news-details
ஆன்மிகம்
யூபிலி கொண்டாட்டம் (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை - 1)

திருக்காட்சிப் பெருவிழாவில் மையமான கதாபாத்திரங்களாக நம் கண்முன் நிற்பவர்கள்  மூன்று ஞானிகளும், அவர்களின் கரங்களில் சுமந்து வந்த பரிசுப் பொருள்களுமே. பரந்திருக்கும் உலகில் மெசியாவைக் காண தொலைதூர இடங்களிலிருந்து பயணித்து, பல இடர்ப்பாடுகள், தவறுகள், சோர்வு எனப் பல சூழ்நிலைகளை அனுபவித்துக் கடந்து இயேசுவின் திருக்காட்சியைப் பெற்றனர்.

புனித அகுஸ்தினார் திருக்காட்சிப் பெருவிழாவை எவ்வாறு குறிப்பிடுகின்றார்? “மனிதர்கள் வழியாகக் கடவுளை அடையும் வழியைத் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது.”

கடவுள் புத்தகங்களின் பக்கங்களில் வாழ்வதில்லை. மாறாக, மனுவுடல் ஏற்று நம் மத்தியில் வாழ்கின்றார். இறைவனின் திருக்காட்சியைப் பெற நம் அருகில் வாழும் நம் சகோதர-சகோதரிகளின் முகத்தில் இறைவனின் முகத்தைக் காணவேண்டும். நமது திரு அவையும், திரு அவையின் பணியாளர்களும் நம்பிக்கையாளர்களும் தங்களுக்குள் முடங்கிக் கிடந்தால் இறைவனின் திருக்காட்சியைக் காண இயலாது. கிறிஸ்துவின் மறையுடலாம் திரு அவை மக்களின் மத்தியில் வாழ்கின்றது; இயங்குகின்றது. எனவே, திரு அவையின் தலையாயக் கடமை இறைமக்கள் நம்பிக்கையாளர்கள் தங்களிடம் வரவேண்டும்; அருள் வாழ்விற்கு உதவியை, ஆலோசனையை, வழிகாட்டுதலைக் கூற வேண்டும் எனக் காத்திருக்காமல், மக்களைத் தேடிச்சென்று பயணித்து, செவிமடுத்து தங்களது நற்செய்தியின் பணியைச் செய்திட வேண்டும் (மத்தேயு 28:19). மூன்று ஞானிகளும் தங்களது இருப்பிடத்தை, சுகமான வாழ்வுச் சூழலைக் கடந்து பயணித்து திருக்காட்சியைப் பெற்று, பிறருக்கு மகிழ்ச்சியை அறிவித்தனர்.

நாம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவு பெற்ற கூட்டொருங்கியக்கத் திரு அவையின் 16-வது ஆயர் மாமன்றம் இச்செய்தியினைக் கோடிட்டுக் காட்டி இருக்கின்றது. திரு அவை தன்னிடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று வீதிகளில் வாழ்வோரைச் சந்தித்து உரையாடி, செவிமடுத்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இன்னும் அதிக உற்சாகத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பிக்கைக்குரிய செயல்பாடுடனுடன் பொதுநிலையினரையும் பங்கேற்பு அமைப்புகளையும் உறுதிப்படுத்திட அழைப்பு விடுக்கின்றது.

திருக்காட்சிப் பெருவிழாவில் சிந்தனைகளும் கூட்டொருங்கியக்கப் பரிந்துரைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்வதாக நான் உணர்கின்றேன். இப்பெரு விழாவின் ஒருசில சிந்தனைகளைத் திரு அவையின் செயல்பாடுகளில் பரவச் செய்வது சாலச்சிறந்தது.

கண்களை உயர்த்தி மற்றவர்களைக் காணுதல்!

மூன்று ஞானிகளின் பயணம்தங்களின் இருப்பிடத்திலிருந்து துவங்கிடக் காரணமாய் அமைந்திருந்தது அவர்கள் கண்ட விண்மீன். தங்கள் கண்களை உயர்த்திக் கண்ட, அவர்களின் திறந்த மனநிலை நமதாக வேண்டும். எனக்குள், என் சுயத்திற்குள் ஒளிந்து கொண்டு, என் சுகமான வாழ்வு வட்டங்களைக் கடந்து செல்லாமல், என்னைப் பற்றி மட்டும் சிந்திக்கும் மனநிலையைத் தவிர்த்து, இறைவனின் பிரசன்னத்தையும் கரை காணா அவரது அன்பையும் உணர்த்துகின்ற பிறரையும் குறிப்பாக, பல்வேறு சமூகச் சீர்கேட்டினால், வன்முறையினால், போர்களினால், அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஒடுக்கப்பட்டோர், புலம்பெயர்ந்தோர் இவர்களை நோக்கி நமது கண்கள் உயர்ந்து, நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைப் பற்றி நம்பிக்கையின் கண்களோடும் சகோதரத்துவத்துடனும் கண்டிட வேண்டும். இவ்வுலகையும் இயற்கையையும் காத்திட, நம் கண்களை உயர்த்திட வேண்டும்.

குழுவாகப் பயணித்தல்!

திருக்காட்சியின் மூன்று ஞானிகள் விண்மீன்களைப் பின்தொடர்ந்து சென்று சிறிய முயற்சிகளை நம்பிக்கையின் ஊன்றுகோலாக மாற்றி, பிறரிடம் கேட்டறிந்து, செவிமடுத்து பாலன் இயேசுவைக் கண்டனர். மூவரும் வெவ்வேறு இடங்களில் பிறந்திருந்தாலும், கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்திருந்தாலும், ஒருவர் மற்றவரை ஏற்று, மதித்து, உரையாடிப் பயணத்தின் பொழுது ஒருவரின் களைப்பில், நோயில், நம்பிக்கையற்ற சூழலில் பங்கேற்று, மற்றவருக்கு உதவி செய்து, உற்சாகமூட்டி, ஒன்றாக இணைந்து, இறுதிவரை பயணித்து பெத்லகேமின் குடிலை அடைந்தனர்.

நான் முன்னேறிச் செல்கின்றேன்; நீங்கள் சோர்வுற்று இருந்தால் இளைப்பாறிப் பின்னே வாருங்கள்என்று தன்னலத்தோடு செயல்படாமல், இணைந்து பயணித்த நிகழ்வு திரு அவைக்கு அற்புதமான செய்தியை வழங்குகின்றது. கூட்டொருங்கியக்கத் திரு அவையில் எவர் ஒருவரையும் விட்டு விடலாகாது. அனைவரையும் உள்ளடக்கிய பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். திரு அவையை விட்டு விலகி இருப்போர், காயப்பட்டோர், விளிம்பு நிலையில் வாழ்வோர், பல்வேறு காலச்சூழலில் பாதிக்கப்பட்டோர், பல்வேறு வயதினர், திரு அவையில் பல்வேறு பணியினைச் செய்பவர் என அனைவரையும் அரவணைத்து, உடன் நின்று, சகோதரத்துவத்தை வெளிப்படுத்திப் பயணிக்கும் திரு அவையே திருத்தந்தையின் விருப்பத் திரு அவையாக உள்ளது. ஒன்றாய்ப் பயணிப்பது ஒரு சிறந்த சாட்சியமே. இன்று திரு அவைக்கு அது மிகவும் அவசியமானது.

பிழைகளைக் கண்டு பின்வாங்க வேண்டும்!

மூன்று ஞானிகள் தங்களின் தேடலில், தங்களின் பயணத்தில் பல தவறுகளைச் செய்தனர்; தவறான இடங்களில் (ஏரோது அரண்மனை, எருசலேம் நகரம்) பாலன் இயேசுவைத் தேடினர். இருப்பினும், சுதாரித்துக் கொண்டு தங்களின் தவறுகளில் - தவறான பாதையில் மூழ்கி விடாமல், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, மீண்டும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் தங்களின் பயணத்தைத் தொடர்ந்து திருக்காட்சியைக் கண்டனர்.

கடந்த காலங்களின் திரு அவையின் சில நபர்களின் செயல்பாடுகளினால் திரு அவை காயப்பட்டது; நம்பிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். திரு அவையின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை சீர்குலைந்தது. இப்பொழுது கூட்டொருங்கியக்கத் திரு அவை - அத்தவறுகளையெல்லாம் சரிசெய்து, பிழைகளிலிருந்து பாடம் கற்று, வெளிப்படைத்தன்மை கொண்ட திரு அவையாக உருவாக்க விரும்புவது தூய ஆவியின் செயல்பாடின்றி வேறில்லை. ஆயர்களின் மாமன்ற உரையாடல்களும் கருத்துச் செறிவுகளும் இறுதி ஆவணமும் இவற்றை வலியுறுத்துவதை நாம் உணர்ந்து, புத்தாக்கமும் புது தெம்பும் நம்பிக்கையும் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையும் கொண்ட திரு அவையையும், அதன் முடிவுகளில் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அமைப்புகளையும் உறுதிப்படுத்துவது மிகவும் ஏற்ற செயலே.

கூட்டுப் பயணமே இறைவனுக்கு நாம் வழங்கும் பரிசு!

மூன்று ஞானிகளின் பரிசுப் பொருள்களைவிட, அவர்கள் சிரத்தையோடும் நம்பிக்கையோடும் பயணித்த சூழலே இறைவனுக்கு அவர்கள் வழங்கிய சிறப்புப் பரிசு.

திருக்காட்சியின் கூட்டொருங்கியக்கப் பயணமே இறைவனுக்கு நாம் வழங்கும் சிறப்புப் பரிசாக அமையும். யூபிலி ஆண்டில் எதிர்நோக்குடன் திரு அவை பயணிப்பதே இறைவனுக்கு நாம் வழங்கும் அன்புப் பரிசு!