news-details
ஆன்மிகம்
கடவுள் எனும் ஆற்றல் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 08)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்: “தந்தையே, மனிதர்களின் ஆற்றல் உடல் பற்றியும், நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் ஆற்றல் உடல் பற்றியும் கடந்தவாரம் நாம் பேசினோம். ஆற்றல் உடல் பற்றிய சில ஆய்வுகள் என் நினைவிற்கு வருகின்றன. முக்கியமாக இரண்டு ஆய்வுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1963-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருக்கும் சிராக்கூஸ் பல்கலைக்கழகத்தின் (Syracuse University) பேராசிரியர்களான கெர்கார்டு பாவுலே (Gerhard Baule)  மற்றும் ரிச்சர்டு மேக்ஃபீ (Richard McFee) என்பவர்கள் அறிவியல் முறையிலான ஆய்வுகள் வழியாக நம் இதயம் தொடர்ந்து மின்காந்த அலைகள் வெளியிடுவதையும், அவை உடலைச் சுற்றி ஓர் ஆற்றல் தளத்தை (energy field) உருவாக்குவதையும் நிரூபித்தனர். இரண்டாவதாக, அறிவியல் SQUID magnetometer என்றொரு கருவியை உருவாக்கியுள்ளது. இது மின்காந்த அலைகளை அளப்பதற்கான கருவி. 1970-ஆம் ஆண்டு மாசசூட் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massechutes Institute of Technology)  பேராசிரியரான டேவிட் கோகன் (David Cohen) மேற்கண்ட கருவியின் உதவியோடு நமது மூளை மின்காந்த அலைகள் வெளியிடுவதையும், அவையும் உடலில் ஆற்றல் தளத்தை உருவாக்குவதையும் நிரூபித்தார்.”

மார்த்தா: “மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே!”

அருள்பணி: “அது மட்டுமல்ல! இன்றைய அறிவியலின் மிக முக்கியப் பகுதியாக இருப்பவை Quantum Physics k‰W« Quantum Mechanics. இப்பிரிவுகளின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று, இவ்வுலகில் உள்ள அணு உள்பட எல்லா வகை பொருள்களும் ஆற்றலை உள்வாங்கியும் வெளியிட்டும் கொண்டே இருக்கின்றன என்பதாகும். மனித உடலும் பொருள் சார்ந்த ஒன்றுதானே! எனவே, அதுவும் ஆற்றலை உள்வாங்கியும் வெளியிடுவதும் மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றி ஓர் ஆற்றல் உடலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.”

கிறிஸ்டினா: “தந்தையே,  இயேசுவின் படத்தைப் பார்க்கும்போது, அவரது தலையைச் சுற்றி ஒளி வட்டம் இருப்பதாக வரையப்படுகிறதே! அதற்கும் ஆற்றல் உடலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”

அருள்பணி: “ஆம் உண்டு! இயேசுவின் ஆற்றல் உடல் உச்ச நிலையிலும் தூய்மை நிலையிலும் இருந்ததைச் சுட்டிக்காட்டுவதே ஒளிவட்டம். அத்தகைய ஆற்றல் வளையம் தலையைச்  சுற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலைச் சுற்றியும் உண்டு.”

மார்த்தா: “பாதர், பழைய ஏற்பாட்டில் கடவுள் மோசேவோடு பேசிய பின்பு அவரது முகம் ஒளிமயமாக இருந்தது குறித்தும், அதை மறைக்க அவர் முக்காடு போட்டுக்கொண்டது குறித்தும் (விப 34:29-33) நாம் வாசிக்கின்றோம். அப்படியென்றால் அவரது ஆற்றல் உடலும் மிகவும் வலிமையாக இருந்திருக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.”

அகஸ்டின்: “இயேசுவின் சதை உடல் மறைந்தாலும், அவரது ஆற்றல் உடல் நற்கருணை வழியே தொடர்ந்து செயல்படுவது இப்பொழுது எனக்குப் புரிகிறது தந்தையே! மேலும், ‘ஆற்றலை அழிக்க முடியாது என்பது அறிவியல் உண்மை. எனவே தம்மையே ஆற்றலின் உச்சமாக மாற்றிக்கொண்ட இயேசு என்றென்றும் வாழ்பவராக மாறிவிட்டார். அவரது பிரசன்னம்தான் ஆலயத்தில் உண்டு என்னும் உண்மை எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.” 

அருள்பணி: “ஆற்றல் உடல்  பற்றிய மற்றொரு செய்தியையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 1920-களில் அமெரிக்காவின் ‘யேல் பல்கலைக் கழகத்தின் (Yale University) மருத்துவப் பிரிவில் புகழ்பெற்ற பேராசிரியராக விளங்கியவர் ஹரால்டு சாக்ஸன் பர் (Harold Saxon Burr) என்பவர். ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே அவர், நம் சதை உடலில் நோய் உருவாவதற்கு முன்பே அது நம் ஆற்றல் உடலில் உருவாகிறது என்ற கொள்கையை அறிவியல் உண்மையாக முன்மொழிந்தார். ஆற்றல் உடலைச் சரியாக்கினால் சதை உடல் சரியாகிவிடும் என்பது அவரது கருத்து.”

கிறிஸ்டினா: “தந்தையே, நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது, திருவிவிலியத்தின் ஒரு பகுதி என் ஞாபகத்திற்கு வருகிறது. 12 ஆண்டுகளாக பெரும்பாடு நோயினால் துன்பப்பட்ட பெண், இயேசுவின் ஆடையைத் தொட்ட பின்பு குணமடைந்தாள். அப்போது இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து, ‘என் மேலுடையைத் தொட்டது யார்?’ (மாற் 5:30) என்கின்ற கேள்வியை எழுப்பினார். அப்படியானால், இயேசுவின் ஆற்றல் உடல் அப்பெண்ணின் ஆற்றல் உடலைத் தூய்மையாக்கியது என்றும், இது அப்பெண்ணின் உடல் தூய்மையாவதற்குக் காரணமாய் இருந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாமா?”

அருள்பணி: “ஆம்! இயேசுவின் ஆற்றல் உடல் மிகவும் உயர்வான தளத்தில் இருந்ததைத் திரு விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த ஆற்றலின் வல்லமையினாலேயே பிற மனிதர்களது ஆற்றல் உடலிலும், சதை உடலிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். நாம் அவற்றையே புதுமைகள் என்கின்றோம். ‘பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார் (லூக் 5:17), ‘அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர் (லூக் 6:19) என்ற வசனங்கள் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகின்றன. மேலும், நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் ‘அதிகாரம் என்கின்ற வார்த்தை அவரிடம் இருந்த ஆற்றலின் வலிமையைச் சுட்டிக் காண்பிக்கின்றன. ‘அதிகாரத்தோடு போதித்தார் என்கின்ற வார்த்தைகளை ‘ஆற்றலோடு போதித்தார் என்று நாம் பொருள் கொள்ளலாம்.” 

மார்த்தா: “அடேங்கப்பா! இயேசுவின் ஆற்றல் பற்றி இவ்வளவு விஷயங்கள் திருவிவிலியத்தில் உள்ளனவா?”

கிறிஸ்டினா: “தந்தையே, இயேசு தமது ஆற்றலை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்?”

அருள்பணி: “இயேசுவைப் பொறுத்த அளவில் இறைவேண்டல் (செபம்) என்பது பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஆற்றலால் தம்மை முழுமையாக நிரப்பிக் கொள்வதாகும்.”

அகஸ்டின்: “தந்தையே, பிரபஞ்சம் முழுவதும் விரவிக்கிடக்கிற இத்தகைய ஆற்றலுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?”

அருள்பணி: “இது குறித்து இரண்டுவிதமான பார்வைகள் உள்ளன. ஐன்ஸ்டைன் போன்ற அறிவியலாளர்கள் உள்பட பலர் பிரபஞ்சம் முழுவதும் விரவிக்கிடக்கின்ற ஆற்றலையே கடவுள்தன்மை என்கின்றனர். இவர்களைப் பொறுத்த அளவில் பிரபஞ்ச ஆற்றலும் கடவுளும் வேறு வேறு அல்ல! ஆனால், கிறித்தவ ஆன்மிகத்திலோ நாம் கடவுளை ஆற்றலாகப் பார்ப்பதைவிட, கடவுளிடமிருந்து புறப்படும் மாபெரும் கொடையாக ஆற்றலைப் பார்க்கின்றோம்.”

கிறிஸ்டினா: “எப்படிப் பார்த்தாலும், பிரபஞ்சம் முழுவதும் வி(ப)ரவிக்கிடக்கின்ற ஆற்றலுக்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறீர்கள்?”

அருள்பணி: “ஆம்! கிறிஸ்துவைப் பொறுத்த அளவில், அவர் கடவுளாலும் அவருடைய வல்லமையினாலும் தம்மை நிரப்பிக் கொண்டதன் காரணமாக, ஆற்றலின் உச்சத்தில் தம்மை வைத்துக் கொண்டார். நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் இத்தகைய ஆற்றல்தான் இன்றும் அருளடையாளங்கள் வழியாகச் செயல்பட்டு, மனிதர்களைக் குணமாக்குகிறது.” 

(தொடரும்)