ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே ரேசன், ஒரே தேர்தல், ஒரே வாக்காளர் பட்டியல் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டம்; அதுவே பின் வழியே ‘ஒரே தலைவன்’ என்ற அதிபர் ஆட்சி முறைக்குத் திசைவழி காட்டுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கூறுகிறார்: “ஜனநாயகம் என்பது அந்நிய சரக்கு.” ஆம்.
என்றுமே ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அங்கீகரித்தது இல்லை. அதன் அடிப்படையை மாற்றத்
துடிக்கிறார்கள். புதுப் புது வழிகளைத் தேடுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க.
2014 முதல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றது. இதையே தன் தேர்தல் அறிக்கையிலும் அறிவித்தது. 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ச.க.விற்குத் தனிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்துகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய,
கொண்டுவர, முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட ஒரு குழுவை மோடி அரசு
அமைத்தது.
குழுத்
தலைவராக கோவிந்த் நியமிக்கப்பட்டது மரபு
மீறல் என்ற விமர்சனம் எழுந்தது. ‘முப்படைகளின் தலைவராக இருந்தவரை, ஒரு முன்னாள் முதல் குடிமகனைச் சாதாரண குழுவிற்குத் தலைவராக்குவதா?’ என்று கேள்விகள் பிறந்தன. 27,000 பொதுமக்களிடமும் 47 அரசியல் கட்சிகளிடமும் அக்குழு கருத்துகள்
கேட்டது. ஏழு
முக்கியப் பிரச்சினைகளை ஆராய்ந்தது. பல போலி இணையதள
வாக்கெடுப்புகள் எனக் களேபரம் நடத்தியது. தன் 18,626 பக்க அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியது. ஒரு நகைப்பிற்குரிய செய்தியை, ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த குழு தன் அறிக்கையில் வைத்திருந்தது. அது தங்கள் பிதாமகன் மோடியை மறந்துவிட்டு, தேசத்தில் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறையும் என உண்மையும் பேசியது.
அறிக்கையைப்
பெற்ற வேகத்தில் ஒன்றிய அமைச்சரவை பரிந்துரைகளுக்கு
ஒப்புதல் வழங்கி விட்டது. அதை மக்களவை, மாநிலங்களவையில்
ஒன்றிய அரசு வைக்க வேண்டும், சட்டமாக்க வேண்டும். பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்ட சபைகளும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பா.ச.க. ‘ஒரே
நாடு, ஒரே தேர்தல்’ சட்டத் திருத்தம் கொண்டு
வர அரசியலமைப்புச் சட்டத்தில் 83 மற்றும் 172-இன் பிரிவுகளைத் திருத்த வேண்டும். ஆறு அல்லது ஏழு
திருத்த மசோதாக்களின் அடிப்படையில் ஒரே நாடு, ஒரே தேர்தலைக் கொண்டு வந்துவிடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால், மக்களவையில்
மூன்றில் இரண்டு பங்கு 362 வாக்குகள் தேவை. ஆனால், தேசிய சனநாயகக் கூட்டணிக்கு இருப்பதோ 292 வாக்குகள்தான். மாநிலங்கள் அவையிலும் இதே நிலைதான். மூன்றில் இரண்டு பங்கு 164 வாக்குகள்
தேவை. ஆனால், தேசிய சனநாயகக் கூட்டணிக்கு இருப்பதோ 112 வாக்குகள்தான். என்ன மாயம் செய்யப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொண்டு வர பா.ச.க. இரண்டு முக்கியக்
காரணங்களைச் சொல்கிறது: ஒன்று, ஆண்டு முழுவதும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், அரசு இயந்திரம் முடங்குகிறது. எதிர்க்கட்சிகள் திருப்பிக் கேட்கிறது: ‘புதிய திட்டங்கள் அறிவிக்கத்தானே தேர்தல் நடத்தை விதிகள்? அரசின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே! கடந்த முறை பாராளுமன்றத் தேர்தல்கள் மட்டும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவில்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.
அன்று
கூறிய பதில் ‘தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பாதுகாப்புப் பணிகள் பற்றாக்குறை’ என்பது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் போது இன்று எவ்வாறு அப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்?
இவர்களால்
தேசிய தேர்வு முகமை மூலமாக நடத்தப்படும், இலட்சக்கணக்கில் பங்கு பெறும் நீட், என்.இ.டி. போன்ற
தேர்வுகளையே முறையாக நடத்த
முடிவதில்லையே என்ற வாதம் வைக்கப்படுகிறது.
ஒரே
நாடு, ஒரே தேர்தல் கொண்டுவர பா.ச.க. சொல்லும்
இரண்டாவது காரணம், தேர்தல் செலவுகளைக் குறைக்கலாம் என்பது. பா.ச.க.
முன்பு ஒரே நேரத்தில் ஒன்றிய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்றது. தற்போது உள்ளாட்சித் தேர்தல்களை
மட்டும், பொதுத் தேர்தல் முடிந்து 100 நாள்கள் கழித்து நடத்தலாம் என இறங்கி வருகிறது.
இவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதிய 15 இலட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களும், அதே அளவு விவிபெட்களும் புதிதாக வாங்க வேண்டும். அவை ஒன்றின் விலை 17 ஆயிரம் ரூபாய் என்றால், எத்தனை கோடிகள் எனக் கேட்டால் மயக்கம் வருகிறது. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கும், விவிபெட்களுக்கும் ஆயுள் 15 வருடங்கள்தான்.
2019-ஆம் ஆண்டு
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் செலவு 3,870 கோடி. அது ஒன்றிய அரசின் செலவில் 0.02 சதவிகிதம் என்பது கணக்கீடு. ஒரு 95 கோடி மக்கள் தங்கள் சனநாயகக் கடமையைச் செய்ய இத்தொகை சிறிதளவுதான் என்ற
வாதமும் வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஒரே நாடு, ஒரே தேர்தல் வழியே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்ற தந்திரமும் இதில் உள்ளது என்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது மாநிலங்களில் சட்டப் பேரவைகள் கலைக்கப்படும் அல்லது
பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்ற கூத்தும் உண்டு. மாநில அரசிற்கு முன்கூட்டியே சட்டப் பேரவையைக் கலைக்கும் மாநில அதிகாரம் பறிபோகிறது.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் மறைக்கப்பட்ட செயல் திட்டங்கள் குறித்து ஐயங்களை எழுப்புகிறார்கள்.
ஒன்றிய அரசிற்கான தேர்தல்களும், மாநில அரசுகளுக்கான தேர்தல்களும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து நடக்கிறது. அதன் அடிப்படை ஒரே நாடு, ஒரே தேர்தலால் அடிபடும். கூட்டாட்சித் தத்துவம் விலக்கிக்கொள்ளப்படும். வருங்காலங்களில் மாநிலங்களே இல்லாத மாவட்டத் தலைவர்களின் ஒற்றை ஆட்சி முறை மாவட்டங்களில் நடத்தப்பட்டு, ஒரே தேசமாக அறிவிக்கப்படும். அதிபர் ஆட்சி முறை கொண்டு வரப்படும். இந்திய அரசியல் சாசனம் தூக்கி எறியப்படும்.
மாநிலக் கட்சிகள் முடக்கப்படும். தேசத்தின் பன்முகத்தன்மை ‘ஒரே நாடு, ஒரே தேர்தலால்’
கேள்விக்குறியாக்கப்படும்.
ஒன்றிய அரசின் தொடர் அதிகாரக் குவிப்பை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ உறுதிப்படுத்தும். ஒன்றியத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகளை, தேர்தல்களைக் கேள்விகுறியாக்கும்.
அரசியல்
சாசன நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான சஞ்சய் ஹெக்டே “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது அதிபர் முறை சனநாயகம் போல் ஆகிவிடும்”
என்கிறார். ஆம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைச் செயல்திட்டமாக்கி, அதை நோக்கியே பா.ச.க.
தன் சதுரங்க ஆட்டக் காய்களை நகர்த்
துகிறது. மோடி என்ற ஒற்றைத் தலைவனைக் கட்டமைக்க முயல்கிறது. சனநாயகம், அரசியலமைப்பு என்பதைக் கேள்விகுறியாக்குகிறது.
தேசம்
காக்க, சனநாயகச் சக்திகளான நாம் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம்.