதனைப் பட்டியல் நீள வேண்டும், வாசகர்கள் கூட வேண்டும், பத்திரிகை வளர வேண்டும், எல்லாருடைய கைகளிலும் இது தவழ வேண்டும், பலருடைய சிந்தனைகளில் மாற்றம் காண வேண்டும், மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் இளையோர் மத்தியிலும், அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும் மலர வேண்டும் என்பதே  என் ஆவல். அத்தகைய எண்ணத்தில்நம் வாழ்வுஇதழின் பயணம் தொடர்ந்துகொண்டிருப்பது சமூக மாற்றத்திற்கான உறுதியான நம்பிக்கையைத் தருகிறது.

இத்தருணத்தில், இந்த அழகிய மங்கைக்கு மணிமகுடம் சூட்டும் வண்ணம் தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் திருக்குழுமமும், தமிழ் நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம்நம் வாழ்வுபதிப்பகமும், வாசகப் பெருமக்களும் சந்தாதாரர்களும், ஒன்றிணைந்து பொன்விழா எடுத்து மகிழ்வதைத் தகுந்த நிகழ்வாகக் கருதுகிறேன்.

இம்மாதம் சனவரி 22, புதன்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு மதுரை - ஞானஒளிவுபுரம் தூய தே பிரித்தோ பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் பொன்விழாவிற்குநம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றேன்!

அணி திரண்டு வாரீர்! நல்லவர்களின் நாடித் துடிப்பான நம் வாழ்வை நம் இதயத்துடிப்பாக்குவோம்! உரிமைக்குரலான இவ்விதழை உலகோர் அனைவரும் காண உயர்த்திப் பிடிப்போம்!

அன்புடன் அழைக்கும்

மேதகு முனைவர் லூர்து ஆனந்தம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர்

தலைவர் - நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம், தமிழ்நாடு ஆயர் பேரவை.